R2665 (page 216)
மத்தேயு 18:21-35
இந்தப் பாடமானது கர்த்தருடைய சிறியவர்களை இடறச் செய்வதற்கு எதிராய் விழிப்பாய் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த இயேசுவின் முந்தின போதகத்தினுடைய தொடர்ச்சியாகவே இருக்குமெனத் தோன்றுகின்றது. முந்திய பகுதியினுடைய அறிவுரைகளை அப்போஸ்தலனாகிய பேதுரு உடனடியாகச் செயல்முறைப்படுத்திட முயற்சித்ததாகத் தெரிகின்றது மற்றும் மனம்திரும்பி வரும் சகோதரனை எத்தனை தரம் மன்னிப்பது தன்னுடைய கடமையாக இருக்கும் என்ற அவரது கேள்வியே… மன்னிப்புக்குறித்தப் பாடம் ஒன்றினைக் கொடுத்திடுவதற்கு நமது கர்த்தருக்கு வாய்ப்பினை அருளினதாய் இருந்தது.
மன்னிப்பின் விஷயத்தில் யூத ரபீக்களுடைய போதனைகளானது… தவறு செய்தவன், தன் பொல்லாத வார்த்தைகள் அல்லது கிரியைகளுக்காய் மனம்வருந்தி, தவறு யாருக்குச் செய்யப்பட்டதோ, அவரிடத்தில் வந்து, தன் தவற்றை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுக்கொண்டால், மூன்று முறைகள் உடனடியே மன்னிப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது. இவர்களது இந்தப் போதனைகளானது யோபு 33:29-ஆம் வசனம் மற்றும் ஆமோஸ் 2:4-ஆம் வசனத்தின் அடிப்படையிலாகும். இது விஷயமான கர்த்தருடைய போதனையானது அநேகம் விதங்களில் இவர்களுடைய போதனைக்கு நேர்மாறாகவே இருந்தது மற்றும் யாருக்கு எதிராய்த் தவறு செய்யப்பட்டதோ, அவரே காரியம்குறித்து விசாரித்திட குற்றம் புரிந்தவரிடம் சென்று அவன் தவற்றை அவனுக்குச் சுட்டிக்காண்பித்துவிட வேண்டும். யாருக்குக் குற்றம் புரியப்பட்டதோ, அவர் இப்படிச் செய்திடுவதற்கு மிகுந்த தாழ்மை அவசியமாகிடும், காரணம் நமது கர்த்தர் கொடுத்துள்ள கட்டளையின்படி குற்றம் புரிந்தவரிடம் செல்வதைக் காட்டிலும், கோபங்கொள்வதும், குற்றம் புரிந்தவரைத் தவிர்த்துக்கொள்வதும் மிகவும் சுலபமானதாயிருக்கும். இது விஷயத்தில் கர்த்தருடைய கட்டளையானது வேறுபடுகின்றது என்றும், மிகவும் பெருந்தன்மையாய்க் காணப்பட்டு மன்னிப்பானது அநேகந்தரம் கொடுக்கப்பட வேண்டும் என்றுமுள்ள அந்தக் கருத்தை அப்போஸ்தலனாகிய பேதுரு கிரகித்துக்கொண்டதாகத் தெரிகின்றது; ஆகையால் ஆமோசினால் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று, நான்கு முறைகளைக் கூட்டி, ஒட்டுமொத்தமாக ஏழுதரமாக்கி, கர்த்தர் தம் பின்னடியார்கள் பெருந்தன்மையுடன் காணப்பட்டு, அவர்களுக்கு விரோதமாய்த் தப்பிதம் செய்தவர்களை ஏழுமுறைகள் மன்னிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றாரா என்று அப்போஸ்தலராகிய பேதுரு கேட்கின்றார். மன்னிப்பு என்பது நடைமுறையில் எண்ணிக்கை இல்லாமல் – ஏழெழுபது தரமட்டும் அருளப்பட வேண்டும் என்று கர்த்தர் கூறினதைக் கேட்டபோது, பேதுருவும், அப்போஸ்தலர் அனைவரும் எப்படி ஆச்சரியமடைந்திருக்க வேண்டும்.
