R3243 (page 358)
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கத்தரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:14-20).
நம்முடைய கர்த்தர் கொடுத்த மலைப்பிரசங்கத்திலிருந்து நாம் பார்க்கப்போகின்ற நம்முடைய பாடத்தின் ஆதாரவசன பாகமானது மிகவும் எளிமையானதாகவும், மிகவும் முக்கியமானதும் கூட இருக்கின்றது. இவ்வசனப்பகுதிகளின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரையிலும், வார்த்தைகளைச் சுவாரசியப்படுத்துவதற்கென, இதன் இலக்கியத்தை அழகுப்படுத்துவதற்கோ (அ) நாவன்மையோ/சொற்திறனோ (அ) மெருகூட்டப்படுவதற்கோ முயற்சிகள் ஏறெடுக்கப்படவில்லை. கர்த்தருடைய நோக்கம் போதிப்பதாக இருந்தது. மேலும், அவர் மிக எளிமையான மற்றும் அழுத்தமான விதத்தில் போதித்தார். இன்னுமாக, இந்தத் தருணத்தின்போது, திரளான ஜனக்கூட்டம் கூடியிருக்கத்தக்கதான ஒரு பொதுவான இடத்தைக் கர்த்தர் நாடவில்லை என்பதை நாம் கவனிக்கையில் உணர்ந்துக்கொள்ளலாம். மாறாக, தம்முடைய சீடர்களுடன் தனித்திருக்கத்தக்கதாக ஒரு தனிமையான இடத்தையே அவர் தெரிந்துக்கொண்டதைப் பார்க்கின்றோம். அவருடைய அற்புதங்களைப் பார்ப்பதற்காகவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்காகவும் திரளான ஜனக்கூட்டம் அவரைச் சுற்றிக்கூடியது. மேலும், அவருங்கூட அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தப்படுத்தி, அவர்களுக்கு அநேககாரியங்களைப் போதித்திருந்தாலும், இந்தப் பிரசங்கமானது விசேஷமாக அவருடைய சீடர்களுக்கும், விசுவாச வீட்டாருக்கும் கொடுக்கப்பட்டது. மேலும், இந்த யுகம் முழுவதும்காணப்படும் விசுவாச வீட்டாருக்கு இந்தப் போதனைகள் சென்று சேரும்படிக்கு இவ்வார்த்தைகள் உண்மையாய்ப் பதிவும் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, நமது கர்த்தருடைய இந்த வார்த்தைகளைக் கவனிக்க முற்படுகையில், பேதுருவும், யாக்கோபும், யோவானும், ஆதி சபையினுடைய அநேக சகோதரரும், சகோதரிகளும் உலகம் அதுவரையிலும் கண்டிராத மாபெரும் பிரசங்கியின் உதடுகளிலிருந்துவரும் வார்த்தைகளைக் கேட்கும்படியாக மலையின் அருகிலுள்ள புல்லின்மேல் அமர்ந்திருந்திருப்பார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது. நாம் கேட்கிற காரியங்களை மறந்துப் போகக்கூடியவர்களாக இருக்க வேண்டாம். மாறாக, ஜீவனுக்கேதுவான அந்த வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதுவோமாக. அந்த வார்த்தைகள், இருதயங்களின் ஆழங்களுக்குச் சென்று, நித்திய ஜீவனுக்கு ஏதுவான பலனைக்கொண்டு வரத்தக்கதாக அனுமதிப்போமாக.
