R4115 – கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4115 (page 11)

கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்

FINDING THE LORD’S JEWELS

யோவான் 1:35-51

“”நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கத்தரிசிகளும் எழுதியிருக்கின்றவரைக் கண்டோம்…அவர் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே.” யோவான் 1:45

“”இயேசு தம்மை அர்ப்பணிக்கும் விதமாக, ஞானஸ்நானத்தின் வாயிலாக அடையாளத்தில் வெளிக்காட்டினபோது, அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட காரியமானது யோவான் ஸ்நானனுக்கு, இவர்தான் மேசியா என்று அடையாளங்காட்டின விஷயங்களைக் குறித்து நாம் கடந்த பாடத்தில் பார்த்தோம். இதற்குப் பின்னரே இயேசு தாம் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியின் வெளிச்சமூட்டுதலால் தெய்வீகத் திட்டத்தையும், அதில் விசேஷமாக தமது பங்கைக் குறித்துக் கற்றுக்கொள்ளும்படி, வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் தனிமையில் காணப்பட்டார். இதனோடு கூட எதிராளியானவனிடமிருந்து பரீட்சைகளும், சோதனைகளும் வந்தது. மேலும், கர்த்தருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டியதும், பரிசுத்த ஆவி இப்போது அவருக்குக் காட்டின வழியிலிருந்தும், வேறுபட்ட வழிகள் குறித்ததான ஆலோசனைகளும் எதிராளியானவனிடமிருந்து இயேசுவுக்கு வந்தது. நமது கர்த்தர் இச்சோதனைகளை வெற்றிகரமாக ஜெயங்கொண்டு, மரணம் வரையிலான சுயத்தைப் பலிச்செலுத்தும் 3½ வருட ஊழியத்தை ஆரம்பித்தார். பின்னர் யோவான், ஞானஸ்நானம் கொடுத்தும், பிரசங்கித்தும் கொண்டிருக்கும் பகுதிகளுக்குப் போனார். இயேசு யோவானிடம் எவ்வளவு ஐக்கியம் பின்னர் கொண்டிருந்தார் என்பது பற்றியோ, எவ்வளவு காலம் அவ்விடங்களில் தங்கியிருந்தார் என்பது பற்றியோ நமக்குப் பதிவுகள் இல்லை. சில விஷயங்கள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயேசு வனாந்தரத்திற்குப் போவதற்கு முன்பு, பரிசேயரும், வேதபாரகரும், யோவானிடம் நீர்தான் மேசியாவோ, இல்லையோ என்று கேள்வி கேட்டு, அவரிடமிருந்து பதிலைப் [R4115 : page 12] பெற்றுக்கொண்டார்கள். யோவான், தான் மேசியா அல்ல என்றும், தீர்க்கத்தரிசனங்களை நிறைவேற்றப் போகின்ற மாபெரும் மேசியாவின் கீழான வேலைக்காரனாக இருப்பதற்குக் கூடத் தான் பாத்திரமற்றவன் என்றும் தைரியமாய்ச் சாட்சிப் பகர்ந்தார். இயேசு வனாந்தரத்திலிருந்து திரும்பி வந்த பின்னர், யோவான் பிரசங்கித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள் மத்தியில் சஞ்சரித்தார். இத்தருணத்தில்தான், “”இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குகின்ற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான் வெளிப்படையாக அறிக்கையிட்டார். இயேசுவின் ஞானஸ்நானத்தின்போது, அவர் மேல் பரிசுத்த ஆவியானது புறாவைப்போல் இறங்கின சாட்சியையும், யோவான் பெற்றிருந்தார். அந்நாளில்தான் யோவான் தன்னுடைய இரண்டு சீஷர்களோடு நின்று கொண்டிருக்கையில், சற்றுத் தொலைவில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த இயேசுவைச் சுட்டிக்காட்டி, “”இதோ தேவ ஆட்டுக்குட்டி” என்று கூறினார்.

எனக்குப் பின் ஒருவர் வருகின்றார்

யோவான் ஸ்நானனிடத்தில் காணப்பட்ட எளிமையும், நேர்மையும் குறிப்பிடத்தக்கதாகும்; காரணம் இத்தகைய தன்மைகள் அரிதானவைகளாகும். உயர் பண்புகளுடையவர்கள் மத்தியிலும் கூடப் பெரும்பான்மையானவர்கள், யோவானிடம் ஒப்புவிக்கப்பட்ட வேலைக்குப் பாத்திரமற்றுப் போகும் வண்ணமாக சுயநலமும், பேராசையும் கொண்டுள்ளனர். பெரும்பான்மையானவர்களுக்குத் தங்களுடைய ஸ்தானம், வேலை மற்றும் மதிப்புக் குறித்த விஷயங்களை உயர்வாகப் பாராட்டிப் பேசுவதைத் தவிர்ப்பது என்பது கூடாத காரியமாகும். ஆனால், யோவான் தன்னைப்பற்றி முற்றிலும் நினைக்காமல், மேசியாவை அறிவிக்கும் வனாந்தரத்தின் கூக்குரல் பற்றின தனது பொறுப்பை மாத்திரமே நினைவில் கொண்டிருந்தார். தனக்கென்று கனத்தையும், தனிச்சிறப்புகளையும் நாடாமல் தவிர்த்து, சகல இருதயங்களுடைய பயபக்தியைக் கர்த்தருக்கு நேராகத் திருப்பினார். இதுவே கர்த்தருடைய கனம் வாய்ந்த அனைத்து ஊழியர்களின் சரியான மனப்பான்மை என்று ஒவ்வொருவனும் தன்னுடைய இருயத்தில் நிலைநிறுத்தக்கடவன். நாம் எந்தளவுக்கு இந்த ஊழியத்தில் உண்மையாயிருந்து, நமக்காக அல்லாமல் நமது ஆண்டவருக்குத் துதியையும், கனத்தையும் சேர்க்கவும் நாடி, தெய்வீகத் திட்டமானது மையம் கொண்டுள்ள அவரைச் சுட்டிக்காட்டுகின்றோமோ, அவ்வளவாய் நாம் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டு, பரலோக இராஜ்யம் மற்றும் மகிமையில் பங்கடையும் பலனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதான ஆவியையும், குணலட்சணங்களை வெளிப்படுத்துகிறவர்களாயும் இருப்போம். ஒருவேளை நாம் இந்த ஆவியை விருத்திச் செய்து நம்முடைய இருதயங்களில் அவைகளைக் கொண்டிராவிட்டால், நாம் இராஜ்யத்திற்குத் தகுதியற்றவர்களாகிவிடுவோம். மகா வல்லமையும், கனமும், மகிமையும், அழியாமையும் நம்பிக்கையுடன் நமக்கு அளிக்கப்படுவதற்கும், நாம் தகுதியற்றவர்களாகி விடுவோம். “”குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்” (யோவான் 5:23). “”என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்” (லூக்கா 9:26; 14:11).

