R2565 – அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2565 (page 26)

அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்

CONSECRATION FOLLOWED BY TEMPTATIONS

மத்தேயு 3:13, 4:11

“இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்.”

யோவான் பிரசங்கித்தும், ஞானஸ்நானமும் கொடுத்தும் கொண்டிருக்கையில், ஆறு மாதங்களுக்குப் பின்னர், அதாவது, கி.பி. 29-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத அளவில், கலிலேயாவில் வசித்துக் கொண்டிருந்த இயேசு, அவருடைய 30-வது பிறந்தநாள் சமீபித்து வருகையில், யோவானைக் கண்டுபிடிக்கவும், அவரிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவும், விரைவாகத் தமது பொதுப்படையான ஊழியத்தை ஆரம்பிக்கவும் வேண்டி புறப்பட்டார். அவர் தமது ஜனங்களுக்கு ஆசாரியனாகவும், இராஜாவாகவும் இருக்கப் போகிறார். அதாவது, மெல்கிசெதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவத்தின்படி இருக்கப் போகின்றார். மேலும், நியாயப்பிரமாணத்தின்படி ஒருவர் ஆசாரியர் ஆகுவதற்கு 30-வயதையாகிலும் அடைந்திருக்க வேண்டும். ஆகவேதான் இந்த வயதை அடையும் வரை, இயேசு தமது ஊழியத்தை ஆரம்பிக்க முடியாமல் இருந்தார். ஆனால், அந்தச் சமயம் வந்தபோதோ, அதை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சுயாதீனம் அவருக்கு இருந்தது.

இயேசு, தமது உறவினனான யோவான் ஸ்நானனோடு நன்கு பழக்கம் கொண்டிருந்திருக்க வேண்டும்; இவரும், இயேசுவின் நேர்த்தியான ஜீவியத்தையும், குறைவற்ற குணலட்சணங்களையும் அறிந்திருப்பார். ஆகையால்தான், இயேசு தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வரும்போது ஆச்சரியம் அடைகின்றார். ஞானஸ்நானம் கொடுப்பதற்கு யோவான் எதிர்ப்பார்த்த ஜனங்கள் பாவமுள்ள வகுப்பாரே ஆவர். “”நான் உம்மிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டி இருக்க, நீர் என்னிடத்தில் வரலாமோ?” என்ற அர்த்தத்தில் யோவான் இயேசுவைத் தடை பண்ணினார். இயேசுவிடம் பாவம் இல்லாதக் காரணத்தினால், இவ்விதமான ஞானஸ்நானம் இயேசு எடுப்பது சரியல்ல என்று யோவான் எண்ணினார். ஏனெனில், யோவானின் ஞானஸ்நானம், கிறிஸ்தவனின் ஞானஸ்நானமாக இராமல், மனந்திரும்புதலின் ஞானஸ்நானமாக மாத்திரம் இருந்தது (அப்போஸ்தலர் 19:4-5-ஆம் வசனங்களைப் பார்க்கவும்).

நமது கர்த்தர், தாம் ஒரு புதிய ஞானஸ்நானத்தை அறிமுகப்படுத்தப் போகிறார் என்றோ, அது பாவிகளுக்குரியதாய் இராமல், பரிசுத்தமானவர்களுக்கு உரியது என்றோ, இந்தப் புதிய ஞானஸ்நானம் எவ்விதத்திலும், பாவம் சுத்திகரிப்படுவதைக் குறிக்காமல், மற்றவர்களுடைய பாவங்களுக்கான பலியின் மரணத்தையே அடையாளப்படுத்துகின்றது என்றோ, யோவானுக்கு எடுத்துக்கூற முற்படவில்லை. அது கிறிஸ்துவ ஞானஸ்நானத்தைக் குறித்து விளக்குவதற்குரிய ஏற்றக் காலமல்ல. ஒருவேளை விளக்கியிருந்தாலும், அது யோவானையும், சுற்றி நின்று கேட்டவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி, எவ்வித பயனும் அளித்திருந்திருக்காது; காரணம் புதிய ஞானஸ்நானமானது பெந்தெகொஸ்தே நாள் முதல் ஆரம்பிக்கவிருக்கும் புதிய யுகத்திற்குரியதாகும். இன்று பெரும்பான்மையான கிறிஸ்துவ ஜனங்கள், நமது கர்த்தரால், முதலாவது அடையாளமாகப் பண்ணப்பட்ட கிறிஸ்துவ ஞானஸ்நானமாகிய புதிய ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள தவறி, இன்றளவும் பாவமன்னிப்புக்கென்று, யோவானுடைய ஞானஸ்நானத்தை அனுசரித்துவரும் விஷயத்தின் மீது இங்கு, நமது விசேஷமான கவனத்தைத் திருப்புவது நல்லது என நாம் எண்ணுகின்றோம்.

நமது கர்த்தராகிய இயேசு பரிசுத்தரும், பாவமில்லாதவரும், மாசற்றவரும், பாவிகளுக்கு விலகினவருமானபடியால், கழுவப்படுவதற்கு அவரிடத்தில் எந்தப் பாவமும் இல்லை என்றும், இதன் காரணமாக மனந்திரும்புதலுக்கு ஏதுவான யோவானின் ஞானஸ்நானம், இயேசுவுக்கு பொருத்தமற்றது/அர்த்தமற்றது என்றுமுள்ள வேதவாக்கியங்களின் அடிப்படையிலான கருத்தை, [R2565 : page 27] சீஷர்களாகிய நமது நண்பர்கள் மறுப்பதில்லை. ஆகவே பாவமன்னிப்புக்கான ஞானஸ்நானத்தை, நமது கர்த்தர் இயேசு எடுத்துக்கொள்வது என்பது பொருத்தமானதாய் இருக்காது; பாவமன்னிப்புக்குத்தான் ஞானஸ்நானம் என்று யோவான் புரிந்துவைத்திருந்தார். ஆனால் அவருக்குள் பாவம் இல்லாதபடியால், அவர் எடுத்துக்கொண்ட ஞானஸ்நானம், புதிய வகை/ஒழுங்கின்படியான ஞானஸ்நானம் ஆகும். இவ்விதமான ஞானஸ்நானம், பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு, அவருடைய பின்னடியார்களால் பின்பற்றப்பட்டது (அப்போஸ்தலர் 19:4,5). கிறிஸ்தவ ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகளுக்கு மாத்திரமே உரியது. மாறாக, அவிசுவாசிகளுக்கும், பாவிகளுக்கும் உரியதல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். கிறிஸ்துவின் மேல் கொள்ளும் விசுவாசமே, நீதிமானாக்குவதற்குரிய வல்லமையாக இருக்கின்றது. அவருடைய இரத்தத்தின் மேலான நமது விசுவாசத்தின் காரணமாக நாம் நீதிமானாக்கப்படுகின்றோம். நாம் நீதிமானாக்கப்பட்ட பிறகே, நாம் கிறிஸ்தவனுக்குரிய ஞானஸ்நானத்திற்குத் தகுதியடைகின்றோமே ஒழிய நீதிமானாக்கப்படுவதற்கு முன்பு அல்ல மேலும் நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கும்போது, நம்மிடத்தில் கழுவுவதற்கு எந்தப் பாவமும் இருப்பதில்லை. ஏனெனில், “”விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான்” (அப்போஸ்தலர் 13:39). ஞானஸ்நானம் என்பது கர்த்தருக்கு எதைக் குறிக்கின்றதாய் இருந்ததோ, அப்படியாகவே ஒரு கிறிஸ்துவ விசுவாசிக்கும் காணப்படுகின்றது; அதாவது, பரம பிதாவின் சித்தத்திற்கு, தனது சித்தத்தை, தனது ஜீவனை/வாழ்க்கையை, தனக்குள்ள யாவற்றையும் முழுமையாக ஒப்புக்கொடுப்பது ஆகும்; அதாவது அர்ப்பணிப்பதாகும். இப்படியாகக் கிறிஸ்துவன் ஒப்புக்கொடுக்கும்போது, அவன் உலகத்திற்கும், பூமிக்குரிய நம்பிக்கை மற்றும் இலட்சியங்களுக்கும் மரித்துப் போனவனாகக் காணப்படுகின்றான், மேலும், புதிய ஜீவியத்தில் நடப்பதற்கும், பின் போகப்போக உண்மையான ஜீவனை அடைவதற்கும், அவன் கர்த்தரோடு, மீட்பரோடு, முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவதற்கெனத் தேவனுக்குள் ஜீவனுடையவனாகிறான். இவைகள் அனைத்தும் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