நம்முடைய கர்த்தருடைய செய்தியிலுள்ள நம்முடைய பாடத்தின் ஆதாரவசனமாகிய சிறிய பாகமானது, நாம் பெற்றுள்ள சத்தியத்தின்பால் நமக்குள்ள கடமை குறித்துச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆனால், இதை அநேக கிறிஸ்தவர்களோ கவனமாய்க் கவனிப்பதுமில்லை சிந்தித்துப்பார்ப்பதும் இல்லை. “”நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இன்னுமாக, “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றும், “”நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” என்றும் அவர் குறிப்பிடுகின்றார் (யோவான் 9:5; 8:12). அவருடைய வார்த்தைகளினால் போதிக்கப்பட்டு, வெளிச்சமூட்டப்பட்ட நாம், அவருடைய பிரதிநிதிகளாய் இருக்கின்றோம் என்பதையும், உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கின்றோம் என்பதையும், நம்மோடுகூட வருகின்றவர்கள் இருளில் நடவாதவாறு நம்முடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கத்தக்கதாக, நம்முடைய விளக்கைத்தொடர்ந்து எரிய வைக்கின்றவர்களாகவும், விளக்கின் திரியைச் சரிச்செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளத்தக்கதாகக் கர்த்தர் சித்தமுள்ளவராக இருக்கின்றார்.
வேதவாக்கியங்களிலும் சரி, பொதுவான பேச்சு வழக்குகளிலும் சரி வெளிச்சம் எனும் வார்த்தை, சத்தியத்திற்கு அடையாளமாயிருக்கின்றது. “”நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்… உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது” எனும் வார்த்தைகள் பின்வரும் காரியங்களைச் சொல்வதற்குச் சமமாக இருக்கின்றன. அதாவது, “”நீங்கள் சத்தியத்தினால் வெளிச்சமூட்டப்பட்டுள்ளதால், நீங்கள் இப்பொழுது சத்தியத்திற்கான ஜீவனுள்ள பிரதிநிதியாக காணப்படுகின்றீர்கள். ஆகவே, எந்த விதத்திலும் வெளிச்சத்தை நீங்கள் மறைத்து வைக்காமல், மாறாக நீங்கள் சத்தியத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டதுபோன்று, மற்றவர்களும் சத்தியத்தினிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, உங்கள் வெளிச்சத்தை அதிகமதிகமாக பிரகாசிக்கக்கடவீர்கள்” என்பதேயாகும். இந்தச் சத்தியமே, “”ஜீவனுக்கான வெளிச்சமாக” இருக்கின்றது. இதுவே, உலகத்திற்கு அவசியமானதாய் உள்ளது. அதாவது, இதையே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். சத்தியமானது மனிதனைப் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிப்பதற்கு முன்னதாக, முதலாவது மனிதன் சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும். சத்தியம் அவர்களைச் சுத்திகரித்து, பரிசுத்தம் பண்ணுவதற்கு முன்னதாக அவர்கள் முதலாவதாக சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும். சகல மனுஷரும் சத்தியம் பற்றின தெளிவான/துல்லியமான அறிவிற்குள் வரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது (1 தீமோத்தேயு 2:4). ஆகவே, ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும், சத்தியத்தைப் பரப்புவதிலும், தனது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வதிலும், விளக்கின் திரியைச் செம்மைப்படுத்துவதிலும், எரிய வைப்பதிலும் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட வேண்டும்.
“”திரியைச் செம்மைசெய்து, எரிய விடுங்கள்!“ என்று ஒருவர் கூறியுள்ளார். “”உங்கள் விளக்கின் திரியைச் செம்மைப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகளடங்கின பாடல்களை ஊக்கத்துடன் நாம் பாடியிருக்கின்றோம். ஆனால், இதன் அர்த்தம்தான் என்ன? இதன் அர்த்தமாவது, சத்தியத்தைப்பற்றின துல்லியமான அறிவைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஜீவனுக்கேதுவான வார்த்தைகளுக்கு நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதாகும். இன்னுமாக, இதன் அர்த்தமாவது நம்முடைய குணலட்ணங்களின் வாயிலாக சிறு தடைகள் கூட இல்லாமல், தெய்வீகச் சத்தியத்தின் உண்மையான வெளிச்சம் பிரகாசிக்கத்தக்கதாக, நம்முடைய அன்றாட ஜீவியம் மற்றும் சம்பாஷணையிலோ அல்லது (நாம் கொண்டிருக்கும்) உபதேசங்களில் நாம் தப்பிதங்களைக் காண்கின்ற மாத்திரத்தில், இந்த ஒவ்வொரு தப்பிதங்களையும் கவனத்துடனும், உண்மையுடனும் கத்தரித்துச் செம்மைசெய்ய வேண்டியதாகும்.
