R5020 (page 148)
மத்தேயு 5:33-37; யாக்கோபு 3:1-12; 5:12
“அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். (எபேசியர் 4:25)
நம்முடைய கடந்த பாடத்தில் நாம் நியாயப்பிரமாண கடமைகள் தொடர்புடைய விஷயத்தில் பரிசேயருடைய போதனைகளிலிருந்து, இயேசுவினுடைய போதனையை வேறுபடுத்திப் பார்த்தோம். “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்ற தீர்மானத்திற்குள் நாம் வந்தோம். இன்றைய பாடத்தில் அவருடைய போதனைகளுக்கும், அவரது நாட்களில் காணப்பட்ட மதத்தலைவர்களுடைய போதனைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தினை வேறுபடுத்திப் பார்க்கப்போகின்றோம். சத்தியம்பண்ணும் பழக்கத்தினைக் கட்டுப்படுத்த மற்றவர்கள் முற்பட்டவர்களாய் இருந்தனர், ஆனால் மாபெரும் போதகரோ: “சத்தியம் பண்ண வேண்டாம் என்றார். சத்தியம் பண்ணுதல் யாவும் எத்துணை மதியீனமான காரியமாய் இருக்கின்றது! சட்டத்தினால் எதிர்ப்பார்க்கப்படுகின்றதான சட்டரீதியான சத்தியம் செய்தல்களுக்கோ அல்லது சூளுரைகளுக்கோ நாம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. கர்த்தருடைய ஆவியைப் பெற்றிருப்பவர்கள் “தெளிந்த புத்தியுள்ள ஆவியினைப் பெற்றிருப்பார்கள் என்று பரிசுத்தவானாகிய பவுல் சொல்லியுள்ளது உண்மையே. இவர்கள் சத்தியம் பண்ணுதலின் அல்லது தங்களது வார்த்தைகளை உறுதிப்படுத்துவதற்குச் சத்தியம்பண்ணுவது அவசியமென எண்ணிக் கொள்ளுதலின் மதியீனத்தையும் மற்றும் இழிவான தன்மையையும் உணர்ந்துகொள்ள சீக்கிரம் ஆரம்பிப்பார்கள். ஒருவன் தான் பேசுவது உண்மை என்று கடுமையாய்ச் சத்தியம்பண்ணும் காரியமானது, தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர் தனது எளிமையான வார்த்தையை நம்பமாட்டார் என்று உணர்வதைச் சுட்டிக் காட்டுகின்றது; மேலும் இது தனது வார்த்தைகள் சாதாரணமாகவே நம்பிக்கைக்குப் பாத்திரமற்றது என்பதைக் குறிப்பாய்த் தெரிவிக்கின்றதாகவும் இருக்கின்றது.
“உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் என்ற ஆண்டவருடைய கட்டளையைக் கவனியுங்கள் (மத்தேயு 5:37). ஆம் என்று நீங்கள் சொல்லும்போது, அது ஆம் என்பதாகவே இருப்பதாக; இல்லை என்று நீங்கள் சொல்லும்போது, அது இல்லை என்பதாகவே இருப்பதாக! என்பதே ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தமாய் இருக்கின்றது என்பதில் உறுதியே. உண்மையைச் சொல்லுங்கள்! போகப்போக உங்களது நண்பர்களும் மற்றும் அயலகத்தார்களும் உங்களது வார்த்தைகளை எப்படி மதிப்பிடுவது என்று கற்றுக்கொள்வார்கள். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், உங்கள் வார்த்தையினுடைய உண்மையினை உறுதிப்படுத்துவதற்குச் சத்தியம் பண்ணவோ அல்லது உங்களது உண்மையை நிரூபிப்பதற்கு – நீங்கள் உண்மையற்றோ, உண்மைக்கு மிஞ்சியோ பேசவில்லை என்பதை நிரூபிப்பதற்கு, எவ்வகையான விசேஷித்த பலமான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ அவசியமிராத அளவுக்கு உங்களது பேச்சனைத்திலும் மிகவும் உண்மையாய்க் காணப்படுங்கள்.
