R2558 – இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2558 (page 12)

இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்

JESUS INCREASED IN WISDOM AND STATURE

லூக்கா 2:41-52

“”இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” லூக்கா 2:52

நமது கர்த்தராகிய இயேசுவின் மழலை பருவம், குழந்தை பருவம் மற்றும் வாலிப பருவத்தைக் குறித்து அநேக விநோதமான கற்பனைகள் செய்யப்பட்டுள்ளது; மேலும் இக்கற்பனைகளின் மேல் நமக்கு யாதொரு அக்கறையும் இல்லை. வேத மாணாக்கர்களோ வேதாகமத்தின் பதிவுகளை மாத்திரமே சார்ந்திருந்து, உண்மையாய் இராத கட்டுக்கதைகள் மற்றும் கற்பனைகளின் மேல் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும். நமது இரட்சகரின் முழுமையான வாழ்க்கை குறித்து, நாம் தெரிந்திருப்பது அவசியம் என்று தேவன் கண்டிருந்தாரானால், அவர் சந்தேகமின்றி, பதிவுகள் செய்யப்பட ஏற்பாடு பண்ணி இருந்திருப்பார். ஆனால், நமது கர்த்தரின் ஆரம்பகட்ட வாழ்க்கையில் கவனிக்கத்தகுந்த அல்லது புகழத்தக்க பாத்திரமாக எதுவும் இல்லை என்று நாம் கருதிவிடக்கூடாது; மாறாக ஆரம்பக்கட்ட வாழ்க்கையின் பதிவுகள் புறக்கணிக்கப்படுவதன் மூலம், யோர்தானில், பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஞானஸ்நானத்தைத் தொடரும் 3 ½ வருட இயேசுவின் வெளிப்படையான ஊழியக்காலமே, விசேஷமானதாகக் காட்டப்படுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், மனுஷனாகிய இயேசுவின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் நமக்கு முக்கியமானதாகவோ மற்றும் பாடங்கள் கற்பிக்கிறதாகவோ இராமல், பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் அபிஷேகிக்கப்பட்ட இயேசுவின், அதாவது, கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளும், செய்கைகளுமே நமக்கு முக்கியமானதாகவும், படிப்பினையாகவும் அமைகின்றது. எனினும், இயேசுவின் குழந்தை பருவம் மற்றும் வாலிபப் பருவம் குறித்து, வேதவாக்கியங்களில் பதிவு பண்ணப்பட்டுள்ள சிறு வரிகளின் எல்லைக்குள்ளாகவே நம்மை நிறுத்தி, சில விலையேறப்பெற்ற மற்றும் உதவிகரமான பாடங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

நமது கர்த்தருடைய முதல் பன்னிரண்டு வருடங்கள் குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை. தெய்வீக வழிநடத்துதலின்படி அவருடைய தாயும், வளர்ப்புத் தகப்பனும், ஏரோதின் கைக்கு இயேசுவைத் தப்புவிக்க, எகிப்துக்குப் போனது மாத்திரம் நமக்குத் தெரியும். ஏரோதின் மரணம் வரையிலும், அவர்கள் எகிப்திலேயே சில மாதங்கள் தங்கியிருந்து பின்னர், கலிலேயாவில் உள்ள நாசரேத்துக்குத் திரும்பினார்கள். யூதர்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப, தாவீதின் குடும்பத்தில், ஓர் இராஜா தோன்றுவதைக் குறித்தே ஏரோது பயந்தார். மேலும் ஏரோது, தாவீதின் சந்ததியாகவோ, யூதர்களின் சந்ததியாகவோ இராமல், யாக்கோபின் சகோதரனாகிய ஏசாவின் சந்ததியாக இருந்தபடியால், ஏரோது, தான் இராஜாவின் ஸ்தானத்திலிருந்து புதிய இராஜாவினால் தள்ளப்படுவேனோ என்று பயந்தார். கிழக்கிலிருந்து சாஸ்திரிகள், புதிதாய்ப்பிறந்த யூதருடைய இராஜா எங்கே? என்று கேட்டு வந்தபோது, ஏரோது, அவர்கள் குழந்தையைக் கண்டுபிடித்தவுடன் தனக்கும் வந்து அறிவிக்க வேண்டும் என்று கூறினார். ஏரோது, தானும் வந்து புதிய இராஜாவைக் கண்டு வணங்க விரும்புவதாக நடித்தார். ஆனால், சாஸ்திரிகள் தெய்வீக வழிநடத்துதலினால், ஏரோதின் வேண்டுகோளை நிராகரித்தார்கள். ஏரோது, பெத்லகேமில்தான் பிறப்புச் சம்பவிக்கும் என்ற சில விஷயங்களைச் சேகரித்து, இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண் பிள்ளைகளையும் கொன்றுபோடக் கட்டளையிட்டார். இதன் விளைவாக புதிய இராஜாவும் கொல்லப்படுவார் என்று கருதினார். இந்தக் கட்டளையின்படி அநேக குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று நாம் கருத முடியாது; காரணம், பெத்லகேமின் ஜனத்தொகை மிகவும் குறைவாக இருந்தபடியால் இக்குறிப்பிட்ட வயதுள்ள ஆண் குழந்தைகளும் சொற்பமான எண்ணிக்கையிலேயே காணப்பட்டார்கள்.

