R5167 (page 26)
“நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.” (1 தெசலோனிக்கேயர் 4:12)
வீண் அலுவற்காரர் என்பவர், தனக்குச் சம்பந்தமில்லாத மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுபவர் ஆவார். இத்தகையவன் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கிடுவதும், அவர்களை விமர்சிப்பதும், விசாரணைச் செய்வதும், கண்டிப்பதும், கடிந்துகொள்வதும் தன் கடமை என்று கற்பனைப்பண்ணிக்கொள்கின்றான். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவரின் கடமை என்ன என்பதைத் தீர்மானிப்பதற்குப் பொன்னான பிரமாணமானது மிகவும் உதவிக்கரமாய் இருக்கின்றது. கர்த்தருடைய இக்கட்டளையானது வீண் அலுவல் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தடைப்பண்ணுகின்றதாய் இருக்கின்றது. சகோதர அன்பிற்கும், வீண் அலுவலுக்கும் இடையிலுள்ள வித்தயாசத்தினைக் கண்டுகொள்ளத்தக்கதாகப் புதுச்சிருஷ்டியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் தன் மனசாட்சியினைப் பயிற்றுவிக்க வேண்டும் மற்றும் தன் ஒவ்வொரு வார்த்தை, கிரியை மற்றும் சிந்தையினுடைய விஷயத்தில் நீதி மற்றும் அன்பினுடைய பிரமாணங்களைச் செயல்படுத்திடுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு காரியத்தில், நாம் தனிப்பட்ட விதத்தில் சம்பந்தப்பட்டவர்களாய் இருந்து, அதில் நாம் உரிய கவனம் செலுத்துவோமானால், மற்ற ஜனங்களுடைய காரியங்களில் நாம் தலையிடாமல், நம் சொந்த அலுவலைப் பார்த்துக்கொள்பவர்களாக இருப்போம். ஆனால் கண்டிப்பதும் தலையிட்டுச் சரி செய்வதும் தகுதியானது என்று வேதாகமம் சுட்டிக்காண்பித்திடும் நேரங்களும், இடங்களும், சூழ்நிலைகளும் உள்ளன. பெற்றோர் பிள்ளையைத் திருத்திடலாம்; ஆசிரியர் மாணவனைத் திருத்திடலாம். வீட்டில் நடந்துகொண்டிருக்கும் காரியம் அனைத்தையும் குறித்துப் பெற்றோர் அறிந்துகொள்வது என்பது தலையிடும் காரியமாய் இராது; பள்ளிக்கூடத்தின் காரியங்களை ஆசிரியை அறிவது என்பது தலையிடுதலாய் இராது. எனினும் குடும்பத்தின் அல்லது பள்ளிக்கூடத்தின் அங்கத்தினர்களுடைய தனிப்பட்ட உரிமைகளானது ஒருபோதும் கவனிக்கத் தவறப்படக்கூடாது. பெற்றோர்-பிள்ளை மற்றும் ஆசிரியர்-மாணவன் போன்று, வீட்டின் உரிமையாளரும், வீட்டிற்குக் காரியங்களைச் செய்பவரும் அதே பிரமாணத்தின் கீழ் வருபவர்களாய் இருக்கின்றனர்.
மற்றவர்களைத் திருத்திடுவதற்கு அதிகமான நேரத்தினைச் செலவிடுபவன், அதிலும் இத் திருத்தங்களைச் சரியாயும், நேர்த்தியாயும் செய்பவனாக இருந்தாலுங்கூட, இத்தகையவன் தன்னைக் குறித்து மறந்துபோய்விடுபவனாக இருப்பான் என்பதே கற்றுக்கொள்ள வேண்டிய ஜீவியத்தின் மகா படிப்பினைகளில் ஒன்றாகும். ஒருவன் தன்னைத் திவ்விய ஏற்பாடுகளுக்கு இசைவாகக் கொண்டுவருவதும், அதிலே தன்னைத் தக்கவைத்துக் காத்துக்கொள்வதும்தான், அவனுடைய முதலாம் கடமையாகும்.
தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமெனில், நாம் பரிசுத்த ஆவியினுடைய கனிகளையும், கிருபைகளையும் வளர்த்தி, விருத்தியாக்கிட வேண்டும். இப்பண்புகள் குறித்துக் கற்றறிந்து, தேவ செய்திக்கொடுக்க முடிபவர்களாய் இருந்தும், தங்களுடைய இந்த அறிவை அன்றாட ஜீவியத்தின் காரியங்களில் சரியாய்ச் செயல்படுத்திட முடியாதவர்களாய் இருப்பவர்கள் அநேகர். சாந்தமும், தயவும், அன்பும் தங்களுடைய சொந்தக் காரியங்களில் எதிலே காண்பிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்துகொள்ள முடியாதவர்களாய் இருக்கின்றனர். வார்த்தைகள் மூலமாய் என்பதைவிட மாதிரியின் மூலமாய் நம்மால் சில விஷயங்களை மற்றவருக்கு நன்கு போதிக்க முடியும். ஒருவேளை நீதி மற்றும் அன்பின் கொள்கைகளினால் நாம் ஆளப்படுகின்றோம் என்பதை ஜீவியத்தினுடைய சிறு காரியங்களிலேயே நாம் காண்பிப்போமானால் மற்றும் ஒருவேளை சோதனையின் வேளையில் சாந்தம், தயவு மற்றும் ஆவியின் மற்றக் கனிகளை நாம் வெளிப்படுத்துவோமானால், நன்மைக்கேதுவான நம் செல்வாக்கானது மிகவும் பெரிதாகிடும்.
வாழ்க்கையில் கவனித்ததை வைத்துப்பார்க்கையில் உலகில் பாதிப்பேர் வீண் அலுவல் காரர்களாகவே இருக்கின்றனர் மற்றும் இந்தப் பலவீனத்தின் காரணமாகவே இவர்களுடைய சோதனைகளில் பெரும்பாலானவைகள் வந்துள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் யாரோ ஒருவர் இப்படியாக இருப்பார்; ஒருவேளை கணவன், ஒருவேளை மனைவி, ஒருவேளை பிள்ளை மற்றவர்களுடைய பரிவையும், பெருந்தன்மையையும் சாதகமாக்கிக் கொண்டு, வீட்டை ஆளுகிறவராக இருப்பார். பொதுவாகவே இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அதிகமான அநீதி செய்யப்படுகின்றது. இந்த நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்பவர்கள், “ஒருவேளை அதிகாரத்தினை நான் கையில் எடுக்காவிட்டால், காரியங்கள் சரியாய் நடக்காது” என்று கூறி, தங்கள் நடத்தையினை நியாயப்படுத்திட பெரும்பாலும் முற்படுகின்றனர். இத்தகையவர்கள் தாங்கள் வீண் அலுவலர்களாய் இருக்கின்றனர் என்பதை உணராதவர்களாய் இருக்கின்றனர்.
இத்தகைய நடத்தையானது, தேவனிடத்தில் விசுவாசமின்மையை விவரிக்கின்றதாய் இருக்கின்றது. நாம் நமது கடமையினைச் செய்திட வேண்டும் மற்றும் மீதியைக் கர்த்தரிடத்தில் விட்டுவிட வேண்டும். திவ்விய ஏற்பாடுகளுக்குத் தாங்கள் கீழ்ப்பட்டிருக்காததால் தாங்கள் பெரும் காரியங்களை இழந்துள்ளனர் என்று பிற்காலங்களில் ஜனங்கள் உணர்ந்துகொள்வார்கள். இப்படியாக அநீதியினைச் செயல்படுத்திடும் கர்த்தருடைய ஜனங்களில் உள்ள யார் ஒருவரும், புதுச்சிருஷ்டியென வளர்ச்சிக் காண்பிக்காதவர்கள் ஆவர். மற்றவர்களுடைய உரிமைகளைப் புறக்கணித்துப்போட்டு, தாங்கள் விரும்பினதைச் செய்வதற்குத் தங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்துவது கணவனாகவோ, மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ இருந்தால், அத்தகைய நடத்தையானது திவ்வியப்பிரமாணத்திற்கும், அன்பின் ஆவிக்கும் முரணானதாக இருக்கும். தாங்கள் பெரிய தவறைச் செய்துள்ளதை இவர்கள் என்றோ ஒருநாள் உணர்ந்துகொள்வார்கள். (கொலோசெயர் 3:18-21).
