R5700 (page 169)
2 சாமுவேல் 18:1-15
“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.” (எபேசியர் 6:1)
“நன்றியற்ற பிள்ளையைப் பெற்றிருப்பது என்பது பாம்பின்
பல்லினும் எத்துணைக் கூர்மையானது!”
இன்றைய நமது பாடமானது, அப்சலோமின் மரணத்தினைப் பற்றினதாகும். இக்காரியமானது விளக்கம் தர வேண்டிய நிலை இல்லாதளவுக்கு விளக்கமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் இளவரசனின் ஜீவியத்தைத் திரும்பிப்பார்ப்பதும், இவருடைய தோல்விகள் சிலவற்றைக் கவனிப்பதும் நமக்குப் பிரயோஜனமாயிருக்கும். முதலாவது விஷயம் என்னவெனில் . . . இவர் நற்பிறப்புடையவரல்ல. இவரது தாயும், இராஜாவாகிய தாவீதின் மனைவியுமானவள், அருகாமையிலுள்ள ஒரு புறஜாதி இராஜாவின் மகளாவாள். அப்சலோமின் தாய் அழகானவராக இருந்திருக்கக்கூடும்; ஏனெனில் அப்சலோம் அழகான ஆண்மகனாக, அழகான வாலிபனாக, பண்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்பவனாக, பிரபலமானவனாக வேத வாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றார். இராஜ குடும்பத்தின் அங்கத்தினனாய் இருந்ததும், வேர்வை சிந்தி உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்ததும், இவருக்குப் பாதகமாகவே இருந்தது.
தன் சகோதரிக்காய்ப் பழிவாங்கும்படிக்குத் தனது ஒன்றுவிட்ட சகோதரனாகிய அம்னோனைக் கொன்றுபோடுவதன்மூலம், அப்சலோம் முதலாவதாக நமது கவனத்திற்குப் பிரத்தியட்சயமாய்க் கொண்டுவரப்படுகின்றார். இதினிமித்தம் தன் தாத்தாவினுடைய பாதுகாப்பின்கீழ்த் தஞ்சம்புக ஓடுகின்றார். இப்படியாக இவரது தகப்பனுடனும், உண்மையான மதத்துடனும் இருக்கையில் உண்டாகும் நல்தாக்கங்களிலிருந்து இவர் இன்னும் விலகினவரானார். இப்படிப் பல வருடங்களாக இவர் காணாமல் போயிருக்க, இவர்மீது தொடர்ந்து அன்புகொண்டிருந்து, இவருக்காய்த் துக்கித்துக்கொண்டிருந்த இவரது தகப்பனார், அப்சலோமை எருசலேமுக்குத் திரும்பிவரச் சொல்ல ஏவப்பட்டார் – ஆனாலும் தன் குமாரன் தன் முன்னிலையில் வருவதற்கு இரண்டு வருடங்கள் தகப்பனார் மறுத்தார். இதன் தாக்கங்கள் அனைத்துமே இந்த இளைஞனுக்குப் பாதகமாகவே இருந்தது; எனினும் இந்தக் காரணங்கள் எதுவும் இவர் தன் தகப்பனாகிய, இஸ்ரயேலின் இராஜாவுக்குப் பண்ணின துரோகத்திற்கான பழியினை இவர் மேலிருந்து விலக்குவதற்குரிய காரணங்களாகாது.
சாதாரணமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இஸ்ரயேல் தேசம் எங்கும் நியாயாதிபதிகள் காணப்பட்டனர்; ஆனால் இவர்களால் அளிக்கப்படும் தீர்ப்பில் அதிருப்தி ஏற்படுகையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு பண்ணப்படுவதுபோல, இராஜாவினிடத்தில் மேல்முறையீடு செய்யப்படுகின்றது. ஆலயம் கட்டுவதற்குத் தேவையான பொருட்களை ஆயத்தம்பண்ணுவதில் இராஜாவாகிய தாவீது மிகவும் விறுவிறுப்பாய் ஈடுபட்டிருந்தார்; இந்த ஆலயமானது இவரது மரணம்வரையிலும் கட்டப்படவில்லை. இதினிமித்தம் மேலான நியாயாதிபதியென ஜனங்களுக்கு ஆற்றிடும் தன் பணியினைத் தாவீது இராஜா சிலவிதங்களில் செய்ய முடியாதவராயிருந்திருக்கலாம்… ஆகையால் ஒவ்வொரு உச்சநீதிமன்றங்களில் நடைபெறுவது போன்று ஜனங்களுடைய வழக்குகளில் சிலவற்றின் விசாரணை தாமதப்படுத்தப்பட்டது – இது முடிவுகளுக்காய்ப் பொறுமையற்றுக் காணப்படுவோருக்குச் சோர்வை உண்டாக்கிற்று.
நீதி வழங்கும் விஷயத்தில், இராஜாவாகிய தாவீதின் சார்பில் ஏதேனும் குறைவு இருந்ததாவென நம்மால் உறுதியாய்க் கூறமுடியவில்லை. இவரது தந்திரமுள்ள மகனாகிய அப்சலோம் தன்னையே மிகவும் பிரபலமாக்கிக்கொண்டான் என்று மாத்திரமே அறிவோம். அப்சலோம் ஜனங்களிடத்தில் மிகவும் தயவு பாராட்டினவனாகவும், ஜனங்களுடன் நன்கு பழகினவனாகவும், அவர்களுடைய புகார்களைக் கேட்பதற்கு எப்போதுமே ஆயத்தமாயிருப்பவனாகவும் இருந்தான்; மேலும் ஜனங்களுடைய விசாரணை விஷயத்தில் ஏற்படும் தாமதத்திற்காய் மனவருத்தத்தினைத் தெரிவித்து, “நான் இராஜாவாக இருந்திருப்பேனாகில், சூழ்நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கும்!” என்று கூறி தந்திரமாய்ப் பதிலளித்தான். இப்படியாக வஞ்சனையினாலும், சூழ்ச்சியினாலும், பொய்யுரைத்தும் தந்தையிடமிருந்து ஜனங்களுடைய இருதயங்களைத் தன்பால் கவர்ந்துகொண்டான் என்று நாம் வாசிக்கின்றோம். இப்படியான ஒரு மனுஷனை இராஜாவாகப் பெற்றிருந்தால், எவ்வளவு நலமாயிருக்குமென ஜனங்களும் உண்மையில் சிந்திக்கத் துவங்கினார்கள். தேவன்தான் இஸ்ரயேலின் இராஜா என்றும், வேதாகமம் சொல்வது போன்று இராஜாவாகிய தாவீது கர்த்தருடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து மாத்திரம் இருந்தார் என்றும் உள்ள உண்மையினை ஜனங்கள் முழுவதும் பார்க்கத் தவறினதாகத் தெரிகின்றது (1 நாளாகமம் 29:23).