நம்முடைய ஆதார வசனம், இயேசு மற்றக் குழந்தைகளைப் போன்று, சரீரத்திலும், மனதிலும் படிப்படியாகவே வளர்ந்தார் என்பதை நமக்குக் கூறுகின்றது. இயேசு சிறுவனாக இருக்கும்போது ஞானியாக, போதகராக, சுகமளிக்கிறவராக இருந்தார் என்று நாம் கற்பனை செய்து கொள்ளக்கூடாது. எனினும் மற்றப் பூரணமற்ற சிறுவர்களைக் காட்டிலும், பூரணச் சிறுவனாகிய இயேசு பல்வேறு விஷயங்களில், வளர்ந்த நிலையில் காணப்பட்டிருந்திருக்க வேண்டும்.

மரியாளும், யோசேப்பும், தேவபக்தி உள்ள ஜனங்கள் என்பதை நமது பாடத்தின் ஆதார வசனப்பகுதியின் முதல் வசனம் எடுத்துக்காட்டுகின்றது; அதாவது “”அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்” என்பதாகும் (வசனம்-41). பஸ்காவை இவ்விதமாக அனுசரிக்கும் – நியாயப்பிரமாணமானது, மிகவும் பக்தியுள்ள யூதர்களாலேயே தவறாமல் கடைபிடிக்கப்பட்டது. சிலர் கூறுவதுபோன்று மரியாள் பாவம் இல்லாதவள் என்றும், அற்புதவிதமாய்க்கருவுற்றாள் என்றும் நாம் எண்ணக் கூடாது. மாம்சத்தில் இயேசுவின் தாயாக, மரியாள் தெரிந்துக்கொள்ளப்பட்டு, எல்லா ஸ்திரீகளுக்கும் மேலாக கர்த்தர், மரியாளைக் கனப்படுத்தின விஷயமே, மரியாளின் உயர்ந்த குணலட்சணங்களையும், இருதயத்தில் கொண்டிருந்த பரிசுத்தத்திற்கும் ஆதாரமாகின்றது. உயர்ந்த குணலட்சணங்கள் இல்லாத எவரையும் கர்த்தர் விசேஷமாகக் கனப்படுத்தி, ஆசீர்வதித்து, பயன்படுத்துவார் என்றும் நாம் எண்ணிவிடக்கூடாது.

