R4701 (page 330)
லூக்கா 9:51-56
“”பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார்.” – வசனம் 51,52
நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர் கலிலேயாவிலிருந்து, எருசலேமை நோக்கி மேற்கொண்ட பிரயாணத்தின்போது நடந்திட்ட சம்பவத்தையே இப்பாடத்தில் நாம் பார்க்கப் போகின்றோம். தம்முடைய வேளை சமீபித்துவிட்டது என்றும், தம்முடைய அர்ப்பணிப்பு ஜீவியத்தினுடைய மூன்றரை வருடங்கள் நிறைவடைய போகின்றது என்றும் கர்த்தர் அறிந்திருந்தார். மாபெரும் போதகர் முழுமையாய்த் தைரியம் கொண்டிருந்தார். “”ஜனங்களில் ஒருவனும் அவரோடிருந்ததில்லை” (ஏசாயா 63:4) என்ற வார்த்தைகள் அனுதாபத்திற்குரிய அவருடைய நிலைமையைக் காட்டுகின்றது. தம்முடைய வேலை முழுவதும் பட்சிக்கப்படுவது/நிறைவேற்றுவது குறித்தும், அதற்கான வேளை சமீபித்துள்ளதைக் குறித்தும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு அவர் தெரிவித்தது உண்மையே. ஆனால், அவரைக்குறித்து நியாயப்பிரமாணங்களிலும், தீர்க்கத்தரிசனங்களிலும் எழுதியிருப்பவைகள் அனைத்தையும் நம்புவதில் அப்போஸ்தலர்கள் தாமதமாகக் காணப்பட்டார்கள். மேசியாவைக்குறித்துப் பேசப்பட்ட மகிமையான காரியங்களையே அப்போஸ்தலர்களின் மனங்கள் இயல்பாகக் கிரகித்துக் கொண்டன. அவருடைய மகிமையான இராஜ்யம் குறித்தும், அந்த இராஜ்யத்தில், அவரோடு கூடத் தங்களுடைய மகிமையான இணைதலைக் குறித்தும், எண்ணுவதிலேயே அப்போஸ்தலர்கள் மூழ்கிக் காணப்பட்டதினால், அவருடைய பாடுகளையும், அவருக்கு ஏற்படும் அவமானங்களையும் பற்றிப் பேசும் மற்றத் தீர்க்கத்தரிசனங்களைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படியே, தம்முடைய மரணம் குறித்து ஆண்டவராலேயே பேசப்பட்ட வார்த்தைகளையும், அப்போஸ்தலர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர் ஏதோ அடையாளமாக, உருவகமான விதத்தில் பேசுகின்றார் என எண்ணிக்கொண்டார்கள். மேலும் பேதுரு, “”ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று சொல்லி அவரைக் கடிந்துக்கொள்ளவும் முற்பட்டார். (மத்தேயு 16:22)
அப்போஸ்தலர்களுடைய கூட்டத்திற்கென அப்பங்களை வாங்கும்படிக்கு யாக்கோபும், யோவானும், சமாரியா பட்டணத்திற்குச் சென்றதாக மற்றுமொரு பதிவு தெரிவிக்கின்றது. இவர்களைச் சமாரியர்கள் அடையாளம் கண்டுபிடித்து, மாபெரும் போதகர் சமாரியர்களாகிய தங்களை அங்கீகரித்து, தங்களுடைய வியாதிகளைச் சொஸ்தப்படுத்துவாரா அல்லது யூதர்கள் தங்களை நடத்துவது போன்று, அன்பற்ற விதத்தில் போதகர் நடத்துவாரா? என்று விசாரித்தார்கள். மாபெரும் போதகரும், யூதர்கள் தங்களை நடத்துவது போன்றே நடத்துவார் என்று சமாரியர்கள் நம்பினார்கள். மாபெரும் போதகர் யூத தேசத்தாருக்கு மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளார் என்றும், சமாரியர்களின் வியாதிகளைச் சொஸ்தப்படுத்தும்படிக்கு (சமாரியாவில்) நிற்கமாட்டார், காரணம் “”அவர் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கே” அனுப்பப்பட்டுள்ளார் என அப்போஸ்தலர்கள் சமாரியர்களிடம் வெளிப்படையாகக் கூறினார்கள்.
