R5640 (page 67)
“அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம் பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக்கடந்துபோவார்.” யாத்திராகமம் 12:23
யூதர்கள் ஆசரிக்கும் பஸ்கா பண்டிகைக் காலம் நெருங்குகிறது. அது இந்த வருடம் (1915) மார்ச் 30-ஆம் தேதி வருகிறது (நீசான் மாதம் 15-ஆம் தேதியானது, மார்ச் 29-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறது). இந்தப் பஸ்கா பண்டிகைக்கு முன்னால் வருகிற ஆட்டுக்குட்டி அடிக்கப்படுதலில் கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்த கவனம் இருக்கிறது. நீசான் மாதம் 14-ஆம் தேதி பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது. அது இந்த வருடம் மார்ச் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறது. நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய நமது ஆண்டவராகிய இயேசுவின் மரணத்தை நினைவுகூருதல் அதே நாளில் ஆசரிக்கப்பட வேண்டும். ஆகையால் நாம் அதை மார்ச் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆசரிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்கின்றவர்களும் இந்த ஒரு காலக்கட்டத்தில், இந்த மிகவும் முக்கியமான நிகழ்வைக் கடமையான விதத்திலும், சடங்காச்சாரமான சம்பிரதாயங்கள் சிலவற்றினாலும் ஆசரித்தாலும், இவ்விரண்டு மதத்தாரிலும், எவருமே இவ்வாசரிப்பினுடைய உண்மையான அர்த்தத்தினை உணராதவர்களாகவே இருக்கின்றனர் என்பதின் நிமித்தம் நாம் மிகுந்த மனவருத்தம் அடைகின்றோம்.
இவர்களுடைய மனங்களானது, அதன் உண்மையான அர்த்தத்தின் விஷயத்தில் விழித்துக்கொள்ளுமானால், உலகம் அறிந்திராத அளவுக்கான ஒரு மத மறுமலர்ச்சி ஏற்படக்கூடும். ஆனால் பரிசுத்த பவுல் குறிப்பிடுவதுபோல, “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அநேகருடைய மனதைக் குருடாக்கினான்” மற்றும் பகுதி திறக்கப்பட்ட புரிந்துகொள்ளுதலின் கண்களையுடைய சிலரும் குருடர்களாகவும், தொலைவில் பார்க்கமுடியாதவர்களாகவும் இருக்கின்றனர் என்று பரிசுத்த பேதுரு விவரிக்கின்றார். இவர்கள் 3500-வருடங்களுக்கும் மேலாக, ஆசரிக்கப்பட்டதான இந்த அனுசரிப்புச் சார்ந்த தேவ ஆழங்களைப் பார்க்கமுடியாதவர்களாய் இருக்கின்றனர். குறைகூறி விமர்சிப்பவர்களாலும்கூட, ஒரு சடங்காச்சாரம் மிக நீண்டகாலமாக ஆசரிக்கப்பட்டு வருகிறது என்றால், உண்மையிலேயே அதற்கு ஓர் அடிப்படை இருக்க வேண்டுமென்று ஒத்துக்கொள்ளப்படுகின்றது. எகிப்தில் அப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருக்க வேண்டும்; பத்தாவது வாதையில் எகிப்தின் முதற்பேறானவர்கள் எல்லாம் அழிந்திருக்க வேண்டும்; இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் எல்லாம் காக்கப்பட்டிருக்க வேண்டும் (அதாவது இரத்தத்திற்குக்கீழாக இருக்க வேண்டுமென்ற கட்டளையை ஆசரித்தவர்கள் அனைவரும் காக்கப்பட்டிருக்க வேண்டும்) இல்லையென்றால் விஸ்தாரமாகப் பரவியுள்ள இந்தச் சடங்காச்சாரம் ஒரு மாயமானதாக இருந்திருக்கும்.
இதன் நிறுவுதல் தொடர்புடைய விஷயத்தில் அனைத்துக் காரியங்களையும் நாம் சொல்லாமல், பின்வருபவைகளை மாத்திரமே சொல்வது போதுமானதாகும்: இஸ்ரயேலர்கள் எகிப்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்; அவர்கள் அடிமைத்தனத்தினின்று விடுதலையாகும்படியான தேவனுடைய ஏற்பாட்டின்படி வேளை வந்தபோது, அவர்களது எகிப்திய எஜமான்கள் அவர்களை அடிமைகளாகவே வைத்திட சுயநலமாய் நாடி, அவர்கள் கானான் தேசத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்க மறுத்தனர். அந்த வருடத்தில் தேவன் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்பது வாதைகளை எகிப்தியர்கள்மேல் அனுப்பினார் மற்றும் எகிப்திய இராஜா, இஸ்ரயேலர்களை விடுவிப்பேன் என்று வாக்குக்கொடுத்து, வாதைகளை நீக்க தேவனிடம் கேட்டபோது, அவரும் அதை நீக்கினார். ஆனால் எகிப்திய இராஜா அந்த வாக்கைக் காப்பாற்றவில்லை. இறுதியில் தேவனுடைய ஊழியக்காரன் மோசே உச்சக்கட்டமாக ஒரு பெரிய அழிவைத் தெரிவித்தார் – அதாவது ஒரே இரவிலே எகிப்தியரின் ஒவ்வொரு குடும்பத்திலும் தலைச்சன் பிள்ளைகள் இறந்துவிடும் என்றும், அதினிமித்தம் எகிப்து முழுவதும், இராஜாவின் வீட்டிலும், ஏழையின் வீட்டிலும் மாபெரிய துக்கம் ஏற்படும் என்றும், இதன் பலனாக இஸ்ரயேலரைப் போக அனுமதிப்பதில் பிரியமாய் இருப்பார்கள் என்றும், ஆம் அவர்கள் போவதற்கும், அவர்களைச் சீக்கிரம் போகும்படிக்கும் துரிதப்படுத்துவார்கள் என்றும், தங்கள் இராஜா இன்னும் தனது இருதயத்தைக் கடினப்படுத்தித் தேவனுடைய கட்டளையைத் தொடர்ந்து எதிர்த்தால், இது எகிப்தின் முழு ஜனங்களுக்கும் மரணத்தைக்கொண்டுவருமென ஜனங்கள் பயப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
முதல் மூன்று வாதைகள் எகிப்தியருக்கும், இஸ்ரயேலர் வாழும் பகுதிகளிலும் பொதுவாக வந்தது. அடுத்த ஆறு வாதைகள் எகிப்தியர் வாழும் பகுதிகளை மட்டும் வாதித்தன. கடைசி பத்தாவது வாதையானது எகிப்தின் முழுமைக்கும் பொதுவாக இருந்தது மற்றும் இஸ்ரயேலர்களுக்கான இடங்களையும்கூட உள்ளடக்கினது; ஆனால் இஸ்ரயேலர்கள் தங்கள் விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் காண்பிக்கும்பொருட்டு ஒரு வயதுக்குரிய ஆட்டுக்குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை வீட்டுவாசல் நிலைக்கால்களிலும், மேற்சட்டத்திலும் தெளித்து, அந்த இரவிலே அதன் மாம்சத்தை, கசப்பானக் கீரையோடும், புளிப்பில்லா அப்பத்தோடும், கையிலே தடிபிடித்துக் கொண்டும், அரையிலே கச்சைக் கட்டிக்கொண்டும் பிரயாணத்திற்குத் தயாராக இருந்து புசிக்க வேண்டும். இன்னும் அந்த இரவிலே எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகளின் மரணத்தையும் முழுமையாக எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். யார் வீட்டுவாசல் நிலைக்கால்களிலும், மேற்சட்டத்திலும் இரத்தம் தெளிக்கப்படவில்லையோ அவர்கள் வீட்டிலும், இந்தச் சங்காரம் எதிர்ப்பார்க்கப்பட வேண்டும்.
