Q13:1
கேள்வி (1911)-1- ஆயிர வருஷ யுகத்தின்போது, முற்பிதாக்கள் தேவனோடு உறவில் இருப்பார்களா?
பதில் – ஆம்! ஆயிர வருஷ யுகம் முழுவதிலும் முற்பிதாக்களானவர்கள், இந்தப் புதிய உடன்படிக்கையின் வாயிலாக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர் மூலமாகத் தேவனுடன் உடன்படிக்கையின் உறவில் காணப்படுவார்கள். ஆனாலும் ஆயிர வருஷ யுகத்தின் முடிவுவரை அவர்கள் தனிப்பட்ட விதத்தில், நேரடியான விதத்தில் தேவனுடன் உறவில் இருக்கமாட்டார்கள் என்று நாங்கள் பதிலளிக்கின்றோம். ஆயிர வருஷ அரசாட்சியின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் அனைவரும், அவைகளை மாபெரும் மத்தியஸ்தர் மூலமாகவும், இன்னுமாக ஜாதிகள், ஜனங்கள், கோத்திரத்தார் மற்றும் பாஷைக்காரர் அனைவரின் சார்பிலும் தம்முடைய இரத்தத்தைக்கொண்டு அவர் முத்திரையிட்ட புதிய உடன்படிக்கையின் மூலமாகவும்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவனுக்குத் தங்களுடைய நேர்மையினை ஏற்கெனவே நிரூபித்தவர்களாகிய முற்பிதாக்கள் விசேஷித்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; அதாவது அவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது மாம்சத்தில் பரிபூரணர்களாக வருவார்கள்; படிப்படியான முறையில் அவர்கள் பூரணத்தை அடைவதில்லை; அவர்கள் பூரண மனித சரீரங்களுடன் வருவார்கள்; அவர்களது மனங்களானது ஏற்கெனவே தேவனுடைய சித்தத்துடன் முழுமையாய் இசைவுபெற்றுக் காணப்படுவதினால், அவர்களுடைய சரீரங்களும் துவக்கம் முதலே தெய்வீகப் பிரமாணத்திற்கு முழு இசைவுடனே காணப்படும். எனினும் அந்த முற்பிதாக்கள் புதிய உடன்படிக்கையின்கீழ் அப்போது காணப்படுவதும், மத்தியஸ்தரின்கீழ் அப்போது காணப்படுவதும் அவர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்; ஏனெனில் அவர்களது கடந்த கால அனுபவங்களை வைத்துப்பார்க்கும்போது, அவர்கள் சில தவறுகள் செய்யலாம். ஏன்? எப்படி? ஏனெனில் நம்முடைய கணிப்பின்படி, அவர்கள் அதிகமான அனுபவங்களைப் பெற்றவர்களாக இருப்பினும், சபைக்குக் கடந்துவந்த முழு அனுபவத்தையும் அவர்கள் பெறவில்லை. வேதவாக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் முற்பிதாக்கள் மத்தியில், நாம் சிம்சோனைக் கவனிக்கின்றோம். சிம்சோன் எந்த விதத்திலாகிலும் தேவனுக்கு உண்மையற்றவர் என்று எண்ணுவதற்கு நம்மிடம் எந்தக் காரணங்களும் இல்லை; இவர் உண்மையுள்ளவராக இருந்தார்; இவர் கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார்; தேவனிடத்தில் முழு விசுவாசம் உடையவராய் இருந்தார். இப்பண்புகளினாலேயே இவர் ஜெயங்கொண்டவரெனக் கருதப்பட்டார்; மேலும் எதிர்காலத்தில் (முற்பிதாக்களுக்கு) வரும் விசேஷித்த ஆசீர்வாதங்களில் பங்கடைபவர்களில் ஒருவராகவும் இவர் இருப்பார்; எனினும் பூரண புருஷனிடம் எதிர்ப்பார்க்கப்படும் இப்பண்புகள் பற்றின சகல அறிவையும் சிம்சோன் முழுமையாகவும், விரிவாகவும், பலவகையாகவும் பெற்றிருந்திருப்பார் என்று சொல்லும் காரியம் முற்றிலும் வேறுபட்ட காரியமாகும். ஆகையால் கொஞ்சமான அனுபவங்களின் காரணமாக, முற்பிதாக்களில் சிலர் மேசியாவினுடைய ஆளுகையின் போது எதேச்சையாக/தெரியாத்தனமாகச் சில தவறுகளைச் செய்துவிடலாம் என்று நாங்கள் எண்ணுகின்றோம். இப்படி நிகழுமானால், உடன்படிக்கையினுடைய இரத்தத்தின்கீழ்க் காணப்படுவதும், அவர்களுக்கும் தெய்வீக நீதிக்கும் இடையில் மத்தியஸ்தர் காணப்படுவதும், முற்பிதாக்களுக்கு அவசியமாய் இருக்கும்; மேலும் இதனால் ஆசீர்வாதமும் அடைவார்கள்.