சகல ஜனங்களும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்

அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மேசியாவாக இருப்பாரோ என்று எல்லோரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்” (லூக்கா 3:15, திருவிவிலியம்). அந்தக் காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த யூத தேசமும் மேசியாவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர் என்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இதற்குத் தொடர்பாகவே, நமது கர்த்தருடைய பிறப்பின் காலக்கட்டத்தில், பெத்லகேமில் குழந்தைகள் கொல்லப்படுதல் சம்பவமும், சாஸ்திரிகளினுடைய வருகை சம்பவமும் நிகழ்ந்தது.

டாக்டர் பரார் அவர்களின் கட்டுரையில் இடம்பெறும் வரிகள்:-

டேக்டியஸ், சுயடோனிஸ் மற்றும் ஜோசபஸ் என்பவர்கள் மூலம் நாம் அறிந்துக்கொள்வது என்னவெனில், அந்தக் குறிப்பிட்ட காலத்தில், யூதேயாவில் ஒரு வல்லமையுள்ள முடியரசு தோன்றி உலகம் முழுவதிலும் ஆளுகை செலுத்தும் என்ற முற்காலத்துத் தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதல் குறித்த பேச்சு, கிழக்குப் பகுதி முழுவதிலும் காணப்பட்டது.

இந்தப் பொதுவான/பரவலான எதிர்ப்பார்ப்பிற்கு இசைவாகவே, யோவான் மேசியாவின் இராஜ்யம் சமீபித்துள்ளது என்றும், அதில் பங்கடைய ஆயத்தமாய் இருக்கும் யாவரும் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவைகளுக்காக மனம் வருந்தி, சீர்ப்பொருந்த வேண்டும் என்றும், இதை அடையாளத்தில் தெரிவிக்கும் வண்ணமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றும் பிரசங்கித்தப்போது, திரளான ஜனக்கூட்டம் கவரப்பட்டார்கள். இந்தப் பாவ மன்னிப்பின் விஷயம் யூதருக்கு மாத்திரம் பொருந்துகிறதாய் உள்ளது. மேலும், இது வருடந்தோறும் செலுத்தப்படும் காளை மற்றும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தினால் ஈடு செய்யப்பட்டது. அவர்களுடைய நிஜமான/ஆதி பாவத்திற்குரிய மனந்திரும்புதலைக் குறிக்கின்றதாய் இராமல், மாறாக நியாயப்பிரமாணத்துக்கு எதிராக செய்யப்பட்ட சகல தனிப்பட்ட மீறுதல்கள் குறித்த மனந்திரும்புதலாக இருக்கின்றது. ஜனங்கள் எந்தளவுக்கு யோவானின் செய்தியை விசுவாசித்து, அதன்படிச் செயல்பட்டார்களோ, அவ்வளவாய் அவர்கள் இயேசுவின் ஊழியத்திற்கும், இன்னுமாக சுவிசேஷத்தின் சத்தியத்திற்கும் ஆயத்தமாய் இருந்தார்கள். ஆகவேதான், கர்த்தருடைய சீஷர்கள் ஏதோ விதத்தில் யோவானுக்கும், அவருடைய பிரசங்கத்திற்கும் அங்கீகரிப்புக் கொடுத்தவர்களாக இருந்தார்கள். இப்படியாக யோவான் ஸ்நானனுடைய சீஷர்களுக்கு மேசியா யார் என்று முதலாவதாகச் சுட்டிக்காண்பிக்கப்பட்டது. மேலும், இயேசுவின் சீஷர்களாகுவதற்கான கதவும் அவர்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டது.

இயேசுவோடு ஐக்கியம் வைக்க நாடுதல்

“”இதோ தேவ ஆட்டுக்குட்டி” என யோவான் ஸ்நானனால் உணர்த்தப்பட்ட இரண்டு சீஷர்களும் தாங்கள் யோவானால் சுட்டிக்காட்டப்பட்ட மேசியாவைக் கண்டுபிடித்துவிட்டபடியால், உடனே அவருடன் ஐக்கியங்கொள்ள நாட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும், கூடுமானமட்டும் விரைவில் அவருடைய ஊழியத்திலும் சேர வேண்டுமெனவும் முடிவு பண்ணினார்கள். அந்த இரண்டு சீஷர்களும் தன்னை விட்டுப் பிரிந்து போவதைக் குறித்து, யோவான் ஸ்நானனும் எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அந்த இரண்டு சீஷர்களில் ஒருவருடைய பெயர் அந்திரேயா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது; மற்றவர் யோவான் என்று அனுமானிக்கப்படுகின்றது. சுவிசேஷ புஸ்தகத்தை எழுதின இந்த யோவான், தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் தன்னை அறிவிப்பதில் தன்னடக்கமுடையவராகக் காணப்பட்டார். வேறு ஓர் இடத்திலும் கூட யோவான் தன்னை, “”இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த சீஷன்” என்று குறிப்பிடுகின்றார். இந்தத் தன்னடக்கம் எவ்வளவு அருமையாக இருக்கின்றது. மேலும், இத்தன்மையானது அவரது (யோவானின்) குணலட்சணங்கள் மீது அனைவரையும் எவ்வளவாய்க் கவருகின்றது. யோவான் ஒருவேளை தாழ்மையில்லாத மனுஷனாக இருந்திருப்பாரானால், இயேசுவைச் சந்தித்த விஷயத்தைக் குறித்து எழுதும்போது, தான் முதலாவதாக இயேசுவைப் பின்தொடர எண்ணம் கொண்டிருந்ததாகவும், தன்னோடுகூட அந்திரேயா வரும்படிக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்திருப்பார். யோவானுடைய இந்தத் தன்னடக்கமான குணலட்சணம் நம்மை அவர்பால் கவருவதோடல்லாமல், அவர் எழுதியிருப்பவைகளின் மேல் நம்பிக்கைக் கொள்ளவும் வழிவகுக்கின்றது.

