R5186 (page 58)
“நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்.தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.” (பிரசங்கி 5:1)
ஞானி சொல்லர்த்தமான பாதங்களையோ அல்லது சொல்லர்த்தமான நடைகளையோ குறித்துப் பேசவில்லை என்பதிலும், மாறாக தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் நாம் ஏற்றுக்கொள்வது போன்று, ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, ஞானமுள்ள ஆலோசனை சிலவற்றைக் கொடுக்கின்றார் என்பதிலும் ஐயமில்லை. தங்களுடைய அன்றாட ஜீவியத்தில் தாங்கள் ஜாக்கிரதையாய்க் காணப்பட வேண்டும் என்று அவர் கூறுவதாக, அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் புரிந்து கொண்டனர்.
“உன் நடையைக் காத்துக் கொள்.” நீ போய்க்கொண்டிருக்கிற இடத்தைக் கவனி. சந்தைக்கோ அல்லது கேளிக்கை இடங்களுக்கோ செல்வது போன்று, நீ தேவாலயத்திற்குச் செல்லாதே. தேவன் தம்முடைய ஜனங்களைச் சந்திக்கிற இடத்திற்குச் செல்வது போன்று அங்குச் செல்வாயாக. மேலும் தொடர்ந்து தேவாலயத்தில் என்ன கேட்கும் என்று ஞானி கற்பனைப்பண்ணுகின்றார். “மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதற்கு” ஆயத்தமாய் இராதே என்று அவர் கூறுகின்றார். இது நகைப்பை, விளையாட்டு தன்மையை, புத்தியீனமான பேச்சை மற்றும் பரியாசத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
இந்த வேதவாக்கியமானது, தற்காலத்திலுள்ள தேவஜனங்கள் யாவருடைய இருதயத்திற்குள்ளும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாய் இருக்கின்றது. பயபக்தி என்பது மிகவும் தகுதியானதாகும். தேவன் நம்மை நித்தியமான சித்திரவதைக்குள் தள்ளிடுவார் என்ற பயம் நமக்கு இப்போதில்லை. [R5187 : page 58] இப்படிப்பட்ட தீமையான நோக்கத்தினை அவர் தம்முடைய சிருஷ்டிகள் யாதொன்றின் மீதாகிலும் கொண்டிருக்கின்றார் என்று ஊகிப்பதைப்பார்க்கிலும், நம்முடைய பரம பிதாவைக் குறித்து நாம் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனாலும் சந்தைக்குப் போவதுபோன்று, நாம் தேவாலயத்திற்குச் செல்லக்கூடாது. தேவனைத் தொழுதுகொள்ளும் எல்லா இடங்களிலும் நல்லொழுக்கம் அவசியமாய் இருக்கின்றது என்ற உண்மையினைக் கர்த்தருடைய ஜனங்களில் அநேகர் புரிந்துகொள்வதில்லை.
நிழலான ஆலயத்தில் தேவன் காணப்படாத ஒரு விதத்தில், நாம் தேவனைச் சபையில் பெற்றிருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம். சபையின் அங்கத்தினர்கள் எங்கெல்லாம் கூடுகின்றார்களோ, அங்குத் தாம் காணப்படுவதாகக் கர்த்தர் உரைத்துள்ளார். சொல்லர்த்தமான கற்களினாலான ஆலயத்தைப் போலவே, ஜீவனுள்ள கற்களினாலான தேவனுடைய ஆலயமும் முழுக்க பயபக்தியுடன் பார்க்கப்பட வேண்டும்.
