R3700 – மகிமையான அறிவிப்பு

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3700 (page 10)

மகிமையான அறிவிப்பு

THE GLORIOUS PROCLAMATION

லூக்கா 2:1-20

“”இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” (வசனம் 11)

கிருபையிலும், அறிவிலும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் வளர, வளர, அவர்களுக்கு, பெத்லகேமின் புல்வெளிகளில் மேய்ப்பவர்களுக்குத் தேவதூதர்களால் கூறப்பட்ட செய்தியானது மிகமிக விலையேறப் பெற்றதாக ஆகிவிடுகின்றது. யுகங்களைக் குறித்த தெய்வீகத் திட்டத்தின் மீதான புரிந்துக்கொள்ளுதலின் காதுகள் மற்றும் கண்கள் படிப்படியாகத் தெளிவாகும்போது, பெத்லகேமில் கொடுக்கப்பட்ட அந்தத் தீர்க்கத்தரிசன செய்தியானது ஒட்டுமொத்த சுவிசேஷத்தின் சுருக்கம் எனத் தேவனுடைய பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள். நமது இரட்சகரின் பிறப்பு எனும் மாபெரும் சம்பவத்தின் மீது நம்முடைய கவனமும் அடிக்கடி ஈர்க்கப்படுகின்றது. இரட்சகரின் பிறப்பு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி அன்று சம்பவிக்கவில்லை என்பதோ அல்லது கர்த்தர் அநேகமாக அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று பிறந்திருப்பார் என்பதோ முக்கியமல்ல. அத்தகைய மகாபெரியவரின் பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், மனுக்குலத்திற்கு மிகவும் பெரிய விஷயமானபடியால், அவர் நம்முடைய இனத்திற்குச் செய்துள்ள விஷயங்களை உணர்ந்துள்ள யாவராலும் எல்லா நாளிலும் நினைவுகூரப்பட்டு, கொண்டாடப்பட வேண்டும். 4000 வருடங்களுக்கு மேலாக தெளிவில்லாமல் காணப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தங்கள், அன்று மனுக்குலத்திற்கு அருளப்பட்டது; மேலும், இது ஏதேன் தோட்டத்தில், தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையின் நிமித்தம் உலகத்தின் மீது வந்த மாபெரும் பாவத்தின் சாபம் மற்றும் மரணம் இறுதியாக மாற்றப்படும் என்பதைச் சுட்டிக்காட்டித் தெரிவித்தது; மேலும் சாபத்திற்குப் பதிலாக ஜீவனைப் பெறுவதற்கான ஆசீர்வாதம் கர்த்தரால் அருளப்படும் என்பதையும் தெரிவித்தது. இந்தச் செய்தியானது, விசேஷமாய் உடன்படிக்கைப் பண்ணினவர்களும், தெய்வீகத் தயவை பெற்ற ஜனங்களுமாகிய யூதர்கள் மத்தியில், நமது கர்த்தரின் பிறப்பினுடைய காலப்பகுதி வரையிலும், அநேக நிழல்கள் மற்றும் வாக்குத்தத்தங்கள் வாயிலாக அருளப்பட்டு வந்தது. யூதர்கள் வாணிக நோக்கத்துடன், நாகரிக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டிருந்தார்கள், ஆகையால், ஒரே தேவன் மீதான விசுவாசமும், மேசியாவின் மூலமான இஸ்ரயேலின் மீட்பு பற்றின விசுவாசமும் கொஞ்சமோ, அதிகமோ அனைத்து ஜனங்கள் மத்தியிலும் காணப்பட்டது; ஆகையால்தான், நம்முடைய கர்த்தர் பிறந்த காலக்கட்டத்தில், “”மக்கள் மீட்பரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்” என்று வாசிக்கின்றோம் (லூக்கா 3:15, திருவிவிலியம்). இந்த எதிர்ப்பார்ப்பு, தானியேலின் தீர்க்கத்தரிசனத்தின் அடிப்படையில் ஜனங்கள் மத்தியில் காணப்பட்டது என்பதில் ஐயமில்லை. தானியேலின் தீர்க்கத்தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலம், நமது கர்த்தர் முதிர்ச்சியை அடைந்து, ஊழியத்திற்கென்று தம்மை அர்ப்பணித்து, பரிசுத்த ஆவியினால் ஜெநிபிக்கப்பட்டு, மாபெரும் நிஜமான பிரதான ஆசாரியனாகவும், இஸ்ரயேல் மற்றும் உலகத்தின் மீதான மாபெரும் நிஜமான இராஜாவாகவும் அபிஷேகிக்கப்பட்ட காலப்பகுதியான, அவரின் 30-ஆம் வயதின் வருடத்தையே குறிக்கின்றது என்பதை நாம் இப்பொழுது தெளிவாக அறிந்துள்ளோம்.

