R1671 – உன் வாலிபப்பிராயத்தில்

No content found

R1671 (page 218)

உன் வாலிபப்பிராயத்தில்

IN THE DAYS OF THY YOUTH

“தீங்குநாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்… நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.”

(பிரசங்கி 12:1)

கர்த்தருடைய பிள்ளைகளில் யாரெல்லாம் தங்கள் இருதயங்களை அவரிடம் சிறுபிராயத்திலேயே கொடுத்து, தங்கள் வழிகளை அவரது வழிநடத்துதலுக்கு ஒப்படைத்தார்களோ, அவர்கள் அனைவருமே, தாங்கள் சரியான பாதையில் சிறு பிராயம்முதல் பிரயாணித்ததன் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்குச் சாட்சி பகிர முடிகிறவர்களாய் இருப்பார்கள். நம் மத்தியில் மிகவும் இளையவர்களாய்க் காணப்படும் சிலர் ஜீவியத்தின் பாதைகளில் முதலாம் அடியை எடுத்து வைப்பதைக் காண்கையில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். அத்தகைய இளைய யாத்திரீகர்கள் அனைவரிடமும் நாங்கள் சொல்வதாவது: “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நீங்கள் சிலுவையின் இளம் வீரர்களெனப் புறப்படுகின்றீர்கள்; நீங்கள் தைரியமுள்ள, உண்மையுள்ள போர்ச்சேவகர்களாகக் [R1671 : page 219] காணப்பட வேண்டும் என்றும், போர்ச்சேவகனுடைய முதலாம் கடமை என்பது தளபதியாகிய இயேசு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிவதாகும் என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். நீங்கள் என்ன செய்ய அவர் விரும்புகின்றார் என்பதைக் கூர்ந்து கவனித்து, புரிந்துகொள்ள முயற்சியுங்கள்; பின்னர் உங்களால் அவரது வழிகாட்டுதல்களிலுள்ள ஞானத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறதோ இல்லையோ, அந்த வழிகாட்டுதல்களுக்குக் உடனடியாகக் கீழ்ப்படியுங்கள்” என்பதேயாகும்.

ஒரு குழந்தையானது எத்தனை சிறு பிராயத்தில் தன் இருதயத்தைத் தேவனுக்குக் கொடுத்து, அவருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணிடலாம் என்றுள்ள கேள்வி அநேகரிடம் காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே அல்லது கருத்தரிப்பதற்கு முன்னதாகவே, அவர்களது பெற்றோர்கள் அவர்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்திடலாம் மற்றும் அர்ப்பணித்திட வேண்டும் என்று வேதவாக்கியங்கள் மிகத் தெளிவாய்த் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இப்படியாகப் பிள்ளைப் பிறப்பதற்கு முன்பதாக அதன் மீது செயல்படும் பெற்றோரின் செல்வாக்குகளானது, தேவபக்திக்கு நேரான மனவிருப்பத்தினையும், ஆவிக்குரிய சொத்தையும் பிள்ளைகளுக்கு அளித்திடும். மேலும் அறிவு வளர்கையில் இந்த இயல்பானது / மனப்பான்மையானது வளர்ந்து, பெருகி உயிருள்ள பக்தியாகிடும்… ஆகையால் மிகச் சிறுவயதிலேயே சிறுபிள்ளையானது தேவனுக்கான முழுமையான அர்ப்பணமாகிய பெற்றோரின் உடன்படிக்கையினைப் புரிந்த நிலையில் ஒப்புக்கொண்டிடும். இப்படி எதிர்ப்பார்க்கப்பட வேண்டும் மற்றும் இப்படியாகக் கூடுமானமட்டும் சீக்கிரமாகச் செய்திட வழிநடத்தப்பட வேண்டும்.

கர்த்தருக்குச் சிறுபிராயத்திலேயே அர்ப்பணம்பண்ணினவர்கள் குறித்த அநேகம் குறிப்பிடத்தக்க உதாரணங்கள் வேதவாக்கியங்களில் நமக்கு இருக்கின்றன. யோவான் ஸ்நானனைக் குறித்துப்பார்க்கையில், அவரது பெற்றோர்கள், “அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்” (லூக்கா 1:6) என்றும், ஜெபங்களுக்குப் பதிலாய் இவர், “தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு” (லூக்கா 1:15) கொடுக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 1:6,15,44,66, 80). இதுபோலவே பவுலும் அவரது பிறப்பு முதற்கொண்டு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தார் (கலாத்தியர் 1:15; அப்போஸ்தலர் 26:4-5) மற்றும் யூத மார்க்கத்திலிருந்து இவர் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மாறிடுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே தேவனுக்கு வைராக்கியமாய்க் காணப்பட்டார் (அப்போஸ்தலர் 22:3-4). இப்படியாகவே தீமோத்தேயுவின் காரியமும் (2 தீமோத்தேயு 1:5; 3:15), சாமுயேலின் காரியமும் (1 சாமுயேல் 1:11, 24-28; 2:11,18-19), மோசேயின் காரியமும் காணப்பட்டது (யாத்திராகமம் 2:1).

