Q556:1
கேள்வி – (1907)-1- சமீபமாய் வெளிவந்த வாட்ச் டவர் கட்டுரையில், நாம் இலக்கை அடைவது வரையிலும் நாம் உயிரூட்டப்படுவதில்லை (quickening) என்றும், சிலர் ஒருபோதுமே உயிரூட்டப்படுவதில்லை என்றும் தாங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியானால் இலக்கை அடையும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மாத்திரம், ஏதேனும் அளவில் அல்லது விதத்தில் உயிரூட்டப்படுவார்கள் என்று சொல்லுகின்றீர்களா?
பதில் – இலக்கானது அடையப்பெறுவது வரையிலும் உயிரூட்டப்படுதல் எதுவும் ஆரம்பிப்பதில்லை எனும் நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறதில்லை. அப்போஸ்தலன் மாம்சத்தின்படியான பிறப்பை உதாரணமாகப் பயன்படுத்துகின்றார்… “முதலாவது ஜெநிப்பித்தல், அடுத்தது உயிரூட்டப்படுதல், அடுத்தது பிறத்தலாகும்.” நாம் முதலாவதாகச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பிக்கப்பட்டோம்; பின்னர் நாம் கர்த்தரோடுள்ள உறவில் தொடருவோமானால், உயிரூட்டப்படுவதற்கான, வலுவடைவதற்கான வேளை வரும்; பின்னர் இந்த வலுவடைதலானது தொடருமானால் மற்றும் நாம் கிருபையிலும், அறிவிலும் தொடர்ந்து வளருவோமானால், இறுதியில் நாம் முதலாம் உயிர்த்தெழுதலில் பிறப்போம். ஆனாலும் முதலாவதாக பூரண அன்பிற்கான இலக்கை அடைவது வரையிலும், கர்த்தருக்கான ஊழியத்தில் உயிரூட்டப்படுவதற்கான அல்லது வலுவடையப்பட்டதற்கான அறிகுறிகளை யாருமே வெளிப்படுத்தமாட்டார்கள் என்று சொல்ல நான் விரும்புகிறதில்லை; ஆனாலும் உயிரூட்டப்படாமல் யாராலும் பூரண அன்பிற்கான இலக்கினை அடைய முடியாது என்று சொல்வது நியாயமானதே என்று கருதுகின்றேன். ஒருவன் கர்த்தரை தன் முழு இருதயத்தோடு அன்புகூருகிற நிலைமைக்கும், தன் அயலானை அன்புகூரும் நிலைமைக்கும், தன் சத்துருக்களையும்கூட அன்புகூரும் நிலைமைக்கும் வருகையில், அவன் கர்த்தருக்கான ஊழியத்திலும், தன் அயலானுக்கான ஊழியத்திலும் உயிரூட்டப்பட்ட அல்லது வலுவூட்டப்பட்ட நிலைமைக்கு நிச்சயமாய் வந்துவிட்டவனாய் இருப்பான். இதையே நாம் வாட்ச் டவர் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம்.