“பெத்லகேமிலிருந்து நாசரேத்துக்கு”

முற்காலங்களில் கனம் வாய்ந்த பட்டணங்களும், இழிவான பட்டணங்களும் காணப்பட்டன. பெத்லகேம், கனம் வாய்ந்த பட்டணங்களில் ஒன்றாகவும் மற்றும் நாசரேத், கனம் குறைந்த பட்டணங்களில் ஒன்றாகவும் அக்காலங்களில் கருதப்பட்டது. பெத்லகேம் இஸ்ரயேலின் பிரியமான இராஜாவாகிய தாவீதின் பட்டணமாகக் கருதப்பட்டது. நமது கர்த்தரின் தாயாகிய மரியாளும், அவளுடைய புருஷனாகிய யோசேப்புமாகிய இருவரும் தாவீதின் வம்சத்தில் வந்தவர்கள் என்று வேதவாக்கியங்கள் விவரிக்கின்றன. மேலும், மேசியா, பெத்லகேமில் பிறப்பார் என்று முன்பு உரைக்கப்பட்ட தீர்க்கத்தரிசனம் தற்செயலாய் அங்கு நிறைவேறினது போலவும் தோன்றலாம் (மீகா 5:2). ரோம சாம்ராஜ்யம் முழு உலகத்தையும் அக்காலக்கட்டத்தில் ஆளுகை செய்து கொண்டிருந்தது. யூதர்கள், ரோமர்களுக்குக் கீழ்ப்பட்டு இருந்தபோது, கீழ்ப்பட்டிருக்கும் நிலையிலிருந்து தங்களை விடுவித்து, உலகத்தின் மீதான ஆளுகையில், ஆளுகை செய்யும் வகுப்பாராய், தங்களை ஏற்படுத்தப் போகும் மேசியாவுக்காக, மன அமைதியிலில்லாமல் காத்திருந்தார்கள். அகுஸ்து ராயர், ரோம மாபெரும் சக்கரவர்த்தியாக இருந்த காலக்கட்டத்தில், வரி முறைமையைக் கொண்டு வருவதற்கென, உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட கட்டளை பிறப்பித்தார். இந்த இராஜ கட்டளைக்கு இணங்க, யோசேப்பும், மரியாளும் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்ய, தங்கள் சொந்த ஊருக்குப் [R3700 : page 11] போனார்கள் என்றும், இவ்விதமாக இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்றும் லூக்கா அவர்கள் பதிவு செய்துள்ளார். இதே கட்டளைக்கு இணங்க, அநேக ஜனங்கள் பிரயாணம் செய்தபடியால், அங்கு, இடம் நெருக்கடி ஏற்பட்டதின் விளைவாக, விடுதிகளின் தொழுவங்கள் கூடத் தங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. யோசேப்பும், மரியாளும், தாமதமாக வந்தபடியால், எளிமையான தொழுவங்களில் தங்க வேண்டியதாயிற்று. இவ்வாறாக உலகத்தையே ஆளுகை செய்யப் போகிற இராஜ்யத்தை உடைய மகிமையின் இராஜா, மாம்சத்தில் வந்து தொழுவத்தில் பிறந்து, கால்நடைகளின் தீவனப்பெட்டியில் கிடத்தப்பட்டார்.

“தேவதூதர்களும், மேய்ப்பர்களும்”