கர்த்தருடைய ஜனங்களாகிடுபவர்கள், அவரது ஆவியில், அன்பின் ஆவியில் பங்கடைபவர்கள்… அந்த ஆவியினால் நிரப்பப்படும் மற்றும் அந்த ஆவியினால் வழிநடத்தப்படும் அளவிற்கேற்ப, மிகவும் தயவுள்ளவர்களாகவும், மிகவும் பெருந்தன்மையுள்ளவர்களாகவும், மிகவும் அன்புள்ளவர்களாகவும் காணப்பட்டு, இதனால் அவர்கள் மனம்வருந்தும் சகோதரனை மன்னிப்பதற்கு விரும்ப மாத்திரம் செய்யாமல்,மன்னிப்பதிலும் மகிழ்ச்சியும் கொள்வார்கள் – ஒலிவ கிளையை முதலாவது நீட்டிடுவதிலும், கூடுமானமட்டும் சீர்ப்பொருந்துவதற்கும், இணக்கமடைவதற்குமான வழியினை தடைகளற்றதாக்கிடுவதிலும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என்பதுதான் கருத்தாம். முழுக்கப் பெருமையினாலும், பொறாமையினாலும், துர்க்குணத்தினாலும், சுயநலத்தின் ஆவி மற்றும் பாவத்தின் மற்ற அம்சங்களினாலும் நிரம்பின நிலைமையிலும், மேலே தயவு மற்றும் கருணையின் மேல்பூச்சு மாத்திரம் காணப்படும் நிலைமையிலுமுள்ள இருதயங்களிலிருந்து, மன்னிப்பின் ஆவியினை மொண்டு எடுக்கையில், அதனோடுகூடக் கொஞ்சம் கசப்பு மற்றும் பகைமையும் கூடவே வரும் மற்றும் இந்தக் கலப்பு மன்னிப்பைக்கூட, மறுரூபப்படாத இருதயத்தினால் மிகவும் தாராளமாய்க் கொடுத்திட முடியாது. ஆனால் துர்க்குணம், பகைமை மற்றும் பொறாமை அற்ற நிலைமையிலும், சகோதர சிநேகம், சாந்தம், பொறுமை, தயவு, சகிப்புத்தன்மை, அன்பு ஆகியவற்றினால் நிரம்பின நிலைமையிலுமுள்ள இருதயத்திலிருந்து, நம்மால் ஒவ்வொரு முறையும் மற்றும் தேவைப்படும் போதெல்லாம் பாத்திரத்தில் மன்னிப்பினை மொண்டு எடுக்க முடியும் மற்றும் அது பொல்லாப்பு, கசப்பு, ஏளனம் முதலிய கலப்பு இல்லாததும், மாறாக தூய்மையான, கலப்பிடமில்லாத, தயவுள்ள, அன்புள்ளதுமான மன்னிப்பாயிருக்கும்.
நம்முடைய பூமிக்குரிய மண்பாண்டங்களில் நாம் பெற்றிருக்கின்ற இந்தப் பரிசுத்த ஆவியானது, ஆரம்பம் துவங்கியே அங்குப் பொங்கி வழிந்திடவில்லை மாறாக அது மேலோட்டமாக மாத்திரம், வளர்த்தி பெருக்கிடுவதற்கான துவக்கமாக மாத்திரம் இருந்தது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். படிப்படியாகப் பரிசுத்த ஆவியானது நம் [R2666 : page 216] இருதயங்களில் பெருகி வழிந்தபோது, அது தவறான ஆவியினை வெளியேற்றினது; ஆகையால் தங்கள் இருதயங்களிலிருந்து திரும்பத்திரும்ப மன்னிப்பினை, அதுவும் தீமையின் கலப்படம் இல்லாத மன்னிப்பினைப் பாத்திரத்தில் மொண்டுகொள்ள முடிகிறவர்கள்… அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் மற்றும் அவரால் போதிக்கப்பட்டவர்கள் என்பதற்கும், அவரது ஆவியினை ஆழமாய்ப் பருகியிருக்கின்றனர் என்பதற்கும், அவர்கள் துர்க்குணம் எனும் புளித்தமாவு நீங்க சுத்தீகரிக்கப்பட்டவர்களாய், சத்தியத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்தரத்திற்குத் தகுதியடைந்தவர்களாய் இருக்கின்றனர் என்பதற்கும் சான்று பகருகின்றனர். கிருபையிலுள்ள இந்த வளர்ச்சியானது, நம்முடைய அர்ப்பணிப்பின் வாக்குறுதியோடு அதன் துவக்கத்தினை உறுதியாய்க் கொண்டிருந்தும், இது