R4618 (page 169)
மத்தேயு 14:22-36
“”அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.” வசனம் 33
மற்றச் சமய புஸ்தகங்களைப் போலல்லாமல், வேதாகமத்தின் கதாப்பாத்திரங்கள் தொடர்புடைய விஷயத்தில், அவர்களைப்பற்றின அப்பட்டமான உண்மைகளை வேதாகமம் கூறுகின்றது. பரிசுத்தவானாகிய பேதுருவின் சுபாவக் குணத்தினுடைய பலவீனங்கள் மற்றும் பலங்கள் பற்றியே, நம்முடைய இன்றைய பாடம் காணப்படுகின்றது. இப்பாடத்தில் நாம் பார்க்கின்ற அதே கதாப்பாத்திரம், வேறு சில தருணங்களில் தைரியமுள்ளவராகவும், உயர் குணமுள்ளவராகவும், அதேசமயம் தற்பெருமையடித்துக் கொள்பவராகவும், துடுக்குத்தனமுள்ளவராகவும் காட்டப்படுகின்றார். வேதாகமத்திலுள்ள எந்த ஒரு கதாபாத்திரத்தின் ஒரு பெலவீனமும் கூட உருமாற்றப்பட்டோ அல்லது பதிவும் பண்ணப்படாமலும் இல்லை. இயேசு தமக்குச் சம்பவிக்க இருக்கும் மரணத்தைக் குறித்துச் சொல்வதைக் கேட்ட இதே பரிசுத்தவானாகிய பேதுரு, ஆண்டவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், இப்படியாக இயேசு பேசியதினிமித்தம் அவரைக் கடிந்துக்கொள்ள ஆரம்பித்து, இயேசு உண்மையைச் சொல்லவில்லை என்றும், இயேசுவைக் காட்டிலும் சீஷர்களாகிய தங்களுக்கு அதிகம் தெரியும் என்றும், இயேசு அறியாமையில் பேசுகின்றார் அல்லது வேண்டுமென்றே தம்முடைய எதிர்க்காலத்தைத் திரித்துக் காட்டுகின்றார் என்றும் இயேசுவுக்குப் புரிய வைக்க முயற்சித்தார். இந்த விஷயத்தில் அவருடைய பேச்சுகள் எதிராளியானவனிடமிருந்து வந்தது என ஆண்டவர் கடிந்துக் கொண்டதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதே தைரியமுள்ள மனுஷன்தான் (பேதுருதான்) பின்னாளில் தனது ஆண்டவரைப் பாதுகாப்பதற்கென, தனது பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினார். இப்படியெல்லாம் செய்த சில மணி நேரத்திற்குப் பிற்பாடுதான் சத்தியம் செய்தும், சபித்தும், ஆண்டவரைப் பேதுரு மறுதலிக்கவுஞ்செய்தார். எனினும், இவரை ஆண்டவர் அன்பு கூர்ந்தார்; இப்படியாகப் பலமும், பலவீனமும் கொண்டிருந்த இவர், “”உம்மை அனைவரும் கைவிட்டு ஓடிப்போனாலும், நான் உம்மை விட்டு ஓடமாட்டேன்” என்று பெருமையாய்க் கூறினாலும், இவரிடம் பெருந்தன்மையும், உண்மையுமுள்ள இருதயமும் இருந்தது. பரிசுத்தவானாகிய பேதுருவும், மற்றச் சீஷர்களும், சீற்றம் நிறைந்த கடலின் மேல், மீன் பிடிக்கும் படகில் போய்க்கொண்டிருந்தனர். இயேசு அவர்களோடு படகில் செல்லாமல், ஜெபம் பண்ணும்படிக்கு மலைக்குப் போனார். ஆண்டவர் கடலின் மீது நடந்துத் தங்களை நோக்கி வருவதைச் சீஷர்கள் கண்டபோது, படகு இன்னும் செல்ல வேண்டிய கரையை அடையவில்லை. முதலில் அனைவரும் அச்சம் அடைந்தனர்; இயேசுவினுடைய வார்த்தை, அவர்களுடைய அச்சத்தைப் போக்கினது; பின்னர் பரிசுத்தவானாகிய பேதுரு தானும் தண்ணீரின் மீது, அவர் அண்டைக்கு நடந்து வரத்தக்கதாக, கர்த்தரிடத்தில் அனுமதிக் கேட்டார்; அனுமதி வழங்கப்பட்டது; மேலும் ஒருவேளை அப்போஸ்தலன் தனது விசுவாசத்தைத் தக்க வைத்திருந்திருப்பாரானால், அவர் பாதுகாப்பாய்க் கர்த்தர் அண்டைக்குத் தண்ணீர் மேல் நடந்துப் போய்ச் சேர்ந்திருப்பார் என்பதில் நமக்கு ஐயமில்லை. ஏனெனில், வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்குவதிலும், பிசாசுகளைத் துரத்துவதிலும் பேதுருவின் மூலமும், மற்ற அப்போஸ்தலர்கள் மூலமும் செயல்பட்ட அதே வல்லமையானது, நிச்சயமாய்ப் பேதுரு தண்ணீருக்குள் மூழ்குவதிலிருந்தும் அவரைக் காத்துக்கொண்டிருக்கும்.
