R5498 (Page 77)
“சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 7:24)
இந்த ஓர் அதிகாரத்தில் அப்போஸ்தலன் விவாகம் குறித்தும், அதன் பொறுப்புகள் குறித்தும் கருத்துகள் தெரிவித்துள்ளார். அவர் அடிமைகள் குறித்தும், அவர்கள் நிலைமைக் குறித்தும்கூடக் கருத்துகள் தெரிவித்துள்ளார். “அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், விடுதலைப்பண்ணப்படும்படிக்கு நாடாதே” என்று கூறுகின்றார். இன்னுமாக ஒருவேளை அடிமைக்குச் சுதந்தரம் வருமானால், சுதந்தரவாளியென அதிகளவில் ஊழியம்புரிவதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்திடுவதில் அவன் மகிழ்ச்சிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அடிமையானவன் தன் எஜமானை நோக்கி: “நான் தேவனுடைய பிள்ளையாகியுள்ளேன்; ஆகையால் உம் கட்டுப்பாடுகள் எனக்குப் பொருட்டில்லை இனிமேலும் நீர் என்னை உமது அடிமையாக வைத்துக்கொள்ள முடியாது” என்று சொல்லிவிடக்கூடாது.
கர்த்தருடைய ஜனங்கள் தாங்கள் அழைக்கப்பட்ட நிலைமையினின்று உடனே மாற்றம் வேண்டுமென்றிருக்கக்கூடாது எனும் கருத்தினை அப்போஸ்தலன் கொடுத்துள்ளார். “நீங்கள் இப்பொழுது செய்துகொண்டிருப்பவைகளை விட்டு விலகிட வேண்டும் என்று நீங்கள் எண்ணங்கொள்ள வேண்டாம்” என்பது அவர் கருத்தாய் இருக்கின்றது. உங்கள் தொழில் நிலைமையானது ஒரு வேலைக்கார நிலைமையாகவோ அல்லது ஓர் அடிமை நிலைமையாகக் காணப்படலாம்; இதிலேயே நிலைத்திருங்கள் – மன அமைதியோடு அதில் காணப்படுங்கள். ஒருவேளை கர்த்தர் கதவைத் திறப்பாரானால், பின்னர் அதை நாடித்தேடுங்கள். ஒருவேளை உங்கள் நிலைமையானது மிகவும் கடுமையான நிலைமைகளின் கீழுள்ள ஒன்றாய் இருக்குமானால்… நிலைமையை இலகுவாக்கிட ஒருவேளை கர்த்தர் சித்தங்கொண்டால், தம்முடைய ஏற்றவேளையில் அதை இலகுவாக்கிடும்படியாகக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்வது சரியே. ஒவ்வொரு சோதனையிலும், நாம் அவைகளைத் தாங்கிக்கொள்ளத்தக்கதாகத் தப்பித்துக்கொள்ளும் போக்கினை அருளுவதாக அல்லது அவ்வகையில் காரியங்களை வழிநடத்திடுவார் என்பதாக அவர் நமக்கு வாக்களித்துள்ளார் (1 கொரிந்தியர் 10:13). இது நம்முடைய தொழில்- உறவினர்களுக்கும் – அனைத்திற்குமே பொருந்திடும்.
ஒருவன் விவாகமாகாதவனாய் இருப்பானானால், கூடுதல் பொறுப்பினை எடுத்துக்கொள்ளும் காரியத்தினை அவன் மிகவும் கவனமாய்ச் சிந்தித்துக்கொள்ள வேண்டும். “நான் விவாகமாகாதவனாய்க் காணப்பட்டபோது அழைக்கப்பட்டேன். நான் விவாகம்பண்ணிட கர்த்தர் விரும்புகின்றாரா?” என்று அவன் சிந்தித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை விவாகம்பண்ணிட கர்த்தர் விரும்புகின்றார் என்ற முடிவிற்கு அவன் வருவானானால், “கர்த்தருக்குள் மாத்திரமே” எனும் அப்போஸ்தலனுடைய கட்டளையினை அவன் நினைவில்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அவன் அழைக்கப்பட்டபோது அவன் விவாகமானவனாய் இருந்தால், அவன்: “நான் விவாகம்பண்ணாமல் இருந்தால் நலமாயிருந்திருக்கும். ஒருவேளை விவாகம்பண்ணாமல் இருந்திருப்பேனாகில், என்னால் மிக நன்றாயும், மிக அதிகமாயும் செய்திருக்கமுடியும்” என்று சொல்லக்கூடாது. அவன் அழைக்கப்பட்டபோது, அவன் விவாகமானவனாய் இருந்தான்; ஆகையால் அவனுடைய நேரம் ஓர் அடைமானத்தில் உள்ளது. இந்த அடைமானத்தினை அல்லது ஒப்பந்தத்தினை அவன் கருத்தில் எடுத்துக்கொள்ளவே வேண்டும்.
