R4658 (page 249)
மத்தேயு 19:13-26
“”இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்றார்.” (வசனம் 14).
எருசலேமுக்குப் போகிற வழியில், தங்கள் பிள்ளைகள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று விரும்பின தாய்மார்களினால் ஆண்டவர் எதிர்க்கொள்ளப்பட்டார். அப்போஸ்தலர்கள் தங்களுடைய ஆண்டவரின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாகவும், அவருடைய நேரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்களாகவும், வந்த தாய்மார்களைத் தடுத்து, அவர்களைக் கடிந்துக்கொண்டார்கள். இதை இயேசு கேட்டபோது, அவர்களை அழைத்து, “”சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள் பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று கூறி, சிறுபிள்ளைகளின் மேல் தம் கரங்களை ஆசீர்வதிக்கும்படிக்கு வைத்தார் (மத்தேயு 19:14).
இதிலிருந்து பரலோக இராஜ்யம், சிறுபிள்ளைகளைக்கொண்டிருக்கப் பெற்றிருக்குமென நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. இந்தத் தப்பறையான கருத்துப் பரவிப்போய், இப்படியான கருத்து மனதில் பதியப்பட்டுக் காணப்படுகின்றது. எந்தச் சிறு பிள்ளையினாலும், பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசித்திட முடியாது. விசுவாசத்தின் கேட்கும் செவிகளை உடையவர்கள் மாத்திரமே இராஜ்யத்திற்கும், அதன் மகிமைக்கும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். நமது கர்த்தர் சிறுபிள்ளைகளை ஆசீர்வதித்தக் காரியமானது, அவருடைய இரக்கத்தையும், அன்பையும் மற்றும் சிறுபிள்ளை பருவத்தின் தூய்மை மற்றும் கபடமற்ற தன்மையை அவர் விரும்புவதையும் குறிக்க மாத்திரமே செய்கின்றது. தேவனுடைய இராஜ்யத்தில் காணப்படுபவர்கள் சிறுபிள்ளைகள் போன்று, எளிமையான இருதயங்கொண்டவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், நேர்மையுள்ளவர்களாகவும், தங்களுடைய பரமபிதாவை நம்புகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படியாக இருப்பவர்களே இராஜ்யத்தின் சுதந்தரர்களாக இருப்பார்கள்.
இன்னொரு சுவிசேஷத்தின் பதிவானது, இயேசுவின் சீஷர்களாய் இருப்பவர்கள், சிறுபிள்ளைகளாக ஆக வேண்டும், அதாவது வஞ்சகமற்ற விஷயத்திலும், விசுவாசம் / நம்பிக்கை வைக்கும் விஷயத்திலும் சிறுபிள்ளைகள் போன்று காணப்பட வேண்டும் என்ற விதத்தில் இயேசுவின் வார்த்தைகள் காணப்படுகின்றது. இராஜ்யத்தின் சுதந்தரர்களாய் இருக்கப் போகிறவர்கள், “”ஜெயங்கொண்டவர்களாக” இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களது சிலுவையை எடுத்துக்கொண்டு, கர்த்தர் எங்கெல்லாம் வழிநடத்துகின்றாரோ, அங்கெல்லாம் அவரைப் பின்பற்றுபவர்களாய் இருப்பார்கள். நமது கர்த்தர் இயேசுவினால் அவர் ஒன்பது வயது சிறுவனாக இருந்த போது, அவருடைய சிலுவையை எடுத்துச்செல்ல முடியாமல் இருந்தது போன்று, சிறு பிள்ளைகளாலும், அவர்களுக்கான பகுத்தறிவின் வயதை அடைவது வரையிலும், அவர்களால் ஆவிக்குரிய விஷயத்தில் கிறிஸ்துவின் பின்னடியார்களாகிவிட முடியாது. இந்தப் பகுத்தறிவின் வயதை ஒவ்வொரு பிள்ளைகளும் வெவ்வேறு வயதில் அடைகின்றனர். பன்னிரண்டு வயது பிள்ளைகள் விசுவாசத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும், கர்த்தருடைய சித்தத்திற்கும் அர்ப்பணம் பண்ணுவதற்குமான சிறந்த சாட்சியங்களை கொடுத்துள்ளதையும், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளதற்கான சாட்சியங்களை/ஆதாரங்களைக் கொடுத்துள்ளதையும் நாம் அறிந்திருக்கின்றோம். மற்றப் பிள்ளைகள் அல்ல, இந்தப் பிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய ஆயிர வருட இராஜ்யத்தில் அவரோடு கூடப் பங்கடைவதற்கான நம்பிக்கைப் பெற்றிருப்பார்கள்.