நாம் அறையிலோ அல்லது சபையிலோ அல்லது கொட்டகையிலோ கூடினாலும் சரி, தேவனுடைய ஜனங்கள் அங்குக் கூடியுள்ள காரியமானது, அக்கட்டடத்தினைப் பரிசுத்த இடமாக்குகின்றது. ஆகையால் அங்குக் கூடுவதற்கு வரும் எவரும், தன் நடையினைக் காத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் வரும்போது, தான் இருக்கும் இடம் யாது என்று உணர்ந்தவராய் இருக்க வேண்டும் மற்றும் கேட்பதற்கு – செவிக்கொடுப்பதற்கு ஆயத்தமாய் இருக்க வேண்டுமே ஒழிய, ஆரவாரம் பண்ணுவதற்கல்ல. சம்பாஷணைகள் யாவும், ஆவிக்குரிய காரியங்களின் அடிப்படையில், கட்டியெழுப்பும் – பக்திவிருத்தி உண்டுபண்ணும் விதத்தில் காணப்பட வேண்டும். இப்படியாகப் பேசமுடியவில்லையெனில், தேவ செய்தியினைக் கேட்டுவிட்டு, கூடிப்பாடி, கலைந்து செல்வது நலமாயிருக்கும்.
என்ன உரையாடல் காணப்பட்டாலும், அவ்விடத்திற்காக மாத்திரமல்லாமல், அத்தருணத்திற்காகவும் என்றுள்ள பயப்பக்தியுடன் உரையாடப்பட வேண்டும்.இங்குமங்குமாக திரும்பிப் பார்த்து, “இந்தச் சகோதரர், அந்தச் சகோதரர், இந்தச் சகோதரி, அந்தச் சகோதரி வருகின்றார்; அவர்கள் பாடுவதை நாங்கள் கேட்கின்றோம்” என்று சொல்லக்கூடாது. இத்தகைய நடத்தை என்பது மிகவும் தகுதியற்றதாகும்.
பயபக்தியைவிடக் கர்த்தருடைய ஜனங்கள் கற்றுக்கொள்வதற்கு அவசியமாய் இருக்கும் வேறு எந்தப் பாடத்தையும் நாம் அறியோம். [R5187 : page 59] பயபக்தி இல்லாத எவரையும் கர்த்தர் அழைக்கிறதில்லை மற்றும் அந்தப் பண்பானது, பலமடைய அவர் விருப்பமுள்ளவராய் இருக்கின்றார். ஆனால் பயம் துரத்தப்படும்போது, பயபக்தி குறைவு ஏற்பட வாய்ப்பாகுகின்றது. இந்த விஷயத்திற்கு – நாம் தேவாலயத்திற்கோ அல்லது திவ்விய ஆராதனை நடைப்பெறும் எந்த ஓர் இடத்திற்கோ செல்லுகையில் – விசேஷித்த கவனம் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
தேவாலயத்திற்குச் செல்லுகையில் நம்முடைய நடையை நாம் கவனித்துக்கொள்வது மாத்திரமல்லாமல், நாம் நம்மோடு எடுத்துச் செல்பவைகளைக் குறித்தும், நாம் கவனிக்க வேண்டும். நாம் அங்குச் சுத்தமாய்ச் செல்வதற்குக் கவனிக்க வேண்டும்; நம்முடைய வஸ்திரங்களில் பூச்சிகளைக் கொண்டுபோகாதபடிக்குக் கவனிக்க வேண்டும்; நம்மிடமிருந்து கெட்ட வாசனைகள் வராதபடிக்குக் கவனிக்க வேண்டும். சரிவர பயிற்சியளிக்கப்படாத பிள்ளைகளை அங்குக் கூட்டிச் செல்லாதபடிக்கு நாம் கவனிக்க வேண்டும். இப்படிச் செய்வோமானால், மற்றவர்களுக்குத் தொந்தரவாய் இருக்கும் அபாயத்திற்குள்ளாகாதிருப்போம்.