[R5498 : page 213]
எனினும் ஒருவேளை அவிசுவாசியான கணவனோ மனைவியோ விட்டுப் பிரிந்துபோனால், அவர்கள் பிரிந்து போகட்டும் என்று இதே அதிகாரத்திலுள்ள முந்தைய வசனங்களில் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். அவர்கள் விட்டுப்பிரிந்துபோக மனதாய் இருந்தார்களானால் அவர்கள் அப்படிப் பிரிந்து போவதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று கூறுகின்றார். கர்த்தர் உங்கள் காரியங்களைப் பார்த்துக்கொள்வதற்கு வல்லவராய் இருக்கின்றார். மேலும் ஒருவேளை இதுதான் உங்களுக்கான கர்த்தருடைய ஏற்பாடாய் இருக்குமாயின் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நம்முடைய தொழிலைவிட்டுத் தொகுதி விநியோகிக்கும் வேலைக்கோ அல்லது பயண ஊழியர் வேலைக்கோ அல்லது புதிய சபை உருவாக்கும் வேலைக்கோ அல்லது வேறு ஏதோ வேலைக்கோ செல்லும் காரியமாக நாம் சிந்தித்துக்கொண்டிருக்கையில்… “கர்த்தர்தான் இக்கதவைத் திறந்துள்ளரா?” என்று நாம் சிந்தித்துக்கொள்வது சரியான காரியமாய் இருக்கும். ஒருவேளை இந்த விதத்தில் ஊழியத்திற்கான சிறந்த வாய்ப்பு நமக்கு வருகிறதையோ, அறுவடைக் களத்தில் ஊழியம்புரிவதற்கான பெரிய வாய்ப்பு நமக்கு வருகிறதையோ, கதவு திறந்திருப்பதையோ நாம் காண்போமானால், பின்னர் நாம் களிகூர்ந்து உட்பிரவேசித்திட வேண்டும்.
ஒருவேளை திறந்த கதவை நாம் காணவில்லையெனில், அத்தகைய ஊழியங்களுக்குள் பிரவேசிக்கத்தக்கதாகச் சரியான சில கொள்கைகளை மீறியே நாம் கதவைப் பலவந்தமாய்த் திறக்கிறவர்களாய் இருப்போம். நாம் கொள்கைகளுக்காக நின்றிட வேண்டும். கர்த்தருடைய ஊழியத்தில் இறங்கிடுவதற்காகச் சரியான கொள்கை எதையேனும், நாம் ஒருபோதும் எதிர்த்து மீறிடக்கூடாது; ஊழியஞ்செய்வதற்கு எப்போதுமே ஏதோ ஒரு வழியிருக்கும். அப்போஸ்தலன் இவ்வார்த்தைகளைச் சகோதரர்களுக்கே பேசுகின்றார் மற்றும் கனவீனமான தொழில்களில் காணப்படும் யார் ஒருவரையுங்குறித்து அவருடைய வார்த்தைகள் குறிப்பிடுவதில்லை.
