R4588 (page 108)
மத்தேயு 9:18-34
“விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.” – மாற்கு 9:23
தேவனிடத்தில் விசுவாசம் என்பது அவருடைய வார்த்தையை நம்புவதாகும். அதாவது, நம் தொடர்பாகவும், மற்றவர்கள் தொடர்பாகவுமுள்ள அவருடைய திட்டம் மற்றும் அவருடைய குணலட்சணத்தின் வெளிப்படுத்தல்களை நம்புவதும், ஏற்றுக்கொள்வதுமாகும். விசுவாசத்திற்கும் (faith), எளிதில் நம்பக்கூடிய தன்மைக்கும் (credulity) இடையேயுள்ள வித்தியாசத்தை நாம் தெளிவாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும். மிகவும் நல்ல சில ஜனங்கள், தாங்கள் எந்தளவுக்கு மிகவும் அர்த்தமற்ற காரியங்களை நம்புகின்றார்களோ, அந்தளவுக்கு அவர்களுடைய விசுவாசம் பெரியதாய் இருக்கும் எனத் தவறாக எண்ணிக்கொள்கின்றனர். விசுவாசமானது பகுத்தறிவைப் புறக்கணிப்பதில்லை. மாறாக, பகுத்தறிவைக் குறிப்பிட்ட நியாயமான வரையறைக்குள் விசுவாசமானது பயன்படுத்திக் கொள்கின்றது. தேவனிடத்தில் நாம் விசுவாசம் கொள்வதற்கு, முதலாவதாக நாம் நமது மனதின் விவாதங்களை திருப்திப் பண்ணிக்கொள்ள வேண்டும்:-
(a) அதாவது, தேவன் ஒருவர் இருக்கின்றார்;
(b) அதாவது, அவரில் நம்பத்தக்க குணங்கள் இருக்கின்றது, அதாவது அவர் நீதியுள்ளவர்; அவர் ஞானமுள்ளவர்; அவர் வல்லமையுள்ளவர்; அவர் கிருபையுள்ளவர்;
(c) அதாவது அவருடைய செய்தியென நாம் ஏற்றுக்கொண்டுள்ளது, ஏற்றுக் கொள்வதற்குப் பாத்திரமானது என்றும், உண்மையும், தெய்வீகக் குணலட்சணத்திற்கு இசைவையும் உள்ளது என்றும் நாம் நியாயமாக நமக்கே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படியாக விசுவாசத்திற்குச் சாட்சிகளைக் கொண்டிருக்க நாடாதவன், முழுமையான விசுவாசம் கொண்டிருக்கவில்லை, மற்றும் எளிதில் நம்பும் தன்மையை (credulity) உடையவனே ஆவான்.
கிறிஸ்தவ ஜனங்களில் அநேகர் விசுவாசத்தின், சரியான விளக்கத்தைப் புறக்கணிக்கின்றபடியினால், யதார்த்தமான மனங்கொண்ட அநேகர் அர்த்தமற்ற காரியங்களை [R4588 : page 109] நம்ப வேண்டும் என்று சொல்லப்படுவதினால், கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்க மறுக்கின்றனர். 1 பேதுரு 3:15-ஆம் வசனத்தில் அப்போஸ்தலர் சொல்லுகின்றது போல, கிறிஸ்தவ ஜனங்கள் தேவனிடத்திலும், வேதாகமத்திலுமான அவர்களது விசுவாசத்தை அதிக கவனத்துடன் ஆராய்ந்துப் பார்க்கும்படி நாம் வலியுறுத்துகின்றோம். இதை நமக்கும், தேவனுடைய வார்த்தைகளில் பிரியப்படும்படிக்கு நாம் கொண்டு வரக்கூடிய மற்றவர்களுக்கும், நாம் செய்ய கடமைப்பட்டுள்ளோம். தேவனுடைய வார்த்தைகள் மீது இன்று பிரகாசிக்கும் வெளிச்சத்தில், அப்போஸ்தலருடைய நாட்களில் இருந்தது போல, தேவனுடைய மனுஷன் “”தேறினவனாகவும்”, “”சத்தியத்தை நிதானமாய் பகுத்துப் போதிப்பதற்கும்” கூடியவனாகி, தனது நண்பர்கள் மற்றும் அயலார்களுக்கு, தான் விசுவாசிக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் உறுதியான, நியாயமான அடிப்படைகளைக் காண்பிக்க முடியும். ஆனால் இப்படிச் செய்வது என்பது, முதல் நூற்றாண்டிற்கும், இந்த நூற்றாண்டிற்கும் (18) இடையே காணப்பட்ட இருண்ட யுகத்தில், நிச்சயமாய் முடியாததாகவே இருந்தது. வேதாகமம், ஏவப்பட்டு எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் என்பதை நம்புவது தொடர்பான விஷயத்தில் குழப்பமாய்க் காணப்படும், அநேகர் மீது நமக்கு அனுதாபம் உள்ளதினால், இப்படிப்பட்டவர்களுக்கு நாம் உதவ முடியும் என்ற நிச்சயத்துடன், இவர்களிடமிருந்து, கடிதத்தை எதிர்ப்பார்த்து வரவேற்கின்றோம்.