யுகங்களைக் கடந்த செய்தியான, மேசியாவாகிய இயேசுவின் பிறப்பு குறித்த செய்தியை, சர்வ வல்லமையுள்ளவரிடமிருந்து தேவதூதர்கள் மூலமாகப் பெற்றுக்கொண்ட மேய்ப்பர்கள் நற்பண்புகள் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். முதலாவதாக ஒரு தேவதூதன் மேய்ப்பர்களுக்குத் தோன்றி, அவர்களுடைய பயங்களைப் புறம்பாக்கும் விதமாக, “”பயப்படாதிருங்கள், நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்றார். மனித மனங்களில், ஓங்கி நிற்கும் உணர்வுகளில் ஒன்று “”பயமாகும்.” அதிலும் விசேஷமாக, கர்த்தரிடத்திலிருந்து வெளிப்படுத்தல்கள் வரும்போது பயம் ஏற்படுவது உறுதியே. மனுஷர்கள், அதாவது மனுக்குலத்திலேயே, உயர்ந்த பண்புகள் உள்ள மனுஷர்களும் கூடத் தாங்கள் பூரணமற்றவர்கள் என்றும், சர்வ வல்லமையுள்ளவர் பூரணமானவர் என்றும், அவருடைய பிரமாணங்கள் பூரணமானவைகள் என்றும் உணர்ந்துள்ளனர். உலகமானது, தங்கள் மீது ஒரு சாபத்தை அல்லது குற்றச்சாட்டைச் சர்வ வல்லமையுள்ளவர் வைத்துள்ளார் என்பதை உணர்ந்துள்ளனர்; மேலும், தங்களிடத்தில் இன்னும் பாவம் பெருகிக் கொண்டிருப்பதால், இன்னும் ஒரு சாபமோ அல்லது குற்றச்சாட்டோ தங்கள் மேல் வந்துவிடும் என்று பயந்து விடுகின்றனர். இன்றும், தெய்வீகக் குணம் மற்றும் திட்டம் அறிந்த சிலர் தவிர, மற்ற அனைவரிடமும் இவ்வச்சம் காணவேப்படுகின்றது. ஆகவேதான் பொதுவாக உலகம், மதத்தை வெறுக்கின்றது மற்றும் உலகம் மதத்தை விலக்கி வைக்க விரும்புகின்றது; காரணம் குற்றமனசாட்சி, மற்றும் குற்றம் சாட்டப்படுவோம் என்ற அச்சமேயாகும். அப்போது தேவதூதர்கள் செய்தது போன்று, இன்றும் தேவனுடைய பிள்ளைகள், உலகத்தின் அச்சத்தைப் போக்க வேண்டும், அதாவது, அவர்களுடைய அச்சத்திற்குத் தேவன் அப்பாற்பட்டவர் என்றும், ஆதாமின் கீழ்ப்படியாமை மற்றும் தீர்ப்பின் மூலம் வந்த சாபமாகிய மரணத்திலிருந்து உலகமாகிய அவர்களை மீட்கும் அளவு, தேவன் அன்பு கொண்டுள்ளார் என்றும் அறிவித்து [R3701 : page 11] அச்சத்தைப் போக்க வேண்டும். “”நற்செய்தி” என்பதற்கு, வேறொரு மொழிப்பெயர்ப்பில் “”சுவிசேஷம்” என்று இடம்பெறுகின்றது. சுவிசேஷம் என்பது நற்செய்தி, எனும் கருத்து எவ்வளவு அருமையாக இருக்கின்றது. ஆனால் தேவனுடைய திட்டத்தைப் புரிந்துக்கொள்ளாத, அநேக கிறிஸ்துவர்கள் தேவனுடைய வார்த்தைகளையும், குணலட்சணங்களையும் தவறாகப் புரிந்துக்கொண்டு, இருண்ட யுகத்தின் பல்வேறு செய்திகளுக்கு “”சுவிசேஷம்” என்ற பெயரைச் சூட்டி, மனுக்குலத்திற்கான பங்காக உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் நித்தியமான சித்திரவதைக் காணப்படுகின்றது என்று போதிக்கின்றார்கள். அந்தோ பரிதாபம்! இந்தத் தவறான கருத்துகளிலிருந்து நாம் விலகி, சுவிசேஷமே, நற்செய்தி என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம். தேவதூதன், இந்த நற்செய்தி, எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் செய்தி என்று விவரித்தார். ஆ! தேவனுக்கு நன்றி. நாம் இதுவரை புரிந்துக்கொண்டவைகளைக் காட்டிலும் தேவனுடைய திட்டம் அகலமாகவும், ஆழமாகவும், உன்னதமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கின்றது. சுவிசேஷமானது, தற்போது கேட்கிறதற்குச் செவியும், காண்பதற்குக் கண்களும் உள்ள சிறு கூட்டத்திற்கு மாத்திரம் நற்செய்தியாய் இராமல், தேவனுடைய ஏற்றக் காலத்தில் அனைத்து ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷமாக இருக்கும். ஆதாமின் ஒவ்வொரு சந்ததியாரும், அவருடைய விழுகையிலும், விழுகையின் விளைவாக வந்த மரணச் சாபத்திலும், பங்கடைந்ததுபோல, நமது கர்த்தரால் கையளித்ததும், கல்வாரியில் நிறைவேற்றினதுமாகிய மாபெரும் மீட்பின் பலியில், மனுக்குலத்தின் ஒவ்வொருவரும் பங்கடைவார்கள். நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய திட்டம், நிறைவேறித் தீரும்போது, அது எல்லா ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறதாக இருக்கும். மேலும் இந்தச் செய்தி, நமது கர்த்தர் பிறந்த உடனே கொடுக்கப்பட்டது; காரணம், இவர் மூலமே தெய்வீக நோக்கம் மற்றும் திட்டத்தின் மகிமையான அனைத்து விஷயங்களும் இறுதியில் நிறைவேற்றப்படும் என்பதேயாகும்.