பிள்ளைகளைத் தனியே வீட்டில் விட்டுவரும் வாய்ப்புகள் இருக்கலாம். இப்படிச் செய்ய முடியாவிட்டால், கூடுகைகளுக்கு வரும் விஷயத்தில், பெற்றோர்கள் சுழற்சி முறையில் வருவது நலமாயிருக்கும். பிள்ளைகள் கூடுகைகளில் கலந்துகொள்வது என்பது மற்றவர்களுடைய ஆவிக்குரிய நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதாய் இருக்கும் பட்சத்தில், அத்தகைய பிள்ளைகளைக் கூடுகைகளுக்குக் கொண்டுவருவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. வகுப்பிற்குத் தொந்தரவு உண்டுபண்ணாத வயதை அடைவது வரையிலும், அவர்களை வீட்டில் விட்டுவருவதற்கு வழி ஒன்று ஏற்பாடு பண்ணப்பட வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடைய வழக்கங்களுக்குப் பழகிப்போனவர்களாய் இருப்பதினால், குழந்தையினுடைய ஒவ்வொரு சலனங்களினாலும் அநேகமாக மற்றவர்கள் தொந்தரவிற்குள்ளாகுகையில், பெற்றோர்கள் இதனை உணரமுடியாதவர்களாய்இருக்கின்றனர். நம்மால் உண்டாகும் இத்தகைய சோதனைகள் தவிர, மற்றப்படி மற்றவர்களுக்கு அவர்களது பொறுமையினைச் சோதனைக்குள்ளாக்கும் சொந்த சோதனைகளும் காணப்படவே செய்கின்றது.
சிலர் தங்களது நடையை மாத்திரமல்லாமல், தங்கள் கைக்கடிகாரத் தினையும் கவனிப்பது அவசியமாய் இருக்கின்றது. கூடுகைக்குக் காலதாமதமாக வருதல் என்பது நீதி மற்றும் அன்பு, இரண்டின் கொள்கைகளுக்கும் முரணானவையாகும். கூடுகையில் கலந்துகொள்பவர்கள் யாவரும், மற்றவர்களுக்கு நீதியாய்க் காணப்படும் வகையில், தாங்கள் சரியான நேரத்திற்கு வரத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நியமிக்கப்பட்ட நேரத்திற்குக் கூடுகைக்குத் தாங்கள் தாமதமின்றி வரத்தக்கதாக, தங்கள் அலுவல்களை ஒழுங்குப்படுத்திக்கொள்ள வேண்டும்.
காலந்தவறாமல் காணப்படுவதற்கும் மற்றும் மற்றவர்களுக்குத் தொந்தரவளிக்காமல் இருப்பதற்குமான நம்முடைய பிரயாசங்களானது, கர்த்தரினால் கிறிஸ்தவ குணலட்சணத்தினுடைய வளர்ச்சிக்கான சான்றுகளாகச் சந்தேகத்திற் கிடமின்றி பார்க்கப்படும் மற்றும் இவைகள் அவரால் அங்கீகரிக்கப்படும் மற்றும் இவைகள் இராஜ்யத்திற்கு நாம் ஆயத்தமாகுவதற்கு உதவுகிறதாக இருக்கும். மற்றவர்களுடைய உரிமைகளின் விஷயத்தில் அலட்சியமாய் இருப்பவன், தான் அன்பின் ஆவியில், கிறிஸ்துவின் ஆவியில் குறைவுப்பட்டிருப்பதை வெளிப்படுத்துபவனாய் இருப்பான். கிறிஸ்துவின் ஆவியில்லாமல், நன்கு வளர்ச்சியடையாமல் இருப்பவன் எவனும், இராஜ்யத்தில் இடம் பெறான்.