நமது கர்த்தர் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், அவரிடம் ஒருவன் வந்து, “”நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்” என்று கேட்டான். இந்த வாலிபன் சரியான கருத்துக்கொண்டிருந்தான், அதாவது நித்திய ஜீவன் என்பதே மனித குடும்பத்திற்கு முன்பாகக் காணப்படும் அனைத்து நம்பிக்கைகளிலுமே, மாபெரும் நம்பிக்கை என்றும், மாபெரும் தேவை என்றுமுள்ள சரியான கருத்தைக்கொண்டிருந்தான். இக்கேள்வி எழும்பினதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம், காரணம் இது அனைவரும் அறிய ஆவல் கொண்டுள்ள பதிலை வெளிக்கொண்டு வந்தது. நித்திய ஜீவனுக்கான பாதைக்கு வழிநடத்துவதைத் தவிர, மற்றப்படி, தற்கால ஜீவியத்திற்கு என்னத்தான் முக்கியத்துவம் காணப்படுகின்றது? ஒருவேளை மரணத்தில் நாம் என்றென்றுமாய் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவோம் என்பதாக நமக்கு உறுதிப்பண்ணப்பட்டால், நாம் எவ்வளவு சோர்ந்துப் போயிருப்போம்! இன்னுமாக இந்தத் தற்கால ஜீவியம் எவ்வளவு அற்பமாய்த் தோன்றியிருக்கும்! நித்திய ஜீவனுக்கான நம்முடைய இருதயங்களின் ஏக்கங்களுக்கு, இந்தத் தற்கால ஜீவியம் உதவாததாகத் தோன்றியிருக்கும்!
அந்த வாலிபன் தன்னைத்தான் ஒப்புக்கொடுக்கத்தக்கதாக, நமது கர்த்தர் கேள்வியைத் தவிர்த்தார். “”நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? நீ என்னை நல்ல போதகர் என்று [R4658 : page 250] ஒப்புக்கொள்வது ஏன்? நான் ஒன்றில் உரிமைப்பாராட்டுவது போன்று மேசியாவாக இருக்க வேண்டும், இல்லையேல் நான் ஏமாற்றம் பண்ணுகிறவராகவும், நல்லவைகளுக்குத் தூரமானவராகவும் இருக்கவேண்டும். நீ என்னுடைய மேசியாத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றாயா? ஒருவேளை இல்லையெனில், எப்படி என்னை நல்லவன் என்று சொல்கின்றாய் அல்லது சகல நன்மைகளுக்கும் ஊற்றாய் இருக்கும் தேவனிடத்திலிருந்து வராத எதையும், நன்மை என்று எப்படி நீ ஒப்புக்கொள்கின்றாய்? நீ நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க விரும்பினால், கற்பனைகளைக் கைக்கொள் என்பதே உன் கேள்விக்கு நான் பதிலாகக் கூறுகின்றேன்” என்ற விதத்தில் இயேசு பேசினார். இப்படி இயேசு கூற, வாலிபன் எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: “”கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக் உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்” (வசனம் 18,19).
இந்த வாலிபன் ஒரு முன்மாதிரியான வாலிபனாக இருந்தான் மற்றும் இயேசு இவனில் அன்புகூர்ந்தார். இவன் தன்னால் முடிந்த மட்டும், மற்றும் தான் அறிந்திருந்தமட்டும், யூதர்களுக்கான நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு வந்தான். தன்னை நேசிப்பதைப் போலவே, தன்னுடைய அயலானை, தான் நேசிப்பதாக இவன் எண்ணினான்; ஆனால் இப்படியாக இவன் எண்ணினது தவறு என்பதை 21-ஆம் வசனத்தின் ஆலோசனையைக் கூறி இயேசு இவனுக்கு வெளிப்படுத்தினார். “”அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.”