“செய்திக்கான காரணம்”

என்றென்றும் மாறாத தேவன், சாபத் தீர்ப்பை ஒருகாலத்தில் அளித்தவர், காரியங்களை மாற்றி, சாபத்திற்குப் பதிலாக, ஆசீர்வாதத்தை அளிக்கப் போகிறதற்கான காரணம் என்ன? என்று அறிய விரும்பும் ஜனங்களுக்கு, பதிலாகவும் இச்செய்தி காணப்பட்டது. தேவதூதன் அங்குத் தெய்வீகத் திட்டத்தின் கோட்பாட்டைக் கூறினார், அதாவது, “”இன்று கர்த்தராகிய கிறிஸ்து (மேசியா) என்னும் இரட்சகர் உங்களுக்குப் பிறந்திருக்கிறார்” என்பதே ஆகும் (லூக்கா 2:11). இங்குத் தேவன், எப்படி நீதியுள்ளவராகவே இருந்து, இயேசுவை ஏற்றுக்கொள்ளும் பாவிகளை நீதிமான்களாக்குபவராகவும் இருப்பார் என்ற முழுச் சுவிசேஷத்திற்கான திறவுகோல் இருக்கின்றது. இங்கு வரும் “”இரட்சகர்” என்ற வார்த்தையின் அர்த்தம் ஜீவன் கொடுப்பவராகும். மேலும், பாவத்தின் சம்பளம் மரணமாக இருக்க, இது மனுக்குலத்தின் மீது சாபமாக இருக்க, பிறந்திருக்கும் இந்த மேசியா, மனுக்குலத்திற்கு மீண்டும் ஜீவன் கொடுப்பதின் மூலம், மரணத் தீர்ப்பிலிருந்து மீட்டுக்கொள்வார் என்னும் கருத்து எவ்வளவு அருமையாக இருக்கின்றது. அவர் எப்படி ஜீவன் கொடுப்பார் என்பது அப்போது விவரிக்க அவசியப்படவுமில்லை, ஆனால், இப்போது புதிய ஏற்பாட்டு விளக்கத்தின் வெளிச்சம் காரணமாக, நம்முடைய கர்த்தர் தமது ஜீவனைச் சுயமாய் விரும்பி வந்து ஒப்புக்கொடுத்து, அநீதிமான்களுக்காக, நீதிமானாகிய அவர் மரித்து, ஆதாம் மற்றும் அவர் மேல் வந்த தீர்ப்பைச் சுதந்தரித்துக் கொண்ட அவரின் சந்ததிக்கும் எதிராய் இருந்த தெய்வீக நீதி கோரின விஷயங்களைத் திருப்திப்படுத்தினார் என்பதைப் புரிந்துக்கொள்கின்றோம். இயேசுவின் பிறப்பில் ஆரம்பித்த நம்முடைய இரட்சிப்புக் குறித்ததான தெய்வீகத் திட்டத்தை, நாம் ஆழமாக பார்க்க ஆரம்பிக்கையில், தேவதூதர் சேனைகள் போன்று நாமும், பரலோகத்தில் இருக்கும் தேவனுக்குத் துதிகளையும், மனுப்புத்திரரின் பிள்ளைகள் மீது அவர் காட்டின அவருடைய இரக்கத்திற்கு நன்றிகளையும் உரத்தக் குரலில் தெரிவிக்க ஆவல் கொள்வோம். பெத்லகேமில், குழந்தையாக பிறந்தவர் எதிர்க்காலத்தில்தான் இரட்சகர் ஆவார் என்றாலும், இயேசு முப்பது வயதை அடையும் வரை, அபிஷேகிக்கப்பட்டவராக ஆக முடியாது என்றாலும், அவர் முப்பதாவது வயது அடைந்தும், இன்னும் 3½ ஆண்டும் தம்முடைய ஜீவனை படிப்படியாக தமது பூமிக்குரிய ஊழியத்தின்போது ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தாலும், அவருடைய பலிக் கல்வாரியில்தான் நிறைவடையும் என்றாலும், அவர் மூன்று நாட்களுக்குப் பிற்பாடுதான் உயிர்த்தெழும்புவார் என்றாலும், பின்பு நாற்பது நாட்களுக்குப் பின்னரே பரலோகம் திரும்புவார் என்றாலும், பத்தொன்பது [R3701 : page 12] நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடே ஆசீர்வாதங்கள் செயல்முறைப்படுத்தப்படும் என்றாலும், தெய்வீகத் திட்டம் முதலாவதாக துளிர்விட ஆரம்பித்தபோதே தேவதூதர்கள் மகிழ்ந்து பாடினார்கள். தேவதூதர்கள் இரட்சிப்பைக் குறித்த தெய்வீகத் திட்டம் முதலாவதாக துளிர் விட ஆரம்பித்த போதே மகிழ்ந்து, பாடினதுபோல, தெய்வீகத் திட்டத்தின் முடிவைக் குறித்து விசுவாசம் கொண்டிருக்கும் அனைவராலும், குமாரனும், நமது கர்த்தருமானவர் மூலம் உன்னதமான தேவனுக்குத் துதிகளைச் செலுத்தவும் முடியும், சந்தோஷப்படவும் முடியும்.

