R4823 (page 158)
தங்கள் பிள்ளைகள் குறித்தும் மற்றும் அவர்களைத் தாங்கள் கர்த்தருக்கு அர்ப்பணித்துள்ளதை ஏதேனும் விதத்தில் எப்படிக் காண்பித்திடலாம் என்பது குறித்தும் பல்வேறு தருணங்களில் பெற்றோர்கள் விசாரித்ததுண்டு. சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு நாங்கள் மறுப்புத் தெரிவிப்போம், ஏனெனில் அப்படிக் கொடுப்பது என்பது தேவ வார்த்தைக்கு எதிரானதாய் இருக்கும் – ஏனெனில் ஞானஸ்நானமானது விசுவாசிகளுக்குரியதென்றும், கர்த்தருக்கு ஊழியம்புரிவதற்கு மரணபரியந்தமான அவர்களின் அர்ப்பணிப்பிற்கும், இப்படிச் செய்வதன் மூலம் கர்த்தரோடு அவரது உயிர்த்தெழுதலின் சாயலில் பங்கடைவார்களென்ற அவர்களுடைய விசுவாசத்திற்குமான அடையாளமாய் இருக்கின்றது என்றும் தேவவசனம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
எனினும் எப்படிச் சாமுயேல் குழந்தையாயிருக்கையில் கர்த்தருக்கென அர்ப்பணம் பண்ணப்பட்டார் என்றும், நம்மைக் குழந்தையிலேயே கர்த்தருக்காகவும், அவரது ஊழியத்திற்காகவும் என்று அர்ப்பணித்துள்ளதாக எப்படி நம் பெற்றோர்கள் நம்மிடம் தெரிவித்திருந்தார்கள் என்றும், எப்படி அனைத்து யூத சிறுவர்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு இசைவாக ஒருவிதத்தில் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டனர் என்றும் நாங்கள் நினைவுகூர்ந்தோம். குழந்தைகளை இயேசு ஆசீர்வதிப்பதற்காக அல்லது அவர்கள் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாய், அவர்களுக்காக ஜெபிக்கத்தக்கதாக எப்படிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்தார்கள் என்றும்கூட நாங்கள் நினைவுகூர்ந்தோம். ஆண்டவர் செய்திடுவதற்கு இது ஒரு முக்கியமற்ற வேலை என்று சீஷர்கள் எண்ணி, குழந்தைகளைத் தடைபண்ணினபோதோ, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (மாற்கு 10:14) என்று இயேசு கூறினதையும் நாங்கள் நினைவுகூர்ந்தோம். இனிமேல் நாங்கள் பூரூக்கிலின் சபையில் காணப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையன்று குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வைப் பெற்றிருப்போம் என்று நாங்கள் அறிவிப்புக் கொடுத்தோம். ஏதேனும் சபைகளை நாம் சந்திக்க வரும் தருணங்களில், அதுவும் அது பொதுக்கூட்டங்களாக இல்லாத தருணங்களில், இச்சேவை விரும்பப்படுகிற பட்சத்தில் நிறைவேற்றவும் படலாம்.
இந்த ஒரு நிகழ்வானது பெற்றோர்கள் மீதும், குழந்தைகள் மீதும் அனுகூலமான தாக்கத்தைப் பெற்றிருக்கும் என்பதும், பெற்றோர்களிடத்தில் அவர்களது பொறுப்புகளைப் பதியபண்ணுகிறதாகவும் இருக்கும் என்பதும் எங்களுடைய அபிப்பிராயமாக இருக்கின்றது. குழந்தைகள் இப்படித் தேவனுக்குப் பொதுப்படையாக எல்லார் முன்னிலையிலும் முறையாய் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் உண்மையானது, பெற்றோர் தங்கள் கடமைகளை நிறைவேற்றிடுவதற்கு உதவிடும் மற்றும் பிள்ளைகள் தாங்கள் இப்படியாகத் தங்களுடைய பெற்றோர்களினால் திவ்விய பராமரிப்பினிடத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மை பற்றின அறிவிற்கு வருகையில், இது பிள்ளைகளுக்கும் உதவியாய் இருக்கும்.
இப்படிச் செய்வது / இந்நிகழ்வானது ஒரு சட்டமாகும் என்றோ, கடமையாகும் என்றோ, மரபு வழக்கம் என்றோ புரிந்துகொள்ளப்படக்கூடாது. இப்படிச் செய்ய விரும்புபவர்களுக்கான சௌகரியத்திற்கு மாத்திரமே இது ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையானது ஒரே நபரால் மாத்திரம்கூடச் செய்யப்பட வேண்டியதில்லை. சத்தியத்தின் எந்த ஓர் ஊழியக்காரனும், குழந்தையினுடைய பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, காரியங்களை அனைவர் முன்னிலையிலும் அறிவித்து, திவ்விய ஆசீர்வாதத்திற்காக வேண்டிடுவது தகுதியானதே.