இஸ்ரயேலர்கள் பஸ்காவை நியாயப்பிரமாணத்தினுடைய முதலாவது அம்சமாகவும், தங்கள் ஜாதிக்கான மாபெரும் நினைவுகூருதல்களில் ஒன்றாகவும் ஆசரிப்பதற்குக் கட்டளையிடப்பட்டிருந்தனர். ஆகையால் உலகமெங்குமுள்ள யூதர்களாலும் மற்றும் கடவுளைக் கண்டறிவது அசாத்தியம் எனும் கொள்கை உடையவர்களாலும் (agnostics) கூடப் பஸ்காவானது ஓரளவுக்கு ஆசரிக்கப்படுகின்றது என்று நாம் பார்க்கின்றோம். இவர்கள் இன்னமும் பஸ்காவை, முற்காலத்து வழக்கமெனக் கொஞ்சம் மதிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். ஆனால் அறிவுகூர்மையுள்ள மனங்களை உடையவர்களான நமது யூத நண்பர்கள், இந்த அனுசரிப்பினுடைய அர்த்தமென்ன என்று ஒருபோதும் விசாரியாதது விநோதமாய்க் காணப்படுகின்றதல்லவா? பஸ்கா ஆட்டுக்குட்டியானது ஏன் அடிக்கப்பட்டு, புசிக்கப்படுகின்றது? ஏன் இரத்தமானது வீட்டுவாசலினுடைய நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் தெளிக்கப்படுகின்றது? இப்படிச் செய்வதற்குத் தேவன் கட்டளையிட்டுள்ளார் என்பது உண்மைதான்; ஆனாலும் தெய்வீகக் கட்டளைக்குப் பின்னாக உள்ள காரணம், நோக்கம் என்ன? என்ன பாடம், என்ன அர்த்தம் உள்ளது? விவேகமுள்ள தேவன், விவேகமான கட்டளைகளைத்தான் கொடுப்பார் என்பது உண்மையே; ஏற்றக்காலத்தில் யேகோவா தேவன் தம்முடைய உண்மையுள்ள ஜனங்கள் அனைத்துக் காரியங்களினுடைய அர்த்தங்களைப் புரிந்துகொள்ளச் செய்வார். ஏன் இந்தக் காரியத்தில் [R5640 : page 68] எபிரெயர்கள் சிரத்தை இல்லாமல் இருக்கிறார்கள்? ஏன் தவறான எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது?
கிறிஸ்தவ மதத்தில் அந்தக் கேள்விக்கான பதில் இருந்தால்கூட, சிரத்தையின்மையால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இதைக்குறித்த சரியானக் காரணத்தையும், தாற்பரியத்தையும் சொல்லமுடியாதவர்களாய் இருக்கின்றனர். யூதனால் தனக்கான ஓய்வுநாள் என்பது இளைப்பாறுதலுக்கான, ஆசீர்வாதத்திற்கான, மற்றும் வேலைகளிலிருந்து, கவலைகளிலிருந்து, மரணத்திலிருந்து விடுதலைக்கான வரவிருக்கிற காலப்பகுதிக்கு நிழலாய் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள முடியுமானால், இதுபோலவே மோசேயின் வாயிலாகக் கொடுக்கப்பட்ட அம்சங்கள் அனைத்தும், “ஏற்றக்காலத்தில்” அருளப்படப்போகின்றதான பல்வேறு ஆசீர்வாதங்களுக்கு நிழலாய்க் காணப்படத்தக்கதாகக் கர்த்தரினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவனால் ஏன் காண முடியவில்லை? பஸ்கா ஆட்டுக்குட்டி, தேவ ஆட்டுக்குட்டியை அடையாளப்படுத்துகிறது என்பதையும், அதன் மரணம் மேசியாவாகிய இயேசுவின் மரணத்தை அடையாளப்படுத்துகிறது என்பதையும் ஏன் எல்லாராலும் பகுத்துணர முடியவில்லை? மேலும் இரத்தம் தெளிக்கப்படுதல் இயேசுவின் மரணத்தின் புண்ணியத்தை விசுவாச வீட்டாருக்குத் தரிப்பித்தலை அடையாளப்படுத்துகிறது என்பதையும் ஏன் பகுத்துணர முடியவில்லை?