“நம்பிக்கையினால் இரட்சிக்கப்படுதல்”

தேவதூதன் இந்தச் செய்தியைக் கொடுத்து 19-நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், விசுவாச கண்கள் மற்றும் செவிகள் உடைய “”சிறுமந்தையினருக்கு” விசுவாசத்தினால் சில விஷயங்கள் நிறைவேறியுள்ளதே தவிர, மற்றபடி நிறைவடையவில்லை. ஆனால் மாபெரும் சித்திரவதையைக் குறித்த செய்தியானது, இன்று கிறிஸ்துவின் நாமத்தில் பரப்பப்பட்டுள்ளது. இது தெய்வீகத் திட்டத்திற்கு அவமானமாகவும், தெய்வீகக் குணலட்சணங்களுக்கு கனவீனமாகவும் காணப்படுகின்றது. (சித்திரவதை, நரகம் முதலியவைக் குறித்த) இந்தச் செய்தி சந்தோஷத்தைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அனைவருக்கும், அதிலும் விசேஷமாக இரக்க மனமுள்ளவர்களுக்குக் கவலையையும், கஷ்டத்தையும் கொண்டு சென்றது. உண்மையைச் சொல்லப் போனால், கர்த்தர் இயேசுவைக் குறித்த தவறான செய்தியோ அல்லது சரியான செய்தியோ, எதுவும் அனைத்து ஜனங்களின் கவனத்திற்கும் சென்று சேரவில்லை. இன்றும், அதாவது 19-நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் கூட, மனுக்குலத்தில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரமே, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளும் கொடுக்கப்பட்ட அவருடைய நாமத்தை அறிந்திருக்கின்றார்கள்; “”அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை” (அப்போஸ்தலர் 4:12). கிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருக்குள் இன்று களிக்கூர்ந்து, தங்களுடைய இருதயங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்ட தேவனுடைய இரட்சிப்பு, இனி முழு வானங்களுக்குக் கீழாக நிறைவேற்றப்படும் என்று விசுவாசத்தினால் பார்க்கிறவர்களுக்கு (சபை) வரும் இரட்சிப்பைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இதைக் குறித்துத்தான் “நம்பிக்கையினால் இரட்சிக்கப்படும்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். “”அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?” (ரோமர் 8:24). நாம் உண்மையாக இரட்சிக்கப்படவில்லை, நாம் இன்னமும் பாவம், வலி, விழுகை, மரணம் ஆகியவற்றினால்தான் சூழப்பட்டிருக்கின்றோம், மரணச் சாபம் இன்றும் மாற்றப்படவும் இல்லை. கர்த்தருடைய ஜனங்கள் இன்று விசுவாசத்தினாலே, நம்பிக்கையினாலே இரட்சிப்பைப் பெற்றிருக்கின்றார்கள். எதிர்க்காலத்தில் வரும் இரட்சிப்பு, மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் மற்றும் உண்மையுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள தெய்வீகச் சுபாவம், கனம், மகிமையில் பங்கேற்பது பற்றியதான எதிர்ப்பார்ப்பு மிகவும் பலமாகவும், மிகவும் தெளிவாகவும் இருப்பதினால், இந்த எதிர்ப்பார்ப்பை உடையவர்கள் சோதனைகள், இடர்பாடுகள் மத்தியிலும், மனுக்குலத்தின் மீது காணப்படும் சாபத்தினால் வந்த பெலவீனங்கள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள் மத்தியிலும் சொல்ல முடியாத அளவு சந்தோஷம் அடைய முடியும்.

“நற்செய்தியைக் குறித்த ஒரு தீர்க்கத்தரிசனம்”