அந்த இரண்டு சீஷர்களும் கர்த்தரைத் தைரியமாய் அணுகி, “”ஐயா நாங்கள் யோவான் ஸ்நானனின் சீஷராய் இருக்கும் மதிப்புடையோர்” என்று தங்களை அவரிடம் அறிமுகம் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் காட்டின தன்னடக்கம் இன்னும் அதிகமாக முன்மாதிரியாக அமைகின்றது. இவர்கள் இருவரும் அமைதலுடன் அவரைப் பின்பற்றி, கர்த்தர் எங்கே தங்கியிருக்கிறார் என்றும், அவருடன் பழகுவதற்குத் தாங்களே தடையாக இருக்காத வண்ணம், தொடர்புகொள்ளும் வாய்ப்பு எப்படிக் கிடைக்கும் எனச் சிந்தித்தவர்களாக இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். அவர்களுக்கு அவர் மேல் இருந்த பயபக்தியும், தங்களைக் குறித்துக் கொண்டிருந்த தன்னடக்கமான எண்ணமும் அவர்களைத் தவறு செய்வதிலிருந்து தவிர்த்தது. இப்படியாக அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தபோது, தாம் தங்கியிருந்த இடத்தை நோக்கிப் பிரயாணித்த இயேசு அவர்களிடத்தில் திரும்பி, “”என்ன தேடுகிறீர்கள்” என்று கேட்டார். இதை இன்றைய நடைமொழியில் சொல்ல வேண்டுமெனில்… நான் ஏதேனும் உதவி உங்களுக்குச் செய்ய வேண்டுமா?” என்பதாகும். பரவசத்தில் “”ரபீ நீர் எங்கே தங்கியிருக்கின்றீர்” என்று மாத்திரமே [R4116 : page 13] அவரிடம் கேட்டார்கள். “”வந்து பாருங்கள்” என்பது நமது கர்த்தரின் பதிலாக இருந்தது. அவர்களும் அவருடன் சென்று, மீதமான நாள் முழுவதும் அவர்கள் என்ன கேட்டிருப்பார்கள் என்றும், அவைகளுக்கு நமது கர்த்தருடைய பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். காரணம், இது குறித்து எவ்விதமான பதிவுகளும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் இயேசுவைக் குறித்து யோவான் ஸ்நானனிடம் கேட்ட விஷயங்களைக் கர்த்தரிடம் கூறி, அவருடைய எதிர்க்கால வேலை மற்றும் இராஜ்யம் குறித்து அவரிடம் கேட்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக கொஞ்சங் காரியங்களையே அவர்களிடம் கூறியிருந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை. காரணம், நமது கர்த்தர், “”இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்” என்று கூறியுள்ளார் (யோவான் 16:12).

புதிய சிருஷ்டிக்கான படிப்பினைகள்

இங்கு நமக்கு அநேக படிப்பினைகள் உள்ளது. (1) சீஷர்கள் அவரை அணுகின விதத்தில் வெளிப்பட்ட தாழ்மை, (2) தேவன் தங்களுக்கு அருளியுள்ள யாவற்றையும் பெற்றுக்கொண்டு, தங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றதான அவர்களுடைய சரியான இலட்சியம். யோவானின் சீஷர்களாய் இருப்பதிலிருந்து, இயேசுவின் சீஷர்களாக முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தினார்கள். (3) கர்த்தருடன் ஐக்கியங்கொள்வதற்கும், நன்கு பழக்கம்கொள்வதற்கும் இடையூறற்ற விதத்தை அவர்கள் கையாண்ட முறை. (4) நமது கர்த்தர் அவர்களைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை விருந்தோம்பல் பண்புடன் தமது வீட்டிற்கு அழைத்த விஷயம். (5) முழுச் சத்தியத்தையும் அவர்களிடம் சொல்லாதபடிக்கு அவர் கொண்டிருந்த ஞானமான நடக்கை. அவர் பரலோக விஷயங்களையோ, பூமிக்குரிய சோதனைகளையோ, பாடுகளையோ அவர்களிடம் உடனடியாக அப்போது கூறவில்லை. குழந்தைகளுக்குப் பால் ஆகாரமும், நன்கு வளர்ந்தவர்களுக்குக் கனமான ஆகாரமும் என்று அப்போஸ்தலர் பரிந்துரைத்துள்ள வேதவாக்கியங்களின் வரிசைப்படி இயேசு செயல்பட்டார்.

இந்தப் பல்வேறு படிப்பினைகளைக் கர்த்தருடைய அனைத்து அருமையான பின்னடியார்களும் ஏற்றுக்கொள்வதும், இவைகளை அனுபவிப்பதும், இவைகளைச் செயல்படுத்துவதும் எவ்வளவு அவசியமாய் உள்ளது! நம்மில் எத்தனை பேர் ஞானமில்லாமல், வைராக்கியம் கொண்டவர்களாகக் காணப்பட்டு, புதிதாய்ச் சத்தியத்திற்குள் வந்தவர்களுக்குப் பலமான ஆகாரம் கொடுத்துள்ளோம். மேலும், இப்படியாகச் செய்யப்பட்ட காரியங்கள் பின்வாங்கிப்போகச் செய்யவில்லை என்றாலும், எத்தனை பேருக்கு இடையூறாக இருந்தது. நாம் அனைவரும் மாணவர்களே, நாம் சர்ப்பத்தைப் போல் ஞானமுள்ளவர்களாகவும், புறாவைப் போல் கபடற்றவர்களாகவும் இருக்கக் கற்றுக்கொள்வோமாக. சத்தியத்திற்கு ஆயத்தமாய் இருப்பவர்களைத் தவிர, ஆயத்தமற்ற நிலையில் இருப்பவர்கள் முன்பு முத்துக்களைக் காட்டாதிருப்போமாக!

என்ன தேடுகிறீர்கள்?

இந்தக் கேள்வியில் விசேஷித்த அழுத்தம் உள்ளது. அவருடைய தோழமையை முதலாவதாக நாடின அந்த இருவரின் எண்ணங்களை விழித்தெழப்பண்ணவே இந்தக் கேள்வியை நமது கர்த்தர் கேட்டிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இது நம்மில் ஒவ்வொருவரும், நம்மையே கேட்க வேண்டிய கேள்வியாகும். மேலும், தற்கால சத்தியத்தின் மீது நாட்டம் காண்பிக்கும் சகலரிடமும் இது கேட்கப்பட வேண்டிய முக்கியமான நல்ல கேள்வியாகும். நாம் என்ன தேடுகின்றோம், நாம் எதற்காக நாடிச் செல்கின்றோம்? உலகம் எதைத் தேடுகின்றது என நாம் அறிவோம்; அதாவது, உலகமானது ஆஸ்தி, மேன்மை, புகழ், சௌகரியம் முதலியவைகளை நாடுகின்றது. கர்த்தரிடம் திரும்பின அநேகரிடமும் கூட இன்னமும் உலகத்தின் ஆவி இருப்பதை நாம் அறிவோம். இத்தகையவர்கள் கர்த்தருடைய சீஷர்களாகவும் இருக்க விரும்புவார்கள், அதேசமயம் உலகப் பிரகாரமான இலட்சியங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளையும் கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்டவர் அன்று அவர்களிடம் கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்டதுபோல் நாம் செவிசாய்க்க வேண்டும். நீங்கள் என்ன தேடுகின்றீர்கள்? நம்முடைய ஆண்டவருக்கு நமது பதிலை இருதயத்திலும், ஜெபத்திலும் தெரிவிப்போமாக. மேலும், நாம் பதிலளிப்பதற்கு முன்னதாக, நம்முடைய பதில் உண்மையுள்ளதா என்று நிதானிப்போமாக. ஏனெனில், நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளலாம். ஆனால், நாம் பதிலளிக்கப்போகும் அவரை ஏமாற்ற முடியாது. நாம் தேவனுடைய இராஜ்யத்தையும் தேட வேண்டும் என்பது சரியே; அந்த இராஜ்யத்துடன் கூட, மாபெரும் கனமும், மகிமையும் தெய்வீக ஏற்பாட்டினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்து, மகிமை, கனம் மற்றும் அழியாமையை நாடுவதும் சரியே. ஆனாலும், தேவனுடைய இராஜ்யத்தைத் தேடுவது சம்பந்தமாக நமது ஆண்டவர் வேறொரு இடத்தில் பேசின விஷயங்களையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். அதென்னவெனில், நாம் முதலாவதாகத் தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேட வேண்டும் என்பதேயாகும்.