ஒரு படிப்படியான வேலை என்றும், இதற்கு நற்கிரியைகளைத் தொடர்ந்து செய்வதும், பழைய சுபாவமும், அதன் தீயப் பண்புகள் தொடர்ந்து சாகடிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அவசியம் என்றும், இப்படியாய் நாம் தினந்தோறும் வளர வேண்டியதான சத்திய ஆவியினுடைய மறுரூபமாக்கும் வல்லமையின் கீழ் நம் மனங்கள் புதுப்பிக்கப்படும் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
நமது கர்த்தரினால் குறிப்பிடப்பட்டுள்ளதான “ஏழெழுபதுதரம்” என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் குறிப்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது, மாறாக எண்ணற்ற அளவைக் குறிப்பதாகவே – அதாவது கர்த்தருடைய ஆவியை உடையவர்கள் எத்தனைதரமும் தீமை செய்கிறவர்களின் மனம்வருந்துதலைக் காண்பதில் மகிழ்ச்சிக்கொண்டு, அவர்களுக்கு மன்னிப்பை அருளிட மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்பதாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கென்று மன்னிப்புடன் எந்தத் தண்டனைகளும் காணப்படாது என்று அர்த்தப்படாது; உதாரணத்திற்குக் குழந்தையைப் பெற்றோர் கையாளுகையில், குழந்தையினுடைய [R2666 : page 217] ஒழுக்கக்கேடானது மன்னிக்கப்படலாம் மற்றும் குழந்தையினுடைய கீழ்ப்படியாமை அல்லது தவறான நடத்தை நிமித்தமான பெற்றோரின் கோபமானது உடனடியே கடந்துபோய்விடலாம்… எனினும் அவ்வப்போது குற்றம் புரிந்துள்ள பிள்ளைக்குச் சில தண்டனைக்கொடுப்பதும் சரியே. பெற்றோருடைய வெறுப்பானது மன்னிப்பை அருளப்பண்ணவிடவில்லை என்பதாக இல்லாமல், மாறாக பெற்றோருடைய விசேஷித்த கடமையானது, குணலட்சணம் உருவாகிடும் விஷயத்தில் குழந்தைக்கு உதவியாக இருக்கும் பாடம் ஒன்றினைப் புகட்டிட அவசியமாக்கியுள்ளது என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளையானவன் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். அம்மாதிரியான தருணங்களில் பெற்றோரின் அன்பானது தயவுள்ளதாகவும், பரிவுள்ளதாகவும் இருந்து, குழந்தைக்குப் பிரயோஜனமாயிருக்கும் விதத்தில் மாத்திரமே – அதாவது கோபத்தினால் இல்லாமல் நீதியைப் படிப்பிக்குதலுக்கு மாத்திரம் தண்டனை வழங்குதல் காணப்படத்தக்கதாகக் கவனமுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். எனினும் இப்படியான திருத்தங்கள் செய்வது என்பது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கடுத்த காரியம் மாத்திரமே ஒழிய, கர்த்தருடைய குடும்பத்திலுள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் விஷயத்தில் அல்ல; சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கவோ, தண்டிக்கவோ கட்டளையிடப்படாமல், ஒருவருக்கொருவர் உதவிடும்படியாகக் கட்டளையிடப்பட்டுள்ளனர் – “காலத்துக்கு முன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்” என்றும், “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்ற இவர்களுக்கான ஆண்டவருடைய வார்த்தைகள் மிக உறுதியாகவும், அழுத்தமாகவும் காணப்படுகின்றது (ரோமர் 12:19).