இயேசுவே “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக” இருக்கின்றார் என்றும், மனுக்குலத்தார் யாவருடைய பாவங்களுக்காக ஏற்றவேளையில் இயேசுவினுடைய பலியின் புண்ணியம் செயல்படுத்தப்படுவதின் வாயிலாக, மனிதனுக்கான தண்டனை சந்திக்கப்படுதலின் மூலம் உலகத்தின் பாவம் தள்ளுபடியாவது சாத்தியமாகும் என்றும் காண்கிற கண்களை உடையவர்கள் பாக்கியவான்களாவர். இதுவரையிலும் சபை மாத்திரமே இயேசுவினுடைய மரணத்தினாலான புண்ணியத்தினைப் பெற்றிருக்கின்றனர். முழு உலகமும் தெய்வீகத் தயவை இழந்து, துன்பம், வலி ஆகியவற்றுடனுள்ள மரணம் எனும் தெய்வீகத் தீர்ப்பின் கீழ் வந்துள்ளபடியால், இந்தத் தண்டனைத் தீர்ப்பானது (அ) சாபமானது மாற்றிப்போடப்படுவதற்கு முன்னதாக, நீதியானது திருப்திப்படுத்தப்படுவது அவசியம் என்றும், அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோன்று “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக” நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி, “அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராய் மரித்தார்” என்றும் காண முடிந்தவர்கள் மிகுந்த தயவு பெற்றவர்களாய் இருக்கின்றனர். இப்படியாக அவர் ஒரு புதிய வழியை, நித்திய ஜீவனுக்கான ஒரு வழியைத் திறந்து வைத்தார்.
வேதவாக்கியங்களானது கிறிஸ்துவின் சபையை, “முதற்பேறானவர்களின் சபை” என்றும், “தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்கள்” என்றும், தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்கள்” என்றும் அழைக்கின்றது (எபிரெயர் 12:23; யாக்கோபு 1:18; வெளிப்படுத்தல் 14:4). இவ்வார்த்தைகளானது இறுதியில் தேவனுடைய குடும்பத்தில் பிற்பிறப்புகள் என்ற மற்றவர்கள் இருப்பார்கள் என்று, சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; பிற்பலன்கள் இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றது. பொதுவாய்க் கிறிஸ்தவ ஜனங்கள் இந்த வேதவாக்கியங்களைக் கவனிக்கத் தவறிப்போனவர்களாக, அதுவும் இவைகளுக்கு அர்த்தம் பொருத்தும் விஷயத்தில் தவறிப்போனவர்களாக இருந்து, வேதாகமத்தில் முதற்பலன்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள் என்றும், பிற்பலன்கள் இல்லை என்றும் நம்புகிறவர்களானார்கள். ஆனால் பஸ்கா நிழலானது, இஸ்ரயேலர்கள் அனைவரையும் இரட்சிப்பதே தேவ நோக்கமாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக இஸ்ரயேல் ஜாதியானது, தேவனுடன் இசைவிற்குள் வந்து, வாக்களிக்கப்பட்ட தேசத்தில் நித்திய ஜீவனை அருளப்பெறுகின்றவர்களாகிய மனுக்குலம் யாவருக்கும் அடையாளமாய் இருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
இரண்டு கடந்துபோகுதல்கள் இருப்பதை நாம் கவனிப்போமாக – முதற்பேறானவர்களை மாத்திரமே கடந்துபோகுதல் என்பது முதலாவதாகும்; தெய்வீக வல்லமையின் மூலமாக ஒட்டுமொத்த [R5641 : page 68] இஸ்ரயேல் ஜாதியும் அற்புதகரமாக விடுவிக்கப்பட்டு, செங்கடலின் வழியே நடத்திச்செல்லப்பட்டபோது, மற்றொன்று நிகழ்ந்தது; செங்கடலில் வழியானது காற்று மற்றும் அலைகளின் அழுத்தம் காரணமாக அவர்களுக்கென்று விசேஷமாக ஆயத்தப்படுத்தப்பட்டது. அவர்கள் வெட்டாந்தரையில் நடந்து, கடந்துசென்றனர் மற்றும் இரட்சிக்கப்பட்டனர்; ஆனால் இரண்டாம் மரணத்திற்குள் இறுதியில் போகப்போகிறவர்களுக்கு அடையாளமாக பார்வோனின் சேனைகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். செங்கடலில் நடந்த கடந்துபோகுதலானது, கர்த்தருடன் இசைவிற்குள் வருவதற்கும், அவரைத் தொழுதுகொள்வதற்கும் விரும்புகிற ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும், அதாவது இஸ்ரயேலின் பாகமாகும் அனைவரும், பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையினின்று இறுதியில் விடுவிக்கப்படுவதைச் சித்தரிக்கின்றதாயிருக்கின்றது; ஏனெனில் இஸ்ரயேலரில் ஒருவர்கூட, எகிப்திய அடிமைத்தனத்தில் விட்டுவரப்படவில்லை.
செங்கடலில் நடந்த அந்தக் கடந்துபோகுதலை நாம் இங்கு ஆராயவுமில்லை; இதன் நிஜத்தையும் நாம் இப்பொழுது ஆசரிக்க இருக்கவுமில்லை. இல்லை; முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலுக்கான (அ) தப்புவிக்கப்படுதலுக்கான நிஜத்தையே நாம் ஆசரிக்கிறோம். எல்லாருடைய விடுதலையும், இந்த முதற்பேறானவர்களின் இரட்சிப்பைச் சார்ந்திருந்தாலும், முதற்பேறானவர்கள் மட்டுமே ஆபத்தில் இருந்தார்கள். இதற்கு இசைவாய் இருக்கிற அனைத்து வேதவாக்கியங்களோடு இதைப் பொருத்திப்பார்க்கும்போது, தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்களாகிய, முதற்பேறானவர்களின் சபை மாத்திரமே தற்காலத்தில் காக்கப்படுகின்றனர் இரத்தத்தின் கீழிருக்கும் இவர்கள் கடந்துபோகப்படுகின்றனர். பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று உண்மையான மகாபெரிய மோசே விடுவிக்கும்போது, அவரைப்பின்பற்ற விரும்புகிறவர்களாகிய மீதமுள்ள மனுக்குலத்தார், இப்போது ஆபத்தில் இல்லை; பரலோகத்தில் பேரெழுதப்பட்டிருக்கிற முதற்பேறானவர்கள் மாத்திரமே இப்போது ஆபத்தில் இருக்கிறார்கள்.