யூதர்களுடைய நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்படவில்லையெனினும், யூதர்களுடைய கலாச்சாரத்தின்படி, பன்னிரண்டு வயதை அடையும் ஒவ்வொரு சிறுவனும், “”நியாயப்பிரமாணத்தின் குமாரன்” என்று கருதப்படுகின்றான். மேலும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவன் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியவானகவும் இருக்கின்றான். நம்முடைய பாடத்தின் சம்பவத்தில், இயேசு பன்னிரண்டு வயதை அடைந்தவராகக் காணப்படுகின்றார். இளமைப் பருவத்தில் மத விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு, குழந்தை பருவத்திலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று இங்கு அனைத்துத் தேவபக்தியுள்ள பெற்றோர்களுக்கும் படிப்பினை உள்ளது. ஆரம்பக்கட்ட படிப்புகளில் தேர்ச்சிப் பெற்றுப் பன்னிரண்டு வயதை அடையும் பிள்ளைகள், உயர்க்கல்வி கற்க ஆயத்தமாயிருக்கின்றார்கள்; ஆனால், மேலான ஆவிக்குரிய மதரீதியான பாடங்களைக் கற்றுக்கொள்ள ஆயத்தமாக இல்லை என்று சில பெற்றோர்கள் கருதுகின்றனர்; இது மிகவும் தவறாகும். இந்த வயதில் குழந்தைகள் உயர்க்கல்விக்கு ஆயத்தமாக இருப்பதற்கான காரணம், அவர்கள் ஆரம்பக்கட்ட கல்வியின் விஷயத்தில் நன்கு போதிக்கப்பட்டிருப்பதினாலேயே ஆகும்; மேலும், குழந்தைகள் மத விஷயங்களில் உயர்தரமான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள இவ்வயதில் ஆயத்தமாக இல்லையெனில், இதற்குக் காரணம் அவர்கள் ஆரம்பக்கட்ட ஆவிக்குரிய [R2558 : page 13] மத விஷயங்களினால் போதிக்கப்படாததேயாகும்; அதாவது குழந்தைகளுக்குத் தேவனால் நியமிக்கப்பட்ட போதகர்களாகிய பெற்றோர்கள் ஆரம்பக்கட்ட பயிற்சிக் கொடுக்கத் தவறினதேயாகும். எந்தக் கிறிஸ்துவ பெற்றோரும் ஒழுக்க ரீதியிலும், மத ரீதியிலும் தங்களுடைய பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் பொறுப்பை நிராகரிக்கக்கூடாது.

பஸ்கா பண்டிகை, ஏழு நாட்கள் நீடித்ததாய் இருப்பினும், தூர தேசங்களிலிருந்து பயணப்பட்டு வந்தவர்கள், பிரதானமான அனுசரிப்புகள் நிறைவேறும் இரண்டு நாட்கள் மாத்திரமே தங்கியிருப்பது வழக்கம். மரியாளும், யோசேப்பும் பண்டிகையின் மூன்றாம் நாள் தங்களுடன் இருந்தவர்களோடு திரும்பும் பிரயாணத்தை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். பிரயாணத்தில் ஸ்திரீகள், வரிசையில் முன்பாகச் செல்வதும், அவர்களுக்கு பிறகு ஆண்கள் செல்வதும், பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனோடு பிரயாணிப்பதும் வழக்கமாக இருந்தது. ஒருநாள் பிரயாணம் மேற்கொண்டார்கள், மற்றொரு நாள், எருசலேமுக்கு திரும்பி வர பிரயாணம் மேற்கொள்ளப்பட்டது; மூன்றாம் நாள், பட்டணம் முழுவதும் இயேசுவைத் தேடுவதில் செலவிடப்பட்டுள்ளது. இறுதியில் அவர்கள் இயேசுவைத் தேவாலயத்தில், நியாயப்பிரமாண வல்லுநர்கள் மத்தியில் கண்டுபிடித்தார்கள். அக்காலங்களில் புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், வாய்மூலம் கொடுக்கப்பட்ட போதனைகளிலிருந்து, அறிவு பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், நியாயப்பிரமாணத்தில் வல்லுநர்களாய் இருந்தவர்கள் கேட்க மனதாய் இருக்கும் யாவருக்கும், அதிலும் விசேஷமாக பஸ்கா வாரங்களில் போதித்துக் கூற ஆயத்தமாய் இருந்தார்கள். அநேக வாலிப புருஷர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆசிரியர்கள் பாதி வளைவு/வட்ட நீண்ட இருக்கைகளில் (bench) இருப்பது வழக்கமாக இருந்தது; மேலும் இவர்களுக்கு முன்பு முதிர்ந்த மாணாக்கர்களுக்குத் தாழ்வான இருக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது; மேலும் இளைய மாணாக்கர்கள் தரையில், அதாவது, அவர்களின் பாதத்தருகே உட்கார்ந்திருந்தார்கள். பவுல் வாலிபனாக இருக்கும்போது கமாலியேலின் பாதத்தருகே உட்கார்ந்து, கற்றுக்கொண்டதை நாம் வாசிக்கின்றோம் (அப்போஸ்தலர் 22:3). கமாலியேல், பவுலின் நாட்களில் வாழ்ந்த பிரதானமான நியாயசாஸ்திரி ஆவார்.

