R4678 (page 285)
மத்தேயு 21:23-46
“”ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு,…என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”―வசனம் 43.
மாபெரும் போதகர் வாழ்ந்திட்ட நாட்களில் காணப்பட்ட மதவாதிகள் செய்திட்ட தவறை இரண்டு உவமைகளில், போதகர் சித்தரிக்கின்றார். இந்த உவமையானது, ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் தெய்வீகக் கிருபையினின்று இஸ்ரயேலர்கள் புறக்கணிக்கப்படத்தக்கதாக வழிவகுத்திட்ட காரணங்களைப்பற்றின தெளிவான பார்வையைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. பெயரளவிலான மாம்சீக இஸ்ரயேலர்கள் என்பவர்கள், பெயரளவிலான பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தாருக்கு ஒத்த மாதிரியாகக் காணப்படுகின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் இந்தக் கிறிஸ்தவ யுகத்தின் அறுவடை காலமாகிய இப்பொழுது, நமக்கு முன்பு நடந்திட்ட அதே நிலைமைகளும், கையாளுதல்களும் காணப்படும் என எதிர்ப்பார்க்கின்றோம்.
யூத ஜனங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்திற்கு, தாவீதின் இராஜ்யமானது சிறிய அளவிலான நிழலாய் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொண்டாலே, இங்கும், மற்றவிடங்களிலும் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய போதனைகளின் அழுத்தத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். யூத ஜனங்கள் தங்களை உயர்த்தி, தங்களைத் தேவனுடைய இராஜ்யமாக முக்கியமான ஸ்தானத்திற்குக் கொண்டுவருபவரான, மேசியாவாகிய மாபெரும் இராஜாவுக்குப் பல நூற்றாண்டுகளாக எதிர்ப்பார்த்திருந்தனர். மேசியாவை அறிமுகப்படுத்த வந்த யோவான் ஸ்நானன், இவர்கள் மனம் வருந்தி, மனந்திரும்பி, தங்களால் இயன்றமட்டும் தேவனோடும், நியாயப்பிரமாணத்தோடும், இசைவாய் வராதது வரையிலும், இவர்கள் மேசியாவின் இராஜ்யத்தில் பங்கடைய எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று யூதர்களிடம் கூறினார். இயேசுவும் ஜனங்களிடம், “”வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார் (மத்தேயு 5:20). நாம் பார்க்கவிருக்கிற இரண்டு உவமைகளும், பெரும்பான்மையானவர்களுக்கு இடையூறாக இருந்த காரியத்தை விவரிக்கின்றதாய் இருக்கும்.
யூத ஜனங்கள், தேவனுக்கு ஊழியம் செய்திட விரும்பும் தேவனுடைய ஜனங்களென தங்களை அறிக்கைப் பண்ணிக்கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் அடிமைகள்போல் நடத்தப்படாமல், மாறாக குமாரர்கள்போல் நடத்தப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் போய், வேலை செய்யும்படிக்குக் கூறப்பட்டார்கள்; ஆனால் இவர்கள் இரு வகுப்பாராகப் பிரிந்துவிட்டனர்; இந்த இரண்டு வகுப்பாருக்கு அடையாளமாக, நம்முடைய முதலாம் உவமையில் இரு குமாரர்கள் காணப்படுகின்றனர். இந்த இரு குமாரர்களில் ஒருவன், வெளிப்புறமாய்ப் பயபக்தியாய் இருந்து, ஆம் நாங்கள் தேவனுக்குச் சேவை செய்வோம் என்று கூறும் வகுப்பாருக்கு அடையாளமாய் இருக்கின்றான். இவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதாகக் கூறினாலும் கூட, இவர்கள் உண்மையில் தெய்வீக ஊழியங்களை நாடவில்லை, மாறாக தங்கள் சொந்த மதப்பிரிவுகளுக்கும், தங்கள் தனிப்பட்ட இலட்சியங்கள், கனங்கள், செல்வாக்குகள் மற்றும் விருப்பங்களுக்கும் ஊழியம் புரியவே நாடினவர்களாகக் காணப்பட்டனர். உவமையில் இடம்பெறும் மற்றொரு குமாரன், தேவனுக்கு ஊழியஞ்செய்வதாக நடிக்காதவர்களும், ஆயக்காரர்கள், பாவிகள் மற்றும் வேசிகள் என்று கூறப்படுபவர்களுமாகிய, இஸ்ரயேலர்களின் இன்னொரு வகுப்பாருக்கு அடையாளமாய் இருக்கின்றான். எனினும் யோவான் ஸ்நானனின் செய்தி கடந்து சென்றபோது, பிற்பாடு இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் செய்தி கடந்து சென்றபோது, இதே ஆயக்காரர்களும், பாவிகளும், வேசிகளும்தான் அவரை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாய் இருந்தார்கள்; ஆனால் அவருடைய செய்தியானது, தங்களுடைய போதனைகளிலிருந்து முரண்பாடாக இருப்பதைக் கண்ட மதவாதிகளோ, அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகையால்தான் இயேசுவுக்கு எதிராகக் கூறின குற்றச்சாட்டுகளில் ஒன்று, “”இவர் ஆயக்காரர்களையும், பாவிகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்” என்பதேயாகும்.