மனுக்குலத்திலிருந்த முதற்பேறானவர்களாகிய சபை, சந்ததியிலுள்ள மீதமானவர்களுக்கு முன்னதாகவே தங்கள் அடிமை நிலைமைக்குறித்தும், விடுதலைக்கான தங்களுக்குள்ள அவசியத்தைக்குறித்தும், தேவன் தமது நல்வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் தங்களுக்கு நிறைவேற்ற விருப்பமுள்ளவராய் இருக்கின்றார் என்பது குறித்துமான உணர்ந்துகொள்ளுதலின் விஷயங்களில், தங்களது புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பெற்றவர்களாய் இருக்கின்றனர். இன்னுமாக இவர்கள் தேவ கிருபைக்கு இணங்கி, அவருக்கும், அவரது ஊழியத்திற்குமெனத் தங்களையே முழுமையாய் அர்ப்பணம்பண்ணி, இதன் பலனாகப் பரிசுத்த ஆவியினால் ஜெநிபிக்கப்படுகின்றார்கள். இவர்கள் விஷயத்தில் ஜீவனா (அ) மரணமா அல்லது விசுவாச வீட்டிற்குள்ளாக, அதாவது தெளிக்கப்பட்ட இரத்தத்திற்குப் பின்பாக இருப்பதா (அ) இல்லையா என்பதுதான் காரியமாய் உள்ளது. இந்த வகுப்பார் இரத்தத்தின் கீழிருந்து வெளியேறுவது என்பது, தெய்வீக இரக்கத்தினை அவமதிப்பதைக் குறிக்கின்றதாயிருக்கும். அது இவர்கள் தெய்வீகக் காருண்யத்தினை வெறுப்பதை/இகழ்வதைக் குறிக்கின்றதாயிருக்கும்; இன்னுமாக ஆட்டுக்குட்டியினுடைய இரத்தம் அடையாளப்படுத்துகின்றதான தேவனுடைய இரக்கத்தில் தங்கள் பங்கினை அனுபவித்தப்பிற்பாடு, அதை இவர்கள் மதிக்காததையும் குறிக்கின்றதாயிருக்கும். இப்படியாய்ச் செய்கிறவர்களைக்குறித்து வேதவாக்கியங்களானது, “பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்” என்றும், “கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று” என்றும் குறிப்பிடுகின்றது (ரோமர் 6:9; எபிரெயர் 10:26). இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய எதிராளிகளாகக் கருதப்படுவர் மற்றும் இவர்களது அழிவுக்கு, எகிப்தினுடைய முதற்பேறானவர்களின் அழிவானது அடையாளமாய்க் காணப்படுகின்றது.
அந்த இரவில் மரித்த எகிப்தியரின் தலைச்சன்களும், கட்டளைக்கு விரோதமாக வீட்டைவிட்டு வெளியே சென்றதினால் மரித்த இஸ்ரயேலர்களும் இரண்டாம் மரணத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்று நாங்கள் சொல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். அதற்கு முற்றிலும் மாறாக, இந்தக் காரியங்கள் எல்லாம், சுவிசேஷ யுகத்தில் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இருக்கிற கிறிஸ்துவின் சபையின் நிஜங்களுக்கும், உயர்தளத்திலுள்ள காரியங்களுக்கும் முன்னடையாளங்களாகவும், உருவகங்களாகவும், நிழல்களாகவும், விளக்கங்களாகவும் இருக்கின்றன என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பும், தேவனுடைய நல்வார்த்தையை ருசிப்பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், இப்படியாக முதற்பேறானவர்களின் சபையின் அங்கத்தினரான பிறகும் மனப்பூர்வமாய்ப் பாவம்செய்தால், மறுதலித்துப்போனால் மனந்திரும்புகிறதற்கேதுவாக நம்மை மறுபடியும் புதுப்பிப்பது கூடாதகாரியமாகும். இதற்குமேலும் தேவன் நமக்காக எதையும் வைத்திருக்கவில்லை. நாம் அவரது இரக்கத்தை அசட்டை செய்தால், நாம் இரண்டாம் மரணத்தில் மரிப்போம். (2 பேதுரு 2:12; யூதா 12)
முதற்பேறானவர்களாகிய சபையானது, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதினாலும், எல்லா விதத்திலும் அதிகமான அறிவையும், சிலாக்கியங்களையும் அனுபவிப்பதாலும் இவர்கள் உலகத்தைக்காட்டிலும் மிகவும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றனர்; ஏனெனில் இவர்கள் மாத்திரமே இப்பொழுது இரண்டாம் மரணத்திற்கான அபாயத்தில் காணப்படுகின்றனர். இதுவே பஸ்கா நிழலினுடைய படிப்பினையாக இருக்கின்றது மற்றும் இது உண்மை கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமே பொருந்துகின்றதாய் இருக்கின்றது.
பாவம் மற்றும் மரணத்தின் இரவு கடந்துபோய், விடுதலைக்கான மகிமையான காலை வருகையில், கிறிஸ்துவாகிய நிஜமான மோசே, தேவனுடைய ஜனங்கள் அனைவரையும், அதாவது தேவசித்தத்தை அறியவரும்போது, அதற்குக் கீழ்ப்படிய, அதைக் கனப்படுத்த, அதை மதித்திட மகிழ்கிற யாவரையும் வழிநடத்திடுவார், இரட்சித்திடுவார். அந்த விடுதலையின் நாளானது, முழு ஆயிரவருட யுகமாகக் காணப்படும் மற்றும் ஆயிரவருட யுகத்தின் முடிவில் எகிப்தின் சேனைகளினால் அடையாளப்படுத்தப்படுகின்றதான பொல்லாத செய்கைக்காரர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அழிவிற்குள்ளாக அறுப்புண்டுப் போவார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல், “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே; ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்று கூறி, நமது கர்த்தர் இயேசுதான் பஸ்கா ஆட்டுக்குட்டி என்று தெளிவாயும், உறுதியாயும் அடையாளம் கண்டுகொண்டார். நமது வீடுகளின் மீதல்ல, மாறாக நமது இருதயங்கள் மீது இரத்தம் தெளிக்கப்படுவது நம் அனைவருக்கும் அவசியமென அப்போஸ்தலன் நமக்குத் தெரிவிக்கின்றார். நாம் ஆட்டுக்குட்டியில் [R5641 : page 69] பங்குகொள்ள வேண்டும்; கிறிஸ்துவினுடைய புண்ணியத்தினை, அவரது பலியின் புண்ணியத்தினை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும்; புதிய யுகமாகிய காலையின்போதான விடுதலைக்கு நாம் பலத்துடனும், ஆயத்தத்துடனும் காணப்பட வேண்டுமானால், நாம் புளிப்பில்லாத அப்பமாகிய சத்தியத்தைப் புசிக்க வேண்டும். இப்படியாக நாம் கிறிஸ்துவை விசுவாசத்தினால் மாத்திரம் தரித்துக்கொள்ளாமல் மாறாக நாம் அதிகமதிகமாக அவரது குணலட்சணத்தைத் தரித்து, நமது இருதயங்களிலும், ஜீவியங்களிலும் அவரது மகிமையான சாயலுக்கு மறுரூபமடைகின்றோம்.