அநீதியான பாதையின் வழியாக இராஜ்யத்தை அடையமுடியாது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். அநீதி, அக்கிரமம், நியாயமற்ற நிலைமை, சுயநலம், சுயதிருப்தி ஆகிய வழிகள் வேறு திசைகளுக்கே வழிநடத்துகின்றது. மேலும், கர்த்தருக்கு துன்பங்கள் வந்ததுபோல, தற்காலத்தில் தேவபக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்று ஆண்டவர் தமது வார்த்தையின் மூலமும், முன்மாதிரியின் மூலமும் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். ஊழியக்காரனும் தனது கர்த்தரைக்காட்டிலும், உலகத்தின் தயவை அதிகமாய்ப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கக்கூடாது. ஆகவே, நாம் இராஜ்யத்தைத் தேடுவது என்பது, சுயத்தை வெறுக்கும் இடுக்கமான வழியைத் தெரிந்தெடுப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும்; அதாவது, பாவத்திற்கு எதிராக சிலுவையின் நற்போர் சேவகராக நாம் போராடும் விஷயத்தில், அவரிடத்திலான நமது உண்மையினிமித்தம், உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனிடமிருந்து எதிர்ப்பு வருமென்ற முழுமையான அறிவுடன், கர்த்தரின் கீழ் நம்மை ஒப்புவித்துவிடுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். யாரெல்லாம் கர்த்தரை உண்மையாய், நேர்மையாய், சுயநலமில்லாமல், தந்திரமில்லாமல் தேடுகிறார்களோ, அவர்களே அவரைக் கண்டடைந்து, அவருடன் ஐக்கியங்கொண்டு, அவருடைய உண்மை சீஷர்களாகி, இறுதியில் அவருடைய இராஜ்யத்தில் அவருடன் உடன்சுதந்திரரும் ஆவார்கள்.

முதலாவது தனது சகோதரனைக் கண்டு

யோவான் ஸ்நானன் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தவர்களில் ஒருவர் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா ஆவார். ஒரு வேதாகம மொழியாக்கத்தில் இரண்டு சீஷர்களுமே தங்களது சகோதரர்களைச் சந்திக்க தேடினார்கள் என்றும், அந்திரேயாதான் முதலாவதாக தனது சகோதரனைக் கண்டடைந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நமக்கு ஒரு பாடம் உள்ளது, அதென்னவெனில், சத்தியத்தின் சேவையை ஆரம்பித்த ஆரம்பக்கட்டத்தில், இந்தச் சீஷர்கள் தங்களுடைய சொந்த சகோதரரிடத்திற்கு முதலாவது சென்றார்கள். இது அவர்களுடைய இருதயத்தில் சகோதர சிநேகம் இருந்ததைக் காட்டுகின்றது. மேலும், இயேசுவின் சீஷர்களாக இருப்பதற்குப் பாத்திரவானாக இருக்கும் யாவரிடமும் இது காணப்பட வேண்டும். மேலும், இது மத ரீதியிலான விஷயங்களில் அவர்களுடைய சகோதரர்கள் மீது அவர்களுக்கு இருந்த செல்வாக்கையும் காட்டுகின்றது. ஆகவே, நாமும் முதலாவது நமக்குச் செல்வாக்கு இருக்கும் சொந்தமானவர்கள் மத்தியில் நற்செய்தியை அறிவிப்போமாக. ஒருவேளை சாதகமான நிலைகள் ஏற்படாவிட்டாலும் நாம் சோர்ந்து போக வேண்டாம். கர்த்தர் தம்முடைய சீஷர்களாகத் தெரிந்துக்கொண்டவர்களில் அநேகர் கனமும், செல்வாக்கும் உடையவர்களாயிராமல், இழிவானவர்களாகவே இருக்கிறார்கள் என்று அப்போஸ்தலர் உறுதியளித்துள்ளதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

கர்த்தரோடு ஐக்கியங்கொள்வதற்கான சிலாக்கியத்தை அவர் நமக்கு அருளியுள்ளதான காரியமோ, அவர் நம்மில் வெறுக்க முடியாத ஏதோ ஒன்றை நாம் பெற்றிருக்கின்றோம் என்றும், அதை அவர் தமது சத்தியம் மற்றும் கிருபையினால் வனைய விரும்பினதால், நம்மை எடுத்துக் கொண்டார் என்றும், இறுதியில் அதை முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமையான மாற்றத்தின் மூலம், பிதாவின் முன்பு அருமையானதாகவும், குற்றமற்றதாகவும் ஒப்புவிப்பார் என்றதுமான நிச்சயத்தை அருளுகின்றது. மீண்டுமாக நமக்குச் சொந்தமானவர்கள் மத்தியில் அன்பு செலுத்தி, நம்மால் முடிந்த மட்டும் அவர்கள் சத்தியத்திற்குள் நடத்தப்பட உதவுவதற்குரிய கடமையை நாம் நினைப்பூட்டுகின்றோம். இது சகோதர சகோதரிகள் மத்தியில் காணப்படுகின்ற ஒழுங்காய் இருக்கிறதுபோல, கணவன் மனைவிக்கு இடையேயும், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயும் காணப்பட வேண்டும். ஒருவேளை மனைவியானவள் சத்தியத்தைப் பெற்றுக்கொண்டிருந்தால், கூடுமானமட்டும் அதைத் தனது கணவனின் கவனத்திற்குக் கொண்டுவருவதே அவளுடைய முதல் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். ஒருவேளை கணவனானவன் சத்தியத்தைப் பெற்றுக்கொண்டிருந்தால், அதை அவன் தனது மனைவியின் கவனத்திற்குக் கொண்டு வருவதையே அவன் தனது முதல் சந்தோஷமாகவும், சிலாக்கியமாகவும் கருத வேண்டும். இப்படியே பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயும் இருக்க வேண்டும். ஆனால், தற்கால சத்தியத்தின் வெளிச்சத்திற்குள் வந்தவர்கள் மத்தியிலும் கூட நேர்த்தியான, இயல்பான இவ்வழிமுறை கடைபிடிக்கப்படாததைக் குறித்து நாம் ஆச்சரியமடைந்ததை தெரிவிக்கின்றோம்.