சிறுவனாக இருந்த இயேசு, துணிவுடன், அவருடைய நாட்களில் வாழ்ந்த கல்விமான்கள் முன்பு சென்று, அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்றோ, தகுதியற்ற போதகர்கள் என்றோ, தம்மைப் பிரகடனப்படுத்தவோ, இன்றைய பிஞ்சிலே முதிர்ந்த, சரிவர பயிற்றுவிக்கப்படாத வாலிபர்கள் போன்று செய்ய முற்பட்டார் என்றோ நாம் புரிந்துக்கொள்ளக் கூடாது. மாறாக, சிறுவனாக இருந்த இயேசுவிடம் சீரான மனநிலை இருந்தது என்றும், தாம் இந்த உலகத்தில் சொற்ப காலமே வாழ்ந்துள்ளார் என்றும், மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் சொற்பமான/சிறிதளவே ஜீவியத்தில் அனுபவங்கள் பெற்றுள்ளார் என்றும், தமக்கு எல்லாம் தெரியாது என்றும், தாம் அறிந்துக்கொள்வதற்கு அநேக கேள்விகள் இருக்கின்றது என்றும் உணர்ந்து, “”மோசேயின் ஆசனத்தில்” வீற்றிருக்கும் போதகர்களிடமிருந்து திருப்திகரமான பதில்களைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில், வாஞ்சையுடன், கேள்வி கேட்டார் என்றே நாம் எண்ணவேண்டும்.

எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை, எனினும் காலத்தையும், சூழ்நிலையையும் பார்க்கையில் மத ரீதியிலான விஷயங்களையே அவர் கேட்டிருக்க வேண்டும். யூத சந்ததியில் வந்த தம்மைப் பற்றின மாபெரும் கேள்விகள் இயேசுவின் [R2559 : page 13] மனதில் உதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த யூத சந்ததியாகிய, ஆபிரகாமின் சந்ததியோடுதான், தேவன் சில மாபெரும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை அருளியுள்ளார்; அதாவது, மேசியாவின் கீழ் இவர்கள் பிரதானமான ஜாதியாராக உயர்த்தப்பட்டு, இவர்கள் பூமியின் குடிகளை ஆசீர்வதித்து, இவர்கள் மூலம் மனுக்குலம் முழுவதும், தேவனைப் பற்றின அறிவிற்குள் வந்து, அவருக்குச் சேவை செய்யும் நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்பது பற்றிய வாக்குத்தத்தங்கள் இவர்களுக்கு அருளப்பட்டுள்ளது. இஸ்ரயேலின் நம்பிக்கை குறித்ததான கேள்விகளினால் இயேசு நிரம்பிக் காணப்பட்டார். மேலும் வேதவாக்கியங்கள், நிறைவேறும் விஷயங்களில் அவருக்குச் சில முக்கிய பங்கு இருக்கின்றது என்று, இயேசு தமது தாயின் மூலம் அறிந்திருப்பார் என்பதில் நமக்கு ஐயமில்லை. நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கத்தரிசனங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களில், பரமபிதா தமக்கு நியமித்துள்ள பங்கைக் குறித்து அறிந்துக்கொள்ள, இயேசு விரும்பித் தேடினார்.