இரண்டாம் உவமையில், தேவன் மாபெரும் திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரராக அடையாளப்படுத்தப்படுகின்றார்; இந்தத் திராட்சத்தோட்டமானது எல்லா விதத்திலும், தம்முடைய நோக்கங்களுக்கு ஏற்றதாகவும், நியமிக்கப்பட்டதாகவும் காணப்பட்டது. இந்தத் திராட்சத்தோட்டமானது யூத தேசத்தையும், இந்த ஜனங்களுக்குப் பண்ணப்பட்ட தெய்வீக வாக்குத்தத்தங்களையும், அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இவர்களுடைய வளர்ச்சிக்கென நியாயப்பிரமாணமும், நியாயப்பிரமாண உடன்படிக்கையின் சகல ஏற்பாடுகளும் கொடுக்கப்பட்டது. இந்தத் திராட்சத்தோட்டத்தை அதன் சொந்தக்காரர், தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டார்; இவர்களுடைய கடமை, திராட்சச்செடிகளையும், கனிக்கொடுப்பதையும் கவனித்து, பலனைச் சொந்தக்காரருக்குக் கொடுப்பதாகும்; இந்தப் பலனில் ஒரு பகுதியை மாத்திரமே இந்தத் தோட்டக்காரர் தங்களுக்கென வைத்துக்கொள்ளலாம். இந்தத் தோட்டக்காரர்கள், முன்னிலை வகுத்த மதவாதிகளுக்கு அடையாளமாய் இருக்கின்றனர் இவர்களைக் குறித்து இயேசு, “”வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்” என்று கூறுகின்றார் (மத்தேயு 23:2-3). சொந்தக்காரர், தன்னுடைய திராட்சத்தோட்டத்தின் பலனை அடைய வேண்டுபவராகக் காணப்படுவதினால், பலனில் தன்னுடைய பங்கை அடையும்படிக்குத் தன்னுடைய ஊழியக்காரரை அனுப்பினார். ஆனால் தோட்டக்காரர், எஜமானுக்கு உரிய பங்கினைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஊழியக்காரர்களை அடித்து, கல் எறிந்து கொன்றனர்.
அந்த ஊழியக்காரர்கள் என்பவர்கள், இஸ்ரயேலுக்கு அனுப்பப்பட்ட முற்காலத்துத் தீர்க்கத்தரிசிகள் ஆவார்கள். அவர்கள் அன்புடனும், சாந்தம், பொறுமை முதலான திரளான கனிகளுடனும் வரவேற்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இதற்குப் பதிலாக, அவர்கள், இஸ்ரயேலின் தலைவர்களால், அழையாமல் உள்ளே தலையிட்டவர்களாக நடத்தப்பட்டார்கள்; அவர்களில் சிலர் கல்லெறியப்பட்டார்கள், சிலர் அடிக்கப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர், சிலர் வெட்டப்பட்டனர்; சிலர் ஏற்றுக்கொள்ளப்படாததினால் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்திக்கொண்டு, திரிந்து, குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் தங்கியிருந்தார்கள். அவர்கள் திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரருடைய பிரதிநிதிகள்போல் நடத்தப்படவில்லை. இறுதியில், “”என் குமாரனுக்கு அஞ்சுவார்கள்” என்று சொந்தக்காரர் எண்ணி, தன்னுடைய குமாரனை அனுப்பி வைத்தார். ஆனால் நமது கர்த்தருடைய நாட்களில் காணப்பட்ட மதவாதி/மத தலைவர்களாகிய தோட்டக்காரர்கள், குமாரனைக் கொன்று போட்டு, சுதந்திரத்தைக் கட்டிக்கொள்ள ஆலோசனைப் பண்ணினார்கள். இந்த மதத்தலைவர்களுக்குத் தேவனுடைய சுதந்தரத்தின் மீது, எஜமானனாய்த் தாங்கள் காணப்படலாம் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது; மற்றும் தங்களைக் கடிந்துக்கொள்பவர்கள் எவரையும் (அ) தங்கள் மாய்மாலத்தை வெளிப்படுத்துபவர்கள் எவரையும் (அ) தங்கள் அடிமைத்தனத்தின் பிடியிலிருந்து, ஜனங்களை விடுவிக்கும் எவரையும், அது யாராக இருந்தாலும் சரி, அது சுதந்தரவாளியாக இருந்தாலும் சரி, அவரைக் கொன்றுபோடுவதற்கான சுதந்தரமும் தங்களுக்கு இருக்கின்றது என எண்ணினார்கள். இவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து போட்டார்கள்.