கணவனானவன் மனைவியின் நலன் கருதி, அவளுக்குச் சத்தியம் கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கத்தக்கதாக, வீட்டுக் காரியங்களை ஒழுங்குப்படுத்துவதில் அவளுக்கு உதவி செய்வானாக. சத்தியத்திற்குள் மனைவி வந்திருந்தால், அவளது கணவனும் கூட சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும் சிலாக்கியம் மற்றும் ஆசீர்வாதங்கள் முதலியவைகளில் பங்கடையத்தக்கதாக, கணவனுக்குச் சாதகமாய் அமையத்தக்கதாகக் காரியங்களை ஒழுங்கு செய்வதில் மிகவும் கவனம் செலுத்துவாளாக. “”புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.” அதாவது, அவர்கள் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாக, அதிலும் விசேஷமாக அவர்களின் மேலான ஆவிக்குரிய நலன் கருதி, எல்லாவற்றிற்கும் மேலான சந்தோஷத்திற்குள் அவர்களும் கொண்டு வரப்படத்தக்கதாக, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். “”மனைவிகளே உங்கள் புருஷர்களைக் கனம் பண்ணுங்கள்.” அதாவது, அவர்களைப் புரிந்துக்கொண்டவர்களாக இருந்து, அவர்களுக்கும் அனைத்து நன்மையானவைகளும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் சிறப்பான செல்வாக்கைப் பயன்படுத்துங்கள்.

நாங்கள் மேசியாவைக் கண்டோம்

இந்தச் செய்தியை அவர்களுடைய சகோதரருக்கு அறிவித்தார்கள். மேசியா என்ற எபிரெய வார்த்தைக்குரிய கிரேக்க வார்த்தை கிறிஸ்துவாகும். அவர்கள் நெடுங்காலத்திற்கு முன்னதாகவே மேசியா வாக்களிக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்திருந்தார்கள். மேலும், பல்வேறு போராட்டங்களின் மத்தியிலும் அவர்களுடைய முழுத் தேசமும் அவருடைய வருகைக்கும், அவர்களுடைய இராஜாவாக வந்து, அவர் அவர்களுக்கு அளிக்கப் போகும் ஆசீர்வாதங்களுக்கும் ஜெபம் பண்ணுகிறவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், எதிர்ப்பார்த்திருந்தவர்களாகவும் இருந்தார்கள். மேலும், அவர் அவர்களைச் சகல தீமைகளிலிருந்தும் விடுவித்து, தேவனுடைய வல்லமையினால் அவர்களை உலகத்தின் ஒளியாக உயர்த்துவார் என்றும், இவ்விதமாக அவர்கள் மூலம் சகல தேசங்கள் மீதும் ஆசீர்வாதங்கள் பொழியப்படும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தார்கள். சாயங்கால வேளையை இயேசுவோடு செவழித்த அந்த இருவரும் இயேசுவே, “”உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானனால் உரைக்கப்பட்ட வார்த்தைகள் மெய் என்று உறுதியடைந்தார்கள்.

பேதுரு (இவர்களின்) இச்செய்தியை எப்படி ஏற்றுக்கொண்டார் என்று விவரிக்கப்படவில்லை. எனினும், பேதுரு இவ்விஷயத்தைக் குறித்துக் காணவும், அறிந்துக்கொள்ளவும், முடிவெடுக்கவும் வேண்டி துரிதமாய்ப் புறப்பட்டு வந்திருப்பார் என்று நம்மால் அவருடைய நடத்தைகள் வைத்து யூகிக்க முடிகின்றது. இயேசு எவ்விதமான நிரூபணத்தை அவருக்குக் கொடுத்தார் என்பது பற்றி விவரிக்கப்படவில்லை. எனினும், அவர் இயேசுவை விசுவாசித்து அவருடைய சீஷராகி, ஒரு புதிய நாமத்தையும் பெற்றுக்கொண்டார். அவருக்கு யோனாவின் குமாரனாகிய சீமோன் என்பது நாமமாயிருந்தது. ஆயினும், அவர் சீஷராக சீமோன் பேதுரு என்று அழைக்கப்பட்டார். அதன் அர்த்தமாவது கல் ஆகும். இவ்வாறாக இயேசு இந்த மனுஷனாகிய பேதுரு, எதிர்க்காலத்திலுள்ள மகிமையான ஆலயத்தின் ஜீவனுள்ள கற்களில் ஒன்றாக தாம் அடையாளங்கண்டு கொண்டதைச் சுட்டிக்காட்டினார். இவ்வாலயத்தைக் குறித்துதான், பேதுரு பிற்பாடு 1 பேதுரு 2:4-5-ஆம் வசனங்களில் விவரிக்கின்றார். [R4117 : page 14]

கலிலேயாவுக்குப் போக மனதாயிருந்து

அடுத்த நாளில் இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, போகிற வழியில் பிலிப்புவைக் கண்டு, தம்முடைய பின்னடியாராக வரும்படி அவரைத் தனிப்பட்ட விதத்தில் அழைத்தார். பின்னர் பிலிப்பு, நாத்தான்யேலை கண்டடைகின்றார். இந்த நாத்தான்யேல் வேதவாக்கியங்களில் பர்த்தொலொமேயு என்றும் அழைக்கப்படுகின்றார்.

சீஷர்களைக் கண்டுபிடிக்கும் இச்சம்பவமானது பெத்தாபராவிலே நடந்தது (யோவான் 1:28). மேலும், இங்குதான் இயேசு தங்கியிருந்தார் என்று நாம் பார்க்கின்றோம். ஆய்வாளர்கள் இந்தப் பெத்தாபராவை, பெத்தானியா என்று அழைப்பதினால், நமது கர்த்தர் தமது ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே மார்த்தாள், மரியாள் மற்றும் லாசருவின் குடும்பத்தோடு பழக்கம் கொண்டிருந்தார் என்ற அனுமானம் காணப்படுகின்றது. மேலும், சீஷர்கள், யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து, இந்தப் பெத்தாபராவிற்கு/பெத்தானியாவிற்கு யோர்தான் நதியைக் கடந்து சென்றிருக்க வேண்டும் என்ற அனுமானமும் காணப்படுகின்றது. நமது கர்த்தர், யோவான் ஸ்நானனின் பிரசங்கத்தினால் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள மிகுந்த உண்மையுள்ளவர்களில் சிலரைக் கண்டுபிடிக்கும்படி, யோவான் சஞ்சரித்துக் கொண்டிருந்த இடங்களில் தங்கியிருந்தார் என்பது உறுதியான காரியமாகும்.