தேவனுடைய குடும்பத்தில் பரிசுத்தவான்களாகிய, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாக அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும் மற்றும் இப்படியாகவே நடத்தவும்பட வேண்டும். பழைய சிருஷ்டியல்ல, புதுச்சிருஷ்டியே கிறிஸ்துவுக்குள் சகோதரன் ஆவார்; ஆகையால் நாம் புதுச்சிருஷ்டியை அன்புகூர்ந்திடுவோம் மற்றும் சில விதங்களில் பழைய சிருஷ்டியை மிகவும் விரும்பாதவர்களாய் இருப்போம் – அதாவது அழிந்துபோகும் மாம்சத்தினுடைய பலவீனங்கள் மற்றும் அபூரணங்கள் குறித்து அனைவரும் உணர்ந்துகொள்கையிலும், புதுச்சிருஷ்டிகளெனத் திவ்விய சாயலில் வளர்ந்திடும் அளவிற்கேற்பவும், அனைவருமே தங்கள் சொந்த மாம்சத்தில் காணப்படும் குறிப்பிட்ட குறைவுகளின் நிமித்தம், அதன்மீது மரியாதைக் குறைவு கொண்டிருப்போம். ஆகையால் நமக்கு விரோதமாய் ஒரு சகோதரன் எதையேனும் செய்வாரெனில்… அந்தத் தவறான செய்கையானது கிறிஸ்துவுக்குள்ளான புதுச்சிருஷ்டியாகிய சகோதரனால் செய்யப்படவில்லை, மாறாக அவனது அழிவுக்குரிய மாம்சமே அத்தருணத்தில் அதிகாரத்தினைக் கைப்பற்றி, ஒரு சில விதங்களில் அவனைக் குருடாக்கிவிட்டது என்பதே நம் முதலாம் எண்ணமாய் இருக்க வேண்டும். ஆகையால் சகோதரனிடம் கோபங்கொள்வதற்குப் பதிலாக, நாம் அனுதாபங்கொள்ள வேண்டும் மற்றும் நம் இருதயங்களானது அவனுக்காய்ப் பரிவுகொள்ள வேண்டும் மற்றும் அவனுக்கு நன்மை செய்திடவும், அவனது பூமிக்குரிய பாண்டத்தினுடைய பெலவீனங்களை அவன் மேற்கொள்வதற்கு அவனுக்கு நாம் உதவிடவும் வேண்டும் என்று நம் விருப்பமானது பலமாய்க் காணப்பட வேண்டும்.
இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே… குற்றம் யாருக்குப் புரியப்பட்டிருக்கின்றதோ அவர் யாரிடமும் எதையும் சொல்லிடாமல், அமைதலாய்த் தனக்குக் குற்றம்புரிந்து கொண்டிருப்பவரிடத்திற்குச் சென்று, அன்பாய்ச் சம்பாஷணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட காரியத்தின் நிறை, குறைகளைச் சுட்டிக்காண்பித்திட நாடிட வேண்டும் என்பதும், கூடுமானால் சகோதரனை ஐக்கியத்திற்குள்ளும், நீதியான நிலைக்குள்ளும், கர்த்தருடன் இசைவான நிலைக்குள்ளும் கொண்டு வந்து ஆதாயப்படுத்திட வேண்டும் என்பதும் சரியான நடவடிக்கையாய் இருக்குமென்று நமது கர்த்தர் தெரிவிக்கின்றார். ஒருவேளை இதில் பயன் உண்டாகவில்லையெனில், அடுத்தக் கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையும் இரகசியமான ஒன்றேயாகும் – அதாவது நல் இருதயமுடையவர்கள் என்றும், அதிகமான அனுபவம் பெற்றவர்கள் என்றும் கருதப்படும் இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை அழைத்துச்சென்று, அதுவும் அவர்கள் மனங்களில் (யார் மீதும்) தவறான