திராட்சத் தோட்டத்தின் சொந்தக்காரர் யார் என்பதை மறந்து, திராட்சத் தோட்டத்தைத் தங்களுக்குச் சொந்தமானது போன்று பயன்படுத்தி, சொந்தக்காரரின் ஊழியர்களைத் துன்பப்படுத்தி, சொந்தக்காரரின் குமாரனைச் சிலுவையில் அறைந்துப் போட்டவர்களாகிய இந்தப் பொல்லாத தோட்டக்காரரை, சொந்தக்காரர் என்ன செய்வார்? என்று நாம் எண்ணலாம்: மாபெரும் போதகர் தம்மைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டபோது, சொந்தக்காரர் வந்து அந்தப் பொல்லாத தோட்டக்காரர்களை அழித்து, தனக்குப் பலனைத் தருகின்ற மற்றவர்களுக்குத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் என்று உடனடியாகப் பதில் தெரிவிக்கப்பட்டது.
இது தான் நடந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனை அவமதித்து, பரிசேயர்களும், வேதபாரகர்களும், நியாயசாஸ்திரிகளும் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும், தங்களுக்கான வாய்ப்புகளையும், சுயநலமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்; இவர்கள் தள்ளிவிடப்பட்டனர். இவர்களுடைய அரசாங்கம் அழிக்கப்பட்டது மற்றும் இவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த தெய்வீகக் கிருபைகளும், தேவனுடைய வாய்க்கருவிகளாக இருக்கும் சிலாக்கியங்களும், இவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டது; அதாவது இந்தச் சுவிசேஷ யுகத்தில் உள்ளவர்களுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
மாம்சீக இஸ்ரயேலர்கள், பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கான நிழலாய் இருப்பதினால், இதே மாதிரியான நிலைமைகள் இன்று காணப்படுகின்றதா என்பதைப் பார்ப்பதற்கு நாம் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதில்லை. இன்று தேவனுக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும் பிரதிநிதிகளென உயர்ந்த ஸ்தானத்தில் காணப்படும் சிலர், தங்களை வலுப்படுத்துவதற்கும், ஜனங்கள் மீது அதிகாரங்கொள்வதற்கும், தங்கள் சொந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமென தங்களுடைய ஸ்தானங்களைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கவே செய்கின்றோம். இவர்கள் தங்கள் மத்தியில் தாழ்மையுடனும், சாந்தத்துடனும், கர்த்தருடைய நாமத்தில் வருகிற எவரையும் கடுமையான வார்த்தைகள் பேசி, கொலைச் செய்கிறவர்களாய்க் காணப்படுகின்றனர். இவர்கள் சொல்லர்த்தமாக அவர்களைக் கொல்லுவதோ (அ) அம்பு எய்வதோ இல்லை, மாறாக இவர்கள் அவர்களைத் தள்ளி, ஒதுக்கி வைப்பதன் மூலம் சிரச்சேதம் பண்ணுகிறவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் கசப்பான வார்த்தைகள், பழிப் பேச்சுகள் மூலம் அவர்கள்மேல் அம்பு எய்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இப்படியான ஊழியர்களைச் சொந்தக்காரர் என்ன செய்வார்? இவர்கள் அனுபவித்த வாய்ப்புகள் இவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்ற, அதே பதில்தான் இவர்களுக்கும் பொருந்தும். தேவனுக்கு நன்றி, ஏனெனில் அவருடைய திட்டத்தில் அடுத்தப்படியாகச் சொந்தக்காரரின் குமாரனும், கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து ஊழியர்களும், தேவனுடைய அருமை குமாரனுடைய புதிய இராஜ்யத்தின் அங்கத்தினர்களாய்க் காணப்படுவார்கள். பரீட்சிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்களைத் தவிர வேறு எவரிடத்திலும், இனிப் பொறுப்பு ஒருபோதும் ஒப்படைக்கப்படுவதில்லை.
புறக்கணிக்கப்பட்ட இயேசு, தேவனுடைய மாபெரும் ஆலயமாகிய சபையின், “”மூலைக்குத் தலைக்கல்லானார்.” தேவனுடைய கருநிலையிலான இராஜ்யமாய் இருப்பதற்கான சிலாக்கியம் யூதர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கும், சபைக்கும் கொடுக்கப்பட்டது. தற்போது அவருடைய கருநிலையிலான இராஜ்யம் முற்றிலுமாகப் பூமியிலிருந்து எடுக்கப்படும், அதாவது அவருடைய உண்மையுள்ளவர்கள் பரலோகத் தளத்திலும், வல்லமையிலும், மகா மகிமையிலும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
இயேசுவின் மேல் விழுந்தவன் எவனும் நொறுங்கிப்போனாலும், சரி பண்ண முடியாத அளவுக்கு நொறுங்கிப்போகவில்லை. ஆனால் “”இந்தக் கல் (மேசியா) எவன் மேல் விழுமோ, அவனை அது இரண்டாம் மரணத்தில் நசுக்கிப்போட்டுவிடும்.;” (மத்தேயு 21:44).