கர்த்தருடைய பிள்ளைகளில் அநேகர் தங்கள் வெளிச்சத்தின் திரிகளைக் கத்தரித்து, செம்மைப்படுத்தும் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதென்பது, கவலைக்குரிய விஷயமாகும். இவர்கள் கொஞ்சம் சத்தியத்தை, அதிகமான தப்பறைகளுடன் சேர்த்துப் பெற்றிருப்பார்கள். மேலும், இவர்கள் தப்பறைகளை அப்புறப்படுத்துவதற்குப்பதிலாக, சத்தியத்தையும், தப்பறையையும் சேர்த்துப் போதிக்கின்றபடியால், இவர்களிடமிருந்துவரும் வெளிச்சமானது, தூய்மையான வெளிச்சமாக இராமல், அவ்வெளிச்சத்துடன் கூடவே காணப்படும் நிழலினால், உருவம் வேறுபடுத்தப்பட்டு, வெண்மை நிறமற்று காணப்படுகின்றது. இன்னும் சிலர் தூய்மையான சத்தியத்தை உயர்த்திப் பிடித்திருந்தாலுங்கூட, சத்தியத்தின் சுத்திகரிக்கும் தன்மையை இவர்கள் தங்களுடைய குணலட்சணத்தில் அனுமதியாததால், தூய்மையற்ற குணலட்சணங்களின் வாயிலாக இவர்களுடைய வெளிச்சம் கடந்துவருவதால், அவ்வெளிச்சம் தெளிவில்லாமலும், தவறாகவும் காட்டப்படுகின்றது. இப்படியான நிலையில் தொடர்ந்து சத்தியத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு உண்மையில் பாத்திரமற்றவர்களாக இருப்பார்கள். பின்னர், இறுதியில் அதை இழந்தும் போய்விடுவார்கள். ஏனெனில், “”நீதிமானுக்கே வெளிச்சம் (சத்தியம்) [R3243 : page 359] விதைக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதப்பட்டுள்ளது (சங்கீதம் 97:11). மேலும், சத்தியம் முன்வைக்கும்விஷயங்களை அலட்சியப்படுத்துவது என்பது அநீதியான காரியமாகும்.
நம்முடைய கர்த்தருடைய நாட்களில், தங்களைத் தெய்வீகச் சத்தியத்திற்கான பிரதிநிதிகள் மற்றும் போதகர்கள் என்று வெளிப்படையாக அறிக்கைப்பண்ணினவர்கள் இருந்தார்கள். சத்தியத்திற்காக மிகவும் வைராக்கியம் கொண்டிருப்பதாக வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும், சத்தியத்தினுடைய சுத்திகரிக்கும் வல்லமைக்குத் தங்களை விலையேறப்பெற்ற சாட்சிகள் என்றும் கூறிக்கொண்டனர். இவர்கள் தங்களிடம் வெளிச்சம் இருப்பதாகவும், அதைத் தாங்கள் பிரகாசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறிக்கொண்டனர். பரிசேயர்கள் “”தேவனே நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்” என்ற வசனங்களின் காரியங்களைக் கூறுகின்றார்கள் (லூக்கா 18:11-12). ஆனால், இவர்களைக் குறித்துக் கர்த்தரோ, “”மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்” என்று கூறுகின்றார் (மத்தேயு 23:27-28). இவர்கள் இப்படியாகக் கர்த்தருடைய பார்வையில் காணப்பட்டார்கள். ஆனால், இவர்கள் மனுஷர்களால் மதிக்கப்பட்டு, கனப்படுத்தப்பட்டு, பரிசுத்தர்கள் என்று உயர்வாகக் கருதப்பட்டு, சத்தியம் மற்றும் நீதியின் பாதையைக் காட்டித்தரும் வழிகாட்டிகள் எனக் கருதப்பட்டார்கள். இவர்கள் தேவனுடைய பிரமாணங்களுக்குள் முட்டாள்தனமான மற்றும் தங்களுடைய வீணான சொந்த பாரம்பரியங்களைப் புகுத்தி, தேவனுடைய நியாயபிரமாணத்தை அவமாக்கிப்போட்டார்கள்; பாரம்பரியங்களை ஜனங்களுக்குப் போதிப்பதில் மிகவும் வைராக்கியத்துடன் காணப்பட்டார்கள்.