பாவமில்லாத நமது கர்த்தர், இன்னொருவரால் நீதிமானாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால், புருஷனுக்குரிய வயதை அடைந்தபோது, பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கெனத் தம்மை முற்றும் முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய அர்ப்பணிப்பின் போதே, அவருடைய பூமிக்குரிய ஜீவன், முழு உலகத்திற்கான பாவத்திற்காகப் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது; இதை அவர் தண்ணீரில் மூழ்கின விஷயம் அடையாளப்படுத்துகின்றது. அவருடைய மீதமுள்ள 3½ வருடத்தின் ஜீவியம் ஏற்கெனவே, பலிப்பீடத்தின் மேல் வைத்தாகிவிட்டது. அவர் தம்முடைய பலிப் பட்சிக்கப்பட மாத்திரமே 3½ வருடம் காத்திருந்து, இறுதியில் “”எல்லாம் முடிந்தது” என்று கூக்குரலிட்டார். இதுபோலவே தம்முடைய உண்மையுள்ள, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை அனைவரையும் தம்முடன் உடன்பலிச் செலுத்துகிறவர்களாகவும், இறுதியில் இராஜ்யத்தில் உடன்சுதந்திரர்களாக இராஜரிக ஆசாரிய கூட்டமாவதற்கென அழைத்துள்ளார். இயேசுவின் ஞானஸ்நானமானது, பாவங்களுக்கான அவருடைய பலியின் மரணத்தை அடையாளப்படுத்தினது போன்று, கிறிஸ்தவனின் ஞானஸ்நானமும், (அவர்கள் முதலாவது விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, அவருடைய இரத்தத்தின் புண்ணியத்தினால் எல்லாவற்றிலிருந்து விடுதலையாகி) அவன் கர்த்தரோடு அவருடைய பலியில் பங்குக்கொள்வதை அடையாளப்படுத்துகின்றது. நமது கர்த்தருடைய விஷயத்தில், அவருடைய அர்ப்பணிப்பைத் தொடர்ந்து உடனடியாக ஓர் அடையாளம் வெளிப்படுகின்றது, இதுபோலவே, அவருடைய பின்னடியார்களின் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து, உடனடியாக அடையாளத்தின் அர்த்தத்தை எவ்வளவு வேகமாக உணர்கின்றார்களோ, அவ்வளவு வேகமாக அடையாளம் வெளிப்பட வேண்டும். இந்த அடையாளத்தின் அர்த்தமானது, பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டுள்ளது/தவறாய்ப்புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நமது கர்த்தரின் அர்ப்பணிப்பு, மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகிய ஞானஸ்நானம் நிறைவேறியவுடன், அவருடைய பலித் தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான நிரூபணம் வெளிப்பட்டது. அதாவது, அவருக்கு வானங்கள் திறக்கப்பட்டன. கர்த்தருக்கு, பிதாவுடன் உறவு இருக்கின்றது என்பதை உறுதிபடுத்துகிறதாகவும், அவர் மனுஷனாக இருக்கும்போதுள்ள அனுபவங்களையும், லோகோஸாக இருக்கும்போதுள்ள அனுபவங்களையும் ஒன்றுபடுத்துகிறதுமான, பரலோக தரிசனம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர், இவரே என் நேசகுமாரன் என்ற சத்தம் கேட்டது. மேலும், தெய்வீக ஆசீர்வாதமானது, புறாவைப் போல இயேசுவின் மேல் இறங்கி வருவதை யோவானும், இயேசுவும் கண்டார்கள் (யோவான் 1:34). சுற்றி இருந்த ஜனங்கள் வானங்கள் திறக்கப்பட்டதையோ, குரலைக் கேட்டதாகவோ, புறாவைக் கண்டதாகவோ, நமக்கு எதுவும் கூறப்படவில்லை, மாறாக இயேசுவும், யோவானும் மாத்திரமே இவைகளையெல்லாம், கண்டும், கேட்டும் இருந்தார்கள் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்கே, இவைகளைப் பார்க்கும் சிலாக்கியம் யோவானுக்கு அளிக்கப்பட்டது.

புறா என்பது, யூதர்கள் மத்தியில் ஓர் அருமையான அடையாளமாகும், அது சமாதானம் மற்றும் இரட்சிப்புக்குரிய ஒரு சின்னமாகும். நோவா அனுப்பின புறாவும், அதன் வாயில் இருந்த ஒலிவ கிளையும், சகல நாகரிகமான ஜனங்கள் மத்தியிலும் அடையாளமாக திகழ்கின்றது. தெய்வீக ஆசீர்வாதத்திற்கான வெளிப்படையான அடையாளம், புறாவாக இருந்தது என்றாலும், பரிசுத்த ஆவிதான் அந்தப் புறா என்றோ, அல்லது, பரிசுத்த ஆவியின் உருவம் புறா என்றோ நாம் அனுமானிப்பது தவறாகும். பரிசுத்த ஆவி என்பது வேதவாக்கியங்களின்படி தெய்வீக வல்லமையாக இருக்கின்றது. புறா என்பது சாந்தமும், அமைதியுமான ஆவிக்கு மிகப் பொருத்தமான அடையாளமாக இருக்கின்றது, மேலும் இத்தகைய ஆவி என்பது கர்த்தருக்குரிய பரிசுத்தத்தின் ஆவியை உடைய அனைவரிடமும் காணப்படக் கூடிய அலங்காரத்தில் ஒன்றாகும். நமது கர்த்தர் அனுபவித்த இம்மாதிரியான அனுபவங்கள், அவருடைய பின்னடியார்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் எதிர்ப்பார்க்கவும் கூடாது. அதாவது, வானம் திறப்பதையும், சத்தம் கேட்பதையும், புறாவையும் எதிர்ப்பார்க்கக் கூடாது. பெந்தெகொஸ்தே நாளன்று சபைக்காக வந்த பரிசுத்த ஆவி இந்த யுகம் முழுவதும் உள்ள முழுச் சபைக்கும் உரியதாகும். பெந்தெகொஸ்தே நாளன்று, அது வெளிப்படையாக வந்தது. இப்படிப்பட்ட வெளிப்படையான வெளிப்படுத்தல்கள், ஆரம்பத்தில் அவசியமாய் இருந்தது, காரணம் பரிசுத்த ஆவியின் விஷயத்தில், நாம் நமது சொந்த கற்பனைகளையோ அல்லது மற்ற மனுஷர்களுடைய கற்பனைகளையோ பின்பற்றவில்லை என்ற நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வதற்கேயாகும். முதலில் அடையாமாக வெளிப்படுத்தின விஷயங்களை, இப்பொழுது நாம் நிஜமாக பெற்றிருக்கின்றோம். மனந்திரும்புதலுக்கு ஏதுவான நம்பிக்கைக் கொண்ட அனைவரும் தங்கள் பாவங்களிலிருந்து நீதிமானாக்கப்பட்டிருக்கிறார்கள், பின்னர், அவர்கள் தங்களைக் கர்த்தருடைய மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்திற்குள் ஒப்புக்கொடுக்கும்போது, ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக, பரலோக விஷயங்களைக் காண்பதற்கு ஏதுவாக தங்களின் மனங்கள் திறக்கப்படும் விதத்தில், வானங்கள் இவர்களுக்குத் திறக்கப்படுகின்றது; “”நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்” (ரோமர் 6:3; 1 கொரிந்தியர் 2:10). மேலும், அவர்கள் விசுவாசத்தின் மூலம் பிதாவின் குரலைக் கேட்கின்றனர்; அதாவது, அவர்கள் கிறிஸ்துவின் மூலம் தம்மிடத்தில் வந்ததினாலும், இவ்விதமாக தங்களுடைய ஜீவியத்தைத் தமக்கென்று அர்ப்பணித்ததினாலும், அவர்கள் தமது நேசகுமாரனுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நேசகுமாரர்களாக இப்பொழுது காணப்படுகின்றார்கள் என்று பிதா கூறுவதை, விசுவாசத்தினால் கேட்கின்றனர். மேலும் அவர்கள் தங்கள் இருதயங்களில் சமாதானமும், சாந்தமும், பரிசுத்தமும் பெற்றிருப்பதின் வாயிலாகப் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்கள் அதிகமதிகமாக ஆவியில் நிரப்பப்படும்பொழுது, இந்த ஆவியின் ஆசீர்வாதங்கள் அதிகமதிகமாய் அவர்களுக்கு நிஜமாகுகின்றது.