அப்சலோம் கண்கவரும் அழகான இராஜகுமாரனாக, அலையலையான நீண்ட மயிரை உடையவனாய் இருந்தார். இவர் தன் இரதத்தில் செல்வார் மற்றும் இவருக்கு முன்னே வேகமாய் ஓடும் ஐம்பது வீரர்கள் செல்வதுண்டு. சிந்திக்காத ஜனங்கள் இவைகளினால் கவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த மினுக்கின் மயக்க நோயினால் ஒரு ஞானவான் கூடத் தாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அப்சலோம் தன் தகப்பனுடைய மத உணர்வுகளை அறிந்திருந்தார் மற்றும் அவ்வுணர்வுகளை அப்சலோம் பெற்றிருக்கவில்லை. தந்தைக்குப்பின் தான் இராஜாவாகக் காணப்படுவது, தகப்பனுடைய விருப்பமாயிராது என்றும், தாவீது இராஜா வயதாகிக்கொண்டிருப்பதால், புதிய இராஜா ஏற்படுத்தப்படுவதற்குரிய தருணம் வெகு தொலைவில் இல்லை என்றும் அப்சலோம் உணர்ந்தார். பேராசைகொள்ளுதல் மற்றும் தேவனுக்குத் துரோகம் செய்தல் எனும் சாத்தானின் வழியினை அப்சலோம் பின்பற்றினவராகி, தன் தகப்பனுக்குத் துரோகம் புரிந்தார். இவர் ஒரு படையைத் திரட்டி, தன்னை இராஜாவென அறிவித்தார்; மேலும் இராஜாவாகிய தாவீதும், அவரது வழக்கமான சேனையும், அவருக்கு உண்மையாய் இருந்தவர்களும் தங்கள் ஜீவனைத் தப்பிக்க ஓடும் கட்டாயம் ஏற்படுமளவுக்கு, அப்சலோம் தன்னால் கவரப்பட்ட அநேகம் ஜனங்களுடைய ஆதரவுடன், காரியங்களை மிக வேகமாகவும், மிக நேர்த்தியாகவும் செய்துமுடித்தார். அப்சலோமின் பெரிய சேனைக்கும், இராஜாவாகிய தாவீதின் சிறிய சேனை, ஆனால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட போர்வீரர்களைப் பெற்றிருந்த சேனைக்கும் இடையில் யுத்தம் நடந்தது. தாவீது இராஜாவிற்கே வெற்றிக் கிடைத்தது. தன் குமாரனாகிய இளைஞன் அப்சலோமினைக் கொன்று போடக்கூடாது என்று தாவீது தன் போர்வீரர்களிடம் கேட்டுக்கொண்ட போதிலும், அப்சலோம் கொல்லப்பட்டார்.
இங்குத் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனுக்கும், தன் தகப்பனைக் கொல்வதற்கு நாடினவனும், கலகக்காரனும், சதித்திட்டம் போட்டவனும், சூழ்ச்சிக்காரனும், பேராசைக்கொண்டவனும், பகட்டானவனும், ஆடம்பரமானவனும், ஜனங்களால் விரும்பப்பட்டவனுமான மனுஷனுக்கும் இடையில் எத்தகையதொரு வித்தியாசம் காணப்படுகின்றது! தேவனுடைய மனுஷன், தான் அறிக்கைப்பண்ணி, மனந்திரும்பிக் காணப்பட்ட அந்தப் பெலவீனங்களுக்கு அப்பாற்பட்டு, தேவனுடைய மனுஷன் தேவனிடத்தில் உண்மையுள்ள இருதயத்தினைப் பெற்றிருந்தார்; “என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” எனும் புலம்பலின் வார்த்தைகளில் தன் குமாரனுக்காய் அவர் பெற்றிருந்த அனுதாப அன்பும் வெளிப்படுகின்றது.
மனித சித்தம் என்பது அருமையானதாகும், ஆகையாலேயே ஒவ்வொருவனும் தன்தன் எதிர்க்காலத்திற்குப் பொறுப்பாளியாகுகின்றான். ஆகையால் தன் முயற்சியினாலுயர்ந்த மனிதன் எனும் கூற்றுக் கிட்டத்தட்ட உண்மையே.
எனினும் இது – ஓரளவுக்குத் திறமையுள்ளவர்களாகவும், வெளிப்புற அழகுடன் மாத்திரமல்லாமல், தேவனுக்கும், நீதியின் கொள்கைகளுக்கும் நேர்மையுள்ள, நீதியுள்ள, மனசாட்சியுள்ள நல்லப் பிள்ளைகளை உலகில் கொண்டுவரத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பெற்றோரின் கடமையினின்று பெற்றோரை விலக்கிடாது. மேலும் இது – வாழ்க்கைக்குறித்த சரியான புரிந்துகொள்ளுதலையும், முறையான அறிவுரைகளையும் பிள்ளைகளுக்குக் கொடுத்திடும் பெற்றோரின் கடமையினின்று பெற்றோரை விலக்கிடாது; ஏனெனில், “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்” [R5700 : page 170] (நீதிமொழிகள் 22:6) என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றது.