ஆ! நமது கர்த்தர் முக்கியமான இடத்தில், தம்முடைய விரலை வைப்பதற்கு அறிந்தவராக இருந்தார் உலகத்திலேயே தெய்வீக ஏற்பாடுகளுக்கு ஒருவன் இசைவாக வாழ நாடுகின்றான் என்றால், அது தானாகத்தான் இருக்கும் என்ற பெருமிதத்துடன் அந்த வாலிபன், கர்த்தரிடத்தில் சென்றான். “”நீ அபூர்வமானவனாக இருக்கின்றாய்” என்று ஆண்டவர் ஒருவேளை சொல்லுவார் என்று எண்ணி, அவன் ஆண்டவருடைய அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவரிடத்தில் வந்தவனாய் இருந்தான். “”நீ உன் அயலானை அன்புகூர்ந்தாயானால், நீ சௌகரியமாய் இருக்க விரும்பிட்டது போன்று, அந்த உன் அயலானையும் சௌகரியமாய் இருக்கத்தக்கதாக, நீ பிரயாசமாகிலும் எடுத்திருப்பாய்” என்று கர்த்தர் சொல்லவில்லை. இவன் ஐசுவரியவானாய் இருப்பதில் திருப்திக்கொண்டிருக்க, இவன் தன்னைத்தான் நேசிப்பது போன்று, தான் நேசிப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அயலானே, மிகவும் ஏழையாகவும், கவலைக்கிடமான நிலைமையிலும் காணப்பட்டான். ஆகவே ஆண்டவர் இவனுடைய பிரச்சனை என்ன என்பதை இவனுக்கு வெளிப்படுத்தின போது, இவன் அதை உடனடியாகக் கிரகித்துக் கொண்டான். இவன் இப்போது, முன்பொருபோதும் இல்லாத அளவுக்குத் தன்னுடைய நிலைமையைக் கண்டான். இது இவனுக்கு ஒரு புதிய பரீட்சையாக இருந்தது. இப்படியாகவே அனைவருக்கும் இருக்கின்றது. முன்பொரு பாடத்தில் நாம் இராஜ்யம் ஒரு மாபெரும் பரிசாகவும், மாபெரும் மதிப்புள்ள . . . ஒரு முத்தாகவும், ஒரு பொக்கிஷமாகவும் இருக்கின்றது என்றும், இதனை அடைவதற்கு, நம்மிடத்தில் உள்ள அனைத்தையும் நாம் விலையாகக் கொடுக்க வேண்டும் என்றும் பார்த்தோம்; மேலும் இந்தப் பாடமும் கூட, இதே கருத்தைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
மிகவும் நல்ல ஓர் ஜீவியத்தை ஜீவித்த இந்த வாலிபன் பரலோகத்தை அடைய தவறிப்போய், நித்தியமான சித்திரவதைக்குள்ளாகப் போடப்பட்டான், காரணம் இவன் கர்த்தருடைய சீஷனாகுவதற்கெனத் தன்னில் உள்ள யாவற்றையும் பலிச்செலுத்தவில்லை என்று சிலர் எண்ணிக்கொண்டது போன்று, நாமும் எண்ணி, தவறு செய்யாமல் இருப்போமாக. நித்தியமான சித்திரவதை இல்லாமலேயே, இவன் இராஜ்யத்தை இழந்ததே, எதிர்க்காலத்தில் இவனுக்கு போதுமான தண்டனையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட மனித குடும்பத்தின் அங்கத்தினர், ஆயிர வருட இராஜ்யத்தின் ஆசீர்வாதமான நிலைமையின் கீழ், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே உரிய இராஜ்யத்தின் கனத்தை அடைய பாத்திரமாய் இல்லை என்றாலும், மனித பரிபூரண தளத்தில் நித்திய ஜீவனை அடைவார்கள்.
மாபெரும் பரிசை அடையத்தக்கதாக, தங்களுடைய ஜீவியங்களையும், தங்களுடைய அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பலிச்செலுத்துபவர்களாக இருப்பவர்களே தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் ஆவர்.
இவ்விஷயத்தைக் குறித்து நமது கர்த்தர் சீஷர்களிடம் கருத்துத் தெரிவித்து ஐசுவரியவான்கள், இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு எடுக்கும் பிரயாசம் தொடர்புடைய விஷயத்தில் மிகுந்த சிரமம் உள்ளது என்று கூறினார். கண்டிக்கும் விதத்தில் அல்லாமல், மாறாக அனுதாபத்துடனே, “”ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கூறினார் (மத்தேயு 19:24). இது சீஷர்களை வெகுவாய் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. ஏனெனில் சீஷர்களின் நாட்களில் மதம் சம்பந்தப்பட்ட பெரும்பான்மையானவர்களாகிய பரிசேயர்களும், வேதபாரகர்களும் ஐசுவரியமுள்ள வகுப்பாரைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள் என்பதைச் சீஷர்கள் அறிந்திருந்தார்கள். “”அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனாலே எல்லாம் கூடும் என்றார்” (மத்தேயு 19:25,26). தேவன் ஒருவேளை ஐசுவரியவான்களைப் புறக்கணித்தார் என்றால், தேவனால் இராஜ்யத்திற்கு என்று எவரையும் கண்டுபிடிக்க முடியாது என்று மனிதர்கள் சொல்லுபவர்களாய் இருப்பார்கள்.
சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமெனில், எந்த ஐசுவரியமுள்ள மனுஷனும் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஒருவன் அனைத்தையும் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். இல்லையேல், அவன் இராஜ்யத்தில் இடம் பெறுவதிலிருந்து தள்ளப்படுவான். இராஜ்யத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் ஐசுவரியவான்களுக்கும், ஏழைகளுக்கும் ஒரே போல்தான் உள்ளது. மாபெரும் விலையுள்ள முத்தை ஒருவன் அடைய வேண்டுமெனில், இதற்காக அவன் தன்னில் உள்ள யாவற்றையும் விற்க வேண்டியவனாய் இருக்கின்றான். ஐசுவரியவான் தன்னில் உள்ள யாவற்றையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியவனாய் இருக்கின்றான்; பின்னர் அவன் தன்னுடைய ஐசுவரியங்கள் மீது உக்கிராணக்காரனாய் இருந்து, தனக்கான உக்கிராணத்துவத்தின் கணக்கை ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கின்றான்.
சூரியன் அஸ்தமித்தப் பிற்பாடு, பட்டணத்திற்குள்ளாகப் போவதற்கான பெரிய வாயிற்கதவில் இருக்கும், சிறிய வாயில் (அ) ஊசியின் காது வழியாய்ப் பாரங்கள் கீழே இறக்கி வைக்கப்பட்டு, ஒட்டகங்கள் செல்வதைக் கீழே இடம்பெறும் கவிதை விளக்குகின்றது. இப்படியாகவே ஐசுவரியவான்கள், ஐசுவரியம் எனும் பாரங்களை இறக்கி வைத்துவிட்டு, தரித்திரர் ஆகும்போது, இராஜ்யத்திற்குள் செல்லலாம்.
“”ஊசியின் காது வழியாய்…””
“”ஊயரமாம் என்னுடைய ஒட்டகம், சரக்குகள், சுமைகள், ஒட்டகங்களின் மேலே,
ஊசியின் காதெனச் சிறியதாய் வாயிற்கதவு உள்ளதே.
உள்ளிருக்கும் பட்டணம் வெகு அழகாமே
நானும் என் ஒட்டகமும் பிரவேசிக்க வேண்டுமே.
நீ உந்தன் சுமையை இறக்கிவிடு, நீ உந்தன்
பெருமை எனும் மூட்டையை இறக்கிவிடு என்று கூக்குரலிட்டான் வாயிற்காவலன்.
அதைச்செய்திட்டேன் நான், ஆனாலும் சுமை இன்னும் பெரிதாய் இருந்ததே
இடுக்கமான வழிக்கு, எந்தன் சுமை மிகவும் அகலமாய் இருந்ததே.
இன்னும் குறைத்திட, சுயநலம் எனும் மூட்டையை
வீசிடு இப்போது, என்றான் வாயிற்காவலன்.
மிகுந்த கலக்கத்துடன் கீழ்ப்படிந்தேனே நான்,
எனினும் நானும், எந்தன் ஒட்டகமும் உள்ளே செல்ல இயலவில்லையே.
ஆ! உந்தன் சுமைகளில் பொன் கொஞ்சம்
இருக்கின்றதே என்றான் வாயிற்காவலன்.
கொஞ்சமான இதை மாத்திரமே நான் கொண்டிருந்தேனே
எனினும் வீசிடு வெளியே என்றான் வாயிற்காவலன்.
இதோ உயரமான எந்தன் ஒட்டகம் உயரம் குறைந்தே
வாயில் கதவின் அளவுக்குக் குறைந்ததே,
எந்தன் அனைத்து ஐசுவரியங்களும், பெரிய ஆஸ்தியும்
குறுகலான வாயிற்கதவு வழியே நுழைந்ததே எளிமையாக!”