ஆவிக்குரிய ஞானஸ்நானத்தின் காரணமாக, பிரகாசிக்கப்பட்ட இயேசுவினிடத்தில் உள்ள ஆவியானது, அவரை யோவானிடமிருந்தும், ஜனக்கூட்டத்தாரிடமிருந்தும் விலகி, அமைதியான [R2566 : page 28] சூழ்நிலைக்குப் போகும்படி வழிநடத்தினபடியால், இயேசு வனாந்திர பகுதியைத் தெரிந்துக்கொண்டார். மாற்கு தனது சுவிசேஷத்தில், இயேசு தமது ஆவியில் வனாந்தரத்தற்குப் போகும்படித் தூண்டப்பட்டார் என்று எழுதியுள்ளார். அந்த நேரத்தில், நமது கர்த்தருடைய மனதில் மிகப் பெரிய அழுத்தம் காணப்பட்டது என்று நாம் எண்ணுகின்றோம். நம்முடைய முந்தைய பாடங்களில், இயேசு, மிகச் சிறிய பிராயத்திலேயே பிதாவின் வேலை குறித்தும், அதைத் தாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் எருசலேமில் போய் ஆராய்ச்சிப் பண்ணினார் என்று நாம் பார்த்துள்ளோம். மேலும், தாம் 30 வயதை அடையாத வரையிலும், பிதாவின் வேலையைச் செய்ய முடியாது என்று நியாயபிரமாணத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டதன் விளைவாக, அவர் பின்வாங்கி தமது பெற்றோர்களுடன் தங்கி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் என்றும் நாம் பார்த்தோம். சுமார் 18-ஆண்டுகளாக, இயேசு காத்திருந்த தருணம் வந்தது. இயேசு, தமது ஊழியம் எவ்விதத்திலும் கால தாமதமாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், கூடுமான அளவு சீக்கிரமாகத் தம்மை அர்ப்பணிக்கும் பொருட்டு, துரிதமானார். இயேசு, பதற்றத்துடன் தமது ஊழியத்தை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, தற்போது கிடைத்துள்ள பரிசுத்த ஆவியின் வெளிச்சம் காரணமாக, தாம் கடந்து செல்ல வேண்டிய பாதையைத் திட்டவட்டமாக அறிந்துக்கொள்ள வேண்டும் என்றும், தமது ஊழியத்தை ஆரம்பிக்கும்போதே தவறு இழைக்கக் கூடாது என்றும், பிதாவின் சித்தத்திற்கு இசைவாக ஊழியம் செய்யத்தக்கதாக, பிதாவின் சித்தம் எது என அறிந்துக்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தார். இத்தகைய நோக்கங்களானது, அவர் சிந்திப்பதற்கும், ஜெபம் பண்ணுவதற்கும், தாம் இதுவரையிலும் கற்றறிந்தும் கூட, சரிவர புரிந்துக்கொள்ளாமல் இருந்த பல்வேறு வேதவாக்கியங்கள் இப்பொழுது தாம் பெற்றுள்ள பரிசுத்த ஆவியினால் அவைகள் வெளிச்சமாகிற காரணத்தினால், அவைகளை மீண்டும் சிந்தனை செய்வதற்கு ஏதுவாக, அவரைத் தனிமையில் இருப்பதற்கு ஏவிற்று.

சகல கர்த்தருடைய ஜனங்களும் கூட, தங்களைத் தெய்வீக ஊழியத்திற்கென்று அர்ப்பணித்த பிற்பாடு, அவர்கள் தனித்து வந்து பிதாவோடு சம்பாஷிக்கவும், எவ்விதத்தில் தங்களுடைய ஜீவியங்களை அங்கீகரிக்கத்தக்க விதத்தில் அவருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதைக் குறித்து, அவருடைய வார்த்தைகளைக் கற்று அறிந்துக் கொள்வதற்காகவும், அவர்களுடைய புதிய மனம், புதிய ஆவி ஏவவேண்டும். இப்படியாகச் செய்யப்படுமாயின் எத்தனை ஜீவியங்கள் இன்று காணப்படும் நிலையைவிட முற்றிலும் வேறுபட்டதாய்க்காணப்பட்டிருக்கும்! எத்தனை தவறுகள் தடுக்கப்பட்டிருக்கும்! இவைகளைக் குறித்து நமது கர்த்தர் உவமைகள், ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார், அதாவது, யார் ஒருவன் தனது சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற முற்படுகின்றானோ, அவன் முதலாவதாக உட்கார்ந்து, செல்லும் செலவைக் கணக்குப் பார்க்க வேண்டும்; அதாவது, பிதாவின் சித்தம் என்ன என்றும், பிதாவின் சித்தம் செய்வதன் விளைவு என்ன என்றும் கற்றுக்கொள்வதாகும். ஒருவேளை, தேவனுடைய ஏதேனும் ஓர் அருமையான பிள்ளை தனது அர்ப்பணிப்பின் ஆரம்பக்கட்டத்திலேயே, சரியான பாதை எது என்று அறிந்துக்கொள்ளும் முயற்சியைப் புறக்கணித்தால், அத்தகையவருக்கு நமது அருமையான போதகரின் மாதிரியையே முன்வைக்கின்றோம். சகல விஷயங்களிலும் இருப்பது போன்று, இவ்விஷயத்திலும் ஞானமாய் இருந்த நமது போதகரிடம், தெளிந்த புத்தியுள்ள ஆவி இருந்ததோடு அல்லாமல், தெளிந்த மனமும் இருந்தபடியால் அந்த ஆவி தெளிந்த மனதில், பூரணமாய்ச்செயல்பட்டது. தெய்வீகச் சித்தமானது என்ன என்று அறிந்துக்கொள்ளும் விஷயத்தில், நாம் நமது போதகர் போன்று தனித்திருக்கவில்லை. நமக்குச் சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள், அவருக்கோ யாருமில்லை, அவரே முதலில் ஓடிய முன்னோடியாக இருக்கின்றார். இத்தகைய சகோதர சகோதரிகளிடமிருந்தும் நாம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். விசேஷமாக நம்முடைய மூத்த சகோதரராகிய இயேசுவின் முன்மாதிரி மற்றும் அவருடைய வார்த்தைகளின் உதவியும் கூட நமக்கு உள்ளது. மேலும், பிதாவின் ஊழியம் செய்வதற்கென்றுதான் நாம் அர்ப்பணித்துள்ளோம் என்பதையும், பிதாவின் திட்டம் மற்றும் அதிலுள்ள நம்முடைய பங்கு என்ன என்று புரிந்துக்கொள்ளத்தக்கதாக, சகோதர சகோதரிகள் மாத்திரமே உண்மையாய் நமக்கு உதவி செய்ய முடியும் என்பதையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. சில வேளைகளில் சகோதரர்கள் தங்களுடைய திட்டங்களை நமக்கு முன்வைத்து அவைகளுக்கு நேராக நம்முடைய அர்ப்பணிப்புக் காணப்படத்தக்கதாக, இடறலாகவும் காணப்படுவார்கள் என்பதையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.

நமது கர்த்தருக்கான சோதனைகள் இக்கட்டத்திலிருந்து ஆரம்பமாகுகின்றது. “”அவர் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருந்தார்” (எபிரெயர் 4:15). சிறுவனாய் இருந்த இயேசு அல்லது வாலிபனாக இருந்த இயேசு சோதிக்கப்படாமல், “”நம்மைப்போல்” இருந்த போதே அவர் சோதிக்கப்பட்டார். நமது கர்த்தருடைய அர்ப்பணிப்பைத் தொடர்ந்த அவருடைய சோதனைகள், உலகத்தின் மேல் வரும் சோதனைகள் போன்று இராமல், சபைக்கு வரும் சோதனை போன்று இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நம்முடைய அர்ப்பணிப்பின் காலமுதல், நாம் கிறிஸ்துவுக்குள்ளான புதுச் சிருஷ்டிகளாகக் கருதப்படுவதுபோன்று, நமது கர்த்தரும், யோர்தானில் தம்மை அர்ப்பணித்தது முதல் புதுச் சிருஷ்டியாகவே கருதப்பட்டார். இயேசுவின் அர்ப்பணிக்கப்பட்ட பின்னடியார்கள் சோதிக்கப்படுவதும், பரீட்சிக்கப்படுவதும் போன்று, அர்ப்பணிக்கப்பட்ட இயேசுவும், சோதிக்கவும், பரீட்சிக்கவும்பட்டார். இதற்கான கூடுதல் நிரூபணங்களை, நமது கர்த்தருடைய சோதனையின் முறையைக் கவனிக்கையிலும், அவருடைய சோதனைகளை, அவருடைய அர்ப்பணிக்கப்பட்டுள்ள பின்னடியார்களின் சோதனையோடு ஒப்பிடுகையிலும் நாம் பார்க்கலாம். அநேகர், ஏன் தாங்கள் கர்த்தருக்கென்று தங்களை அர்ப்பணித்ததற்கு முன்பு சோதனை வராமல், அர்ப்பணித்தப் பின்னரே வருகின்றது என யோசிக்கலாம்; ஏனெனில், இவர்கள் தங்களுடைய அர்ப்பணிப்புக்குப் பிற்பாடு, எதிராளியானவன் தங்களைவிட்டு ஓடிப் போவான் என்றும், தங்களுக்குக் கொஞ்சம் அல்லது ஒரு சோதனையுமிராது என்றும் எண்ணி, தெய்வீக ஏற்பாடுகளை முற்றிலும் தவறாய்ப்புரிந்துக்கொள்கின்றார்கள். அர்ப்பணித்தவர்களுக்கு வரும் சோதனைகள் அல்லது குணலட்சணத்திற்குரிய பரீட்சைகள், அர்ப்பணிக்காதவர்களுக்குத் தகுந்தவைகள் அல்ல. தற்போதைய காலம் உலகத்திற்குரிய நியாயத்தீர்ப்பின் நாளாய் இராமல், சபைக்குரிய பரீட்சை காலமாகவே இருக்கின்றது.