யூதர்கள் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியினைப் புசித்ததுபோன்று, நாம் கிறிஸ்துவைப் புசிக்க வேண்டும். யூதர்களுடைய பசியினைத் தூண்டினதும், பசிக்கு உதவினதுமான கசப்பான கீரைகளுக்குப்பதிலாக, நமக்குக் கர்த்தர் ஆயத்தம் பண்ணினதும், பூமிக்குரியவைகள் மீதான நமது விருப்பங்களை மறந்துபோவதற்கு உதவுவதும், ஆட்டுக்குட்டி மற்றும் புளிப்பில்லாத அப்பமாகிய சத்தியத்தைப் புசிப்பதற்கான தீவிரப் பசியை நமக்குக் கொடுக்கிறதுமான கசப்பான அனுபவங்களையும், சோதனைகளையும் நாம் பெற்றிருக்கின்றோம். நமக்கு எந்த நிரந்தரமான தேசமும் இல்லை என்று நாமும் நினைவில்கொள்ள வேண்டும்; பரதேசிகள் போலவும், யாத்திரிகர்கள்போலவும், கையில் தடி பிடித்துக்கொண்டவர்களாகவும், பரம கானானுக்கும், நமது மீட்பரோடுகூட, தேவனுக்கான இராஜாக்களாக, ஆசாரியர்களாக, இருக்கப்போகிற முதற்பேறானவர்களாகிய சபைக்குத் தேவன் வைத்து வைத்துள்ளதான மகிமையானவைகள் அனைத்தினிடத்திற்குமான நமது பிரயாணத்திற்காக, நாம் அரைக்கட்டிக்கொண்டவர்களாகவும் காணப்பட வேண்டும்.
நமது கர்த்தராகிய இயேசுவும் தாம்தான் பஸ்கா ஆட்டுக்குட்டி என்று அடையாளம் கண்டுகொண்டார். அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக, அவர் தம்முடைய சீஷர்களுடன் மேல்வீட்டறையில் கூடி, “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்றார். யூதர்களாக அவர்கள் காணப்பட்டப்படியால், அந்த இரவில் அவர்கள் பஸ்கா இராப்போஜனத்தைப் புசிப்பது அவசியமாயிருந்தது; அதாவது எகிப்தில் பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டதற்கும், நிழலான பார்வோனிடமிருந்து (இவ்வுலகத்தின் அதிபதியிடமிருந்து) நிழலான முதற்பேறானவர்கள் காப்பாற்றப்பட்டதற்குமான ஆண்டுநிறைவு நாளினுடைய இரவில் மற்றும் உண்மையான பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்படப்போகிறதுமான அதே நாளில் அவர்கள் பஸ்கா இராப்போஜனத்தைப் புசிப்பது அவசியமாயிருந்தது. மேலும் நிழலின் விஷயங்கள் நிறைவடைந்தவுடன், நமது கர்த்தர் இயேசு, பழையவைகளின்மீதே புதிய நினைவுகூருதலை ஏற்படுத்தி, “என்னை நினைவுகூரும்படி (பஸ்கா காலத்திற்கான நினைவுகூருதலை வருடந்தோறும்) இதைச் செய்யுங்கள்” என்றார். (1 கொரிந்தியர் 11:24-25) அதாவது அறிவுக் கண்கள் திறக்கப்படாத உங்கள் அயலாரான யூதர்கள் இதனை நிஜத்தின் கோணத்தில் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் என்னை தேவனுடைய திட்டத்தில் உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியாகவும், உலகின் இரட்சிப்பின் விலைக்கிரயமாக நான் எனது ஜீவனைக் கொடுக்கப்போவதையும் அறிந்த நீங்கள், மற்றவர்களால் உணரப்படாத விதத்தில், இந்தப் பஸ்கா காலத்தைச் சிறப்பானதாக, புனிதமானதாகக் கருதுவீர்கள். இதுமுதல் நீங்கள் இந்த நிழலை ஆசரிக்க மாட்டீர்கள – ஆனால் நிஜத்தை நினைவுகூருவீர்கள்; ஏனெனில் நான் தேவ ஆட்டுக்குட்டியாக மரிக்க இருக்கிறேன் மற்றும் இப்படியாக, தெளிக்கப்படும் இரத்தத்தை முதற்பேறான சபைக்கும் மற்றும் மாம்சத்தை முழு விசுவாச வீட்டாருக்கும் கொடுக்கப்போகிறேன் என்ற விதத்தில் கூறினார்.