யோவான், யாக்கோபு, அந்திரேயா, சீமோன் பேதுரு, பிலிப்பு மற்றும் நாத்தான்யேலாகிய சீஷர்கள் கலிலேயாவிலிருந்து வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கக் காரியமாகும். (யூதாஸ் மாத்திரம் யூதேயாவிலிருந்து வந்தவராக இருக்கின்றார்). இந்த மனுஷர்கள் தங்கள் வீடுகளிலிருந்து, இத்தனை தொலைதூரத்தில் வந்து, என்ன பண்ணிக்கொண்டிருந்தார்கள்? இவர்கள் யோவானுடைய பிரசங்கத்தை கேட்ட திரளான ஜனங்களில் சிலராகக் காணப்பட்டவர்கள் என்றும், இவர்கள் வரவிருக்கிற மேசியாவின் மீது ஆழமான விருப்பம் கொண்டவர்களானபடியால், நீண்ட பிரயாணம் மேற்கொண்டு, யோவான் என்ன சொல்கின்றார் என்பதைக் கேட்பதற்கும், மேசியாவின் வழியை ஆயத்தம் பண்ணுவதற்காக யோவானோடு, அவரின் சீஷராகச் சேர்ந்துகொள்ளவும் தங்கள் வியாபாரங்களை/வேலைகளை விட்டு வந்தவர்கள் என்றும் நாம் அனுமானிக்கின்றோம். ஒருவகையான சத்தியத்தின் ஊழியத்தைக் கொண்டு, பிற்காலத்தின் முழுமையான இன்னொரு ஊழியத்திற்காக எத்துணை அருமையாக நமது கர்த்தர் நமது இருயத்தை ஆயத்தப்படுத்துகின்றார். “”நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்” (யோவான் 17:6). இவ்வசனம், இந்தச் சீஷர்கள் இயேசுவிடம் வருவதற்கு முன்னதாகவே, தேவனுக்குப் பயப்படுகின்ற, அர்ப்பணிக்கப்பட்ட மனுஷர்களாய் இருந்தார்கள் என்பதற்கு இசைவாய் உள்ளது. இதிலுள்ள நமக்கானப் படிப்பினை என்னவென்றால், ஒருவேளை நமக்கு வரும் ஒவ்வொரு சத்தியத்திற்கும் நாம் உண்மையுடனும், வைராக்கியத்துடனும் இருந்து அதன்படிக் கிரியைக் காட்டுவோமானால், நாம் இன்னும் அதிகமான வேறு சத்தியங்களுக்கு ஆயத்தமாக்கப்படுவோம். இந்த மனுஷர்களிடம் அர்ப்பணிப்பு ஆவி இல்லையெனில், இவர்கள் ஒருவரும் யோவானோடு, அவருடைய ஊழியத்தில் சேரும்படித் தங்கள் வேலைகள் அனைத்தையும் விட்டுவந்தும் இருக்கமாட்டார்கள், இயேசுவின் மதிப்பிற்குரிய அப்போஸ்தலர்களாகுவதற்குத் தயாராகவும் இருந்திருக்க மாட்டார்கள்.

நீர் என்னை எப்படி அறிவீர்

நாத்தான்யேலுடைய அழைப்புப் பற்றின சம்பவம் மிகவும் சுவாரசியமானதாகும். பிலிப்புவும் நமது கர்த்தரின் செல்வாக்கின் கீழ் வந்து, அவருடைய சீஷராயிருப்பது பாக்கியமான சிலாக்கியம் என்றும், இயேசுதான் நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட மேசியாவென்றும் உணர்ந்துகொண்டார். இந்த முழுமையான நம்பிக்கையுடன் பிலிப்பு தனது நண்பனாகிய நாத்தான்யேலைச் தேடிச்சென்றார். தன்னைப்போல் இந்த நாத்தான்யேல் கர்த்தரைச் சேவிப்பதற்கும், மேசியாவின் இராஜ்யத்திற்கென ஆயத்தமாய் இருப்பதற்குமான விருப்பத்தில் ஒரே சிந்தைக் கொண்டுள்ளவர் என்று பிலிப்பு அறிந்திருந்தார். பிலிப்பு, நாத்தான்யேலைக் கண்டவுடன், “”நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கத்தரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்” (யோவான் 1:45). நாத்தான்யேல் ஆழமாய் யோசிக்கும் அறிவாற்றல் கொண்ட மனுஷன் ஆவார். அவர் தனது நண்பனாகிய பிலிப்பு ஏதோ ஒரு காரியத்தை எதுவும் யோசிக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், ஒரு மாயத்தோற்றத்தினால்/ஏமாற்றுக்காரனால் வஞ்சிக்கப்பட்டுள்ளார் என்றும் எண்ணி, “”நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்று தனது மறுப்பைத் தெரிவித்தார். அதாவது, “”அந்தப் பட்டணமே ஓர் இழிவான பட்டணமாக இருக்க, அவ்விடத்திலிருந்து எவ்வித கனம் நிறைந்த மாபெரும் மனுஷர்கள் வர முடியாது. இதுவரையிலும் நாம் அறிந்திருக்கிறபடி அப்பட்டணத்தைக் குறித்து எவ்விதத் தீர்க்கத்தரிசனங்களும் தெரிவிக்கவில்லை. பிலிப்புவே நீர் கூறும் (இயேசு எனும்) மேசியாவைக் குறித்து எனக்குத் தவறான அபிப்பிராயமே ஏற்பட்டுள்ளது” என்ற விதத்தில் நாத்தான்யேல் கூறினார்.

இப்படியே கர்த்தர் மகிமைப் பொருந்தின இராஜாவாக தமது இரண்டாம் வருகையில் வருவதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்ற கர்த்தருடைய உண்மையான பின்னடியார்கள் மத்தியிலும் சிலர் காணப்படுகின்றார்கள். இந்த இரண்டாம் வருகையைக் குறித்த சத்தியங்களை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்றும், நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசிகளும் நாம், அறுவடையின் காலத்தில் அதாவது, மனுஷகுமாரனுடைய பிரசன்னத்தின் நாட்களில் (Parousia) இருக்கிறோம் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது என்றும், நாம் அவர்களிடம் எடுத்துரைக்கும்போது, நமது வைராக்கியத்தையும், உற்சாகத்தையும் பார்த்து ஏளனஞ்செய்து, நாம் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நமக்கு ஆலோசனை வழங்குவதுண்டு. மேலும், பிரசன்னத்தைக் குறித்த (Parousia) செய்தி எங்கிருந்து வருகின்றது? என்று கேள்வி கேட்கின்றார்கள். மேலும், இக்கேள்விக்குப் பதிலாக, நாம் இச்செய்தி மகான்களிடமிருந்தோ, ஞானிகளிடமிருந்தோ, தற்காலத்திலுள்ள வல்லவர்களிடமிருந்தோ, சாஸ்திரிகளிடமிருந்தோ வராமல், எளிமையானவர்களிடமே இருந்து வருகின்றது என அறிவிக்கும்போது, அவர்களுடைய மறுகேள்வி, “”இத்தகைய எளிமையானவர்களிடமிருந்து என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்?” [R4117 : page 15] என்பதாகக் காணப்படுகின்றது; அதாவது, நாம் பரிசேயர், வேதபாரகர் மற்றும் நியாயப்பிரமாணிக்கர்களின் செய்தியைக் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துவதுபோல் கூறுவதுண்டு.