நமது கர்த்தருக்கான சோதனைகள், முழு நாற்பது நாள் அளவும் காணப்பட்டது போன்று தோன்றாலம்; ஆனால், கூறப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் விசேஷமாக, அவருடைய சோதனை காலத்தின் இறுதியிலேயே வந்தது. நாம் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்… நமது கர்த்தர் தனிமையான வனாந்தரத்தில், தம்மைக் குறிக்கும் பல்வேறு தீர்க்கத்தரிசனங்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்திருப்பார். எப்படி ஒரு கலைஞன் முதலாவதாகக் கட்டிடத்தின் எல்லைக் கோடுகளை வரைந்து, பின்னர் உள்அமைப்பைப் படிப்படியாக வரைவாரோ அப்படியே, இயேசுவும் தம்மைக் குறிக்கும் பல்வேறு தீர்க்கத்தரிசனங்களை இணைத்துக் கொண்டிருந்திருப்பார். வேதவாக்கியங்களிலிருந்து, நமது கர்த்தருக்கு முன்பாகக் காணப்பட்ட எல்லை கோடுகளின் வரைப்படம் இராஜ்யமாக இருந்தது. இவர் இராஜாவாகவும், ஆபிரகாமின் சந்ததியாகவும் இருக்க வேண்டும். மேலும், இவருடைய கிருபையான ஆளுகையின் கீழும், ஞானமான போதனைகளின் கீழும், பூமியின் சகல குடிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். இந்தக் குறிப்புகள் அவருடைய மனதிற்கு முன்பாக ஏற்கெனவே தெளிவாகக் காணப்பட்டது. ஆனால் மற்ற அம்சங்கள் அதனதன் ஸ்தானத்தில் சரியாகப் பொருத்தப்பட வேண்டும். ஜனங்களின் பாவங்களுக்காக ஆசாரியன் தமது ஜீவனை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற காரியத்தை அடையாளப்படுத்தும் நியாயப்பிரமாணத்தின் நிழல்களை அவர் எப்படி நிறைவேற்ற வேண்டும்? நித்தியத்திற்கான ஆசாரிய கூட்டத்தின் நிழல் எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? நிழலில் ஆபிரகாம், பிதாவுக்கு அடையாளமாகவும்; ஈசாக், தமக்கு அடையாளமாகவும் இருக்கும் பட்சத்தில், ரெபேக்காள் அடையாளப்படுத்தும் இஸ்ரயேல் [R2566 : page 29] வகுப்பார் எப்படி வருவார்கள்? (மாம்சீக) இஸ்ரயேலர்கள் தம்மை ஏற்றுக்கொண்டு, ரெபேக்காள் வகுப்பார் ஆவார்கள் எனில், பலிச்செலுத்துப்படுவதன் அவசியம் தான் என்ன? எப்படிப் பலிச் செலுத்த வேண்டும்? என்ற கேள்விகள் இயேசுவின் மனதில் தோன்றினது. இன்னுமாக இஸ்ரயேல் கடற்கரை மணலைப்போன்று இருப்பினும் சொற்பமானவர்களே அங்கீகரிக்கப்படும் நிலைக்கு வருவார்கள் எனச் சில தீர்க்கத்தரிசனங்கள், உரைக்கும்போது, மகிமையான இராஜரிக ஆசாரியக்கூட்டம் நிறைவடையத்தக்கதாக, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள்களின் முன்தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கை எப்படிக் கண்டுபிடிக்கப்படும் என்ற விஷயங்களும், அவருடைய மனதை அழுத்தி இருக்க வேண்டும். மேலும், எவ்விதத்தில் பூமியின் குடிகள் மேல் ஆசீர்வாதம் வரும் என்றும், ஒருவேளை தாம் பிரதான ஆசாரியனாகவும், தம்முடைய உண்மையுள்ள பின்னடியார்கள் இராஜரிக ஆசாரியர்களாகவும் இருப்பார்களேயானால், அனைவரும் நீதியின் நிமித்தம் பாடுபட்டு, பலியாக மரிக்க வேண்டுமோ? என்ற கேள்விகளும், அவருடைய மனதை அழுத்தி இருக்க வேண்டும்.

இப்படியாக ஒவ்வொன்றையும் சிந்தித்து, அங்கும் இங்குமாக ஜெபத்துடனும், பொருத்திப் பார்ப்பதற்கு அநேகமாக முழு 40-நாட்களும் தேவைப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் அனுமானிக்கலாம். மேலும், இவைகளின் மத்தியில் சோதனைகளும் கலந்திருக்க வேண்டும்; உதாரணமாக, மகிமைக்கு முன்பாக கிறிஸ்து பாடுபட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் தீர்க்கத்தரிசனங்கள் மற்றும் நிழல்களில் உள்ள விஷயங்களின் அவசியம் என்ன? என்ற கேள்விகள் சோதனைகளாக அமைந்திருக்கலாம். வேதவாக்கியங்களை நேர்மையற்ற விதத்தில் புரட்டி, தம்மைத்தாம் வஞ்சித்து, தெய்வீக எல்லைக்கோட்டிற்கு முழுமையாய் இசைவு இராத வழியைத் தெரிந்துக்கொள்வதற்கான சோதனைகளும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இம்மாதிரியான ஆலோசனைகள் ஒன்றன் பின்பு ஒன்றாக அவருக்கு முன்பாகத் தோன்றினாலும், அவைகளை நமது கர்த்தர் உடனடியாகப் புறம்பாக்கினார் என்று நாம் நம்புகின்றோம். நமது கர்த்தர், தாம் பிதாவின் சித்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விதத்திலேயே, தாம் அனுப்பப்பட்ட வேலையை நிறைவேற்ற வேண்டும் என்றும் முழுத் தீர்மானம் கொண்டு காணப்பட்டார்.

அவருடைய ஆராய்ச்சி மிக ஆழமாகவும், அதேசமயம் பிதாவோடும், அவருடைய பிரமாணங்களோடும் ஐக்கியம் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விருப்பம் உண்மையுமாகவும் இருந்தபடியால், இதற்காகவே அவர் 40 நாளையும் செலவிட்டார். நமது கர்த்தர் மிகவும் ஆழமாக இவைகளில் மூழ்கினபடியால், உணவைக்கூட அவர் யோசிக்கவில்லை. பிற்பாடே அவருக்குப் பசி உண்டாயிற்று.

இந்த வேத ஆராய்ச்சி மற்றும் ஜெபத்தின் இறுதிக்கட்டத்தில்தான் நமது கர்த்தர், உபவாசத்தினால் பலமிழந்தபோது, எதிராளியானவன், மூன்று சோதனைகளினால், அவரைத் தாக்கினான்.

“”பிசாசு” என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதற்கான மூல வார்த்தை (Diabolos) டையபோலஸ் ஆகும். பிரதான வஞ்சகன், வேத வாக்கியங்களில் பிசாசுகள் என்று பன்மையில் சொல்லப்படும், விழுந்துபோன தூதர்களிடமிருந்து பிரிக்கப்பட்டே பேசப்பட்டிருக்கும். இங்கும், பிசாசுகளின் அதிபதியானவனே பேசப்படுகின்றான்; இவனையும், இவனுடைய வல்லமையைக் குறித்தும் நமது கர்த்தர் கூறியுள்ளார். சாத்தான், மனித உருவத்தில், நமது கர்த்தருக்கு முன்பு தோன்றியிருப்பான் என்று நாம் அனுமானித்துக் கொள்ள கட்டாயம் ஏதும் இல்லை. அவன் தனிப்பட்ட விதமாக தோன்றியும் இருந்திருக்கலாம், இல்லாமலும் இருந்திருக்கலாம். ஒருவேளை அவன் தன்னைத் தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுத்தி இருப்பானானால், அவன் தன்னை ஒளியின் தூதனாகிய, சிறந்த தோற்றத்தில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். நமது கர்த்தர் மனிதனாக வருவதற்கு முன்பு, பிதாவுடைய பிரதிநிதியாக/கருவியாக இருந்து, லூசிபரைச் சிருஷ்டித்தார் என்பதையும் நம்மால் நினைவுகூர முடிகின்றது. மேலும் சாத்தான், உன்னத தளத்தில் இருந்த தூதன் என்றும், மனுக்குலத்தின் கீழ்ப்படிதல், அன்பு மற்றும் அனுதாபத்தைத் திருடினதின் மூலம், அதிகாரத்தைப் பறிக்க முயன்று, பூமியின் மீது அதிகாரம் பெற்றுக் கொள்ள இவர் முயன்றதே இவருடைய பாவம் என்றும், இச்செயல்பாடுகளின் காரணமாக இவர், தெய்வீகக் கண்டனத்தைப் பெற்றுக் கொண்டார் என்றும் நாம் நினைவுகூருகின்றோம். மேலும் நமது கர்த்தர் தம்மை அர்ப்பணம் செய்ததையும், விழுந்துபோன மனுஷ ஜாதியை மீட்கும் வேலையைப் பிதா இவரிடம் கொடுத்துள்ளார் என்பதையும் ஓரளவு சாத்தான் அறிந்திருந்தபடியால், சாத்தான் இயேசுவிடம் சென்று அவரைச் சந்திப்பது பொருத்தமாய் இருக்கும் என்று நாம் அனுமானித்துக் கொள்ளலாம். இவர் (சாத்தான்) தன்னை, இயேசுவின் நண்பர் போன்றும், கர்த்தர் மேலும், கர்த்தருடைய வேலையின் மேலும் தனக்கு மிகுந்த அக்கறை இருப்பது போன்றும், மனுக்குலத்தின் மீது வந்த பாவத்திற்குரிய தண்டனை குறித்தும், சீர்க்கேடு குறித்தும், தான் கண்டு வேதனைபட்டது போன்றும், அதிர்ச்சியடைந்தது போன்றும் வெளிப்படுத்தி இருக்கலாம் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். மேலும், பாவப்பட்ட மனுக்குலமானது அதன் பிரசவ வேதனைகளில் இருந்தும், தவிப்பிலிருந்தும், மரிக்கும் சூழ்நிலைகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்கு ஏறெடுக்கப்படும் பிரயாசங்களில், நான் உண்மையில் மகிழ்ச்சிக் கொள்வேன் என்பது போன்றும், சாத்தான் தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். தான் உலகத்தில் நிலவும் சூழ்நிலைகளை முழுக்க அறிந்தவர் ஆனபடியாலும், மீட்பின் வேலை வெற்றியடைவதில் தான் விருப்பம் கொண்டுள்ளவர் ஆனபடியாலும், மனுக்குலத்தினுடைய பலவீனங்களை மற்றும் எண்ணங்களை முழுமையாய் தான் அறிந்தவர் ஆனபடியாலும், நமது கர்த்தர் இயேசு நிறைவேற்ற விரும்புகிறதும், கவனம் செலுத்துகிறதுமான திட்டத்திற்கான, ஆலோசனகளை அளிப்பதற்கு, தான் தகுதியான நிலையில் இருக்கும் நண்பன் போன்று சாத்தான் வெளிப்படுத்தினார்.