நம்முடைய இந்தப் பாடமானது, விசுவாசத்தை நான்கு வெவ்வேறு கோணங்களிலிருந்து விளக்குகின்றது. அவை பின்வருமாறு:-
(1) யவீருவின் விசுவாசம் – தனது மகளுக்காக வைக்கப்பட்ட தகப்பனுடைய விசுவாசம்.
(2) தன் பொருட்டு, கர்த்தருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட ஸ்திரீயினுடைய விசுவாசம்.
(3) ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்ட இரண்டு குருடர்களின் விசுவாசம்.
(4) பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்த ஊமையனும், வாய்ப் பேசாதவனுமாகிய மனுஷனைக் கர்த்தரிடத்தில் கூட்டிக் கொண்டு வந்தவர்களின் விசுவாசம்.
நமது கர்த்தருடைய (பிற்காலங்களில்) சொந்த ஊராகிய கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்தலைவரில் ஒருவராய் இருந்த யவீரு, இயேசுவை நன்கு அறிந்திருந்தார். இவர் கர்த்தரை, சில சமயம் ஓய்வுநாளின் பாடங்களை வாசிக்கவும் அழைத்திருக்கின்றார். இன்னொரு தருணத்தில் ஒரு நூற்றுக்கதிபதியினுடைய வேலைக்காரனுக்காக, மற்றவர்களுடன் இவர் (யவீரு) கர்த்தரை மன்றாடியுள்ளார் (லூக்கா 7:4). இப்பொழுது, யவீருவின் குடும்பத்திலேயே துன்பம்வந்துவிட்டது. பன்னிரெண்டு வயதுள்ள இவருடைய ஒரே மகள் மரித்துக் கொண்டிருந்தாள். அச்சமயத்தில் கர்த்தரும் அவ்விடத்தில் இல்லை. கர்த்தருக்காகக் காத்துக் கொண்டிருந்த ஜனக் கூட்டத்தில், யவீருவும் ஒருவராகக் காணப்பட்டார். மேலும், இவர் முக்கியமான நபராகக் காணப்பட்டபடியால், இவர் கர்த்தரை அணுக, ஜனங்கள் இவருக்கு இடம்விட்டுக்கொடுத்தனர். கர்த்தர் வந்து தனது மகளைச் சொஸ்தப்படுத்த வேண்டும் என்ற இவருடைய வேண்டுதலினால் மாத்திரம் இவர் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தாமல் இன்னுமாக, கர்த்தருடைய பாதத்தில் விழுவதாகிய தனது செயல்பாடு மூலமாகவும் வெளிப்படுத்தினார். அதாவது, பாதத்தில் விழுவதன் மூலம் தனது கீழ்ப்படிதலையும், மரியாதை அளித்தலையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தினார். மரிக்கும் நிலையிலிருந்த இவருடைய மகளை, இவர் தனது வீட்டில் விட்டு வந்திருந்தார். இவர் இயேசுவோடு பேசிக் கொண்டிருக்கும் போதும், இயேசுவை வரும்படிக்குத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் போதும், இவரது மகள் இறந்து போய்விட்டாள். இவரும், இயேசுவும் வீட்டிற்குச் சமீபிக்கும் போது, காலம் கடந்து விட்டது என்றும், மகள் இறந்து போனாள் என்றும் தூதுவர்கள் இவர்களிடம் வந்து அறிவித்தார்கள். இயேசு வந்த சமயம், அயலார்கள் யூத வழக்கத்தின்படி மரித்த வீட்டில் கூடியிருந்தனர். சிலர் துக்கம் கொடுக்கும் இசைகளை, இசைத்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு, புலம்பிக் கொண்டிருந்தார்கள். குடும்பத்திலும், அண்டை வீட்டுக்காரர்களிலுமுள்ள பெண்கள் அவர்களின் வழக்கத்தின்படி, ஒருவர் மரித்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில், கதறி, கூவி, பின்னர் சடலம் இருக்கும் அறைக்குள் பிரவேசித்து, துக்கித்து, புலம்பிக்கொண்டிருப்பார்கள். “”சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” என்று ஆண்டவர் கூறி, கூட்டத்தார் புலம்புவதை நிறுத்தச் சொன்னார். இதைப் போன்ற வார்த்தைகளையே, ஆண்டவர் லாசருவின் விஷயத்திலும் பயன்படுத்தினார். பொதுவான மனித வார்த்தையின்படி சிறு பெண் மரித்திருந்தாள். ஆனால், தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி அவள் மரிக்கவில்லை. அதாவது, மிருகங்கள் மரித்து அழிந்து விடும் விதத்தில் அவள் அழிந்து போய்விடவில்லை. மனுக்குலத்தின் மீது இருக்கும் மரணத் தீர்ப்பானது, மீட்பருடைய பலியினால் ரத்து செய்யப்படும் என்பதும், இதன் விளைவாக