சமாரியர்கள் கோபமடைவதற்கு இதுவே போதும். “”நல்லது நீங்கள் போதிக்கிறவர்களிடமிருந்தும், நீங்கள் சொஸ்தப்படுத்துகிறவர்களிடமிருந்தும் போய் அப்பம் வாங்கி கொள்ளுங்கள்” என்றார்கள் சமாரியர்கள்.
இதனிமித்தம் பரிசுத்தவானாகிய யோவானும், பரிசுத்தவானாகிய யாக்கோபும் ஆத்திரம் அடைந்தார்கள். இயேசு மாபெரும் போதகர் அல்லவா? அவர் மேசியா அல்லவா? யார் தம்முடைய நன்மைகளை அடைய வேண்டும், அடையக் கூடாது தொடர்பான விஷயத்தில் தேவனுடைய சித்தத்தைத் தீர்மானிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது அல்லவா? இவ்விஷயத்தோடு அவர்கள் இருவரும் இயேசுவினிடத்திற்கு வந்து, நடந்ததை விவரித்துக் கூறி, “”வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று கேட்டார்கள்.
ஆண்டவருடைய பதிலை நாம் ஆவலாய்ப் பார்க்கின்றோம். மாபெரும் போதகர் அப்போஸ்தலர்களை நோக்கி, “”எனது அருமையான சீஷர்களே, இதை விட்டுவிடுங்கள்; கொஞ்சம் காத்திருங்கள்; இந்தச் சமாரியர்கள் அனைவரும் மரிக்கும்போது, இவர்கள் நித்திய சித்திரவதை அடையும்படிக்கு பரம பிதா இவர்களைப் பிசாசினிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடுவார். அந்த நித்திய [R4702 : page 330] சித்திரவதைக்கு முன்னதாக, நீங்கள் அக்கினியை இறங்க செய்து, இப்பட்டணத்தைச் சில நிமடங்களில் எரித்துப்போடுவது என்பது ஒன்றுமில்லாததாக இருக்கும். உங்களுடைய ஆவியை, என் அன்பு சீஷர்களே நான் அங்கீகரிக்கின்றேன்; இது தேவன் போன்ற தன்மைதான்; இப்படியாக, உங்களது வல்லமையினால் இவர்களை நீங்கள் எரிக்கவும், பொரிக்கவும் நீங்கள் விரும்பினதற்காக நான் உங்களைப் பாராட்டுகின்றேன். இப்படியான உங்களது தேவனை நீங்களும் தொடர்ந்துப் பின்பற்றுங்கள். உங்களை யார் என்று சரியாகப் புரிந்துக்கொள்ளாத சக மனிதர்களை உங்களால் முடிந்தமட்டும் உபத்திரவப்படுத்துங்கள்” என்று (ஒருவேளை) கூறியிருப்பாரானால், இது, முன்பொருக் காலத்தில் தெய்வீக ஏற்பாடுகளைப் பற்றி, நாம் கொண்டிருந்த கண்ணோட்டத்தின்படி பார்க்கப்பட்டால், இப்படிப் போதகர் பதில் சொல்வது சரி என்று நாம் எண்ணியிருந்திருப்போம்.
இப்படித்தான் மாபெரும் போதகர் பதில் சொன்னாரா? இல்லை. தேவனுக்கு நன்றி! அவருடைய போதனைகள் முற்றிலும் எதிர்மாறாக காணப்பட்டது. அதாவது, அனுதாபத்துடனும், அன்புடனும், இரக்கத்துடனும் காணப்பட்டது. அவரிடம் பிதாவின் ஆவி இருந்தது. மேலும், தம்மிடம் பிதாவின் ஆவி இருப்பதை அவர் புரிந்துக் கொண்டிருந்தார், மற்றும் அதைப் பூரணமாய்ப் பின்தொடரவும் செய்தார். “”அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” (லூக்கா 9:55-56).