எகிப்திலிருந்து விடுதலையானதை நினைவுகூரும்பொருட்டு, பஸ்கா ஆட்டுக்குட்டியை யூதர்கள் புசித்து வந்ததைப்போல, ஆண்டவரின் பின்னடியார்கள் இனிச் செய்யக்கூடாது என்பதை நமது ஆண்டவர் தம்மை ஆட்டுக்குட்டியாகக் குறிப்பிடுவற்குரிய புதிய அடையாளங்களாகிய புளிப்பில்லாத அப்பத்தையும், திராட்சப்பழரசத்தையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் காண்பித்தார். அதுமுதல் அவரது பின்னடியார்கள் அவர் கட்டளையிட்டபடி, தங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய அவரது மரணத்தினை அப்போஸ்தலரின் மரணம்வரை ஆசரித்துவந்தனர். அதன்பிறகு ஒரு விசுவாச வீழ்ச்சியின் மூலம் பெயர்க் கிறிஸ்தவ மண்டலத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு, இருண்ட யுகம் என்று சொல்லக்கூடிய காலம் வந்தது. இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட பஸ்கா இராப்போஜனத்தில் அவரது மரணத்தை ஆசரிப்பது உபயோகத்தில் இல்லாமல் போனபோதிலும், இந்த இருண்ட யுகத்திலும்கூட, இயேசுதான் நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டி என்ற போதனை காணவேபட்டது. ஆனால் இதுவும் ரோமன் கத்தோலிக்க சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட பூசை பலி (Mass) என்னும் பயங்கரமான தேவதூஷணத்தினால் புதைக்கப்பட்டுப்போனது மற்றும் இலட்சக்கணக்கான பெயர்க் கிறிஸ்தவர்களை வஞ்சித்துக் குழப்பியது. இந்தப் பூசைபலியைத்தான் “பாழாக்கும் அருவருப்பு” என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன, காரணம் கர்த்தரின் பிள்ளைகளுடைய விசுவாசம் மற்றும் பழக்கம் மீதான இதன் நாசகரமான செல்வாக்கேயாகும். பூசைபலியானது புராட்டஸ்டண்ட் சபையாரால் கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களுடைய போதகங்களுக்கு எதிரானது என்று பொதுவாக புறக்கணிக்கப்பட்டப்போதிலும், இதினின்று பகுதியளவே தப்பித்துள்ளவர்களான இந்தப் புராட்டஸ்டண்ட் சபையார் இந்தப் பயங்கரமான தப்பறையின் செல்வாக்கினைப் பெரிதும் தங்கள்மீது பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
அநேக புராட்டஸ்டண்ட் சபையார், பூசைபலி என்பது இறுதிவிருந்து என்ற வேறொரு பெயரில் காணப்படும் கர்த்தரின் இராப்போஜனம்தானே என்று கபடமின்றி கேட்கிறார்கள். ஓ! இல்லை, இது முற்றிலும் மாறானது என்று பதில் கூறுகிறோம். கர்த்தரின் இராப்போஜனம் என்பது கல்வாரியில் நிறைவேறிய கர்த்தரின் மரணத்தை ஆசரிப்பதாகும். பூசைபலி செய்யப்படும் ஒவ்வொரு தடவையும், அது பாவத்திற்கான ஒரு புது பலியைக்குறிக்கிறது. குருவானவர் அப்பத்தை ஆசீர்வதிக்கும்போது, அது கிறிஸ்துவைப் புதிதாகப் பலியிடத்தக்கதாக அவருடைய உண்மையான சரீரமாக மாறுகிறது என்று ரோம சபை நண்பர்கள் நம்புகிறார்கள். பாடல் பூசை என்பது ஒரு குறிப்பிட்ட நபரின் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்காகக் கிறிஸ்துவின் ஒரு குறிப்பிட்ட பலியாக இருக்கிறது. சாதாரண பூசை என்பது ஒரு சபையாரின் பொதுவான பாவங்களுக்காக ஏறெடுக்கப்படும் கிறிஸ்துவின் பலியாக இருக்கிறது. கிறிஸ்து கல்வாரியில் செலுத்திய பலி, ஆதி மற்றும் கடந்தகால பொதுவான பாவங்களுக்கான பலியென ரோம சபையார் நம்புகின்றனர்; ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அனுதினமும் செய்கிற பாவங்கள், தவறுகள், களங்கங்கள் ஆகியவைகளைப் போக்குவதற்குக் கிறிஸ்துவின் புதிய பலி அவ்வப்போது தேவைப்படுகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். இப்படியாக அவர்களுடைய இந்தக் கருத்தின்படி, பூசைபலி குறிக்கிறபடி, ரோமன் கத்தோலிக்கர், கிரேக்க கத்தோலிக்கர் மற்றும் குருமாரைச் சேர்ந்தவர்களும் அனுசரிக்கிறபடி, உலகெங்கிலும் கிறிஸ்து புதியதாக ஒவ்வொரு நாளும் பலியிடப்பட்டுக்கொண்டிருக்கிறார். தேவனுடைய பார்வையில் இதுதான் “அருவருப்பு” என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றது. ஏனெனில் கிறிஸ்து இனி மரிப்பதில்லை என்றும், “கிறிஸ்து தம் மூலமாக பிதாவினிடத்திற்கு வருகிறவர்களை ஒரே பலியினாலே என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” என்றும் கூறுகிற வேதவாக்கியங்களைப் பூசைபலி அவமதிக்கின்றது. (ரோமர் 6:9; எபிரெயர் 10:14)
[R5642 : page 69]
நினைவுகூருதல் இராப்போஜனம் மற்றும் பஸ்காவில் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட கல்வாரியின் மகாபெரிய பலியின் மதிப்பை, பூசைபலியில் அடிக்கடி செலுத்தப்படுகிறபலிகள் குறைக்கின்றன அல்லது செல்லாததாக்குகின்றன என்பதை உடனடியாகக் காணமுடிகின்றது. தங்களுடைய பாவங்களை நீக்குவதற்காகப் பூசைபலியைக் காண வந்திருந்தவர்களை, மெய்யான பஸ்காவின் ஆழ்ந்த கருத்துக்களைக் கவனிக்கும்படி நாம் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? புனித வெள்ளி ஆசரிக்கப்படுதல் அறிமுகமாகவே, அதற்கு முன் ஆசரிக்கப்பட்டுவந்த நினைவுகூருதல் இராப்போஜன காரியங்கள் வெகு காலத்திற்கு முன்பே ஓய்ந்துபோனது.