பல நூற்றாண்டு காலங்களாகப் பிரசங்கிக்கப்பட்ட, போதிக்கப்பட்ட பின்னரும்கூட, வெகு சில பெற்றோர்களே உலகத்தில் தங்களால் கொண்டுவரப்படுகின்றதான பிள்ளைகள் விஷயத்திலுள்ள தங்கள் கடமைகளை உணர்ந்திருப்பதைக் காண்பது உண்மையில் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. வெகு சில தகப்பன்மார்களே தங்கள் மனைவிகள் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கான பாதுகாவலர்களாக, பராமரிப்பவர்களாகத் தாங்கள் இருப்பதை உணர்ந்திருக்கின்றனர்; மேலும் வெகு சில தகப்பன்மார்களே குடும்பத்தின் தாயானவளாய் இருக்கும்படிக்கு, உயர்குணம் உள்ள மற்றும் மனசாட்சிக்குக்கட்டுபட்டு நடக்கும் மனைவியைத் தெரிந்துகொள்வது மாத்திரம் தங்களது கடமையாகவும், சிலாக்கியமாகவும் இராமல், தங்கள் குழந்தைகள் உயர்பண்புகள் பதியப்பெற்றவர்களாகவும், பாவத்தினால் குறைவாய்ப் பதியப்பெற்றவர்களாகவும் பிறக்கத்தக்கதாக கர்ப்பக்காலத்தில் தாயானவளை நல்ல / அனுகூலமான சூழ்நிலைகளின்கீழ் வைத்துக்கொள்வதும், அவளது மனமும், இருதயமும் – தூய்மையாகவும், அன்பானதாகவும், பெருந்தன்மையுடையதாகவும் மற்றும் தேவனுக்கும், நீதியின் கொள்கைகளுக்கும் உண்மையாகவும் காணப்பட அவளுக்கு உதவுவதும் தங்கள் கடமையாக இருக்கின்றது என்று உணர்ந்திருக்கின்றனர். ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் என்று வேதவாக்கியங்கள் சரியாகவே சொல்லியிருக்கின்றன (ஓசியா 4:6).
இனமேம்பாடு கோட்பாடானது எத்திசையிலும் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே ஆனால் எதற்காக? ஆரோக்கியம் மற்றும் ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தெரிவுசெய்தல் எனும் விதத்தில் இக்கோட்பாட்டின் அறிவுரைகளானது முக்கியமானதாய் இருப்பினும், நம்மால் பார்க்கப்பட்டுவரும் கொள்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அதாவது கர்ப்பக்காலங்களில் தாயானவளின் மனமானது, அவளது குழந்தையினுடைய குணங்களை நல்லதாகவோ, கெட்டதாகவோ பதியபண்ணுகின்றது எனும் கொள்கையுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இனமேம்பாடு கொள்கையானது முக்கியமற்றதாகுகின்றது. தாயானவளால் பூரணமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதுதான்; எனினும் அவள் தன் சொந்தக் குறிக்கோள்களை உயர்வானதாகவும், உண்மையானதாகவும், அசைவுறாததாகவும், தூய்மையானவைகள், சிறந்தவைகள் மற்றும் நன்மையானவைகள்மீது பதியபெற்றதாகவும் கொண்டிருப்பாளானால், சந்தேகத்திற்கிடமின்றி, அவளது குழந்தையானது, சரீர ரீதியிலும், அறிவு ரீதியிலும், நல்லொழுக்க ரீதியிலும்கூட வெகு அனுகூலமடையும். போட்டோ டிராமா ஆப் கிரியேஷனில் (Photo-Drama of creation) நாம் ஏற்கெனவே சுட்டிக்காண்பித்துள்ளது போன்று, பூரண தாயாகிய ஏவாளினால் தன் குமாரனாகிய காயீனிடத்தில் பொறாமை, சந்தோஷமின்மை எனும் பண்புகளைப் பதியவைக்க முடியும் மற்றும் பதியவைத்தாள் மற்றும் இதன் காரணமாகவே காயீன் தன் சகோதரனைக் கொன்றுபோட்டார்.