[R2567 : page 29]

தனிப்பட்ட இலாபத்திற்காக, ஆவிக்குரிய கிருபைகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவான சோதனை

நமது இரட்சகர் மேற்கொண்டுள்ள மாபெரும், உன்னதமான வேலையை, அவர் செய்ய வேண்டுமெனில், அவர் தமது சரீர ஆரோக்கியத்தைச் சரிவர பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும், சாப்பிடாத காரணத்தினாலேயே அவர் பெலவீனப்பட்டிருக்கின்றார், ஆகையால் சாப்பிட வேண்டும் என்றும், நமது இரட்சகர் மீது உள்ள தன்னுடைய தனிப்பட்ட அக்கறையைச் சாத்தான் முதலாவதாக வெளிப்படுத்தினான். இயேசுவினுடைய தற்போதைய வல்லமை, அதாவது சமீபத்தில் பெற்றுக்கொண்ட தெய்வீக வல்லமையைக் குறித்துச் சாத்தான் அவருக்கு நினைப்பூட்டி, இயேசு இப்பொழுது தமது தேவைகளைச் சந்தித்துக்கொள்ள ஆற்றல் உள்ளவராகவும், கற்களை அப்பமாக மாற்றுவதற்கு, ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னால் போதும் என்று நினைப்பூட்டினான். ஆகவே இயேசு தம் மீது இறங்கி வந்துள்ள புதிய வல்லமையைத் தமக்குத் தாமே பரிசோதித்துக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கினான். இதைக் காட்டிலும் தந்திரமான சோதனை வேறு இருக்குமோ? இப்படிச் செய்வதன் விளைவாக, அவருடைய பசி தணிந்து, சரீரம் பலமடைவதோடு அல்லாமல், சாத்தானும் மனம் திரும்பியுள்ளவர் போல் தோன்றும். சாத்தான் ஒரு காலத்தில் செய்து வந்த தீயக் கிரியையை மாற்றி போடுவதற்கென, இயேசுவோடு கூடச் சேர்ந்து வேலை புரிய, அவன் விருப்பமுள்ளவனாக இருக்கின்றான் என்பது போன்று இயேசுவுக்குத் தோன்றும். இது ஒரு கடுமையான சோதனையாகும்.

இதைப் போன்ற சோதனைகள், அர்ப்பணம் பண்ணியுள்ள சகல ஜனங்களுக்கும் வரும். ஆனாலும் இயேசுவுக்கு வந்தது போன்று, அப்படியே வராமல், அவருக்கு வந்த பிரகாரமே/வந்த முறை போன்றே வரும். அதாவது பிதாவுடன் கிடைத்துள்ள புதிய உறவையும், அதன் காரணமாக வரும் வல்லமைகளையும், நமது பூமிக்குரிய முன்னேற்றத்திற்கு, சௌகரியத்திற்குக் கொஞ்சம் [R2567 : page 30] பயன்படுத்துவதற்கு ஏதுவான ஆலோசனைகள் வாயிலாக இச்சோதனைகள் வரலாம். அதாவது இந்தப் புதிய உறவு மற்றும் அதன் காரணமாக வரும் வல்லமைகளை, நாம் தேவனால் தயவும், கனமும் பெற்றுள்ளோம் என மனுஷருக்கு முன்பாக பிரகாசிக்கத்தக்கதாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஆலோசனைகள் வாயிலாக, சோதனைகள் வரலாம். மேலும் இவைகளைப் பயன்படுத்தி, பணம் ஈட்டுவதற்கு நாடத் தூண்டும் ஆலோசனைகள் வரலாம். நண்பன் போன்று காட்டிக் கொண்ட சாத்தானையும், அவரது உலக பிரகாரமான ஆலோசனைகளையும் நமது கர்த்தர் எப்படி எதிர்த்தார் என்று நாம் அனைவரும் ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். இயேசு தமது ஆவிக்குரிய வல்லமையை, தமது பூலோக தேவைகளைச் சந்திப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை அப்படியே புறக்கணித்து விட்டார். (அப்போஸ்தலர் 8:18-24) ஆவிக்குரிய வரங்கள், சீமோனிடம் பணத்திற்காக விற்கப்படாதது போன்று, ஆவிக்குரிய வரங்களானது, பூமிக்குரிய சௌகரியங்களை அடைய பயன்படுத்தப்பட முடியாது. ஆனால் இயேசு இவைகளையெல்லாம் விரிவாய்ப் பேசாமலும், தம் பட்சத்தில் கொடுக்கப்பட்ட வல்லமையை, பூமிக்குரிய மதிப்பற்ற விஷயங்களுக்கு பயன்படுத்த எண்ண முடியாத அளவிற்குத், தாம் மிகவும் பரிசுத்தமுள்ளவராய் இருக்கின்றார் என்று பெருமை பாராட்டாமலும் இருந்து, வேதவாக்கியங்களின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, எதிராளியானவனுக்கு எளிமையாய் பதில் அளித்தார்; அதாவது மனுஷனுடைய ஜீவன் என்பது, அவன் சாப்பிடும் உணவின் மீது முழுமையாய்ச்சாராமல், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் விஷயத்தின் மீதே சார்ந்திருந்தது என்று பதிலளித்தார். இப்படியாகவே, கர்த்தருடைய ஒவ்வொரு பின்னடியார்களும், தங்களுக்குள் ஆவிக்குரிய விஷயங்களைத் தியாகம் செய்து, பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் மற்றும் சொகுசுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எழும்பும் ஒவ்வொரு கேள்விகளுக்கும, பதில் கூற வேண்டும். அநேக கர்த்தருடைய, சகோதர, சகோதரிகளுக்கு, எதிராளியானவன் சோதனையை முன்வைக்கும் விதமானது, “”ஒருவேளை நீ சத்தியத்தை ஆழமாயப்பின்பற்றினாய் என்றால், சத்தியத்திற்கு அடுத்த வேலைகளில் நீ வைராக்கியத்துடன் செயல்படத்தக்கதாகச் சத்தியத்தின், பரிசுத்த ஆவியை அனுமதிப்பாயானால், சீக்கிரம் உணவு இல்லாத நிலைக்கு வந்து விடுவாய். ஏனெனில் உன் மத்தியில் காணப்படும் உலக ஜனங்கள் இப்படிப்பட்ட (சத்தியத்தின்) விஷயங்களை அங்கீகரிப்பதில்லை. உன்னை வேலையிலிருந்து விட்டுவிடுவார்கள், அல்லது கடை வியாபாரத்திலிருந்து உன்னை அகற்றி/வெளியேற்றிவிடுவார்கள் அல்லது நீ அவர்களுடைய போதகராய் இருக்கக் கூடாது என்று பதவி நீக்கம் செய்துவிடுவார்கள். அல்லது உன்னுடன் ஐக்கியம் கொள்வதை நிறுத்திவிடுவார்கள். மேலும் இப்படியாக நிகழும் பட்சத்தில், இந்தத் தற்கால ஜீவியத்திற்குரிய விஷயங்களுக்கு, நீ திண்டாட வேண்டியதுதான் என்பதேயாகும்.” நிழலில் ஏசா, ஒரு பானை கூழுக்காக, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விற்றுப்போட்டது போன்று செய்யாமல், தேவனுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மதிக்கிற யாவரையும், காத்துக்கொள்வதற்கு தேவன் வல்லவராக இருக்கின்றார் என்பதே சரியான பதிலாகும். அதாவது தற்காலத்தில் சில சொகுசுகளை இழக்க நேரிட்டாலும், தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவிப்பவர்கள், இறுதியில் மிக மேன்மையான நித்தியத்திற்குரிய ஜீவனை, மேன்மையான மகா மகிமையோடு பெற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்பதே சரியான பதிலாகும்.