தண்ணீரின் மேல் நடக்க முயற்சிக்கும் விஷயத்தில், மற்றவர்களைக்காட்டிலும் மற்றும் இன்றுள்ள நம்மைக்காட்டிலும் பரிசுத்தவானாகிய பேதுருவின் விசுவாசம் பலமானதாக இருப்பினும், போதுமானளவுக்குப் பலமுடையதல்ல. பேதுருவின் கண்கள் கடல் சீற்றத்தின் மேல் நொடி நேரம் விழுந்தபோது, அவருடைய விசுவாசம் விழுந்துவிட்டது. அவர் மூழ்க ஆரம்பித்துவிட்டார். “”உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்” (மத்தேயு 14:31). அச்சம்பவத்திற்குரிய படிப்பினை முடிந்ததும், காற்று அமர்ந்தது. “”அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்” (மத்தேயு 14:33).
அனைவரும் பாவிகள், “”நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” சிலர் தங்களுடைய பூரணமின்மையின் அளவை உணர்ந்துக்கொள்வதில்லை. புத்தியுள்ள ஜனங்களனைவரும் தாங்கள் [R4618 : page 170] பூரணமற்றவர்கள் என்றும், இதனால் மாபெரும் சிருஷ்டிகரால் அங்கீகரிக்கப்படுவதற்குத் தாங்கள் பாத்திரவான்களல்ல என்றும் உணர்ந்துக்கொள்வார்கள். இன்னுமாக, தாங்கள் அவருடைய தயவுக்கும், நித்திய ஜீவனைப் பெறுவதற்கும், பாத்திரவான்களாய் இருக்கின்றார்கள் என்று, தேவனிடத்தில் இவர்கள் தங்களுக்காக பரிந்து பேசவும் முடியாது. இப்படியாகப் பாத்திரமின்மை எனும் குற்றத்தீர்ப்பு ஆழமாகப் பதியப் பெற்றிருக்கும்போதும், “”பாவத்தின் சம்பளம் மரணம்” என்று உணர்ந்துக்கொள்ளுதல் கூர்மையாகும்போதும்தான் இருதயமானது, நித்திய ஜீவனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்துக்கொண்டு, இருளிலிருந்தும், பாவத்தின் அடிமைத்தனத்திடமிருந்தும், அதன் மரணத் தண்டனையிலிருந்தும் விடுவிக்கும்படிக்குக் கர்த்தரிடம் கூக்குரலிடும். இப்படிப்பட்டவர்கள் அனைவருக்கும், பரிசுத்தவானாகிய பேதுருவின் விஷயத்தில் செய்யப்பட்டதுபோல, உதவிகரத்தைக் கொடுக்க இரட்சகர் ஆயத்தத்துடன் நின்று கொண்டிருக்கின்றார். இவர்கள் ஒருவேளை பாவத்திற்காக மனம் வருந்தி, நீதியினிடத்திற்குத் திரும்பினார்கள் என்றால், இவர்களுடைய பாவங்களுக்காக, இவர்களை இரட்சகர் கடிந்துக்கொள்வதில்லை. மாறாக, “”ஏன் நீ சீக்கிரமாக வரவில்லை? நீ கூக்குரலிட்ட/கூப்பிட்ட மாத்திரத்திலேயே உனக்கு உதவிடுவதற்கு நான் விருப்பம் கொண்டிருந்தேன்” என்றே கூறுவார்.