இப்படிச் சிறுபிராயத்திலேயே கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள், பிற்காலங்களில் அநேகருக்கு இன்னலையும், சிரமத்தையும் கொண்டுவந்திட்டதான அநேகமான கண்ணிகளிலிருந்து, அநேகமான சிக்கல்களிலிருந்து தப்பிடுவார்கள். மனம்போன போக்கில் ஜீவிப்பதன் காரணமாய் எப்போதும் வரும் கசப்பான அறுவடையினை இத்தகையவர்கள் அறுத்திட வேண்டியதில்லை இவர்கள் தேவபக்தியான ஜீவியங்களை ஜீவிப்பது என்பதைத் தங்கள் சுபாவ இயல்பிற்கு மிகவும் எதிரான ஒன்றாக உணர்வதில்லை மேலும் பிற்காலங்களில் இவர்கள் தொடர்ச்சியான சுயக்கட்டுப்பாட்டின் காரணமாகவும், சுயஅடக்குதலின் காரணமாகவும் பலமான குணலட்சணத்தைப் பெற்றிருப்பார்கள்; மேலும் நீண்ட காலமாய்த் தேவனுடன் நெருங்கிக் காணப்பட்டதின் ஆசீர்வாதமான அநுகூலங்கள் மற்றும் அவரது வார்த்தைகள் மற்றும் அவரது கிருபையான ஏற்பாடுகளின் வழிநடத்துதலின் ஆசீர்வாதமான அநுகூலங்கள் அனைத்தையும் அடைவார்கள்.

“தீங்கு நாட்கள் வராததற்குமுன்பு… உன் வாலிபப்பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை” என்ற அறிவுரை எவ்வளவு ஞானமுள்ளதாய்க் காணப்படுகின்றது. வாலிபப்பிராயத்திலேயே தங்கள் வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, தங்கள் பாதைகளை அவர் வழிநடத்தும்படியாக அவரை நம்பினவர்களுக்குக் கசப்பான ஏமாற்றம் மற்றும் விரக்தியின் அந்தப் பொல்லாத நாட்கள் ஒருபோதும் வருவதில்லை. கர்த்தருடைய வழிகள் இன்பமான வழிகள் மற்றும் அவரது பாதைகள் சமாதானமானவைகள் ஆகும். கர்த்தருடைய வழிகள் எவ்விதத்திலும் சுலபமான, எளிமையான வழிகளல்ல, ஆனாலும் அவை எப்போதும் [R1672 : page 219] இன்பமானவைகளும், சமாதானமானவைகளுமாகும்; ஏனெனில் “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று சொன்னவர் ஆறுதல்படுத்துவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் எப்போதும் கூடவே காணப்படுகின்றார்; அவரை அன்புகூருகிறவர்களும் – அவரது நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுமானவர்களுக்குச் சகலத்தையும் நன்மைக்கேதுவாய்ச் செய்யப்பண்ணிடுவதற்கு எப்போதும் கூடவே காணப்படுகின்றார்.

அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களாகக் காணப்பட்டு, தங்கள் பராமரிப்பின்கீழ்க் குழந்தைகளையும், வாலிபர்களையும் பெற்றிருப்பவர்கள் – தங்கள் சொந்த அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியங்களின் செல்வாக்குகள் பிள்ளைகளைச் சுற்றிக் காணப்படச் செய்வதன்மூலமும், தாங்கள் அறிந்திருக்கும் சத்தியத்தினாலும், தங்கள் அனுபவங்களினாலும், கணிப்பினாலும் கொடுக்க முடிகிற அத்தகைய அறிவுரைகளைக் கொடுப்பதன்மூலமும், அவர்களது நடத்தையை வனைந்திடும் விஷயத்திலும், அவர்களைக் கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்திடும் விஷயத்திலும் அதிகம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றனர். இத்தகையப் பிரயாசங்களானது சரியாய்ச் செய்யப்பட்டால், இது வாலிபர்களில் வீணாய்ப் போய்விடுவதில்லை.