அத்தகைய சந்தேகப்படும் சகோதரர்களுக்கு, பிலிப்பு நாத்தான்யேலுக்குக் கொடுத்த பதிலாகிய, “”வந்து பார்” என்பதையே நாமும் தெரிவிப்போமாக. அதாவது, வந்து தேவனுடைய வார்த்தையைக் கொண்டு, சோதித்து, ஆராய்ந்துப் பாருங்கள். பிலிப்போடு நாத்தான்யேல் உடனடியாகச் செல்லவில்லை. பிலிப்பு சோர்வடைந்து, தனது வழியில் போயிருக்க வேண்டும். காரணம், தான் தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாக உயர்வாகக் கருதிய ஒருவர், செவிசாய்க்கவும், ஆராய்ந்துப்பார்க்கவும் விருப்பமற்றவராகக் காணப்படுகின்றார் என்பதினாலேயே ஆகும். பிலிப்புவின் இவ்வழைப்புக்கு உடனடியாகச் சம்மதம் அளிக்காததற்கு, சில காரணங்கள் நாத்தான்யேல் கொண்டிருந்தார். நாத்தான்யேல் இவ்விஷயத்தை மிக முக்கியமாகக் கருதினார். காரணம் இவ்விஷயம் தனது நலனை மாத்திரம், பாதிப்பதோடல்லாமல், தனது நண்பர்களின் நலனையும், கர்த்தருடைய நோக்கத்தைப் பொதுவாக பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது என்றும், தானும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்றும் எண்ணினார். நாத்தான்யேலிடம், பிலிப்பு வந்து இவைகளைக் குறித்துக் கூறுவதற்கு முன்பே, அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டும், இவைகளைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டும், ஜெபம் பண்ணிக்கொண்டும் இருந்தார். மேலும், தான் கண்ணிகள் மற்றும் வஞ்சனைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், தனது தீர்மானங்கள்/தீர்ப்புகள் கர்த்தரால் வழிநடத்தப்பட வேண்டுமென்றும், தான் எந்த ஏமாற்றுக்காரனாலும் வஞ்சிக்கப்படக்கூடாது என்றும் நாத்தான்யேல் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். நாத்தான்யேல், தான் நாடின கர்த்தருடைய ஆசீர்வாதங்கள்மேல் சார்ந்தவராக, இவ்விஷயத்திலுள்ள நன்மை, தீமைகளை அறிந்திட முயற்சித்து, தனது தவறான அபிப்பிராயங்கள் அனைத்தும் நீங்கின பிற்பாடு, கொஞ்சம் காலந்தாமதமாகப் பின்பற்றிச் செல்லலாம் என்றிருந்தார்.

இப்படியாக, நம்முடைய அனைத்து அருமையான நண்பர்களும் காணப்பட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கர்த்தருடைய உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரர்களாகிய நாமும் நாத்தினியேல் செய்ததுபோல, கர்த்தரையும், அவருடைய பாதுகாப்பையும், வழிநடத்துதலையும் நாடி, பின்னர் தேவனுடைய வார்த்தையைக்கொண்டு அனைத்தையும் ஆராய்வோமாக! சிலர் நாத்தான்யேலின் இந்த வழிமுறையை உடனடியாக கைக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், உண்மையாய் ஜெயங்கொள்பவர்களின் வகுப்பாரிலுள்ள அனைவரும் இறுதியில் இவ்வழிமுறையைக் கையாண்டு, வழிநடத்தப்பட்டு, தற்கால சத்தியத்தின் தொடர்புக்குள் வந்து, நமது கர்த்தருடைய பிரசன்னத்தையும் (Parousia) உணர்ந்துக்கொள்வார்கள், இன்னுமாக அவர் செய்துகொண்டிருக்கும் (சபையின்); அறுவடை வேலையையும், பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்கென இராஜ்யத்தில் மகிமையில் தம்மோடு பிரகாசிக்கத்தக்கதாக முதிர்ந்த மணிகளைக் களஞ்சியத்தில் அவர் சேர்த்துக் கொண்டிருக்கும் வேலையையும் உணர்ந்துகொள்வார்கள். (மத்தேயு 13:43).

உங்கள் கண்களும், காதுகளும் பாக்கியமுள்ளவைகள்

நமது கர்த்தர், நாத்தான்யேலை வரவேற்ற காரியத்தை, குற்றங்கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகின வேதபாரகர்கள், பரிசேயர்கள் மற்றும் நியாயப்பிரமாணிக்கர்கள் சிலரைக் கர்த்தர் வரவேற்றதோடு நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இத்தகையவர்களோடு அவர் உவமைகளிலேயே பேசினார். மேலும், அவைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றோ, புரிந்துக்கொள்வார்கள் என்றோ கர்த்தர் எதிர்ப்பார்க்கவில்லை; ஆனால், நாத்தான்யேல் போன்றவர்களிடம், அவர்களுடைய இருதயங்களைத் தமது ஞானத்தினால் அறிந்துக்கொண்டவராக மிகவும் கிருபையாக இருந்தார். நம்மால், இருதயங்களை அறிந்துக்கொள்ள முடியாத காரணத்தினால், நாம் (இயேசுவைப்போல்) இப்படியாகச் செயல்படக்கூடாது. உத்தம இஸ்ரயேலர்களே நன்கு செவிசாய்த்து, அழைப்பை ஏற்றுக்கொண்டு பரிசைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற போதிலும், நாம் அனைவரிடமும் பொறுமையாயும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்; சத்தியத்திற்குச் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் அவர்கள் சத்தியத்தைப் புரிந்துக்கொள்வதற்காக நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இயேசு மற்றும் அவர் அருகே நின்றவர்கள் அருகில் நாத்தான்யேல் வருவதற்கு முன்னமே, நாத்தான்யேல் கேட்கத்தக்கதாக, “”இதோ கபடற்ற உத்தம இஸ்ரயேலன்” என்று ஆண்டவர் கூறினார். எத்துணை அருமையான பாராட்டு! சிறுமந்தையில் ஒருவராகவும், அப்போஸ்தலர்களில் ஒருவராகவும் இருப்பதற்கு நாத்தான்யேல் பாத்திரமாக இருந்ததில் ஆச்சரியமல்லவே! பிலிப்பும், நாத்தான்யேலோடு போராடியிருக்க வேண்டும்; வந்து பார்க்கும்படி வேண்டியும் இருந்திருக்க வேண்டும். நாத்தான்யேலுடைய தேசத்தார் அபாத்திரமாய்ப் போய்விட்ட ஆசீர்வாதங்களுக்கு, இவருடைய இருதயத்தின் உத்தமமானது, இவரை அதற்குப் பாத்திரமாக்கிற்று. “”அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப்பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:11-12). கர்த்தர் தம்மை ஏற்றுக்கொள்வதற்குரிய சரியான மனநிலையில் இருந்தவர்களுக்கு உதவினார். மேலும், அவர்கள் விசுவாசங்கொள்ளவும் உதவினார்; அவர்களின் நம்பிக்கையை உற்சாகமூட்டும் வண்ணமாக, அவர்களில் ஒருவரிடம் (ஒருமுறை), “”அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றும் கூறினார் என்பதை நாம் நினைவுகூருகின்றோம் (யோவான் 20:27).