நம்முடைய ஆராய்ச்சியினுடைய இரண்டாம் பகுதியில், “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான் என்று பரிசுத்த யாக்கோபு புத்திமதி கூறுகின்றார் (யாக்கோபு 3:1,2). கிறிஸ்தவர்கள் அனைவருமே தங்கள் நாவுகளுக்குக் கடிவாளமிட வேண்டியது அவசியமாய் இருப்பினும், மிகவும் உயர்த்தப்பட்ட ஸ்தானங்களில் இருப்பவர்களே இது தொடர்புடைய விஷயத்தில் மிகவும் தவறிடுவதற்கு ஏதுவானவர்களாய் இருப்பார்கள் என்று பரிசுத்த யாக்கோபு கூறுவதுபோன்று தெரிகின்றது. மிகவும் உயர்வான ஸ்தானங்களில் இருப்பவர்கள் பேச்சாற்றல் எனும் விசேஷித்த வரம் கொண்டவர்களாகவும், இந்தப் பேச்சாற்றலைப் பயன்ப்படுத்துவதற்குரிய வாய்ப்பு எனும் விசேஷிதத் ஈவினைக் கொண்டவர்களாகவும் இருப்பதினிமித்தம், மிகுந்த செல்வாக்கினை உடையவர்களானபடியால், இதற்கேற்ப இவர்கள் பொறுப்பாளிகளாக இருப்பார்கள்.
ஊழியக்காரர்களையோ அல்லது மற்றவர்களையோ நியாயந்தீர்ப்பது நமக்கடுத்தக் காரியமல்ல; நியாயந்தீர்க்க ஒருவர் இருக்கின்றார்; அவர் கர்த்தர் ஆவார். தாங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லது பேச வாய்ப்புப் பெற்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்குமான தங்களது பொறுப்புக் குறித்து அநேகம் ஊழியக்காரர்களும், எளிமையான நிலைகளில் காணப்படும் கிறிஸ்தவர்களும் முழுமையாய் உணர்ந்து கொள்ளத்தவறுகின்றனர் என்று நாம் பெரிதும் அஞ்சுகின்றோம். தாங்கள் விசுவாசிக்காதவைகளைத் தாங்கள் வருடக்கணக்காகப் பிரசங்கித்ததாக, அநேகர் நம்மிடம் கூறினதுண்டு. எவ்வளவு பயங்கரமாய்க் காணப்படுகின்றது! அவர்களால் செய்யப்பட்டது பொருளற்றதாகிவிட்டதே! அவர்களது கிறிஸ்தவ அடையாளம் எத்துணைப் பழிக்கிடமாகிவிட்டது! எனினும் இறுதியில் அவர்களது மனசாட்சிகளானது ஜெயம் கொண்டுள்ளதற்காக நாம் களிகூர வேண்டும்.
