Q521:1
கேள்வி (1916 – Z.5939)-1- இவ்விதமாய் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் யாவரும் ஏற்படுத்தப்படுவது முறையானது என்றும் மற்றும் ஏற்படுத்தப்படாமல் எவரும் தொடர்ச்சியாய் ஊழியம் புரிந்திட முற்படக்கூடாது என்போமானால், பரிசுத்த பவுல் அடிகளார் “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலேயே அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நான் என்று என்ன அர்த்தத்தில் கூறினார்? (கலாத்தியர் 1:1)
பதில் – ஓர் அப்போஸ்தலனைத் தேர்ந்தெடுப்பதற்கோ அல்லது நியமிப்பதற்கோ எந்த ஒரு மனுஷனோ அல்லது சபையாரோ பொருத்தமானவர்களல்ல. எந்தச் சபையாருடைய வாக்குகளும், சகோதரரில் ஒருவரை அப்போஸ்தலனாக்கிட முடியாது. அது தெய்வீக ஏற்படுத்துதலினால் மாத்திரமேயான ஒரு விசேஷித்த ஊழியம் அல்லது பணியாகும். ஆகவே கர்த்தர் இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களை மாத்திரம் – “ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை” ஏற்படுத்தினார்; அப்போஸ்தல ஸ்தானத்தினை இழந்திட்டதான யூதாசின் இடத்தினை, பரிசுத்த பவுல் அடிகளார் எடுத்துக்கொண்டார் (வெளிப்படுத்தல் 21:14; சங்கீதம் 109:8; அப்போஸ்தலர் 1:20). இந்த ஒரு விஷயத்தில்தான் ரோம சபையும், இங்கிலாந்து சபையும் மற்றும் கிரேக்க சபையும், தேவனுடைய வார்தைகளின் கொள்கையினை மீறுகின்றவர்களாய் இருக்கின்றனர்; அதாவது அப்போஸ்தல அதிகாரமும், வல்லமையும் உடைய கண்காணிகளை – அப்போஸ்தல கண்காணிகளை நியமிப்பதாக வலியுறுத்துகின்றனர்; ஆனால் உண்மையில் இப்படி ஏற்படுத்திட முடியாது.
தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தின் ஏற்படுத்துதல் ஒருபக்கமிருக்க, மற்றபடி தனக்கான பூமிக்குரிய ஏற்படுத்துதலை தான் பொருட்படுத்தவில்லை என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனப் பரிசுத்த பவுல் அடிகளார் சொல்லவில்லை. மாறாக அந்தியோகியாவிலுள்ள சபையார் அநேகமாக தங்களது சொந்த செலவில் சுவிசேஷத்தினை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் தங்களது பிரதிநிதியாகக் காணப்படும்படிக்குப் பவுலையும், பர்னபாவையும் ஏற்படுத்தினார்கள் மற்றும் பின்னர்ப்பவுலையும், சீலாவையும் ஏற்படுத்தினார்கள். அப்போஸ்தலனாகிய பவுலை, அந்தியோகியா சபை அப்போஸ்தலனாக ஏற்படுத்தாமல், மாறாக தங்களது சுவிசேஷ ஊழியக்காரனாக அவரை ஏற்படுத்தினார்கள் மற்றும் அவரும் அவர்களது ஏற்படுத்துதலை ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர் நடபடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்று, அவர்களுக்கு அறிக்கை விவரம் கொடுத்தார் என்று பார்க்கின்றோம் (அப்போஸ்தலர் 14:26-28).