தான் உண்மையும், உத்தமுமுள்ள இஸ்ரயேலன் என்றும், தேவன் உண்மையுள்ளவர்களுக்கென்று வைத்துள்ள யாவற்றையும் தான் நாடுகிறவன் என்றும், நாத்தான்யேல், தன்னைப்பற்றி உணர்ந்துகொண்டாலும், (இயேசுவின்) இந்தச் சாட்சியில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில், இவ்வார்த்தைகள் முகஸ்துதிக்காகவும் பேசப்பட்டிருக்கலாம் என்று கருதினார். ஆகவே, கர்த்தரைக் குறுக்கிடும் வண்ணமாகவே, “”நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டார். அதாவது, “”நீர் பேசின இந்த வார்த்தைகளை எந்த அதிகாரத்தில் பேசினீர்? நாம் இதற்கு முன்பாக சந்தித்ததுப்போல் எனக்கு ஞாபகமில்லையே” என்ற விதத்தில் கூறினார். அதற்கு “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்பதே, இயேசுவின் பதிலாக இருந்தது (யோவான் 1:48). அத்திமரத்தின் தாழ்வான கிளைகளுக்குக் கீழாக, தான் எவ்வாறு தவழ்ந்து சென்று, மறைவில் பரம பிதாவை நோக்கி ஞானத்திற்காகவும், மேசியாவைக் குறித்த சரியான நிரூபணத்திற்காகவும் ஜெபம் பண்ணினதை நாத்தான்யேல் நினைவுகூர்ந்தார். யாரொருவர் தன்னுடைய அந்த ஜெபத்தை அறிந்திருந்தாரோ, அவரால் அதற்குப்பதிலும் கொடுக்க முடியும், தம்மை வெளிப்படுத்தவும் முடியும். மேலும், அத்தகையவர் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மேசியாவாக இருக்க வேண்டுமென்று நாத்தான்யேல் உணர்ந்தார். நாத்தான்யேலின் விசுவாசம் செயல்பட ஆரம்பித்தது, உடனே, “”ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரயேலின் ராஜா என்றார்” (வசனம் 49).

நமது கர்த்தர் இன்றும் இப்படியாகத்தானே செய்கின்றார். இன்று காலங்கள் மற்றும் வேளைகளைக் குறித்தும், தெய்வீகத் திட்டத்தின் அம்சங்கள் குறித்தும், அறுவடை வேலைகள் தொடர்பான காரியங்கள் குறித்ததுமான வெளிச்சத்திற்கு, விசுவாசத்திலும், ஜெபத்திலும் நடத்தப்படுவது உண்மைதான் அல்லவா? மேலும் இத்தகையவர்கள் கர்த்தரால் விசேஷித்த விதமாக உதவி பெறப்படுவதும் உண்மைதான் அல்லவா? மேலும், சத்தியம் இவர்களுடைய மனங்களில் விசேஷித்த விதமான தெளிவில் காட்டப்படுவதும் உண்மைதான் அல்லவா? அதேசமயம் அறிவு பெற்றுக்கொள்ள வேண்டும் (curiosity) அதாவது, சத்தியம் கேட்டும் அதிலிருந்து விலக விருப்பம் கொண்டுள்ளவர்கள் இருளில் விடப்படுவதையும் நாம் பார்க்கின்றோமே. கர்த்தர் தமது முதலாம் வருகையின்போது சீஷர்களாகத் தெரிந்துக்கொண்டவர்கள் மத்தியில், இத்தகைய அருமையான பண்புகளை நாம் உணர்ந்துக்கொள்ளும்போது, இதே பண்புகளை நம்மில் விருத்திச் செய்வதற்கும், தேவனிடத்தில் உண்மையும், விசுவாசமும், சாந்தமும் கொண்டுள்ளவர்களாகக் காணப்படுபவர்களின் கவனத்திற்குச் சத்தியத்தைக் கொண்டு செல்வதற்கு நமது விசேஷித்த முயற்சிகளைச் செலுத்துவதற்கும் நாட வேண்டும்.

இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்

நாத்தான்யேல் தனது விசுவாசத்தை அறிக்கைச் செய்த மாத்திரத்தில், நமது கர்த்தர் அவரிடம் இதுவரை நாத்தான்யேல் அறிந்துக்கொண்ட விஷயங்கள், அவர் தமது சீஷராக இருந்து [R4118 : page 15] படிப்படியாக அறிந்து, புரிந்துக்கொள்ளப்போகின்ற இன்னும் மேலான காரியங்களுக்கு முன்பாக ஒன்றுமில்லை எனக் கூறினார். இது இன்று நம்முடைய விஷயத்திலும் உண்மையாய் இருக்கின்றதல்லவா? கர்த்தரையும், தெய்வீகத் திட்டத்தையும் நாம் அறிய ஆரம்பித்த ஆரம்பக் காலங்களில் நமது இருதயத்தை நிரப்பின சந்தோஷம், நம்பிக்கை, எதிர்ப்பார்ப்புகள் ஆகியவை, போகப் போக, நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களுக்கு வெளிப்படுத்தபடுகின்ற ஐசுவரியமான கிருபை, அன்பு மற்றும் இரக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிறியதாகவே காணப்படுகின்றது. நமது ஆவிக்குரிய பார்வை விரிவடையும்போது, நமது புத்திக்கு எட்டாத தேவ அன்பின் நீளம், அகலம், ஆழம் மற்றும் உயரத்தை விரிவாகப் பார்க்க முடிகின்றது (எபேசியர் 3:18-19).

நாத்தான்யேலிடம் நமது கர்த்தர் கூறின நிஜமான யாக்கோபின் ஏணியாக, இயேசுவை விசுவாசத்தினால், நம்மால் பார்க்க முடிகின்றது. யாக்கோபு தனது தரிசனத்தில் பூமியிலிருந்து, வானத்துக்கு ஓர் ஏணி இருப்பதையும், தொடர்பு பரிமாற்றங்கள் காணப்படுவதையும் பார்த்தார். வெளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தெய்வீகத் திட்டத்தின் வெளிச்சத்தில் நாம் பார்க்கும்போது, நமது கர்த்தரும், அவரோடுகூடச் சபையும், ஆயிரம் வருஷம் அரசாட்சியில் தேவனுக்கும், மனுக்குலத்திற்குமிடையே தொடர்பு ஏணியாக இருந்து, பூமியின் குடிகளனைத்தும் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாகக் கிருபையின் பரிமாற்றங்களாக இருப்பார்கள். மேலும், இவர்கள் மூலமாக கர்த்தருடைய ஆசீர்வாதமும், மகிமையும் பூமிக்குக் கொண்டுவரப்படும். இப்பொழுதும் தேவனுடைய மனித சிருஷ்டிகள் மத்தியிலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்ட முதற்பலனானவர்கள், சேர்க்கப்பட்டு, தேவனுடைய சுதந்திரர்களாகவும், இயேசு கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்களாகவும், கண் இமைக்கும் முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமையான மறுரூபத்தின் வாயிலாகத் தேவனிடத்தில் ஏறிப்போவார்கள்.”