பரிசுத்த யாக்கோபு சில பலமான விளக்க உதாரணங்களைக் கொடுக்கின்றார். தங்களது குதிரைகளின் வாய்களில் கடிவாளம் போடுவதுபோன்று, கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த வாய்க்கும் கட்டுப்பாடு எனும் கடிவாளம் போட்டிட வேண்டும். கப்பலுக்குச் சுக்கானைப் பயன்படுத்துவதுபோன்று, ஜீவியத்தில் தங்கள் சொந்த வாழ்க்கைப் போக்கினைத் திசையறிந்து திருப்புவதற்குச் சுக்கானை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். சரீரத்தினுடைய அவயவங்களிலேயே நாவானது சிறியதாய் இருப்பினும், அதுவே அனைத்திலும் மிகுந்த ஆதிக்கமுடையது என்பதை அவர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும். கைமுட்டினால் குத்தும்போது, அது அருகாமையில் இருக்கும் ஒரு நபரை வேண்டுமானால் காயப்படுத்திடலாம்; ஆனால் கசப்பான வார்த்தையோ, விஷமுள்ள அம்புபோன்று தொலைவில் போய்த் தாக்கும்; ஆம் அது பெரிய துப்பாக்கியிலிருந்து குண்டுவெடித்து, பெரிய சேதத்தை ஏற்படுத்துவதுபோன்று, ஏற்படுத்திவிடும். ஆம்! இன்னும் அதிகமாய்ச் செய்திடும்; அதன் செல்வாக்கானது தொலைப்பேசிகள், தந்தி (telegraph) கம்பிகள் மற்றும் கம்பியில்லா கருவிகள் வாயிலாக, பூமியினுடைய மூலை, முடுக்கெல்லாம் கடந்துசெல்லும் மற்றும் உலகமெங்குமுள்ள செய்தித்தாள்களில் கொண்டுவரப்பட முடியும். அதற்கு எத்துணை ஆற்றல்மிக்க வல்லமை காணப்படுகின்றது! அது நமக்குக் கொடுக்கப்பட்டதான எத்தகையதொரு புனிதமான சொத்தாயுள்ளது! சரியாய் அல்லது தவறாய்ப் பயன்படுத்துவதற்குரிய எத்தகையதொரு தாலந்தாய் அது காணப்படுகின்றது!
மேலே கூறப்பட்டுள்ளது போன்று, நன்மை அல்லது தீமைக்கு ஏதுவான பரந்த அளவிலான வாய்ப்புகள் நம் அனைவருக்கும் இருப்பதில்லை எனினும் நம்முடைய சொந்த இல்லங்களில், நாம் வேலை பார்க்கும் ஸ்தலங்களில், கடைகளில், சந்தைகளில் – ஒன்றில் சந்தோஷத்தை அல்லது துயரத்தை உண்டுபண்ணுகிறதற்கு ஏதுவாக, ஒன்றில் குணலட்சணத்தைக் கட்டியெழுப்புகிற அல்லது சீர்க்குலைக்கிறதற்கு ஏதுவாக, ஒன்றில் உதவிசெய்வதற்கு அல்லது சோர்வுபடுத்துகிறதற்கு ஏதுவாக – நாம் நன்மையான அல்லது தீமையான செல்வாக்கினை / தாக்கத்தினைப் பரப்பிடக்கூடும். எந்தக் கிறிஸ்தவனும் தனது மிகவும் ஆற்றல்மிக்க இந்த அவயத்தின் விஷயத்தில் அலட்சியமாய் இருத்தல் கூடாது. சிறு தீக்குச்சியானது பெரிய காட்டையே கொளுத்திவிடுவதுபோல, நாவும்கூட பெரிய தீயைக் கொளுத்திவிடும், பெரிய குழப்பத்தினை ஏற்படுத்திடும் மற்றும் பெரிதளவில் பாதகம் பண்ணிடும் என்று பரிசுத்த யாக்கோபு தெரிவிக்கின்றார். தற்பெருமையடித்துக்கொள்வது என்பது நாவினுடைய மிகவும் அபாயகரமான பயன்பாடுகளில் ஒன்று என்று தெரிவிக்கின்றார். இதற்கு நம்முடைய அனுபவங்களும் சாட்சி பகர்கின்றன. பெருமையாய்ப் பேசுதல் என்பது – நம்மைப் பெரும்பாலும் தப்பறைக்குள் நடத்தி, அதில்தானே நம்மை இறுக்கிக் கட்டிப்போட்டு விடுகின்றது; காரணம் தவறை ஒப்புக்கொள்வதற்கு நாம் தாழ்மையற்றவர்களாய் இருப்போம்; அது நாம் தப்பித்துக்கொள்வதற்குச் சிரமப்படுகின்றதான அசத்தியத்திற்குள் நம்மைப் பெரும்பாலும் நடத்திவிடும். இது பெருமைக்கான அறிகுறியாகும் மற்றும் இதினிமித்தம் கிறிஸ்துவுக்கு ஒத்த சாயல் அற்றவர்களாகவும், சரியற்றவர்களாகவும் காணப்படுவோம்.