நீதிமான்களும், அநீதிமான்களுமாகிய மரித்துப் போனவர்களின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கும் என்பதுமான காரியங்களே ஆரம்பத்திலேயே காணப்பட்ட தெய்வீக ஏற்பாடாக உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின்படி மரித்தவர்கள் நித்திரையில் இருக்கின்றார்கள் என்றும், இந்த நித்திரையிலிருந்து உயிர்த்தெழுதலின் காலையில், ஆயிரம் வருஷம் யுகத்தின் விடியலில் ஒரு மகிமையான விழித்தெழுதல் இருக்கும் என வேத வாக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆகவேதான் ஆபிரகாமும், முற்காலங்களிலுள்ள மற்றவர்களும், நல்லவர்களும், கெட்டவர்களும் நித்திரையில் உள்ளதாகவும், அவர்களின் பிதாக்களுடன் நித்திரையடைந்தார்கள் என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் இரத்தச் சாட்சியாகிய ஸ்தேவானும் நித்திரையடைந்தார் (அப்போஸ்தலர் 7:60). மரித்தவர்கள் பரலோகத்திலோ, உத்தரிக்கும் ஸ்தலத்திலோ (அ) நரகத்திலோ நித்திரைப் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதாகாது. பூமியின் தூளிலே நித்திரைப் பண்ணிக் கொண்டிருப்பவர்கள், எழுந்திருப்பார்கள் என்று வேதாகமம் தெரிவிக்கின்றது. (தானியேல் 12:2). “”ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1 கொரிந்தியர் 15:22). ஆதாமுக்கும், அவருடைய சந்ததிக்கும் மரணமாகவும், ஜீவிக்கும் தன்மை நித்தியத்திற்கும் நின்று போனதாகவும் இருந்தது. மீட்பருடைய பலியின் புண்ணியத்தினால் இது மாற்றப்பட்டது; மேலும் மரணம் என்பது, உணர்வில்லாத/உணர்வு இழந்த நித்திரையாகவே உள்ளது. இப்படியான நித்திரை நிலையானது, மாபெரும் மீட்பரானவர் லாசருவினிடத்தில் “”வெளியே வா” என்றும், யவீருவின் மகளிடத்தில் “”தலித்தாகூமி” அதாவது “”சிறு பெண்ணே எழுந்திரு” என்று சொன்னது போன்று மனுக்குலம் அனைத்திடமும் சொல்லும் காலைப் பொழுது வரையிலும் நிலவும். ஆகவே, இறுதியில் பிரேதக்குழியில் இருக்கும் அனைவரும் மனுஷகுமாரனுடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள் என்பது நமக்கு உறுதியே (யோவான் 5:28). யவீருவின் வீட்டிற்குக் கர்த்தர் போகும் வழியில், கர்த்தரைச் சூழ்ந்திருந்த கூட்டத்தாரில் ஒரு ஸ்திரீ அவருடைய மகத்துவத்திலும், வல்லமையிலும் நம்பிக்கைக்கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள, அவருடைய வஸ்திர ஓரத்தைத் தொட்டாள். மின்கல அடுக்கை (battery) கம்பி தொடும்போது, உடனடியாக மின்சாரம் பாய்வது போன்று, ஜீவனின் எழுச்சியும், பலமும் அவளுக்குள் உடனடியாகப் பாய்ந்தது. நமது கர்த்தர் உயிர் ஆற்றலினால் முழுவதும் நிரம்பப் பெற்றிருந்தார். அவர் பரிபூரணமாய் இருந்தார். மேலும், அவர் பாவத்திற்கு விலகினவராய் மாத்திரமல்லாமல், நோய் மற்றும் மரண நிலையிலிருந்து விலகினவராகவும் இருந்தார். தம்மிடமிருந்து ஆற்றல் புறப்பட்டதை உணர்ந்த கர்த்தர் திரும்பி, “”என்னை தொட்டது யார்?” என்று வினவினார். அந்த ஸ்திரீயானவள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள தான் பாத்திரமற்றவள் என்று எண்ணினாள், மற்றும் ஆசீர்வாதத்தைத் திருடினபடியால் பயந்தாள். ஆனால், உடனடியாக ஆண்டவருடைய இரக்கமான வார்த்தைகள் மற்றும் பார்வையினால் அமைதியடைந்தாள். இந்தச் சம்பவம், நமது கர்த்தருடைய அற்புதங்கள், அவருடைய உயிர் ஆற்றலைக் கரையப் பண்ணினது என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. [R4589 : page 109] இவ்வாறாக யோர்தான் முதல் கல்வாரி வரையிலும் அவரிடமிருந்து எதிர்ப்பார்க்கப்பட்ட அனைவரின் தேவைகளுக்கும், விரும்பி மகிழ்ச்சியுடன் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தவராகக் காணப்பட்டார்.