அபிப்பிராயங்களை (முன்கூட்டியே) ஏற்படுத்திட நாம் முற்படாமல், அவர்கள் வழக்கைக் கேட்கவும், யார் தவறு செய்துள்ளனர் என்று ஆலோசனை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். இருவரில் தவறு செய்துள்ளவராகக் காணப்படும் எந்தச் சகோதரனும், வேதவாக்கியங்கள் மற்றும் அன்பின் ஆவியினுடைய அடிப்படையில் சம்பாஷணைப்பண்ணிடும் தனது சக பரிசுத்தவானால் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்; ஆனாலும் ஒருவேளை இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடானது தொடர்ந்து நிலைத்திருந்ததானால் மற்றும் இசைவான நிலைக்குள் கொண்டுவரப்பட முடியாமல் இருக்குமானால், கடைசி ஒரே பிரயாசமாகக் காரியமானது அர்ப்பணிக்கப்பட்டவர்களாகிய சபையார் முன்னிலையில் கொண்டுவரப்பட வேண்டும் மற்றும் சபையாரால் விசாரிக்கப்பட்ட பிற்பாடு, சபை வழங்கியுள்ள தீர்மானமானது இறுதியான தீர்மானமாகக் கருதப்பட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை இக்காரியத்தில் தான் நீதியான தீர்ப்பினைப் பெற்றுள்ளாரா என இருவரில் யாரேனும் சந்தேகித்தால்… ஒருவேளை சகோதர சகோதரிகள் தங்கள் கணிப்பின்படியான தீர்ப்பைக் கொடுத்திருந்தப்போதிலும், ஒருவேளை இவர் அதிகப்படியான தற்பெருமையின் காரணமாய்… தன் பக்கவாதமே சரி என்று எண்ணம் கொண்டிருந்தாலும்… இவர் கர்த்தருடைய ஏற்பாடுகளுக்கு முழுமையாகவும், இருதயப்பூர்வமாகவும் இணங்குவதன் மூலம் தனக்கு நிச்சயமாய் ஆசீர்வாதம் ஒன்று கிடைக்கப்பெறும் என்ற எண்ணத்தினைக்கொண்டு, தன்னை ஆறுதல்படுத்திக்கொள்ளலாம்.
இப்படியாகச் சபையாருடைய தீர்மானத்திற்குக் கீழ்ப்படியும் படிக்குத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் யார் ஒருவரும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார் மற்றும் இது விஷயத்திலுள்ள சபையாருடைய தீர்மானமானது ஆவியினால் வழிநடத்தப்பட்டிருக்கும் என்றும், சத்தியமும், நீதியும் ஜெயங்கொள்ளும் என்றும் அவர் எண்ணலாம் என்று நாம் புரிந்துகொள்கின்றோம். ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் இது உயர்வான தீர்ப்பு என்றும், சகோதரனால் எவ்வளவுதான் தீமை இழைக்கப்பட்டாலும், அவர் சகோதரனோடுகூட உலகத்தின் நீதிமன்றங்களுக்குச் சென்றிடக்கூடாது என்றும் நாம் மறந்துவிடாமல் இருப்போமாக; ஒருவேளை அவனிடத்தில் மன்னிக்கும் ஆவி இருக்குமானால், அவன் கர்த்தர் வழிகாட்டுகிறபடி காரியத்தினை நிச்சயமாய் அமைதலாய் விட்டுவிடுபவனாய் இருப்பான், அதுவும் எவ்வகையான இரக்கமற்ற அல்லது தயவற்ற உணர்வுகளை உள்ளுக்குள் வைத்துக்கொள்ளாமலேயே விட்டுவிடுபவனாய் இருப்பான். இதுவே பரிசுத்தத்தின் ஆவி, அன்பின் ஆவி குடியிருப்பதற்கான விளைவாய் இருக்கும்.