இயேசுவின் நாட்களில் பாலஸ்தீனியாவில் பேசப்பட்ட மொழி சிரியாக் (Syriac) ஆகும். மாபெரும் போதகரின் நாமங்களில்/பட்டங்களில் ஒன்று “”இரட்சகர்” என்பதாகும். இரட்சகர் என்பதற்குச் சிரியாக் மொழியில், “”ஜீவன் கொடுப்பவர்” என்பது அர்த்தமாகும். இயேசு வருவதற்கு முன்பாக முழு உலகமும் போதுமானளவுக்குக் குற்றவாளி என ஏற்கெனவே தீர்க்கப்பட்டுள்ளனர். அவர் இன்னும் அதிகமாகக் குற்றவாளி எனத் தீர்ப்பதற்கு வராமல் மாறாக, அவர்கள் (உலகம்) தம் மூலம் ஜீவனையடைவதற்கே வந்தார்! (யோவான் 10:10; 3:17)
[R4702 : page 331]
ஜீவன்! உலகத்திற்கு ஜீவன் இல்லையா? ஆம், ஜீவன் இல்லை. ஆதாமின் கீழ்ப்படியாமைக் காரணமாக மனுஷீக ஜீவன் இழக்கப்பட்டது. இதன் விளைவாக மனுக்குலம் முழுவதும் மரித்துக் கொண்டிருக்கின்றது. (நித்திய சித்திரவதையிலிருந்து அல்லாமல்) மரணத்திலிருந்து, இரட்சிக்கின்ற ஓர் இரட்சகரே, ஜீவன் அளிப்பவரே, மனுக்குலத்திற்கு அவசியம்.
இரட்சகரின் முதல் வேலை, கல்வாரியின் மீட்பின் வேலையாகும். அவருடைய இரண்டாம் வேலையானது, இராஜ்யத்தில் தம்முடன் உடன் சுதந்தரர்களாகக் காணப்படத்தக்கதாக, தமது சபையைத் தெரிந்தெடுப்பதாகும். அவருடைய மூன்றாவது வேலை, பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் ஆதாமையும், அவருடைய சந்ததி முழுவதையும் இரட்சிப்பதாகும். அதாவது, தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையின் மூலமாகவும், அவருடைய பிள்ளைகள் பாவத்தில் பிறந்து, துர்க்குணத்தில் உருவாகி, மற்றும் அவர்களது தாய் அவர்களைப் பாவத்தில் கர்ப்பந்தரித்ததின் மூலமாகவும் வந்திட்ட மனரீதியில், சரீர ரீதியில் மற்றும் ஒழுக்க ரீதியிலுள்ள சீர்க்கேடுகள் அனைத்திலிருந்தும் அவர்களை இரட்சிப்பதாகும்.
சபையை இரட்சிப்பது என்பது மாபெரும் வேலையாகும்! கிறிஸ்துவின் மணவாட்டி வகுப்பாரில் அங்கங்களாகுவதற்கான இந்த அருமையான சிலாக்கியத்திலுள்ள தேவனுடைய கிருபையை, ஒருவேளை நமது இருதயங்கள் ருசிபார்த்ததானால், ஒருவேளை நம்முடைய கண்கள் கண்டதானால், ஒருவேளை நாம் கேட்டிருப்போமானால், நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். எனினும் கொஞ்சம் பேர்களை மாத்திரமே இரட்சிப்பது என்பது, உலகத்தைச் சிருஷ்டித்ததிலும், உலகத்தை மீட்பதிலுமுள்ள தேவனுடைய நோக்கம் என்று நாம் அனுமானித்து விடக்கூடாது. மாறாக, இந்தத் தெரிந்துக்கொள்ளப்படும் “”சிறுமந்தையினர்” தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலனானவர்கள் என்று கூறப்படுகின்றனர் (யாக்கோபு 1:18; வெளி 14:4). அப்படியானால் பிற்பலன்கள் அநேகம் இருப்பது காட்டப்படுகின்றது. எந்த ஒரு நபருடைய தனிப்பட்ட விருப்பத்திற்கு எதிராக, அவரைத் தேவன் மரணத்திலிருந்து இரட்சித்து, நித்தியத்திற்குரிய ஜீவனைக்கொடுப்பதாக அறிவிக்கவில்லை என்றாலும், ஆதாமுக்குள் இழந்துப்போய் மற்றும் இயேசுவினால் மீட்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படத்தக்கதாக, சத்தியம் பற்றிய தெளிவான அறிவிற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று தேவன் தெரிவிக்கின்றார். துணிந்துப்பிடிவாதமாக இருப்பவர்கள் மாத்திரமே இழப்பிற்குள்ளாகப் போவார்கள் என்று தேவன் தெரிவித்துள்ளார்; மேலும், இத்தகையவர்களுடைய இழப்பு என்பது, ஜீவனை இழந்து போவதாகும். அதாவது, அப்போஸ்தலர் தெரிவித்துள்ளது போன்று “”நித்திய அழிவிற்குள்” ஆகுவார்கள்.