இப்படியாக, செய்ததினிமித்தம் வேதபாரகர்கள் மற்றும் பரிசேயராகிய இந்தப் போதகர்கள் மன்னிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் ஆவார்கள். தேவனுடைய நியாயப்பிரமாணம் இவர்களுக்கு முன்பு திறந்த நிலையில் காணப்பட்டது. மேலும், அதைக் குறித்துச் சரியாக அறிந்திருப்பது, இவர்களுக்குரிய கடமையாகவும், சிலாக்கியமாகவும் இருந்தது. விசேஷமாக கிறிஸ்து வந்த பிற்பாடு, அவருடைய போதனைகளானது சத்தியத்தை அதிகமாய் வெளிப்படுத்தினது. இன்னுமாக, பரிசேயர், வேதபாரகருடைய வீணான பாரம்பரியத்தின் முட்டாள்தனத்தையும் அதிகமாய் வெளிப்படுத்தியதால், இவர்கள் சாக்குச்சொல்ல ஏதுவில்லாமல் ஆயிற்று. இவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பாரம்பரியங்களை உயர்த்திப்பிடிப்பதிலும், அவைகளைப் போதிப்பதிலும் தீர்மானத்துடன் காணப்பட்டிருந்ததினாலும், தங்களுடைய முட்டாள்தனமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தின சத்தியத்தினுடைய ஒளியை எதிர்ப்பதிலும் தீர்மானத்துடன் காணப்பட்டிருந்ததினாலும், இவர்களை நமது கர்த்தர் மாய்மாலக்காரர்கள் என்று கூறினது இவர்களுக்குப் பொருத்தமானதேயாகும்.
பரிசேயர் மற்றும் வேதபாரகரிடம் அதிகம் சத்தியம் இருந்தது. இவர்களிடம் தேவனுடைய முழு நியாயப்பிரமாணமும் காணப்பட்டது. மேலும், அந்தப் பிரமாணத்தை நம்புவதாகவும், அதையே போதிப்பதாகவும் இவர்கள் அறிக்கைப்பண்ணினார்கள். ஆனால், இவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தினாலும், வெளியில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைபோன்று காணப்பட்டு, ஆனாலோ உண்மையில் இழிவுடன் காணப்படும் தங்களுடைய குணலட்சணங்களினாலும் சத்தியத்தை உருமாற்றிக் காட்டிவிட்டனர். ஆகவே, இவர்கள் மனிதர்களைத் தேவனிடத்திற்குக் கொண்டுவருவதற்காக தாங்கள் பிரயாசம் எடுப்பதாக அறிக்கை செய்த பிரயாசங்களின் விளைவாக, இவர்கள் மற்றவர்களையும் தங்களைப் போன்று மாய்மாலக்காரர்களாகவே ஆக்கினார்கள். “”வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:20).
மனுஷனுக்கு முன்பு அருமையானதாகவும், பாராட்டுப்பெறுவதற்கு ஏதுவானதாகவும் ஆனால், தேவனுடைய கணிப்பிலோ போலித்தனமாகவும், மாய்மாலமாகவும் காணப்படும் நீதியைக்குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருப்போமாக. நாம் எந்த நோக்கத்திற்காக சத்தியத்தை ஏற்றுக்கொள்கின்றோம் (அ) பரப்புகின்றோம் என்பதை இருதயத்தை வாசித்தறிகிற தேவன் உடனே புரிந்துக்கொள்கின்றார். இந்தத் தெய்வீகப் பொக்கிஷத்தைக் (சத்தியத்தை) கடந்துபோகும் வாழ்க்கையின் அற்பத்தனமான ஆதாயங்களுக்காக வியாபாரம் பண்ணுகின்றவர்கள், உண்மையில் முட்டாள்களே. தப்பறையான உபதேசங்களை உயர்த்திப்பிடிப்பதற்கும், அதைப் போதிப்பதற்கும், தேவனுடைய சத்தியத்தை எதிர்ப்பதற்கும் நாடுபவர்கள் உண்மையில் முட்டாள்களே. ஒருகாலத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டும், பிற்பாடு பணத்திற்காக (அ) செல்வாக்கிற்காக (அ) தன்னோடுகூட கல்லறை நோக்கி பயணம் செய்து, செத்துக்கொண்டிருக்கும் நிலையில் காணப்படும் சகல மனிதர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்காக (அ) வேறு ஏதேனும் காரணத்திற்காக விற்றுப்போடுகின்றவர்களும் உண்மையில் முட்டாள்களே.