நமது கர்த்தருடைய இப்படிப்பட்ட உறுதியான பதில், சோதனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் இந்த விதத்தில் மீண்டும் சோதனையைத் தொடர்வதில், எதிராளியானவன் சோர்வடைந்துப்போனான். நம்முடைய விஷங்களிலும் இப்படியாகவே காணப்படும். ஒருவேளை நாமும் சோதனையை எதிர்க்கும் விஷயத்தில், உறுதியுடன் காணப்படுவோமேயானால், அந்தச் சோதனை நேரத்தில் மாத்திரமல்லாமல், பின்வரும் சோதனைகளிலும் நம்முடைய குணலட்சணங்கள் பலம் பெருகுகின்றது. மேலும் நமது உறுதியைக் கவனிக்கும் நமது எதிராளியானவனும், உறுதியான குணலட்சணங்களும், தீர்க்கமான தீர்மானங்களும் உள்ள நபர்களுக்கு இத்தகைய ஆலோசனையை வழங்குவது பிரயோஜனமற்றது என அறிவான். ஆனால் ஒருவேளை நமக்குள் எழும்பும் சாத்தானின் ஆலோசனைகளுக்கு, கேள்விகளுக்கு மீண்டும் மீண்டுமாக எதிர்த்து விவாதம் செய்யப்படுமாயின், பேசப்படுமாயின், சாத்தானும் கூடுதலான வாக்குவாதங்களையும், நியாயங்களையும் முன்வைப்பான்; இப்படியாகப் போகும் பட்சத்தில் நாம் விவாதத்தில் சாத்தானால் மேற்கொள்ளப்படும் அபாயமும் ஏற்படுகின்றது. ஏனெனில் பிசாசு ஒரு தந்திரமான எதிராளி என்றும், அவனுடைய தந்திரங்கள் நாம் அறியாதது அல்லவே என்றும் அப்போஸ்தலரால் குறிப்பிடப்படுகின்றது. கர்த்தருடைய ஆவிக்கும், வார்த்தைக்கும், உடனடியாகவும், உறுதியாகவும் கீழ்ப்படிவதே, எல்லா சகோதர சகோதரிகளுக்கும் உரிய பாதுகாப்பான வழியாகும்.

அங்கீகரிக்கப்படாத முயற்சிகளின் மூலம் தேவனைச் சோதித்துப் பார்த்தல்

எதிராளியானவன் தன்னுடைய முதலாம் முயற்சியில் தோல்வியடைந்தவுடன், தன்னைக் குறித்து இயேசு என்ன எண்ணிக்கொள்வார் என்று கூடக் கருதாமல், உடனடியாகப் பேச்சை மாற்றிவிட்டான். எதிராளியானவன் கர்த்தருக்கு முன்பு வைத்த இரண்டாம் சோதனையும், அவருடைய அர்ப்பணிக்கப்பட்டுள்ள பின்னடியார்களுக்கும் பொருந்தும். இச்சோதனை கொலை செய்தல், திருடுதல் போன்ற துணிகரமானவைகளைச் செய்யத் தூண்டுகிறதாய் இராமல், தேவன் திட்டமிட்டப்படிச் செய்யாமல், வேறு வழியில் கர்த்தர் வேலையைச் செய்வதற்கான சோதனையாக இருந்தது. அதாவது அங்கீகரிக்கப்படாத வழியில், நற்பலன்களைக் கொண்டு வருவதற்கெனத் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தெய்வீக வல்லமைகளைத் தவறாய் இயேசு பயன்படுத்துவதற்கு ஏதுவான சோதனையாக இருந்தது.

சாத்தான், நமது கர்த்தர் இயேசுவை, எருசலேமில் உள்ள ஆலயத்தின் உப்பரிகையில் கொண்டுச் சென்றான். கர்த்தரை அவர் சரீர பிரகாரமாக கூட்டிச் செல்லாமல், மன ரீதியாகக் கூட்டிச் சென்றான். நாம் எப்படிச் சரீர ரீதியாக இல்லாமல், மனரீதியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குக் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்கின்றோமோ, அதைப் போன்ற அனுபவமே இயேசுவுக்கு உண்டாயிற்று. இப்படியாக அவருக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது…. “நீர் மிக விரைவாக இஸ்ரயேல் ஜனங்களின் மத்தியில் முக்கியமான ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்வதற்கென, நான் (சாத்தான்) உமக்கு ஒரு நல்ல ஆலோசனை வழங்க முடியும். நீரும் அதில் பிரியப்படுவீர். ஏனெனில், நான் சொல்லும் வழிமுறை, வேதவாக்கியங்களில் உள்ள ஒரு வழியாகும். மேசியா தம்முடைய வருகையின் போது, இப்படியாகச் செய்வார் என்று தீர்க்கத்தரிசனத்தின் மூலம் முன்னறிவிக்கப்பட்டுள்ளதை நான் கண்டுபிடித்துள்ளேன். மேலும் இப்படியாகச் செய்யும் பட்சத்தில், இதை ஜனங்கள் தீர்க்கத்தரிசியான தாவீதின் வார்த்தைகள் நிறைவேறியுள்ளன என்று உடனடியாக அடையாளம் கண்டுக்கொண்டு, உம்முடைய நோக்கத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள். நீரும் ஜனங்களின் தலைவனாகவும் ஆகிவிட முடியும். பின்னர் உம்முடைய வேலையும் பிரம்மாண்டமாய் நடக்கும். மேலும் நான் ஏற்கெனவே சொன்னது போன்று, இந்த வேலை முன்னேற்றம் அடைகையில் நான் களிகூருவேன். ஏனெனில் 4000 வருடங்களாக நான் பார்த்துக் கொண்டிருக்கும் சீர்க்கேட்டின் நிமித்தம் என் இருதயம் பாரம் அடைந்துள்ளது. என்னுடைய ஆலோசனை என்னவெனில், நீர் இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கியும், பல ஆயிரம் பக்தியுள்ள யூதர்கள் கூடியுள்ள ஆலயத்தின் பிரகாரத்தையும் நோக்கியுள்ள ஆலயத்தின் உப்பரிகையிலுள்ள தெற்குப் பாகத்திற்கு போய் 600 அடி உயரத்தில் இருக்கும் அப்பகுதியிலிருந்து தாழக் குதித்து, சேதம் எதுவும் அடையாமல் எழும்பும். உன்னதமானவருடைய வல்லமை உம்மேல் இருக்கின்றது என்றும், நீர் மேசியா என்பதை விவரிக்க நீர் ஏறெடுக்கும் வேறு எந்தப் பிரயாசத்தைக் காட்டிலும், இப்படிச் செய்வது, உடனடியாகப் பலனைக் கொடுக்கும். நான் கூறும் இவ்விஷயங்கள் வேதவாக்கியங்களில் இடம் பெறுகின்றது.” “”நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும் ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்” (மத்தேயு 4:6).

இப்படியான சோதனைகளையே, சாத்தான், இயேசுவின் அர்ப்பணிக்கப்பட்டுள்ள பின்னடியார்களுக்கும் முன்வைப்பான். எப்படியெனில், “”உலகத்திற்கு முன்பும், பெயர்க் கிறிஸ்துவ சபைகளுக்கு முன்பும் ஒரு மாபெரும் நடிப்பைக்காட்டி கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து எளிமையாகப் பிரசங்கிப்பதைப் பார்க்கிலும் வேறு எதாவது விதத்தில், அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பு. உடனடியாக, மாபெரும் வெற்றியை அடைவதற்குச் சுபாவத்தின்படியான மனுஷனை ஈர்க்கத்தக்கதாக சில மாபெரும் வேலைகளைச் செய்யத்தக்கதாக, ஆவிக்குரிய [R2567 : page 31] ஆசீர்வாதங்களையும், வல்லமைகளையும் பயன்படுத்து. ஆவிக்குரிய வகுப்பாருக்கு, ஆவிக்குரிய விஷயங்களை முன்வைப்பதில், நீ எளிமையான, அமைதியான, கவனத்தை ஈர்க்காத வேலையைச் செய்வதற்குப் பதிலாக வேறு வேலையைச் செய். இப்படியான எளிமையான வேலைகளை ஆவிக்குரிய வகுப்பாருக்கு நீ செய்யும்போது, பெரும்பான்மையான ஜனங்கள் உன்னை அங்கீகரியாமல், உன்னை ஒதுக்கி விடுவார்கள், மேலும் உன்னை விநோதமானவனாகவும் கருதுவார்கள், மேலும் நீ அநேகருடைய அனுதாபத்தை இழப்பதோடு அல்லாமல், கிறிஸ்துவ மண்டலத்தில் முக்கியமானவர்களுடைய எதிர்ப்பைக் கூட நீ விசேஷமாக பெற்றுக்கொள்ள நேரிடும்” என்று சாத்தான் கூறினான்.

