Q240:2
கேள்வி (1910)-2- ஒரு சகோதரன் மூப்பராக முன்மொழியப்பட்டிருக்கும் போது, தேர்ந்தெடுத்தலுக்கு முன் அச்சகோதரனைக் குறித்து எவ்வளவுக்குக் கருத்துப்பரிமாறப்படலாம்? எதுவரை வரம்பு உள்ளது?
பதில் – சபையில் ஊழியம் புரிபவர்களுக்கான தேர்ந்தெடுத்தலுக்காய் முன்மொழியப்பட்டிருப்பவர்களைக் குறித்து அதிகமாய்க் கருத்துப்பரிமாறுவது சரியென்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நாம் ஒருவேளை ஒருவரையொருவர் கடித்துப் பட்சிப்போமானால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவோமென்று அப்போஸ்தலர் கொடுக்கும் எச்சரிப்பை நீங்கள் நினைவுகூரலாம். நீங்கள் என் சகோதரனுக்கு எதிராக, அவர் தலையைச் சீவுகிற விதத்தில் அல்லது அவர் அணியும் வஸ்திரங்களின் நிறத்தில் மற்றும் அவர் குடும்பத்தில் அவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றார்கள் மற்றும் இது மற்றும் அது என்று குற்றங்கண்டுபிடிக்க தொடங்கினால், ஆராய்வதற்கு / கருத்துப்பரிமாறிடுவதற்கு உங்களுக்கு அநேக காரியங்கள் இருக்கும். மேலும் நீங்கள் அவரைக்குறித்து முற்றும் முழுமையாய் கருத்துப்பரிமாறி முடியும்போது, அவர் அடுத்து, உங்களைக் குறித்து கருத்துப்பரிமாற ஆரம்பிப்பார். சபையார் அனைவரும் இப்படியான அனுபவம் பெற்றிருக்கக்கூடும்; இதனால் நன்மை உண்டாகுவதில்லை. என்னுடைய கருத்துப் பின்வருமாறு: சகோதரருடைய குணநலன்களைக் குறித்து அதிகம் கருத்துப்பரிமாறிடுவதற்கான அவசியமில்லை. ஏனெனில், சபைக்கு ஏதோ விதமான ஊழியம் புரிவதற்கென ஒரு சகோதரனுக்கு வாக்களிக்கும் (vote) ஒவ்வொருவரும், அவரைப் பற்றிக் கொஞ்சமாகிலும் அறிந்திருக்க வேண்டுமென்பதே ஆலோசனையாக வழங்கப்படுகின்றது. மேலும் ஒருவேளை தனிப்பட்ட பழக்கத்தின் வாயிலாக ஒருவருக்கு அவரைப்பற்றித் தெரியவில்லையென்றால், மற்றொரு சகோதரனுடைய கணிப்பை வழிக்காட்டியாகத் தனக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நான் சமீபத்தில் ஓர் இடத்திலுள்ள சபையாருடன் சேர்ந்துள்ளேன் மற்றும் அவர்களது எண்ணிக்கைப் பன்னிரண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். மேலும் அச்சபையிலுள்ள நண்பர்களுடன் கொஞ்சம் பழக்கமே எனக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களில் எவருடைய குறைவுகளும் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அனைவருடைய நற்குணங்கள் சிலவற்றை நான் அறிவேன். ஒருவேளை தேர்ந்தெடுத்தலுக்கான (election) வேளை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்; நான் ஒன்று அல்லது இரண்டு சகோதரர்கள் மிகவும் தெளிவுள்ளவர்களாகவும், மிகவும் ஒளிவுமறைவு அற்றவர்களாகவும் இருப்பதைக் கவனித்து வந்திருக்கிறேன்; மேலும் அவர்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் காணப்படுகின்றது. ஒருவேளை இந்தச் சகோதரன் இன்னொரு சகோதரனை முன்மொழிந்தால், மேலும் முன்மொழியப்பட்ட சகோதரனோடு எனக்குப் பழக்கமும் இல்லை மற்றும் முன்மொழியப்பட்டவருக்கு எதிரான எந்தக் குறைவும் எனக்குத் தெரியாமலும் இருக்கும்போது, முன்மொழியப்பட்டவருக்கு நான் வாக்குகள் (vote) செலுத்துவதில் தவறில்லை என்று எண்ணுகின்றேன்; ஏனெனில் இவரை முன்மொழிந்த சகோதரன் இவருடைய நற்பண்பைப்பற்றி ஏதோ அறிந்தவராக இருக்கின்றார். ஒருவேளை இவரை முன்மொழிந்தச் சகோதரனோடு எனக்குப் பழக்கமிருக்குமாயின், முன்மொழியப்பட்ட சகோதரனோடு எனக்கும் மறைமுகமான/நேரடியற்ற பழக்கமுள்ளது. நான் சொல்வது புரிந்திருக்குமென்று நம்புகின்றேன். ஆகவே எவருடைய குணநலன்கள் குறித்து விசேஷமாகக் கருத்துப்பரிமாறப்படாமலேயே, வாக்குகள் (vote) செலுத்தப்படுவதற்கு முன்பு ஒருவரால் பின்வருபவைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும் – அதாவது வாக்குகள் அளிக்கும் உரிமையைச் செயல்படுத்தப்போகிறவர் ஒவ்வொருவரும் முதலாவதாகக் கர்த்தருடைய விசுவாசியாக இருந்து, பாவத்திலிருந்து திரும்பித் தன்னை முழுமையாக அர்ப்பணம் பண்ணினவனாக