சத்தியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு ஒரு மனுஷன் சூதாட்ட விடுதியை நடத்தினவராகவோ அல்லது அவமதிப்புக்குரிய ஏதேனும் தொழிலை நடத்தினவராகவோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்; மதுபான கடைக்காரராய் இருந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் [அநேகச் சகோதரர்கள் இந்தத் தொழிலிலிருந்து வந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்]. இவர் சத்தியத்தைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, “இதோ நான் என்ன செய்துகொண்டு வருகிறேன்? மனுஷர்களுக்குப் பாதகமானதையா நான் அவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றேன்? இதை நான் நிறுத்த வேண்டும்!” என்பான். ஆகையால் அவன் தேவனுடைய பிள்ளையாகுவதற்கு முன்பாக, மதுபான தொழிலிலிருந்து அவன் வெளியே வரவேண்டும்; தேவபிள்ளையாகுவதற்கு முன்னதாகவே, கொள்கைகளற்ற மனநிலையிலிருந்து அவன் வெளிவர வேண்டும். “சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலேயே நிலைத்திருக்கக்கடவன்” எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகள் சகோதரர்களுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாகும். தன் மனசாட்சிக்கு எதிரானதாகவும், தன் சக சிருஷ்டிக்குப் பாதகமானதுமாய்க் காணப்படும் தொழில் ஒன்றில் ஒருவன் காணப்படுகையில், அவன் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனாய் இரான்.
இந்தக் காரியங்கள் அனைத்தும் அப்போஸ்தலனின் நாட்களிலுள்ள வேலைக்காரர்கள் யாவருக்கும், ஆற்றல் மிக்கவைகளாக இருந்தன. அந்தக் காலங்களிலும் மற்றும் எல்லாக் காலங்களிலும் தாழ்மையுள்ள வகுப்பார், வேலைக்கார வகுப்பார், அடிமைகள் வகுப்பார் சுவிசேஷ செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாய் இருந்திருக்கின்றனர். ஐசுவரியவான் வகுப்பாரை நோக்கி, “ஐசுவரியவான்களே உங்களுக்கு ஐயோ!” என்று நமது கர்த்தர் கூறினார். மேலும் தரித்திரரை நோக்கி: “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்” என்று கூறினார். வெளிச்சத்திற்குள் வந்தவர்களில் ஞானிகள் அநேகரில்லை என்றும், ஐசுவரியவான்கள் அநேகர் இல்லையென்றும், பிரபுக்கள் அநேகர் இல்லையென்றும் நாம் காண்கின்றோம்.
கடுங்காவல் தண்டனை விடுதிகளில் கைதியாக இருப்பவன் தனக்குள்ளாக, “சிறைச்சாலையில் நான் இருக்கையில் தேவனுடைய வழிநடத்துதலின்படி இந்தச் சுவிசேஷ செய்தியானது என்னை வந்தடைந்துள்ளது. அநேகமாக நான் இங்கு வந்திருக்கவில்லையெனில் சத்தியத்தினை அடைந்திருக்கவே மாட்டேன்” என்று சொல்லுவான். ஒருவேளை இத்தகைய நிலைமையில் காணப்படும் ஒரு நபராக நாம் இருப்போமானால் விடுதலை வேண்டி மனுத்தாக்கல் கடிதத்தினை அனுப்பி வைத்துக் கதவுகளைத் திறப்பதற்கான பிரயாசங்களில் துரிதப்படுவதற்கு முன்னதாக, அத்தகைய மனுத்தாக்கலை ஆயத்தம்பண்ணுவதற்கு முன்பாக நன்கு சிந்தித்துப்பார்ப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். “சக கைதிகள் மத்தியில் கர்த்தருக்காய் ஊழியம்புரியும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கலாம். அவர்களுக்குப் பிரசங்கித்திடுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாம்” என்று நாம் எண்ணிட வேண்டும். அல்லது ஒருவேளை விடுதலைக்கான மனுத்தாக்கல் நம்மால் செய்யப்பட்டும், அந்த மனு நிராகரிக்கப்படும்போது, இந்த நிராகரிப்பை இது விஷயத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தையென்று நாம் தலை வணங்கிட வேண்டும். நாம் முழுமையாகத் திருப்தி கொண்டவர்களாகவும், முழுமையாக மகிழ்ச்சிக் கொண்டவர்களாகவும் இருக்க முயற்சித்து, “இருளிலிருந்து என்னைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க நாடிடுவேன்” என்று சொல்லிட வேண்டும். யாருக்குத் தெரியும்? இந்நிலையில் காணப்படும் மனுஷன், வேறு இடங்களில் கிடைக்கப்பெறுவது போலவே, இங்கும் ஊழியம்புரிவதற்கான நல்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வான். தம் உண்மையுள்ளவர்கள் யாவருக்கும் கர்த்தர் சிறந்தவைகளையே கொடுத்தருளுவார்.