மீண்டும், நமது கர்த்தர் தீர்க்கமாக, “”உன்னுடைய தேவனாகிய கர்த்தரை நீ பரீட்சைப் பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறது” என்றார். நாம் விசுவாசித்து நடப்பதற்குப் பதிலாக, தரிசித்து நடக்கும்படி சாத்தான் நம்மைச் சோதிப்பான். நாம் தொடர்ந்து தேவனைச் சோதித்துப் பார்க்கும்படியாகவும், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவருடைய தயவு மற்றும் பாதுகாப்புக் குறித்த விஷயங்களில், பார்வைக்கு தெரியும் விதத்தில் தேவன் விவரித்துக் காட்ட வேண்டும் என்று நாடும்படியாகவும் சாத்தான் நம்மைச் சோதிப்பான். சொல்லர்த்தமான இயேசுவின் பாதங்களையோ, சொல்லர்த்தமான கற்களையோ, சொல்லர்த்தமான தேவதூதர்களையோ குறிக்காத வேத வாக்கியத்தைச் சாத்தான் இங்குத் தவறான அர்த்தத்தின் விதத்தில் முன்வைப்பதை நாம் பார்க்கின்றோம். அவ்வசனத்தில் இடம்பெறும் பாதங்கள், இன்றைய காலத்தில் உள்ள கிறிஸ்துவின் பாத அங்கங்களுக்கு அடையாளமாகவும், கற்கள் இடறுதலுக்கு ஏதுவான உபதேசங்களுக்கும், தேவதூதர்கள், தற்கால அறுவடையின் காலத்தில், பாத அங்கங்களை அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப வேதவாக்கியங்களின் ஆலோசனைகளை, புத்திமதிகளைக் கொடுத்துத் தாங்குவதற்கென நியமிக்கப்பட்டுள்ள தெய்வீகச் சத்தியத்தின் ஊழியக்காரர்களுக்கும் அடையாளமாய் இருக்கின்றது (சங்கீதம் 91:11,12).

சமாதான உடன்படிக்கையின் விளைவாக விரும்பின நற்பலன்களை அடைவதற்கு ஏதுவான சோதனை

நம்முடைய கர்த்தருடைய மாபெரும் வேலையில் சாத்தான், தான் சேர்ந்து பணி புரிய விரும்புவதாக காட்டினதே, அவன் முன்வைத்த மூன்றாம் சோதனையாகும். அவன் அவரை மனதில், உயர்ந்த மலைசிகரத்திற்குக் கொண்டு சென்றான்; உலகத்தின் சகல இராஜ்யங்களையும், அதன் மகிமைகளையும் காணத்தக்கதான சொல்லர்த்தமான உயர்ந்த மலை எருசலேமிலும், உலகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. சாத்தான் நமது கர்த்தரை மிக உன்னதமான அடையாள மலையின் (இராஜ்யம்) மேல், மனரீதியாகக் கொண்டு நிறுத்தினான். உலகம் முழுவதுமான அவனுடைய வல்லமையையும், சகல ஜாதிகள் மற்றும் தேசங்கள் மீது பரந்த அளவில் காணப்படும் அவனுடைய ஆதிக்கத்தையும், சாத்தான் இயேசுவக்குச் சித்தரித்துக் காட்டினான். சாத்தானை, “”இவ்வுலகத்திற்கு அதிபதி” என்று நமது கர்த்தரே கூறியுள்ளார். இப்படியாக உலகத்தின் மீதான தனது வல்லமையையும், செல்வாக்கையும், இயேசுவின் மனதில் சாத்தான் கொண்டு வந்ததற்கான நோக்கம், நமது மீட்பருக்குச் சாத்தானின் நட்பும், உதவியும் எவ்வளவு முக்கியமானது என்றும், இயேசுவின் வேலையினுடைய வெற்றிக்குச் சாத்தான் மிக முக்கியமானவன் என்றும் புரிய வைப்பதற்கே ஆகும். மேலும், சாத்தான் தன்னை இந்தச் சூழ்நிலைகளில் நண்பன் போன்று காட்டி, இயேசுவின் பிரயாசங்களை வரவேற்பது போன்றும், அவரோடு சேர்ந்து பணிபுரிய ஆயத்தமாய் இருப்பது போன்றும் கூறுவது எவ்வளவு நலமான காரியமென, இயேசு புரிய வேண்டும் என்பதற்கேயாகும்.

மேசியா, விசேஷமாக இஸ்ரயேலின் இராஜாவாக இருந்து, இஸ்ரயேலை ஆசீர்வதிப்பார் என்று சாத்தான் நமது கர்த்தருக்குச் சுட்டிக்காட்டினான். ஆனால் இஸ்ரயேலைக் காட்டிலும் மிகப் பெரிய இராஜ்யத்திற்கு, இயேசுவை இராஜாவாகப் பரிந்துரைப்பதே சாத்தானுடைய விவாதத்தின் மையக்கருத்தாகும்.

[R2568 : page 31]

பூமியின் சகல தேசங்களையும் உள்ளடக்கின இராஜ்யத்தையே சாத்தான், கர்த்தருக்குப் பரிந்துரைத்தான். மேலும் இயேசு முழு உலகத்தின் மீது ஆதிக்கம் கொள்ளலாம், தேவனால் நியமிக்கப்பட்ட ஆசீர்வாதமான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம், ஆனால் இவைகள் அனைத்திற்கும் ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், எந்த இராஜ்யமோ, ஆளுகையோ, அதிகாரமோ ஸ்தாபிக்கப்பட்டாலும், அவைகள் அனைத்தும் சாத்தானை அங்கீகரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தான். சாத்தான் தன்னுடைய ஆதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாதகமான வாய்ப்பு இது எனக் கருதினான். செத்துக் கொண்டும், சீர்க்கேடு அடைந்துக் கொண்டும் இருக்கின்ற சந்ததியின் மீதான ஆளுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது, சாத்தானின் ஆதி நோக்கமாக இராமல், நன்கு வெளிச்சமூட்டப்பட்ட, அருமையான ஜனங்களின் மீதே தான் ஆண்டவனாக அல்லது ஆளுகை செய்பவனாகவே இருக்க வேண்டும் என்பதே சாத்தானின் ஆதி நோக்கமாக இருந்தது. ஆகவே தேவன் திட்டமிட்டுள்ள சகல கிருபையான வேலைகள் நிறைவேற்றப்படுவதில் சாத்தான் விருப்பம் உள்ளவனாக இருந்தான். மேலும் மனுக்குலம் தொடர்பான விஷயத்தில் அவன், பிரதானமானவனாக அடையாளம் கண்டு கொள்ளப்படும் பட்சத்தில், சாத்தான் தன்னையே சீர்த்திருத்திக் கொள்ளவும், சீர்த்திருத்தத்தின் தலைவனாகவும் இருக்க விரும்பினான். இப்படியாகத்தான், நமது கர்த்தர் அவனை ஆராதிக்க, பணிய வேண்டும் என்று, அதாவது தனது செல்வாக்கையும், வேலையில் தனது ஒத்துழைப்பையும் கர்த்தர் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்பினான். மாறாக தன்னைத் தேவன் போல் நினைத்து, தன் முன் இயேசு முழங்காலிட்டு வணங்க வேண்டும் என்று சாத்தான் எதிர்ப்பார்க்கவில்லை என்று நாம் அனுமானிக்கின்றோம்.

சாத்தானுடைய இருதயத்தில் எவ்வித உண்மையான சீர்த்திருத்தம் இல்லை என்றும், அவன் விழுந்து போக ஆரம்பிக்கும் போது, அவனிடத்தில் காணப்பட்ட அதே சுயத்தை நாடுதல் மற்றும் பேராசைகளே இன்னமும் காணப்படுகின்றது என்றும் நமது கர்த்தர் முழுமையாக உணர்ந்து கொண்டு, பிதாவுக்கு முன் நேர்மையற்ற உணர்வுகளைக் கொண்ட ஒருவரிடம், மேற்கொண்டு இவைகளைக் குறித்துக் கர்த்தர் விவாதிக்க விரும்பாத விஷயம், சாத்தானின் கடைசி சோதனைக்கு அவர் கொடுத்தப் பதில் காட்டுகின்றது. ஆகவேதான், “”எனக்கு பின்னிட்டு போ” அதாவது “”என்னை விட்டு விடு சாத்தானே என்றார். நீ என்னுடைய வேலையில், என்னோடு ஒத்துழைக்க மாட்டாய்; தெய்வீகச் சித்தத்திற்கு முழு இசைவாகவே என்னுடைய வேலை உள்ளது; நீ முன்வைக்கும் விஷயங்களானது, உலகை கைப்பற்றும் விஷயமாகவும், தனிப்பட்ட என்னுடைய பாடுகள் இல்லாமல், நீதி மற்றும் ஆசீர்வாதத்தின் ஆளுகையையும் துரிதமாக ஸ்தாபித்தாலாகவும் இருப்பதினால், இப்படியாக தெய்வீகச் சித்தத்திற்கு முரண்பாடாக உள்ள காரியங்களுக்கு என்னால் கூட்டுச் சேரமுடியாது; என்னால் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது; உன்னதமான பிதாவையே என்னால் பூமிக்கும், வானத்திற்குமுரிய ஆண்டவராக அங்கீகரிக்க/அடையாளம் கண்டு கொள்ள முடியும்; ஆகவே பிதா உன்னை, ஆளுகையின் ஸ்தானத்திற்கு நியமித்தால் ஒழிய, மற்றபடி உன்னை, என்னால் அங்கீகரிக்க முடியாது; நீ உன்னுடைய தற்போதைய பேராசையின் ஆவிகளை விடாதது வரையிலும், உன்னைத் தேவன் ஆளுகை செய்ய நியமிக்க மாட்டார் என்தை நான் அறிவேன்; “”உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்று எழுதியிருக்கிற வார்த்தையின் பிரகாரமாகவே நான் செயல்படுவேன்” என்ற விதத்தில் இயேசு கூறினார்.