உங்களது முன்மாதிரி மற்றும் போதனைகள் மூலம், அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசிகளுக்கும், உலகத்தாருக்கும் இடையில் எத்தனை தெளிவாய் வரையறை உள்ளதென்பதையும் – உலகத்தோடு எந்த இணைந்துபோகுதலும் இல்லை என்பதையும் – அதாவது கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது உலகத்தையும், அதன் ஆசைகளையும், அதன் களியாட்டங்களையும், அதன் இன்பங்களையும், தோழமையையும் துறந்துவிடுவதாயிருக்கும் என்பதையும் பிள்ளைகள் காண்பார்களாக. உலகப்பிரகாரமான இன்பங்களில் ஒன்றுமே இல்லை என்பதை அவர்கள் காண்பார்களாக; மேலும் மாய்மாலங்களை நாடித்தேடித் செல்கிறவர்கள் அடையும் அதிருப்தி மற்றும் அமைதியின்மை குறித்தும், கிறிஸ்துவைப் பின்பற்றும்படிக்கு உலகை விட்டுவந்தவர்களின் சந்தோஷமும், சமாதானமும் குறித்தும் பிள்ளைகளுடைய கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கர்த்தர் நம்மை எப்படிக் கிருபையாய் வழிநடத்தினார் என்பது குறித்தும், நம் ஜீவியத்தினுடைய பல்வேறு திருப்புமுனைகளில் எங்கெல்லாம் நல்ல மேய்ப்பனுடைய அன்பான கோலானது தவறான பாதைகளில் அலைந்து திரிவதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டது என்பதுகுறித்தும், ஒரு காலத்தில் எப்படி நாம் இப்படி அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, அவரது இரக்கமானது பரிவோடு நம்மைத் தேடிவந்து, நம்மைத் திரும்பவும் மந்தைக்குள் கூட்டிக்கொண்டுவந்தது என்பது குறித்தும், எப்படி அவர் நம்மைத் தீமையினின்று பாதுகாத்தார், எப்படித் துன்பத்தில் நம்மை ஆறுதல்படுத்தினார், அவரது இரட்சிப்பின் சந்தோஷங்களினால் தாகம்கொண்ட நம் ஆத்துமாக்களைத் திருப்திப்படுத்தினார், அவரோடுகூட நம்மைப் பரலோக ஸ்தலங்களில் உட்காரப்பண்ணினார் என்பதுகுறித்தும் மற்றவர்களிடம் கூறிடுவதும் உதவிகரமாய் இருக்கும். [R1672 : page 220]

இந்த உலகத்தின் அற்பத்தனமான காரியங்களினால் மனமானது கவரப்படுவதற்கு முன்னதாக, அது எளிமையாக ஞானமுள்ள, அன்புள்ள இருதயங்களினால் வழிநடத்தப்பட முடியும்; மேலும் சில வருடங்களுக்குப் பின்னர் ஆண்டவருக்குத் துதி உண்டாகும் அளவுக்கு ஐசுவரியமான அறுவடையைக் கொண்டுவந்திடும், இத்தகைய விலையேறப்பெற்ற வாய்ப்புகளானது யாராலும் தொலைத்துப் போடப்படக்கூடாது. எனினும் வளர்ந்துவரும் சந்ததியினருக்கு அறிவுரை வழங்கிடும் குறைவான முக்கியத்துவம் உடைய இந்த வேலையைச் செய்வதற்காக என்று, இந்த யுகத்தில் முதிர்ந்த கோதுமை மணிகளை அறுவடைப்பண்ணிடும் மகா பெரும் வேலையிலிருந்து பரிசுத்தவான்களை விலகப்பண்ணிடுவது எங்களது நோக்கமல்ல; மாறாக அநேகரால் கவனிக்கப்படத் தவறும் வழியோர சிலாக்கியங்களைச் சுட்டிக்காட்டுவதே எங்கள் நோக்கமாகும். அநேகம் அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோர்கள் இந்தச் சிலாக்கியங்களைத் தினந்தோறும் பெற்றுக்கொண்டவர்களாய் இருக்கின்றனர்; வாலிபர்கள் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்திட முடியாது அல்லது அவர்கள் ஆவிக்குரிய நாட்டங்கள் எதுவும் கொண்டிருக்கமாட்டார்கள் எனும் தவறான எண்ணத்தின் காரணமாக, அநேகர் தங்களோடு தொடர்புக்குள் வரும் வாலிபர்கள் முன் தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்க மறந்துபோய்விடுகின்றவர்களாய் இருக்கின்றனர்.