தெய்வீக விஷயங்களைக் குறித்து அறிந்துக்கொள்ள, இயேசுவுக்கு அவருடைய வீட்டிலேயே வேதாகமம் இல்லை என்றாலும், இயேசுவுக்குத் தம்முடைய சிறிய ஊராகிய நாசரேத்தில் உள்ள ஒரு சிறிய ஜெப ஆலயத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஓய்வுநாள்தோறும் அவர் நியாயப்பிரமாணங்களையும், சங்கீதங்களையும், தீர்க்கத்தரிசனங்களையும் வாசிக்கக் கேட்டார். இவ்விதமான விஷயங்களினால் நிரம்பப் பெற்றிருந்த வாஞ்சையுள்ள மனதைக்கொண்ட சிறுவனாகிய இயேசு, எருசலேம் மாநகருக்கு முதல்முறையாக வந்தபோது, அவரைத் தேவாலயமும், அதன் பிரகாரத்தில் நிறைவேற்றப்பட்ட பலிகளும் கவர்ந்தது. இங்குத்தான் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசனம் பற்றின மாபெரும் கேள்விகள், அக்காலத்தில் வாழ்ந்த திறமிக்க போதகர்களால் விவாதிக்கப்பட்டது. இயேசு, வேதஆராய்ச்சியில் ஆழமான விருப்பமும், உற்சாகமும் காட்டினபடியால், அவர் பூமிக்குரிய காரியங்களை மறந்துவிட்டார். பரலோக பிதாவுக்கு அடுத்த விஷயமாகிய தெய்வீகத் திட்டத்தைக் குறித்து ஆராய்வதில் மிகவும் ஆவல் கொண்டிருந்தார். அதாவது, தாம் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் தெய்வீகத் திட்டத்தைக் குறித்து, ஆராய்வதில் மிகவும் ஆவல் கொண்டிருந்தார்.

இயேசுவின் வயதில் காணப்பட்ட மற்றச் சிறுவர்களைக் காட்டிலும், அவருடைய கேள்விகள் மிகவும் ஆழமானதாகவும், நியாயமானதாகவும் இருந்தது. அவர் தன்னடக்கத்தோடு கேள்விகள் கேட்டதில், நியாயப்பிரமாண வல்லுநர்கள் ஆழமாகக் கவரப்பட்டிருப்பது இயல்பேயாகும். இந்தப் பண்டிகைகளில், விருந்தோம்பல், தூரத்தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டது. இயேசுவும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களினால் நன்கு உபசரிக்க/கவனிக்கப்பட்டிருப்பார்.

மரியாளும், யோசேப்பும், இயேசுவைக் கண்டுபிடிக்கும்போது, இயேசு, போதகர்கள் பேசும் காரியங்களைக் கேட்கிறவராகவும், அவர்களிடம் கேள்வி கேட்கிறவராகவும் இருந்தார் என்று பதிவுகள் தெரிவிக்கின்றது. இங்கு மூப்பர்களிடமும், போதகர்களிடமும் வாலிபர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விலையேறப்பெற்ற படிப்பினைகள் காணப்படுகின்றது. இயேசு போதகர்களால் போதிக்கப்பட்டபோது, போதகர்களும் இயேசுவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை, அவர்கள் உண்மையில் மாபெரும் மனுஷர்களாக [R2559 : page 14] இருப்பார்களானால், யாரிடமும், குழந்தையிடமும் கூடப் போதகம் பெற்றுக்கொள்ளத்தக்கதாகத் தாழ்மையான மனம் கொண்டிருப்பார்கள். அந்த வேதப்பகுதியில் இயேசுவிடம் கூடச் சில கேள்விகள் அவர்கள் கேட்டார்கள் என்று வாசிக்கிறோம். மேலும், “”அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்” (லுக்கா 2:47) என்றும் வாசிக்கின்றோம். கேள்வி கேட்கும் விஷயத்தில் இரு சாராரிடமும் பணிவும், மரியாதையும் காணப்பட்டது. இயேசு பணிவுடனும், மரியாதையுடனும் போதகர்களிடம் கேள்வி கேட்டபோது, அவருடைய மனதின் ஆழமும், தெளிவான புரிந்துக்கொள்ளுதலும், நியாயமான விவாதமும் வெளிப்படுத்தப்பட்டபடியால், அவர்களை இயேசுவிடம் மறுகேள்விகள் கேட்கத் தூண்டியது.