தேவதூதன் வாயிலாகக் கொடுக்கப்பட்ட செய்தியானது, ஆயிரவருட யுகத்தின்போது, சபைக்காகவும், உலகத்திற்காகவும் நிறைவேற்றப்படப் போகின்ற நல்விஷயங்களைக் குறித்த தீர்க்கத்தரிசனமே ஆகும். சபை முதலாம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும். முதலாம் உயிர்த்தெழுதல் என்பது, சாத்தான் கட்டப்பட்ட நிலையில், முழு உலகத்தின் மீது சத்தியம் மற்றும் நீதியின் செல்வாக்குக் காணப்படும் ஆயிரவருட யுகத்தின்போது, கிறிஸ்துவோடு ஜீவித்து, ஆளுகை செய்யும் பரிசுத்தவான்களுக்கு உரியதாகும். ஆயிரவருட யுகத்தின் விடியலில் சபையின் விடுதலை சம்பவிக்கும் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றது; “”தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்” (சங்கீதம் 46:5). நமக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள சுவிசேஷத்தில் உள்ள மகிமையான நம்பிக்கையில் நாம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், ஆதாமின் சந்ததியரை நேசித்து, அவர்களைத் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சம்பாதித்த இயேசுவின் மூலம், முழு மனுக்குலமும் அரவணைக்கப்பட்டு, ஆசீர்வாதம் கொடுக்கப்படத்தக்கதாக தேவனுடைய அன்பு மற்றும் இரக்கம், ஆழமும், அகலமும், உயரமும், நீளமுமாக இருக்கின்றது என்று நாம் உணர்ந்து சந்தோஷம் அடைகின்றோம். ஆயிரவருட யுகத்தின்போதுதான், தேவதூதன் வாயிலாகக் கொடுக்கப்பட்ட தீர்க்கத்தரிசனம் நிறைவேறும். மேலும் நம்மை, தம்முடைய பலியினால் மீட்டுக்கொண்ட மாபெரும் இரட்சகர், இராஜாவாக, மகியைமான மேசியாவாக நின்று, மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் சீர்த்தூக்கி, ஆசீர்வதிக்கும் பொருட்டு, உலகத்தில் தம்முடைய நீதியின் ஆளுகையை ஸ்தாபிப்பார். இதற்கு இசைவாகவே, அப்போஸ்தலரின் வார்த்தைகள் காணப்படுகின்றது; அதாவது, “”ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள். உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்” (அப்போஸ்தலர் 3:19-21). ஒருவேளை உலகத்தின் கிரியை அல்லது புண்ணியம் அல்லது நீதியன் அடிப்படையில்தான் உலகத்திற்கு இரட்சிப்பு என்று கர்த்தர் ஏற்படுத்தியிருந்தால், நாம் உண்மையில் பயப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, தேவன் எதிர்க்காலத்திற்குரிய ஆசீர்வாதத்தை நம்முடைய தகுதியின் அடிப்படையில் ஏற்படுத்தாமல், அவருடைய குமாரனின் தகுதி மற்றும் பலியின் அடிப்படையிலேயே ஏற்படுத்தியுள்ளார். “”ஜீவன் கொடுக்கும் (இரட்சகர்) மேசியாவாகிய கர்த்தர் உங்களுக்காகப் பிறந்திருக்கின்றார்” என்பதே தேவதூதன் மூலம் கொடுக்கப்பட்ட செய்தியாக இருந்தது. தற்கால சுவிசேஷ யுகத்தின் சோதனைகள் மற்றும் பாடுகள், இப்போது மனுக்குலமிடமிருந்து முன்னதாகவே பிரித்துச் சேர்க்கப்படும் சிறுமந்தையின், நலன் கருதி தெய்வீக மேற்பார்வையின் கீழ் நடக்கின்றது என்பது எவ்வளவு சந்தோஷத்தை அளிக்கின்றது. தேவனுடைய அருமையான குமாரனும், நம்முடைய கர்த்தரும், நம்முடைய நம்பிக்கையும், நம்முடைய மணவாளனுமாய் இருக்கிறவருடைய குணலட்சணத்திற்கு ஒப்பாகும்படிக்கு, பரிசுத்த ஆவியின் கனிகள் நம்மில் வளருவதற்கு அவசியமான மெருகூட்டுதலையும், செதுக்குதலையும் தற்கால பாடுகள் மற்றும் சோதனைகள் அளிப்பதை நாம் பார்க்கின்றோம். ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாக, மணவாட்டியாகும்படிக்கு உலகத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் விரைவில் நிறைவடைந்து, மகிமையில் பிரவேசிப்பார்கள் என்ற காரியம் எவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது. இவர்கள் தங்கள் கர்த்தரும், ஆண்டவருமானவருடன் உலகத்தை ஆசீர்வதித்து, சீர்த்தூக்கும் காரியத்தைச் செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருப்பது எவ்வளவு அருமையான காரியமாக இருக்கின்றது. இத்தகைய உன்னதமான கனம் அல்லது சிலாக்கியம் அல்லது ஆசீர்வாதத்தை வேறு யாரால் பெற்றிருக்க முடியும்.