முதலாவதாக வாலிபர்கள் உலகத்தோடுகூடப் பெருமை, பேராசை, அற்பத்தனங்கள், அறிவீனமான காரியங்களிலுள்ள பந்தயத்தில் ஓடிட வேண்டும், பின்னர் அவர்கள் தேவனிடத்திற்கு மனமாற்றப்பட வேண்டும் என்று எண்ணிடுவது மகா தவறாகும். வாலிபர்களைத் தங்களது பராமரிப்பின்கீழ்ப் பெற்றிருப்பவர்களின் கடமையாவது, இத்தகைய செல்வாக்குகளிலிருந்து கூடுமானமட்டும் பாதுகாத்திட முற்படுவதும், உலகமானது அதன் கவர்ச்சிகரமான கண்ணிகளை இவர்களுக்கு முன் விரித்திடுவதற்கு முன்னதாக, இவர்களது நாட்டங்களையும், நம்பிக்கைகளையும் தேவனில் மையம்கொள்ளச் செய்திட இவர்களுக்கு உதவிடுவதும் ஆகும்.

தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுத்தவர்களும், தினந்தோறும் இயேசுவைப் பின்பற்றிட நாடுகின்றவர்களுமான அருமையான சிறுபிள்ளைகள் மற்றும் வாலிபர்கள் அனைவருக்கும் காவல்கோபுரத்திலிருந்து நாங்கள் வாழ்த்துதல் சொல்லி அனுப்புகின்றோம். இயேசுவை அன்புகூருகிறவர்களாகவும், இயேசுவை அன்புகூராத அல்லது அவரைப் பிரியப்படுத்த முயற்சித்திடாத மற்றப் பிள்ளைகள் மத்தியில் இயேசுவிற்காய் நிற்பதற்கு வெட்கப்படாதவர்களாகவும், இராஜ்யத்தின் நற்செய்தியினைத் தங்கள் சக மாணவர்களிடம் கூறுகையில், அவர்களால் விநோதமானவர்களாகக் கருதப்பட்டப்போதிலும், அவர்களால் நகைக்கப்பட்டப்போதிலும் தைரியமாகவும், தேவனுக்கு உண்மையாயும் காணப்பட்டவர்களாகவும் இருக்கும் மிகச் சிறுபிள்ளைகள் சிலரை நாங்கள் அறிந்திருக்கின்றோம். உலகையும் அதன் ஆசைகள், இன்பங்களைத் தைரியமாய்த் துறந்தவர்களாக இருந்து, கர்த்தருக்கென்று தங்கள் ஜீவியங்களை அர்ப்பணம்பண்ணியுள்ள மிக உண்மையுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் சில வாலிபர்களைக் கண்டு நாங்கள் களிகூர்ந்திருக்கின்றோம். எங்களுடைய அலுவலகத்தில் உதவிசெய்கிற சிலரும், வெற்றிகரமாய் ஊழியம்புரியும் தொகுதி விநியோகிப்பாளர்களில் அநேகரும் வயதில் இளையவர்களாகவே காணப்படுகின்றனர்.

நல்ல வேலையானது ஆழமாகவும், விரிவாகவும் தொடர்வதாக. கர்த்தருடைய ஊழியங்களில் பெரிதும் உதவப்படுகிற வாய்ப்புகளிலும், நீண்ட ஆயுள்காலங்களிலும் வாலிபர்கள் களிகூருவார்களாக; வயதுவந்தவர்கள் இந்தப் பகற்காலத்தில் தைரியமாயும், ஞானமாயும், கர்த்தருடைய சேனையில் தனித்திறனுள்ள போர் வீரரென வீரமாய் வேலை செய்வார்களாக; வயதான யாத்திரீகர்கள் திவ்விய சத்தியம் எனும் கோலின்மீது சாய்ந்து, அதன் உறுதியில் களிகூர்ந்து, மற்றவர்களுக்கு வெளிச்சமாக நிற்பார்களாக் மேலும் ஓட்டத்தின் இறுதியில் “நல்லதொரு போராட்டம் போராடினேன்; விசுவாசத்தினைக் காத்துக்கொண்டேன்” என்று சொல்ல முடிகிறவர்களாக இருப்பார்களாக.