இவ்விதமான கேள்வி அணுகுமுறையையே, சத்தியத்தில் உள்ள அருமையான நண்பர்களுக்கு ஏற்றதும், ஞானமுமான ஒன்று என நாம் பரிந்துரைக்கின்றோம். கர்த்தருடைய சில அன்பான ஜனங்கள், மற்றவர்களிடம், அதிலும் விசேஷமாகக் கல்வியறிவு உள்ளவர்களிடம் தெய்வீகத் திட்டத்தைப் பேசும் விஷயத்தில் அதிக அளவு தன்னம்பிக்கையும், அதிக உறுதியும் கொண்டு, தங்களுடைய செல்வாக்கைப் பெரிதளவில் நாசமாக்கிப் போட்ட சம்பவங்களை நாம் பார்த்திருக்கின்றோம். சாந்தகுணம் என்பது பொக்கிஷம் போன்றதாகும்; மேலும், அது சத்தியத்திற்கு உதவியாகவும், தாங்கி நிற்கிறதாயும் காணப்படுகின்றது. எல்லா பலத்துடனும் சத்தியம் முன்நிறுத்தப்படட்டும், ஆனாலும், தாழ்மை மற்றும் சாந்தத்துடனும் நிறுத்தப்படட்டும்; சத்தியத்தை முன்வைப்பதற்குக் கேள்வி முறை மிகவும் ஆற்றல் மிக்கதாகும்.

யோசேப்பும், மரியாளும், தங்களுடைய சிறு குமாரன், அந்நாட்களில் வாழ்ந்த மாபெரும் போதகர்களின் மத்தியில் நின்று அவர்களின் கவனத்தைப் பெற்றுக்கொண்டவராகக் காணப்பட்டதைக் குறித்து ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தங்களைக் கவலைக்குள்ளாக்கி, அவரைத் தேட வைத்ததற்காக, இயேசுவைக் குறித்து அவரது பெற்றோர்கள் விசனத்தை வெளிப்படுத்தியதாக எவ்வித பதிவுகளும் இல்லை. தனியே இருக்கையில் மரியாள் மாத்திரம், இயேசு கூட்டத்தோடு வராததற்கு, அவரைக் கடிந்து கொள்கின்றாள். எனினும், இதை அவள் மிகவும் அன்பாகவும், தன்னடக்கத்துடனும் செய்கின்றாள். இது, இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறித்து (மறைமுகமாக) நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. “”மகனே ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே” என்று மரியாள் கூறின வார்த்தைகளை எடுத்துக் கொண்டு, சிலர், யோசேப்புதான் இயேசுவின் தகப்பன் என்று மரியாள் அறிக்கை பண்ணுகின்றாள் என்று கூறுகின்றனர்/கேள்வி கேட்கின்றனர். இதற்கான நம்முடைய பதில், இல்லை என்பதேயாகும். சில நியாயமான யூகங்கள், என்னவெனில், யோசேப்பு மரியாளை ஏற்றுக்கொண்டபோது, அவளுடைய குமாரனாகிய இயேசுவையும் ஏற்றுக்கொண்டதால் யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தகப்பன் ஆகிவிட்டார்; ஆகவே, இவ்விதமான சூழ்நிலைகளில் இயேசு, யோசேப்பைப் பெற்றோரில் ஒருவராகக் கருதி, அவரைத் “”தகப்பன்” என்று அழைக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டார். மேலும், இயேசுவின் அற்புதவிதமான கர்ப்பம் தரித்தல், குறித்து அவருடைய குடும்பத்தில் மிக நெருக்கமானவர்களுக்குத் தவிர, வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மேலும் பன்னிரண்டு வயதையுடைய இயேசுவிடம் இவ்விஷயங்கள் கலந்து உரையாடுவதற்கு அதிக வாய்ப்பும் இல்லை, ஏற்றதாகவும் இருந்திருக்காது.