“தேவதூதனின் பாடல்”

தேவதூதன் நற்செய்தியை அறிவித்த பின்னர், பரம சேனையும் மேய்ப்பர்களுக்குத் தோன்றி, “”உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று கூறி, தேவனைத் துதித்தார்கள். இதுவும் கூட ஒரு தீர்க்கத்தரிசனமே. இது [R3701 : page 13] தேவனுடைய ஏற்ற வேளையில் நிறைவேற்றப்படும் என்றும், இதன் நிறைவேறுதல் சமீபித்திருக்கிறது என்றும் நாம் விசுவாசிக்கின்றோம். உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு இன்னும் மகிமை சேரவும் இல்லை, பூமியிலே மனுஷர் மத்தியில் சமாதானம் இன்னும் வரவுமில்லை. தற்போது எதிர்மாறாகவேதான் காணப்படுகின்றது. தேவனுடைய நாமம் இன்று தூஷிக்கப்பட்டு வருகின்றது. தேவனுடைய நாமமானது, கேலியாக தெய்வீக நாமத்தை வீணிலே வழங்குகிறவர்களால், பேய்களைத் தெய்வமாகக் கருதி அவைகளை வழிபடும் புறஜாதிகளால் மாத்திரம் தூஷிக்கப்படாமல், கிறிஸ்துவ ஜனங்களினாலும் தினந்தோறும் தூஷிக்கப்படுகின்றது. தூஷணம் என்பது ஒருவரைக் கனவீனப்படுத்தி, தவறாய்க் காட்டுதலாகும். நாம் அனைவரும் ஒரு காலங்களில் தெய்வீக நாமத்தைத் தவறாய்க் காட்டினதின் மூலம் அவரைத் தூஷித்துள்ளோம். இதற்குத் தேவன் நம்மேல் இரக்கமாய் இருப்பாராக. ஒரு காலத்தில் தேவனுடைய குணலட்சணத்தையும், தெய்வீகத் திட்டத்தையும் தவறாய்க்காட்டியிருந்தோம்; மேலும், பாவத்தில் பிறந்த தமது திரளான சிருஷ்டிகளை, நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யும்படிக்கு அன்பு, இரக்கம், நீதி மற்றும் சத்தியமுள்ள தேவன் திட்டம் போட்டுள்ளார் என்றும் தவறாய் அவரைக் குறித்துக் காட்டியிருந்தோம். நாம் அறியாமையில் இவகைளைச் செய்தபடியால், தேவன் நம்மேல் இரக்கமாய் இருக்கின்றார். இதுபோல அறியாமையில் தேவனைத் தவறாக காட்டிக் கொண்டிருக்கிற மற்றவர்கள் மீது நாமும் இரக்கம் காண்பித்து, அவர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவனுடைய அன்பின் நீளம், அகலம், உயரம் மற்றும் ஆழத்தை உணரத்தக்கதாக நம்முடைய பிரயாசங்களைத் தொடர்ந்து [R3702 : page 13] செய்வோமாக! பூமியில் மனுஷருக்குச் சமாதானமும், நன்மையும் என்று உரைக்கப்பட்ட வார்த்தைகள், இரட்சகரின் பிறப்பில் நிறைவேறவில்லை என்பதினால், இது ஒரு தீர்க்கத்தரிசனம் என்றும், ஆயிரவருட அரசாட்சியின்போது நிறைவேறும் என்றும் காட்டுகின்றது. கர்த்தருடைய ஜனங்களுக்குக் கூடப் பூமியில் சமாதானம் இல்லை. கர்த்தருடைய ஜனங்களின் இருதயத்தில் காணப்படும் சமாதானம், அவர்கள் கர்த்தர் மீதும், அவர் வாக்களித்துள்ள மகிமையான விஷயங்களின் மீதுமான விசுவாசத்தின் அடிப்படையிலேயே உள்ளது. நம்முடைய கர்த்தரும், அப்போஸ்தலர்களும் கூட, தற்காலத்தில் தேவபக்தியாய் நடப்பவர்கள் யாவரும் துன்பப்படுவார்கள் என்றும், ஒரு மனுஷனுடைய சத்துருக்கள் அவன் சொந்த வீட்டாரே என்றும் கூறியுள்ளார்கள் (2 தீமோத்தேயு 3:12). நாம் குழப்பமடையாமல், இவைகள் அனைத்தும் நிறைவேறும் கிறிஸ்துவின் நாளிற்காக விசுவாசக் கண்களின் பார்வையோடு, காத்திருப்போம். கிறிஸ்துவின் நாளில்தான், கர்த்தருடைய மகிமையின் அறிவினால் நிரம்பி, சமாதானம் பூமியில் காணப்படும். அக்காலக்கட்டத்தில் தெய்வீகத் தயவு வந்து, தவித்துக் கொண்டிருக்கும் முழு மனுக்குலத்தின் மீது இருக்கும் சாபத்தை மாற்றிப் போடும் (ரோமர் 8:22). ஆயிரவருட அரசாட்சி ஆரம்பித்த உடனே இந்தத் தீர்க்கத்தரிசனம் நிறைவேறாமல், யுகத்தின் முடிவில், மனுஷ ஜாதி பாவம், வியாதி, வலி, துன்பம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்தும், ஆதாம் இழந்த அனைத்திலிருந்தும் மீண்டுமாக இராஜ்யத்தின் முறைமைகளால் தூக்கப்படும்போது நிறைவேறும். அதுவரையிலும் உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும் சேராது, பூமியிலே சமாதானமும் மனுஷர் மத்தியில் காணப்படுவதில்லை. கிறிஸ்து மூலமாய் வெளிப்பட்டுள்ள தேவனுடைய நீதியையை மனுக்குலம் கண்ட பின்னர், முழு மனுக்குலமும் தெய்வீக அன்பையும், தயவையும் ஏற்றுக்கொண்டுவிடும் என்றும் நாம் எண்ணி விடக்கூடாது. மாறாக, நித்தியஜீவனைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களும், தெய்வீகத் தயவை ஏற்றுக்கொள்ளாத ஒரு வகுப்பாரும் இருப்பார்கள் என்றும், அவர்கள் அனைவரும் இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவர்கள் என்றும் வேதவாக்கியங்கள் நமக்குத் தெளிவாகப் போதிக்கின்றன. இப்படி ஆயிரவருட யுக முடிவின்போது சாத்தானும், துணிகர பாவிகளும் அழிக்கப்படுவார்கள்; மேலும், அப்போது வானத்திலும், பூமியிலும் உள்ள யாவரும், சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனையும், ஆட்டிக்குட்டியானவரையும் என்றென்றைக்கும் துதிக்கும் காலமாக இருக்கும் என்று வேதவாக்கியங்கள் தெளிவாய்க் கூறுகின்றது. வேதவாக்கியங்களில் முன்வைக்கப்பட்ட தெய்வீகத் திட்டத்தின்படி, மாபெரும் இரட்சிப்பின் திட்டம் நிறைவடையும்போது, மீட்கப்பட்ட மனுக்குலம், இறுதியில் ஓசன்னா! உன்னதத்தில் தேவனுக்கு மகிமை, பூமியில் மனுஷர் மத்தியில் சமாதானம் என்று ஆர்ப்பரிப்பார்கள்.