கோபமான வார்த்தைகள், கசப்பான வார்த்தைகள், ஏளனமான வார்த்தைகள், வசைமொழிகள் முழு வாழ்க்கைச் சக்கரத்தையும் கொளுத்தி விடுகிறதாய் இருந்து, வாழ்க்கையைக் கோபத்தின் சக்திகளினால் இரண்டாம் மரணத்திற்கு, கெஹன்னாவிற்கு நேராக இயக்குகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் தீமையில் பிறப்பிடம் கொண்டுள்ள வார்த்தைகளானது, அழிவுக்கு நேராய் வழிநடத்தும் கெஹன்னாவின் நெருப்பாய் இருக்கின்றது என்று பரிசுத்த யாக்கோபு தெரிவிக்கின்றார்.
மிருகங்கள், பறவைகள் மற்றும் மீன்கள் யாவும் மனுஷனுடைய கட்டளையின் கட்டுப்படுத்தும் வல்லமைக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றது, ஆனால் எந்த மனுஷனாலும் இன்னொரு மனுஷனுடைய நாவினை அடக்கமுடியாது என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகின்றார். [R5021 : page 149] ஆம், எந்த விழுந்துபோன மனுஷனாலும் தன் சொந்த நாவினை அடக்கமுடியாது என்று கூறிடலாம் அல்லவா? தெய்வீகச் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கும் நிலைக்கும், சத்தியம் மற்றும் நீதி மற்றும் அன்பிற்கான வேலையாளாகப் பயன்படும் நிலைக்கும் நம்முடைய நாவுகளானது கொண்டுவரப்படுவதற்குரிய ஒரேயொரு வழி, நாவை மாற்றமடைந்த நிலைக்குக் கொண்டு வருவதேயாகும். நாவானது இருதயத்தின் உணர்வுகளுக்கான பேசும் பிரதிநிதியாய் இருப்பதினால், இருதயமே மாற்றத்திற்குள்ளாக வேண்டும். “எல்லாம் புதிதாகத்தக்கதாக குணலட்சணத்தினுடைய உண்மையான மாற்றத்திற்குரிய வல்லமையானது, தேவனுடையதேயாகும்.
பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளதான தேவனுடைய பிள்ளையானவன், தனது நாவை அடக்கி ஆளும் விஷயத்தில், ஜெநிப்பிக்கப்படாதவர்களுக்கு இல்லாத உதவியினைப் பெற்றிருப்பவனாய் இருக்கின்றான். “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா! இருதயத்தினின்று ஜீவ ஊற்றுப் புறப்படும்; இருதயத்தினுடைய நிறைவினால், இருதயத்தினுடைய தியானத்தினால் வாய்ப் பேசும் எனும் செய்தியானது எத்துணை முக்கியமானதாய்க் காணப்படுகின்றது.
சுபாவ மனுஷனுடைய நாவானது, முழுக்க சாவுக்கேதுவான விஷம் நிறைந்தது என்று பரிசுத்த யாக்கோபு கூறுகின்றார். அவர் அதைச் சர்ப்பத்திற்கு ஒப்பிடுவதுபோன்று தெரிகின்றது. நமது விழுந்துபோன நிலையில், “உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது! என்று நாவைக் குறித்துக் கூறுவது மிகவும் உண்மையே (ரோமர் 3:13). சுயநலத்திற்குப் பதிலாக நாம் அன்பின் ஏவுதலையும், இயக்கும் புதிய ஆற்றலையும் உடைய புதுச்சிருஷ்டிகளாகும்போதுதான், அந்த விஷப்பற்கள் பிடுங்கப்படுகிறது. பின்னர் புதிய மனமானது, புதுச்சிருஷ்டியானது, உதடுகளைத் தேவனுடைய துதிகளை அறிவிக்கவும், சகமனுஷனை ஆசீர்வதிப்பதற்கும் பயன்படுத்தமுடியும்.