இன்னுமாக, மாய்மாலத்துடன் சத்தியத்தை வியாபாரம் செய்யாமல் ஆனால், அதைக் குறைவாய் எடைபோடுகிற சிலரும் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தற்காலத்திலும், எதிர்க்காலத்திலும், இழப்பிற்குரியவர்களாகவே இருப்பார்கள். சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு அவசியமாய் இருக்கும் எளிமையை, சாந்தத்தின் ஆவியைக் குறுக்கிடுவதற்கு நாம் தவறான அபிப்பிராயத்தை (அ) பெருமை (அ) சண்டையிடும் தன்மை (அ) போட்டி மனப்பான்மை (அ) வேறு எதையாகிலும் அனுமதிப்போமானால், நமக்குள் பரிசேயரின் ஆவி வளர்ந்து, மாய்மாலம் வெளிப்படும். இப்படியான தன்மைகளைத் தவிர்த்து, உண்மையுடனும், சாந்தத்துடனும் சத்தியத்தை முழுமையாய் ஏற்றுக்கொண்டு, எதையும் இழந்து, சத்தியத்தை வைராக்கியத்துடன் போதிப்பவர்கள் கர்த்தர் சொல்வதுபோன்று பரலோக இராஜ்யத்தில் பெரியவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தெளிவான சத்தியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சிலாக்கியம் இருந்தும், கொஞ்சம் தப்பறைகளைப் போதித்தும், ஆனாலும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்குச் சரியான இருதய நிலைக்கொண்டிருப்பவர்கள் பரலோக இராஜ்யத்தில் சிறியவர்களென அழைக்கப்படுவார்கள் (மத்தேயு 5:19).
தவறான கருத்துகள் மற்றும் பண்புகளின் பல்வேறு குறைவுகள் என்பது, தேவனுடைய சில உண்மையான அர்ப்பணம் பண்ணியுள்ள பிள்ளைகளின் வளர்ச்சியை அதிகளவு குறைத்துப் போடுகின்றது. மேலும், இதன்விளைவாக இவர்கள் தேவனுக்கென்று ஊழியம் புரிவதாக எண்ணி செய்யும் காரியங்கள் தவறாய் வழிநடத்தப்பட்டு, தேவனுடைய வார்த்தைகள் மிகவும் தெளிவாகக் காணப்படும் விஷயங்களில், சத்தியத்திற்கு எதிராக போதிப்பவர்களாகவும், நம்பிக்கை வைப்பவர்களாகவும் ஆகிவிடுவார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருந்து, சத்தியத்தின் பாதையிலான நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், கர்த்தருடைய ஊழியங்களில் நாம் பயன்படுவதற்கும் ஏதுவாக நாம் எல்லா இடையூறுகளையும் தளரா முயற்சியுடன் பின்னே தள்ளுவோமாக. “”என் கிருபை உனக்கு போதும், பெலவீனத்தில் என்னுடைய பெலம் பூரணமாய் விளங்கும்” என்று கூறின இயேசுவை நோக்கினவர்களாக, நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஓட்டத்தில் பொறுமையுடனும், சாந்தத்துடனும்/நிதானத்துடனும், விடா முயற்சியுடனும் ஓடுவோமாக.”