ஆகையால் இவ்விஷயங்கள்-அதாவது ஒழுங்கற்றபிள்ளைகள், கூடுகைகளுக்குத் தாமதமாய் வருதல் முதலானவைகள் –இராஜ்யத்தில் இடம்பெறுவதற்குரிய நம் தகுதி நிலையினைப் பாதிப்பவைகளாய் இருக்கின்றன. இதனிமித்தம் நம்முடைய கிரியைகளின் அடிப்படையில் நாம் நியாயந்தீர்க்கப்படுகின்றோம் அல்லது மற்றவர்களை அவர்களது கிரியைகளின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பதற்கு நாம் உரிமை பெற்றிருக்கின்றோம் என்ற அர்த்தத்தில் நாம் சொல்லுகின்றோம் என்பதாகாது. “குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று கர்த்தர் கூறியுள்ளார். கர்த்தருடைய சித்தத்தைச் செய்திடுவதற்கான நம்முடைய பிரயாசங்களானது, நம்முடைய இருதயங்களுடைய விருப்பங்களுக்குச் சமமாய் இருக்கின்றது என்பதை நாம் காட்ட வேண்டும். இப்படியாக ஜீவிப்பதற்கான தீர்மானங்களைச் செயல்படுத்துவோமானால், உயிர்த்தெழுதலில் நம்முடைய மறுரூபமடைதலை நாம் அனுபவிக்கும்போது நாம் மகிழ்ச்சியடைபவர்களாய் இருப்போம்.
சோர்வினாலோ, ஊக்கமின்மையினாலோ வீழ்த்த முடியாத பொறுமையுடன்கூடிய விடாமுயற்சிதனை அடைய நாடிடு.
தான் செய்கையில் மகிழ்வுறுவது போலவே, பிறன் செய்யும்
மாபெரும் வேலையிலும் அகமகிழும் பட்சபாதமின்மைதனை அடைய நாடிடு.
உன்னை நீ மன்னிப்பதைக் காட்டிலும், உந்தன் சகோதரனை மன்னிக்கத் துரிதப்படும் ஆவிதனை அடைய நாடிடு.
செய்த தவற்றில் உந்தன் பங்கினை மறைப்பதற்குப் பதிலாக, தவறைச் சரிசெய்ய முற்படும் நீதிதனை அடைய நாடிடு.
பாதகம் தெரிந்து செய்யப்பட்டதாய்த் தோன்றியப்போதிலும், நல்நோக்கம் உண்டோவென எப்போதும் தேடித்திரியும் அன்புதனை அடைய நாடிடு.
உந்தன் இடறுதல்களும், தோல்விகளும்கூட உன்னை
மனம் உடையப்பண்ணாத நேர்மை/விசுவாசந்தனை அடைய நாடிடு.
உந்தன் சத்துரு தோல்வியுறுகையில் துயரமடையும் மற்றும்
நீ தாழ்த்தப்படுகையில் அகமகிழும் பணிவுள்ள ஆவிதனை அடைய நாடிடு.
எவ்வேளையில் பேசிடவும், எவ்வேளையில் அமைதி காக்கவும் அறிந்திருக்கும் ஞானம் உடைய ஆவிதனை அடைய நாடிடு.
போதும் என்பதை அறியாத மற்றும் புகழ்ச்சியை அடைய நாடாத, பாராட்டுகளை ஏற்றிடாத பக்திவைராக்கிய ஆவிதனை அடைய நாடிடு.
மன்னிப்பை வார்த்தையில் தெரிவித்தும், தவறை மறுபடியும் குறிப்பிடாமல், அதன் உண்மைதனை நிரூபிக்கும் மன்னிப்பின் ஆவிதனை வளர்த்திட நாடிடு.
மற்றச் சகோதரனுக்கு ஊழியத்தில் கனமிக்கப் பகுதியினை விட்டுக்கொடுத்து, அற்பமான, அதிகம் விரும்பிடாத பாகந்தனை தெரிவு செய்யும் தாழ்மைதனை நாடிடு.
சகோதரர் முன்னிலையில் நடப்பது போலவே, நம் இல்லங்களிலும் ஜீவித்திட ஜாக்கிரதைகொள்ளும் கிறிஸ்தவம்தனை நாடிடு.
– Bro.Benjamin .H. Barton.