தேவனுடைய ஜனங்களாகியுள்ள சிலர் தேவனுக்குப் பயபக்தியுடன் காணப்படுபவர்களில் சிலர், தெய்வீகத் துதித்தலைப் பாடிடுவதற்கும், தெய்வீக இரக்கத்தை அறிவித்திடுவதற்கும் தாங்கள் பயன்படுத்துகிற அதே நாவையே, தங்கள் சகமனிதர்களைக் குறித்துப் புறங்கூறவும், தீமைபேசவும், அவதூறு பேசவும், நசுக்கிடவும், அவமானப்படுத்தவும், காயப்படுத்தவும், வன்மையாய்க் கண்டிக்கவும் பயன்படுத்துகின்றனர் எனும் உண்மையினைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர் என்ற காரியத்தை அப்போஸ்தலன் நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றார் என்பதைக் கவனியுங்கள்! அந்தோ! இக்குற்றச்சாட்டினுடைய உண்மையினை நாம் உணர்ந்துகொள்கின்றோம்! இப்படி உணர்ந்துகொள்ளுதல் என்பது, தெய்வீகத் திட்டத்தின்படி செய்திடவும், மீட்பருடைய உண்மையுள்ள சீஷர்களாக இருக்கவும் நாடுகின்றவர்கள் தங்களைச் சரிச்செய்துகொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கும். ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தூய்மையான தண்ணீரும், கசப்பான தண்ணீரும் புறப்பட முடியாது. ஆகையால் நம்முடைய நாவுகளினால் நாம் நம்முடைய சகமனிதர்களுக்குத் தீங்குபண்ணுகிறோம் என்றால், தேவனுடனான நமது உண்மையான மனநிலை தொடர்புடைய விஷயத்தில், நாம் நம்மையே வஞ்சித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் அறிந்திருப்போம். கசப்பினாலும், கோபத்தினாலும், துர்க்குணத்தினாலும், பகைமையினாலும், பொறாமையினாலும், வாதினாலும் முழுக்க நிரப்பப்பெற்றும் மற்றும் இவைகளைக் கடுமையான பேச்சினால் வெளிப்படுத்தும் இருதயத்திலிருந்து வரும் ஜெபங்களையும், ஆராதனையையும் தேவன் ஏற்க மறுப்பார் என்பதை நாம் அறிந்திருப்போம்.
வசைமொழி என்பது, “பிசாசின் இயற்கைப் பாஷையாகும் என்று கார்லைல் அவர்கள் விவரித்துள்ளார். “வசைமொழியினால் எவருமே திருந்தினதாக இல்லை வெளிப்படையான வசைமொழிகளினால் நொறுக்கப்பட்டிருக்கின்றார்களே யொழிய, தேவன் அருகே ஒருபோதும் அதனால் இழுக்கப்பட்டதில்லை என்று பேபர் அவர்கள் எழுதியுள்ளார். “புறங்கூறுதலுக்கு அன்பே மருந்தாகும் என்று ராபர்ட்சன் அவர்கள் எழுதியுள்ளார். நிச்சயமாகவே பொன்னான பிரமாணமானது, நம்முடைய பேச்சு விஷயத்திலும், நமது கிரியைகள் விஷயத்திலும் செயல்படுத்தப்படுவது அவசியமாகும். “சமாதானத்திற்கும் மற்றும் அன்பிற்கும் தூதுவனாக இருப்பதற்குப் பதிலாக, நாவானது பொறாமை மற்றும் தீய எண்ணங்களைத் தூண்டி விடுகிறதாகவும் மற்றும் இரக்கமின்மையின் கசையடியாகவும் மற்றும் பகைமையின் போர்க்கருவியாகவும் மாறியுள்ளது என்று ஆயர் ஜேக்சன் அவர்கள் உண்மையாய் எழுதியுள்ளார்.