இருக்க வேண்டுமென்பதும், அச்சபையாரின் அங்கங்கள் மாத்திரமே வாக்குகள் செலுத்த வேண்டுமென்பதும் மற்றும் வாக்குகள் செலுத்துபவர்கள் தாங்கள் எவ்விதமாய் வாக்குகள் செலுத்த கர்த்தர் விரும்புவார் என்று நம்புகின்றார்களோ அவ்விதத்திலேயே அல்லாமல் வேறுவிதத்தில் செலுத்தக்கூடாது என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இவைகள் போதுமானதென்று நான் நம்புகின்றேன். மேலும் சபையார் ஒரு சகோதரன் குறித்து ஒன்றையும் அறியாமல் அவருக்கு நிர்விசாரமாய் வாக்குகள் செலுத்திவிடாமல்;, மாறாக தங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருக்கும் ஒருவருடைய கணிப்பு அல்லது ஆலோசனையின்படி வழிநடத்தப்படுவதற்கு நாடத்தக்கதாக, மேற்கூறிய காரியங்களானது அவர்கள் மீது போதுமான பொறுப்பை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகின்றேன். ஒருவேளை தவறு செய்யப்பட்டால், ஒருவேளை தவறான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் என்ன சொல்வது? தவறான காரியம் நடந்துவிட்டது என்ற முடிவிற்கு நான் வருவேன். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற படிப்பினையை அச்சபையார் கற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என்று எண்ணுவதே சரியான விஷயமாய் இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன். ஆகவே ஒருவேளை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவர்கள் கண்மூடித்தனமாகச் செயல்பட்டிருந்திருப்பார்களானால், இதனால் அவர்களுக்கு நல்லதொரு பாடம் உண்டாகும். அடுத்தமுறை தேர்ந்தெடுத்தல் வரும்போது, அநேகமாக அவர்கள் மிகவும் கவனமாய் இருப்பதற்குக் கற்றுக்கொள்வார்கள். அநேகமாக இச்சபையின் அங்கங்கள் மிகவும் கவனமாய் இருக்கத்தக்கதாக அவர்கள் இவ்விதத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டுமென்பது கர்த்தருடைய சித்தமாகக் கூட இருக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும் சரி, கர்த்தருடைய ஜனங்களில் யாரையேனும் நார்நாராகக் கிழித்துப்போடப்படக்கூடியதான எத்தகைய காரியத்திற்கும் எதிராக என்னுடைய முழுச்செல்வாக்கை எந்தச் சபையிலும் செலுத்துவேன். சகோதர சகோதரிகளுக்கு உண்மையில் குறைச்சல் உண்டாக்கும் காரியங்கள் பேசப்பட வாய்ப்புள்ள சில சம்பவங்களையும் நான் அறிவேன்; இக்குறைகள் அவர்களுடைய கடந்தகால ஜீவியத்தில் காணப்பட்டது அநேகமாக உண்மைதான்; மேலும் இவைகளை உணர்ந்த மாத்திரத்தில் அவர்கள் தங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டார்கள். இவ்விஷயத்திலும் சரி, வேறு விஷயத்திலும் சரி என்னுடைய கருத்து ஒன்றுதான். மேலும் கர்த்தருடைய ஆடுகளுக்கு எதிரான இத்தகைய அடிகளுக்கும், பீறிப்போடுதலுக்கும் எதிராக என்னுடைய செல்வாக்கை நான் செலுத்துவேன். இக்காரியங்கள் ஆடுகளில் ஓநாயின் ஆவியை விதைத்து, விருத்தியாக்கும் என நான் எண்ணுகின்றேன்; ஆகவே இவைகள் தடுக்கப்பட வேண்டும். ஒருவேளை சபையார் மத்தியில் முக்கியமானவராகக் காணப்படும் ஒரு சகோதரனிடம் இந்த முன்மொழிதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று மற்றவர்களால் கேட்கப்பட்டால் அல்லது அவர் ஏதோ விதத்தில் அதனை குறிப்பிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தாரானால், அவர் பின்வருமாறு: “என் அன்பு சகோதரரே, நீங்கள் கேட்ட முன்மொழிதல் குறித்து சில ஆலோசனைகளைக் கொடுக்க நான் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். இதைக்குறித்து நான் சொல்ல விரும்புவது என்னவெனில், நான் இப்படியாக, அப்படியாக வாக்கு செலுத்த வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கின்றது என நான் எண்ணுகின்றேன் என்று கூறுவது சரியாக இருக்கும். மேலும் இவ்வார்த்தைகள் இவருடைய செல்வாக்குச் செலுத்தப்படும் சகோதரர்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும். மேலும் ஒருவேளை இவருக்குச் செல்வாக்கு இல்லையெனில், இவ்வார்த்தைகள் உதவியாய் இராது.