சிறுவனாக இருந்த இயேசுவின் மனம், தம்முடைய பரமபிதாவின் மேலும், அவருடைய திட்டத்தின் மேலும் தமக்கு உள்ள பொறுப்புகளை, கடமைகளைக் குறித்து ஆராய்ந்துக் கொண்டிருக்கையில், தம்முடைய பதிமூன்றாம் வருடத்தில், தாம் “”நியாயப்பிமாணத்தின் குமாரனாக” ஆகியுள்ளபடியால், இந்த வருடத்தில் தம்முடைய பணிகள் ஆரம்பிக்குமோ, இல்லையோ என்று சிந்தித்திருக்கலாம். இதன் அடிப்படையிலேயே, போதர்களிடமும் இயேசுவினால் கேட்கப்பட்ட கேள்விகள் அமைந்திருக்க வேண்டும். மேலும், ஆசாரிய ஊழியத்தின் நிழல்கள், தாம் முப்பதாவது வயதை அடையும் வரையிலும் பணிகளை ஆரம்பிக்க முடியாதது என்பதைச் சுட்டிக்காட்டியதையும் இயேசு உணர்ந்து முடிவிற்கு வந்திருப்பார். மரியாளின் கடிந்து கொள்ளுதலுக்கு, இயேசுவின் பதில், “”நான் என் பிதாவுக்கு அடுத்த விஷயங்களில் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?” என்று இருந்தது; அதாவது, “”நான் நியாயப்பிரமாணத்தின் குமாரனுக்குரிய வயதை அடைந்துள்ளதால், என் பரமபிதா மற்றும் அவருடைய வார்த்தைகள் மற்றும் திட்டங்கள் மீது எனக்குச் சில கடமைகள் இருக்கின்றது என்று நீங்கள் அறியீர்களா?” என்ற விதத்தில் பதில் கூறினார். பின்னர், உடனே போதகர்களுடன் விவாதித்த விஷயங்களை நினைவுகூர்ந்ததுபோல, பேச்சை நிறுத்தி, பெற்றோர்களின் விருப்பங்களுக்கு இணங்கி, அவர்களோடு நாசரேத்துக்குப் பிரயாணம் புறப்பட்டது போன்று காணப்படுகிறது. இயேசு, “”அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்” என்ற வார்த்தைகள், அவருடைய முப்பதாம் வயது வரை சாதாரணமாகவே அவர் ஜீவியம் பண்ணினதை எடுத்துக் காட்டுகின்றது. மரியாளும், யோசேப்பும் இயேசுவானவர் இயல்புக்கு மிகவும் அப்பாற்பட்டவர் என்று தெளிவாக உணர்ந்திருந்தாலும், அவர்களால் சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை; இயேசுவின் வார்த்தைகளினுடைய முக்கியத்துவத்தை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியவும் இல்லை என்றாலும், மரியாள் இயேசுவைக் குறித்த விஷயங்களை, சாட்சிகளைத் தன்னுடைய இருதயத்திலே பொக்கிஷமாக வைத்துக் கொண்டாள். மரியாளின் உதடுகளிலிருந்துதான், நம்முடைய பாடத்தின் விஷயங்களை லூக்கா அவர்கள் பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இயேசுவின் இளம் பிராயத்திலேயே, யோசேப்பு இறந்துவிட்டார் எனவும், அவருக்குப் பின்னர், குடும்பத்தைத் தாங்குவதற்கு என்று இயேசு தச்சன் வேலையை எடுத்துக் கொண்டார் என்றும் பாரம்பரியம் கூறுகின்றது. “”இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யுதா, சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்” (மாற்கு 6:3). இவ்வசனத்தில் யோசேப்பு குறிப்பிடப்படவில்லை. நமது கர்த்தரின் ஊழியம் தொடர்பான விஷயங்களில், அவருடைய தாயாரும், அவருடைய சகோதர சகோதரிகளும் அநேகம் முறை குறிப்பிடப்பட்டாலும், யோசேப்பு குறிப்பிடப்படவே இல்லை. சுமார் 18-வருடங்களாக, அதாவது இந்தச் சம்பவம் நடந்தது முதல், அவருடைய ஞானஸ்நானம் வரையிலுமான இடைப்பட்டக் காலத்தில், இயேசுவின் வாழ்க்கையானது, ஜீவியத்தின் சாதாரணமான/பொதுவான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிந்தது. இது