பாவிகளுடைய மனங்களுக்கு முன்னதாக, பிசாசுகளின் கரங்களில் நித்திய காலத்திற்குமுரிய சித்திரவதைக் காட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் எண்ணிக் கொண்டார்கள். இப்படியான ஒரு காட்சியானது, பாவத்தின் சம்பளம் மரணம், அதாவது, நித்திய அழிவு என்று வேதவாக்கியங்களால் தெரிவிக்கப்படும் தண்டனையைவிட, மனிதனைப் பாவத்திலிருந்து நீதியினிடத்திற்குக் கொண்டுவரும் விஷயத்தில், மிகவும் வெற்றிகரமாகக் காணப்படும் என நமது முன்னோர்கள் எண்ணினார்கள் (2 தெசலோனிக்கேயர் 1:9). ஆனால், இதைக் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சியே செய்துவிட்டனர். இவர்களுடைய இந்தச் செய்தி உலகத்தை மாற்றும் விஷயத்தில் தோற்றுப்போனது. இந்தச் செய்தி, பரிசுத்தமானவர்களாக, அன்பானவர்களாக, நல்லவர்களாக இருந்தவர்களுக்கு மாத்திரமே சித்திரவதையாக இருந்தது. இச்செய்தியில் ஏதோ தவறு உள்ளது என்று மனுஷர்கள் நிதானித்து/பகுத்து அறிந்தார்கள், காரணம், இப்படிச் சொல்ல முடியாத அளவிலான சித்திரவதைக்குள் ஜீவன் மாயும் என்ற செய்தியானது, மனிதனுடைய சகல அனுபவங்களுக்கும் எதிர்மாறாகக் காணப்படுகின்றது. எனினும் இப்பொழுதோ நவீன வேதாகமம், மேம்பட்ட மொழியாக்கங்கள், ஓரக் குறிப்புகள் முதலியவைகளின் உதவியினால், தேவனுடைய வார்த்தை உண்மையானது என்றும், அது திரித்துக் கூறப்படக்கூடாது என்றும், வேதாகமம் மரணம் என்று சொல்லும்போது, அது சித்திரவதை வாழ்க்கையைக் குறிக்காது என்றும், தேவனுடைய ஜனங்கள் அதிகமதிகமாய்க் கற்றுக்கொண்டு வருகின்றார்கள்.
தேவன் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும், இரட்சிப்பையும் மறுத்துவிடுகின்றவர்களின் இறுதி முடிவாக, தேவன் ஏற்பாடு பண்ணியுள்ள காரியமாகிய, முற்றிலுமாக ஒன்றுமில்லாமல் அழிக்கப்படுவது (இரண்டாம் மரணம்) என்பது, சித்திரவதையில் கழியும் வாழ்க்கையைவிட, அச்சுறுத்தலாகத் தோன்றுகின்றது என்று சிலர் நம்மிடம் சொல்லியிருக்கின்றனர். இப்படியான மிகுந்த அச்சத்திற்கான காரணங்கள் என்னவெனில், இது நியாயமானதாக இருக்கின்றது என்பதும், மற்றும் சிந்திக்கின்ற ஜனங்களால் இதற்கு ஒப்புதல் அளிக்க முடியும் என்பதும் ஆகும். மரணத்தண்டனை என்னும் அழிவிலிருந்து, ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தையும் விடுவிப்பதற்கு இரட்சகர் ஆயத்தமாக நிற்கின்றார். அதாவது, கல்லறையிலிருந்தும், மரணத்தின் காரணமாகச் சரீரம் மற்றும் மனதில் ஏற்பட்ட சகல பூரணமின்மைகளிலிருந்தும், விடுவிப்பதற்கு இரட்சகர் ஆயத்தமாக நிற்கின்றார். முதல் மனிதனுடைய பாவத்தையும், ஆதாமோடு அவருடைய மரணத்தண்டனையில் பங்கடைந்துள்ள அனைவரின் பாவத்தையும் தள்ளுபடிச் செய்வதற்கு கல்வாரியில் நடந்திட்ட இயேசுவின் மரணம் இல்லாமல், எந்த உயிர்த்தெழுதலும், எந்த எதிர்க்கால ஜீவியமும் இருப்பதில்லை.
இன்னுங்கொஞ்ச காலத்தில் உண்மையுள்ளவர்கள் கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர்களாக இருக்கும்படிக்கு, “”முதலாம் உயிர்த்தெழுதலின்” மூலம் வருவார்கள். பின்னர் மரண நித்திரையிலுள்ள முழு உலகத்தின் விழித்தெழுதலும், மனுக்குலத்தின் பொதுவான மேம்படுத்தப்படுதலும் சம்பவிக்கும். நமது கர்த்தர், பேதுருவுக்கு உதவிச் செய்தது என்பது, முழு உலகத்திற்கும் அளிக்கப்படும் மாபெரும் உதவிக்குப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இன்னுமாக, தேவனுடைய பிள்ளைகளாக ஏற்கெனவே ஆனவர்களுக்கு, நமது கர்த்தருடைய உதவிகரம் இல்லையெனில், அவர்கள் மீண்டுமாக பாவம் செய்வதற்கான ஆபத்தில் எப்படிக் காணப்படுவார்கள் என்பதையும் சித்தரிக்கின்றது.