இடுக்கமான வழியாக இயேசுவைப் பின்தொடருகிறவர்களுக்கு, நம்முடைய கர்த்தருடைய இந்த மூன்றாம் சோதனை ஓர் உதாரணமாகும் என்பதை நாம் புரிந்துக் கொள்கின்றோம். சாத்தான், தன்னுடைய பல்வேறு பிரதிநிதிகளின் வாயிலாகப் பரிசுத்தவான்களோடு தொடர்ந்து பேசுகின்ற காரியமாவது, “”நீங்கள் நாடும் விஷயத்தைக் கர்த்தருடைய வழியில் செய்வதைப் பார்க்கிலும் மிக வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கக் கூடிய வேறு வழி இங்கு இருக்கின்றது; கொஞ்சம் வளைந்து கொடுங்கள்; உலகத்தின் ஆவியோடு கொஞ்சம் ஒத்துப் போங்கள்; தேவனுடைய வார்த்தைகளுக்கும், கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களின் மாதிரிக்கும் மிகவும் இசைவாகச் செல்ல வேண்டாம்; உங்களுடைய செல்வாக்கைச் செலுத்த வேண்டுமெனில், நீங்கள் உலகத்தார் போன்று அதிகம் இருக்க வேண்டும், ஆகவே கொஞ்சம் அரசியலுடன் கலந்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் சமுதாயத்துடன் கலந்து கொள்ளுங்கள்; கொஞ்சம் ஆரவாரமாகவும், குற்றங்குறைவுகளுடனும் காணப்படுங்கள்; இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக தற்கால சத்தியத்தின் எந்த வெளிச்சத்தையும், மரக்காலின் கீழ் வையுங்கள்; இப்படியெல்லாம் இருந்தால் மாத்திரமே நீங்கள் செல்வாக்குப் பெற்றிருக்க முடியும். மேலும் மனுஷர் மத்தியில், நீங்கள் விரும்பியவைகளைச் சாதிக்கவும் முடியும்.” ஆனால் நாம் கர்த்தருக்கும், அவருடைய திட்டத்திற்கும் உண்மையாய் இருந்து, நம்மால் முடிந்தவைகளைச் செய்ய வேண்டும் என்றும், நமது அருமையான கர்த்தர் கூறுகின்றார். மேலும் பிதாவுடைய திட்டம் சிறப்பான திட்டமாக மாத்திரம் இராமல், அவருடைய மாபெரும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய ஒரே திட்டம் என்றும் நாம் உணர்ந்து அமைதலாய் இருக்க வேண்டும். மேலும் அவருடைய திட்டத்தில் நாம் உடன் வேலையாட்களாக இருப்போமானால், அவரையே நம்முடைய ஒரே ஆண்டவராக, அங்கீகரித்து கொண்டவர்களாகக்காணப்பட்டு, அவருடைய அங்கீகரிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே நோக்கம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

[R2568 : page 32]
பிதா தமக்கு நியமித்துள்ள வழியாகிய, சுயத்தை வெறுக்கும் வழி, இடுக்கமான வழி தவிர வேறு எந்த வழியையும் நமது கர்த்தர் ஏற்றுக்கொள்வதற்கு முற்றும் மறுத்த விஷயமே மாபெரும் வெற்றியாகும். கர்த்தர் பிதாவின் ஆவிக்கும், அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் முற்றிலும் உண்மையுள்ளவராக இருப்பதினாலும், இயேசுவினிடத்தில், எதிராளியானவனுக்குச்சாதகமான ஒன்றையும் காண முடியாத காரணத்தினாலும் எதிராளியானவன், அவரை விட்டுப் போனான். இப்படியாக பரீட்சை முடிந்தபோது, பரிசுத்த தேவதூதர்கள் வந்து, நமது கர்த்தருக்குப் பணிவிடை செய்தார்கள் என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது கர்த்தர், தெய்வீக வல்லமையைத் தம்முடைய தேவைகளுக்குப் பயன்படுத்த மறுத்ததின் நிமித்தம் தேவதூதர்கள் அவருக்கு தேவையான புத்துணர்ச்சியின் விஷயங்களைக் கொடுத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவைகள் நமது கர்த்தருடைய பின்னடியார்களின் விஷயங்களிலும் நடக்கின்றது. சோதனையை ஜெயங்கொள்ளும் போது, கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதமும், ஆவியின் ஐக்கியமும், இருதயத்தில் புத்துணர்வும், மற்றும் அடுத்தப் பரீட்சைக்கு நம்மைப் பலப்படுத்துவதற்கு ஏதுவான, தெய்வீகத் தயவினை உணர்ந்து கொள்ளுதலும் வருகின்றது.

இங்குள்ள மற்றுமொரு பாடம் என்னவெனில், சோதனை என்பது பாவமில்லை. நாமும் நம்முடைய கர்த்தரின் மாதிரியை, உண்மையான இருதயம் மற்றும் நோக்கத்துடன் பின்பற்றி, பிதாவின் சித்தத்தை மாத்திரம் நாடுகிறவர்களாக இருப்போமாகில், நாமும் நமது கர்த்தர் போன்று, “”பாவமில்லாமல் சோதிக்கப்படுவோம்.” சோதனைக்குள் நாம் விழும்போதே பாவம் ஏற்படுகின்றது. காரியம் தவறு என்று தெரிந்தும் ஏற்படும் தயக்கம், சோதனையின் வீரியத்தை அதிகப்படுத்தும் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். தவறான பாதைகள் மற்றும் வழிகளுக்குள் நாம் செல்லத்தக்கதாக, சாத்தான் பிரயாசம் எடுக்கும் சோதனைக்காரனாக இருக்கின்றான், ஆனால் தேவனோ, “”எந்த மனுஷனையும் சோதிப்பதில்லை” (யாக்கோபு 1:13). தேவன், எதிராளியைக் கொண்டும், அவனுடைய பிரதிநிதிகளைக் கொண்டும் தமது ஜனங்களைச் சோதிக்கும்படி அனுமதித்தாலும், தமது ஜனங்கள் கண்ணியில் சிக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அல்ல, மாறாக தீமையை எதிர்ப்பதின் நிமித்தம் இத்தகைய பரீட்சைகளும், சோதனைகளும் அவர்களைப் பலப்படுத்தி, குணலட்சணங்களைப் பலப்படுத்துவதற்கேயாகும். நாம் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட மாட்டோம் என்றும், நம்முடைய சோதனைகளில் கூட நாம் தப்பித்துக் கொள்வதற்கான போக்கும் கொடுக்கப்படும் என்றும் வேதவாக்கியங்களில் இடம்பெறும் வாக்குத்தத்தங்களை, நாம் பலப்படுவதற்கு ஏதுவாக நினைவுகூரக் கடவோம்.

இந்த வாக்குத்தத்தங்களின் விஷயங்களை நாம் சுதந்தரித்துக் கொள்வதற்கு, நமக்கு விசுவாசம் மாத்திரமே அவசியப்படுகின்றது. மேலும் நாம் எந்த அளவுக்கு இத்தகைய விஷயங்களில் நமது விசுவாசத்தைக் காட்டுகின்றோமோ, அவ்வளவாக, கர்த்தரிடத்திலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் நாம் பலம் அடைவோம். இவ்விதமாக தெய்வீகக் கிருபையினாலும், ஆண்டவருடைய உதவியினாலும் நாம் ஜெயங்கொண்டவர்கள் ஆக முடியும், அதாவது நம்மை அன்புகூர்ந்து, அவருடைய விலையேறப்பெற்ற சொந்த இரத்தத்தினால் நம்மை வாங்கினவருடைய உதவியினால் நாம் ஜெயங்கொண்டவர்களாகவும், முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாகவும் ஆக முடியும். 2 கொரிந்தியர் 12:9; 1 கொரிந்தியர் 10:13; எபேசியர் 6:10; ரோமர் 8:37-39) ஆகிய வசனங்களை வாசிக்கவும்.”