“மகிமையிலிருந்து, மாட்டுத்தொழுவத்திற்கு…”

நமது கர்த்தரின் பிறப்புக் காலம் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். இதைக் குறித்து, 2-ஆம் Volume-இல் நாம் விரிவாக பார்த்துள்ளதால், அதை மீண்டுமாக பார்க்க போவதில்லை. அகஸ்து ராயனின் கட்டளைபடி, ஒவ்வொரு குடும்பமும், கோத்திரமும் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். யோசேப்பும், மரியாளும், தாவீதின் வம்ச வழியைச் சார்ந்தவர்கள் ஆனபடியால், தாவீதின் பட்டணமாகிய பெத்லகேமுக்குச் சென்றார்கள். பெத்லகேம் மலையருகே உள்ள சிறிய பட்டணமாகும். அந்தத் தேசத்தின் விடுதிகள், நம்முடைய விடுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். அவைகளுக்கு வரவேற்பறை இல்லாமல் பிரகாரம் இருக்கின்றது. தேவையான எவ்வித சாமான்களும் இல்லாத பெரிய அறைகள் பிரயாணிகளுக்குக் கொடுக்கப்படும். பிரயாணி தனக்குத் தேவையான படுக்கை விரிப்புகள், உணவுகள், பொருட்கள், தங்களுடன் கொண்டு வந்து அவ்வறைகளில் பயன்படுத்துவதுண்டு. குதிரைகள், ஒட்டகங்கள் முதலியவைகளுக்குக் கீழ்த்தளத்தில் கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கூட்ட நெருக்கடியின்போது, மேல் அறைகள் அனைத்தும் நிரம்பி இருக்க, கொட்டில்கள் கூடத் தங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. லோகோஸாய் இருந்தவர் உலகத்திற்கு வந்தபோது, மிகவும் எளிமையான தொழுவத்தில் பிறந்தார் (யோவான் 1:2). தேவதூதர்கள் கூறினதைக் கேட்ட மேய்ப்பர்கள், அங்கு வந்து குழந்தையைக் கண்டு, பின்னர், புறப்பட்டுப் போய் உண்மையை அறிவித்தார்கள். ஆனால் மரியாளோ பெருமையடித்துக் கொள்ளாமல், தேவனுடைய ஏற்ற வேளைக்காகக் காத்திருந்தாள்.”