குடும்பத்தின், இல்லத்தின் தலைவன் தான் பெற்றிருக்கின்றதான பொறுப்பினை அடையாளம் கண்டுகொண்டவராய்க் காணப்பட வேண்டும் மற்றும் அப்பொறுப்பினை நிறைவேற்றிடுவது அவரது கடமையாக இருக்கின்றது. தன்னால் வழிகாட்டப்படுபவர்களுடைய நலன்களையும், விருப்பங்களையும் கருத்தில்கொண்டவராக அன்புடன்கூடிய அக்கறையில் காரியங்களை அவர் செய்திட வேண்டும். இல்லத்தில் கணவனுடைய கடமை என்பது திவ்வியப்பிரமாணம் இவர்மேல் வைத்திட்ட கடமையாக இருக்கின்றது மற்றும் இக்கடமையினை நிறைவேற்றிடுவதற்கு இவர் தன் குடும்பத்தினுடைய நலன் கருதி, தன் சொந்த நேரத்தையும், விருப்பங்களையும் தியாகம் செய்வதற்குப் பெரும்பாலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றார். இந்தப் பொறுப்பினை நிறைவேற்றிடுவது என்பது இவருடைய கடமையாக இருக்கின்றது (எபேசியர் 5:25-33; 6:4).
குடும்பத்தில் தாயினுடைய ஸ்தானம் குறித்தும் வேதவாக்கியங்களானது விவரிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த ஸ்தானம் உயர்ந்த ஒரு ஸ்தானமாகும். ஆனால் இல்லத்தில் தலைவனுடைய ஸ்தானத்தின் உரிமையினைப் பறித்துக்கொள்ளும் ஒவ்வொரு ஸ்திரீயும், ஒருவேளை அவளது இத்தகைய தவறான நடக்கையில் சிலகாலம் செழித்தோங்கினாலும்கூட, இப்படிச் செய்வது என்பது அவளுக்கும், அவள் குடும்பத்தினுடைய மேலான நன்மைகளுக்கும் ஊறுவிளைவிக்கின்றதாய் நிச்சயமாயிருக்கும் (1 பேதுரு 3:1-6).
தங்கள் சொந்தக் குடும்பத்தினுடைய அங்கத்தினர்களைக் கையாளும் விஷயத்தில் அநேகர் பொறுமையற்றும், இரக்கமற்றும் காணப்படுகின்றனர்; ஆனால் வெளியாட்களுக்கு ஒழுக்கத்திற்கு மாதிரிகளாகத் தோற்றமளிக்கின்றனர். இவர்கள் மனரீதியான, சரீர ரீதியான விஷயத்தில் தங்கள் குடும்பத்தாரிடத்தில் குறிப்பிட்ட பொறுப்பு ஒன்றினைப் பெற்றிருக்கின்றனர் என்று நாம் இவர்களுக்கு விசேஷமாய் நினைப்பூட்டிடும்போது, இவர்கள் தங்கள் நடத்தைக்கு நியாயம் கற்பித்திடும் விதத்தினைக் காண்பதற்கே நமக்கு வருத்தமாயுள்ளது. தேவனுடைய அங்கீகரிப்பினைப் பெற நாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் – உலகத்தார் மற்றும் சகோதரர்கள் விஷயத்தில் மாத்திரமல்லாமல், தங்கள் சொந்தக் குடும்பத்தினுடைய அங்கத்தினர்கள் விஷயத்திலும்… தாங்கள் எல்லா விதத்திலும் தங்கள் சொந்த அலுவல்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதில் உறுதிக்கொள்ளத்தக்கதாக, தன் நடத்தையினைக் கவனித்துக்கொள்வானாக.