நமது கர்த்தர் பொறுமையை வளர்த்ததைக் குறித்த படிப்பினையை நமக்குக் கொடுக்கின்றது. நமது கர்த்தர் பிதாவின் நேரம் வரும் வரையிலும், தமது ஊழியத்தை ஆரம்பிக்கும் வரையிலும் பொறுமையோடு காத்திருந்தார். இதற்கிடையில் தம்மால் முடிந்தமட்டும் பிதாவின் சித்தத்தையும், திட்டத்தையும் அதிகமதிகமாக அறிந்துக்கொள்வதற்குக் கற்றுக்கொண்டிருந்தார். மேலும், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்காகப் பொறுமையோடு காத்திருந்தார்; அதாவது, சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்துக்கொள்வதற்கும் மற்றும் தமக்கும், தெய்வீகத் திட்டத்திற்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துக்கொள்வதற்கும், உதவக்கூடியப் பரிசுத்தஆவிக்காக பொறுமையோடு காத்திருந்தார். அவருடைய பின்னடியார்களுக்கு இங்கு [R2559 : page 15] எத்துணை பாடம் காணப்படுகின்றது. “”அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” (யாக்கோபு 1:14). “”நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” (எபிரெயர் 10:36). நாமும் தெய்வீகத் திட்டத்தைத் துரிதப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும், மாறாக அதன் நிறைவேறுதலுக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்றும், கர்த்தருடைய நியமிக்கப்பட்டுள்ள வேளை வந்துள்ளது எனவும், இவ்வேலைக்காக நம்மை அழைத்துள்ளார் எனவும் நாம் உறுதியடையாமல், எந்த வேலையையும் கர்த்தருக்காக நாம் செய்ய/ஆரம்பிக்கக் கூடாது என்றுமுள்ள பாடங்கள் நமக்கு உள்ளது. மேலும் நாம் நமது கர்த்தர் போன்று, நேரம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும், சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்முடைய கைக்கு நேரிடுவதை செய்ய வேண்டும்; அதாவது கர்த்தர் நம்மை அழைத்த வேலையை முழுப் பெலத்தோடு செய்ய வேண்டும். தேவனுடைய ஞானத்திற்கு இசைவாக, நம்முடைய பணிவான வேலைகள் காணப்படும்போதுதான், அவைகள் கனமுள்ளதாகக் காணப்படும்.

முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஊழியம் புரியக்கூடாது என்ற எல்லையை இடும், நியாயப்பிரமாணத்தின் கீழ் நாம் பிறக்காததைக் குறித்துச் சந்தோஷமடைகின்றோம். தெய்வீக விஷயங்களைப் புரிந்துக்கொள்ளும் வயதிலேயே, கர்த்தருடைய ஊழியத்திற்கென்று, நம்முடைய சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும் சிலாக்கியத்தை, கிருபையின் உடன்படிக்கை நமக்கு அருளுகின்றது. பூரண புருஷனுக்குரிய சரீர மற்றும் மன வளர்ச்சி வரும் வரையிலும் காத்திருப்பதற்குப் பதிலாக, நாம் உடனடியாக இராஜரிக ஆசாரிய கூட்டமாக நமது வேலையை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். மேலும் நாம் ஊழியம் புரியும், அதே சமயத்தில், வளருவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். ‘இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், [R2560 : page 15] சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது” என்ற வசனங்களின் விஷயங்களை மறக்காமல் இருப்போமாக (2 பேதுரு 1:5-8). “”சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்” (1 கொரிந்தியர் 14:20).”