இயேசுவை மேசியா என்றும், தாவீதின் சந்ததியில் வரும் வாக்களிக்கப்பட்ட ராஜா என்றும் வாழ்த்தி, அவரைச் சந்தித்த இரண்டு குருடர்களும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு, அவர்களுடைய விசுவாசத்திற்கு ஏற்ப, விரும்பின ஆசீர்வாதங்களை இருவருமே பெற்றுக்கொண்டனர். இங்கு விசுவாசத்தைத் தூண்டக்கூடிய, சபை ஐக்கியத்தின் அனுகூலம் நமக்குச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மகா பரிசுத்தமான விசுவாசத்தில் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்திடுவோமாக. நம்முடைய உடன் சகோதரர்களுக்கு, நாம் உதவிக்காரர்களாக இருப்போமாக இடையூறு பண்ணுபவர்களாக இல்லாமல் இருப்போமாக. சகல ஜனங்களையும் சொஸ்தப்படுத்த ஆண்டவர் முற்படவில்லை. உதாரணத்திற்குச் சீலோவாம் குளத்தண்டையில் அநேகர் இருந்தும், ஒருவரே சொஸ்தப்படுத்தப்பட்டார். இங்கும் கண்கள் பார்வை பெற்றவர்கள், காரியத்தை இரகசியமாய் வைத்துக்கொள்ள இயேசு எச்சரித்தார். ஆனால், அவர்களால் அதை அடக்கி வைக்க முடியவில்லை. அவர்களுடைய சந்தோஷம் மிகுதியாய் இருந்தது, மற்றும் இவ்விஷயத்தில் கர்த்தரிடமிருந்த தாழ்மை, அவர்களை வெளிப்படையாக துதிக்க ஏதுவாக்கிற்று. நம்முடைய விஷயத்திலும் இப்படியே ஆகும்; மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு, ஆவியில் சொஸ்தமாக்கப்பட்டு, புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப் பெற்ற நம்மாலும் நற்செய்தியை அறிவிக்காமலும், கர்த்தரைத் துதிக்காமலும் இருக்க முடியாது. (ரோமர் 1:12; அப்போஸ்தலர் 4:20)
பிசாசினால் பிடிக்கப்பட்டு, ஊமையனாகவும், செவிடனாகவும் இருந்த மனுஷன் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டான்; அவனால் அவனுக்கே உதவ முடியவில்லை, ஆண்டவரின் உதவியையும் கேட்க முடியவில்லை; ஒருவேளை எவரேனும் அவனிடத்திலுள்ள பிசாசுக்களை விரட்டினாலும் அவனால் கேட்கவும் முடியாது. இவனுக்காக, இவனுடைய நண்பர்கள் விசுவாசம் கொண்டார்கள். இயேசு இணங்கி, பிசாசை விரட்டினார், அம்மனுஷன் சொஸ்தமாக்கப்பட்டான்; ஜனக்கூட்டம் பிரமித்தது. ஆனால், பரிசேயர்கள் பொறாமை அடைந்தனர். பரிசேயர்கள் தாங்கள்தான் பிரதானமான பயபக்தியுடையவர்கள்என்று காண்பிக்க விரும்பினர். மற்றும் இயேசுவின் கூடவே கடந்து சென்றுக்கொண்டிருக்கும் பிரபலமும், கீர்த்தியும் தங்களுக்குத் தக்கவைக்கப்படவும் விரும்பினர். இயேசுவைச் சாத்தான் என்றும், பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூல் என்றும் கூறுமளவுக்கு, அவர்களுடைய மனங்களுக்குள் பொறாமையின் விஷம் ஊடுருவின. இப்பாடத்தை நாம் கற்றுக்கொண்டு, பொறாமை, வன்மம், பகை முதலியவைகளைத் தவிர்த்து, இவைகளுக்குப் பதிலாக சாந்தம், நற்குணம், பொறுமை எனும் அன்பின் ஆவியினால் நமது இருதயங்களை நிரப்பி, நமது விசுவாசத்தைப் பெருக்கிக் கொண்டு, அதிகமதிகமாக நமது ஆண்டவரைப் போன்று மாறுவோமாக.