மன்னிக்கும் விஷயத்தில் விசுவாசியான கணவன்கள், அவிசுவாசியான மனைவிகளைக் கையாளுவதை அல்லது விசுவாசியான மனைவிகள், அவிசுவாசியான கணவன்களைக் கையாளுவதை அல்லது விசுவாசியான நபர் தொழில் விஷயங்களில் அவிசுவாசியான நபரைக் கையாளுவதைக்குறித்துப் பார்த்திடலாம்; அதே அன்பின், தயவின், மன்னிப்பின் ஆவிதான் இந்த அனைவரின் விஷயத்திலும் செயல்படும், ஆனாலும் ஒரே மாதிரியல்ல. விசுவாசி, அவிசுவாசியினிடத்தில் தயவோடு காணப்பட வேண்டும் – அவிசுவாசியினிடத்தில் தயவினை எதிர்ப்பார்ப்பதைவிட, அவனே அதிகப்படியான தயவை வெளிப்படுத்துகிறவனாய்க் காணப்பட வேண்டும்; ஏனெனில் அவிசுவாசியானவன் ஒருபோதும் பெற்றிராத பாடங்களையும், அனுபவங்களையும் விசுவாசியானவன் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் பெற்றுக்கொள்கின்றவனாய் இருக்கின்றான்; அவிசுவாசியானவன் என்னவென்று அறிந்திடாத புதிய மனதினை விசுவாசியானவனே பெற்றவனாய் இருக்கின்றான். ஆகையால் விசுவாசியானவன் தன் நடவடிக்கைகளில் நீதியோடு காணப்படுவது மாத்திரமல்லாமல், கூடவே அவனால் கூடுகிறமட்டும் அவன் கருணை, தயவு பாராட்டுகிறவனாகவும், மன்னிக்கிறவனாகவும், மிகவும் எதிர்ப்பார்க்காதவனாகவும் காணப்பட வேண்டும்.
எனினும் ஒருவேளை அவிசுவாசியான கூட்டாளி, ஏமாற்றிடுவதற்கு முற்பட்டால், விசுவாசியான கூட்டாளியோ அவனிடத்தில் தயவின் ஆவியைக் கொண்டிருந்து, ஒருவேளை ஏமாற்றும் வேலை துணிகரமாய்ச் செய்யப்பட்டதாகத் தெரிகையில், குற்றவாளியை இவர் உலகத்தின் நீதிமன்றங்களிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட வேண்டும்; அதுவும் இதைக் கோபத்தின் அல்லது துர்க்குணத்தின் அல்லது பகைமையின் ஆவியில் செய்யாமல், மாறாக கிறிஸ்தவனின் பார்வைக்கு உலகத்தின் சட்டங்களும், ஏற்பாடுகளும் நியாயமானதாகத் தோன்றுவதற்கு ஏற்ப, தீமை செய்பவர்களை ஒழித்துக்கட்டுகிற விஷயத்தில் சமுதாயத்திற்கான தனது கடமையை நிறைவேற்றுதல் எனும் விதத்தில் செய்கிறவனாய் இருப்பான். ஒருவேளை விசுவாசியானவன் குற்றம் புரிந்தவனை முழுமையாய் மன்னித்தும், குற்றவாளியினை உலக நீதிமன்றங்களினுடைய நீதிபதிகளிடத்தில் ஒப்புக்கொடுத்திடுவதற்கு அவசியமாக்கிடாத அளவு குற்றத்திற்கான பொறுப்புக் குறைவாய் இருப்பதாகத் தெரியும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்று விசுவாசியானவன் எண்ணுவானானால், குற்றம் புரிந்தவனுடன், அதாவது தனது நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற அவனுடன் மேலும் எவ்விதமான தொழிலும் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதும் அவனது கடமையாய் இருக்கின்றது என்று எண்ணிட வேண்டும். இப்படிச் செய்வது என்பது மன்னிப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதைக் குறிக்காமல், மாறாக நியாயமான மற்றும் பாராட்டத்தகுந்த விவேகமாக மாத்திரம் இருந்திடும்.
தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் அவிசுவாசிகளுடன் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படக்கூடாது என்று அப்போஸ்தலனால் எச்சரிக்கப்பட்டிருப்பது உண்மையே மற்றும் இது திருமண விஷயத்தில் மாத்திரமல்லாமல், தொழில் கூட்டணிகளுக்கும் பொருந்தும். இதுபோலவே அவிசுவாசியான கணவனோ அல்லது மனைவியோ, விசுவாசியிடமிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தால்… இதை விசுவாசியானவன் நல்வாய்ப்பாகவும், அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டிருப்பதிலிருந்துள்ள தனக்கான விடுதலையாகவும் முடிவு செய்துகொள்ளலாம்; அப்போஸ்தலர் சொல்வது போன்று “ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால்,” அவன் விரும்பும்பட்சத்தில் விவாக ஒப்பந்தத்தை இரத்துச் செய்திட அவனை அனுமதித்திடுங்கள்.