புராட்டஸ்டண்ட் சபையாரைப் பொறுத்தவரை, பூசைபலியை வேதத்திற்கு விரோதமானது என்று ஒதுக்கியபடியால், கர்த்தரின் இராப்போஜனத்தை ஆசரிக்கும்படி திரும்பினார்கள். எனினும் பூசைபலியை அடிக்கடி செய்து பழகி இருந்தபடியால், கர்த்தரின் இராப்போஜனத்தை அடிக்கடி ஆசரிக்கப்படும்போது நன்மை பயக்கும் என்று எண்ணினவர்களானார்கள். ஆகையால் சிலர் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும், சிலர் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், சிலர் மாதம் ஒருமுறையும், சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஆசரிக்கிறார்கள். இதை எத்தனை தடவை ஆசரிக்க வேண்டும் என்பதில் ஒத்தக் கருத்து வராததற்கான இரண்டு காரணங்கள்: (1) நமது கர்த்தரின் மரணம் நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியின் மரணம் என்பதையும், அதன் ஆசரிப்பு நிஜமான பஸ்கா இராப்போஜனம் என்பதையும் கிறிஸ்தவர்கள் பொதுவாகக் கவனிக்கத் தவறுகிறார்கள். (2) “நீங்கள் இதைச் செய்யும்போதெல்லாம்” என்று நமது கர்த்தர் சொன்ன வார்த்தைகளை உங்கள் விருப்பத்தின்படி அடிக்கடி செய்யுங்கள் என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ, “(யூதர்களாகவும், பஸ்காவை ஆசரிக்கும் பழக்கமுடையவர்களாகவும் காணப்படும்) எனது சீஷர்களாகிய நீங்கள் இத்தருணத்தை ஆசரிக்கும்போதெல்லாம் என்னை – சொல்லர்த்தமான பஸ்கா ஆட்டுக்குட்டியையும், நிழலான முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலின் மூலம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்துள்ள நிழலான விடுதலையையும் நினைவுகூரும்படி இல்லை – மாறாக என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற விதத்திலேயே கூறினார்.
வாரம் ஒருமுறை கர்த்தரின் இராப்போஜனத்தை ஆசரிப்பவர்கள் வேதவசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். ஏனெனில் ஆதிக்கால சபையில் வாரத்தின் முதலாம்நாள் கூடி அப்பம் [R5642 : page 70] பிட்டார்கள் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நினைவுகூருதலான இராப்போஜனத்தை அப்பம் பிட்குதலோடு குழப்பிக்கொள்வது ஒரு பெரிய தவறாக இருக்கிறது; ஏனெனில் அப்பம் பிட்குதல் என்பது சாதாரண உணவு சாப்பிடுதலைக் குறிக்கிறது. அது இராப்போஜனம் என்பதாக, குறிப்பிடுவதாக வேதத்தில் எந்தப் பதிவும் இல்லை. திராட்சரசம் எதுவும் இதனுடன் குறிப்பிடப்படவில்லை. அப்பமானது, நமது கர்த்தரின் பிட்கப்பட்ட சரீரத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லப்படவில்லை. ஆதிக்கால சபையில் வாரத்தின் முதலாம்நாள்கூடி நமது ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவது ஓர் உற்சாகமுள்ள சமூக வழக்கமாக இருந்தது. இந்தப் பொதுவான சமூக வழக்கம் சகோதரர்களை இணைக்கவும், சகோதர ஐக்கியத்திலும், அந்நியோனியத்திலும் வளர்க்கவும் உதவியாக இருந்தது. அநேக இடங்களில் கர்த்தரின் ஜனங்கள் இந்த வழக்கத்தை இன்னமும் கடைப்பிடித்து வருகிறார்கள். ஒவ்வொரு கர்த்தருடைய நாளிலும் பிற்பகல் மற்றும் மாலை ஆராதனைகளுக்கிடையே அப்பம் பிட்குதலைப் புரூக்லின் கூடாரத்தின் சபையார் செய்துவருகிறார்கள்; இது தூரத்தில் வசிக்கிற சகோதரர்கள் கர்த்தரின் ஜனங்களோடு ஐக்கியம் வைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு அருளத்தக்கதாகவும் மற்றும் அவர்களின் சௌகரியத்திற்காகவும் செய்யப்படுகின்றது.
நாம் எல்லோரும் அறிந்திருக்கிறபடி யூதர்கள் சந்திர காலக்கணக்கைப் பயன்படுத்தி வந்தார்கள். ஒவ்வொரு அமாவாசையும் அவர்களுக்கு ஒரு புது மாதப்பிறப்பாக இருந்தது. இளவேனிற் சம இரவு பகல் நாளுக்கு அருகாமையிலான அமாவாசைதான் நீசான் அல்லது ஆபீப் மாதம் முதல் தேதியாகும். அந்த மாதம் 15-ஆம் தேதிதான் பஸ்காவின் புளிப்பில்லா அப்பப் பண்டிகை ஆரம்பித்து, ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஏழுநாள் பண்டிகையானது, இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதல் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் அடையாளப்படுத்தினதாய் இருக்கின்றது மற்றும் ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவின் மீட்பின் பலியின் புண்ணியத்தினால் தங்களது பாவங்கள் கடந்துபோகப்படுகிறதை உணருகிறதினால் ஏற்படக்கூடிய முழுமையான சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் அடையாளப்படுத்தினதாய் இருக்கின்றது. ஆகையால் உண்மையான எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்கள் இருதயங்களில் இந்தப் பஸ்கா பண்டிகையின் தொடர்ச்சியான சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஏழுநாள் என்பது பூரணத்தை, முழுமையைக்குறிக்கிறது. இந்தக் காரியத்தை இதே கருத்தில் கவனிக்காமல் யூதர்கள், தொடர்ந்து வருகிற வாரத்தின் செய்கைகளைக்காட்டிலும், பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்டுவதற்கும், அதன் மாம்சம் புசிக்கப்படுவதற்கும் குறைவாகவே கவனம் செலுத்தினார்கள். ஆனால் நமது ஆண்டவர் தம்மை பஸ்கா ஆட்டுக்குட்டியின் நிஜம் என்று அறிவித்தபோதும் மற்றும் அவரது இரண்டாம் வருகைவரை அவரது மரணத்தை அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்கும்படி நம்மை அழைத்தபோதும், அவர் பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக்கூறினார். நாம் அவரது இராஜ்யத்தில் நுழையும்போது, அது நமது ஆசீர்வாதம் முழுமையாய் நிறைவேறுவதைக் குறிக்கிறதாயிருக்கும்.
கிறிஸ்துவின் மரணத்தின் வருடாந்தர ஆசரிப்பை, மற்றப் பலவித காலங்களிலும், வேளைகளிலும், ஒழுங்கற்றும், எந்தவித முக்கியக் கருத்து இல்லாமலும் ஆசரிப்பதற்குப்பதிலாக, அநேகக் கிறிஸ்தவர்கள் இந்தப் பாடத்தை சத்திய வெளிச்சத்தில் பார்ப்பார்களேயானால், மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை இருதயப்பூர்வமாக ஆசரிப்பார்களேயானால், அது அவர்களுக்கு சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். வருடத்திற்கொருமுறை, இதை நீங்கள் செய்யும் போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி செய்யுங்கள் என்று நமது கர்த்தர் கட்டளையிட்டபடி, இந்தக் காரியத்தில் அதிகக் கவனம் செலுத்தி ஆண்டவரின் மரணத்தை ஆசரிப்பதில் சந்தோஷப்படுகிற கர்த்தரின் ஜனங்களில் சிறிய வகுப்பார் உலகெங்கிலும் எழும்பியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆசரிப்பு மனதிற்கும், இருதயத்திற்கும் விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். தெய்வீக நிபந்தனைகளுக்கு எவ்வளவு அருகே வருகிறோமோ, அந்த அளவிற்கு நமது ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும் மற்றும் நமது ஆண்டவரும், தலையுமானவரிடத்திலும், அவரது சரீரத்தின் மற்ற அங்கத்தினர்களிடத்திலும் நாம் நெருங்கி வருவோம்.
இந்த ஆசரிப்பின்நாள் இந்த வருடம் (1915) மார்ச் 28-ஆம் தேதி, 6 மணிக்குமேல் வருகிறது; ஏனெனில் யூதக் கணக்கீட்டின்படி நீசான் மாதம் 14-ஆம் தேதி அப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது. ஆண்டவரின் மகா பெரிய பலியை நினைவுகூரும்படி ஆங்காங்கே இருக்கிற கர்த்தருடைய ஜனங்கள் சிறுகூட்டமாக, குடும்பமாகக் கூடும்படி வலியுறுத்துகிறோம். அது அவருடைய மரணத்தின் வருடாந்தர ஆசரிப்பாக இருக்கின்றது என்ற காரியமே அக்காரியத்தினை, தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாக்குகின்றது.
முதலாம் நினைவுகூருதலின் சந்தர்ப்பங்களை நாம் மீண்டும் நினைவுகூருகின்றோம் அப்பம் மற்றும் திராட்சரசமுள்ள பாத்திரம் ஸ்தோத்திரிக்கப்பட்டது; இவைகள் அவரது பிட்கப்படுகிற சரீரத்தையும், சிந்தப்படுகிற இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றது என்றும், அவரது பின்னடியார்கள் அனைவரும் அவரைப் புசிப்பதன் மூலம் மாத்திரமல்ல, அவரோடுகூடப் பிட்கப்படுவதன் மூலம் பங்குகொள்ள வேண்டுமென்றும், அவரது இரத்தத்தின், பலியின் புண்ணியத்தில் பங்கெடுப்பது மாத்திரமல்லாமல், தாங்கள் பிற்பாடு இராஜ்யத்தில் அவரது கனத்திலும், மகிமையிலும் பங்கடையத்தக்கதாகத் தங்களது ஜீவியங்களை அவரது ஊழியத்திலும், எல்லா விதத்திலும் அவரோடு ஒத்துழைப்பதிலும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் பங்குகொள்ள வேண்டுமென்றும் நமது கர்த்தர் கூறினார். இந்தக் கருத்துக்களானது, நமது கர்த்தருடன் ஒத்து இசைந்திருப்பவர்களுக்கு எத்துணை விலையேறப் பெற்றதாய்க் காணப்படும்!
இந்தச் சிந்தனைகளைச் சிந்தித்தவர்களாக, அவர்கள் யூதாசின் செயல்களை நினைத்துப்பார்க்கலாம். யூதாஸ் அதிகமாய்த் தயவு பாராட்டப்பட்டும், இழிவான ஆதாயத்திற்காக தனது ஆண்டவரை விற்கத்துணிந்தான். மேலும் ஆண்டவருக்குத் துரோகம் இழைக்க தைரியங்கொண்டு, “ரபீ நானோ” என்றும் கேட்டார். ஆண்டவரோடுகூட இருந்தவன் அவரை மறுதலித்து எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கக் கூடிய இப்படிப்பட்ட செயல், அருவருக்கத்தக்கதாகவும், எச்சரிக்கையுடன் நமது இருதயத்தை நிரப்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும் மற்றும் கனத்திற்காகவோ, செல்வத்திற்காகவோ, வேறு எதற்காகவோ, சத்தியத்தையோ அல்லது கிறிஸ்துவின் சரீர அங்கமாகிய எந்த ஊழியக்காரரையோ விற்க நாம் துணிந்திடக்கூடாது.
நினைவுகூருதலின் இராப்போஜனத்தைப் பின்தொடர்ந்ததான துக்கம் நிறைந்த வேளையுள்ள சம்பவங்களைக் கவனிக்கத்தக்கதாக, நாம் மீட்பரைக் கெத்செமனேவுக்குப் பின்தொடர்ந்துபோய், “அவர் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லவரை நோக்கி பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணுவதை” பார்க்கின்றோம். பிதாவின் திட்டத்தினை நிறைவேற்றுவதில், ஏதாகிலும் விஷயத்தில் தவறிப்போய் மற்றும் அதன் நிமித்தமாக உயிர்த் தெழுப்பப்படுவதற்குப் பாத்திரமற்றவராகக் கருதப்பட்டு விடுவாரோ என்று நமது ஆண்டவர் மரணப் பயத்தை வெளிப்படுத்துவதைப்பார்க்கின்றோம். நமது கர்த்தர் தமது அர்ப்பணிப்பின் உடன்படிக்கையை உண்மையாய்க் காத்துக்கொண்டுள்ளார் என்றும், வாக்களிக்கப்பட்டுள்ளதுபோல உயிர்த்தெழுதலை அடைவார் என்றுமுள்ள வாக்குறுதியினால் அவர் ஏதோ ஒரு விதத்தில் ஆறுதல்படுத்தப்பட்டதாக நாம் கவனிக்கின்றோம்.
இதற்குப்பிற்பாடு அவர் பிரதான ஆசாரியன் மற்றும் பிலாத்து மற்றும் ஏரோது மற்றும் மீண்டுமாகப் பிலாத்துவின் முன்னிலையில் எவ்வளவு அமைதியுடன் காணப்பட்டார் என்று நாம் கவனிக்கின்றோம். “தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்திமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தற்காத்துக் கொள்வதற்கெனத் – தம்முடைய வாயைத்திறவாதிருந்தார்.” அவர் முடிவுபரியந்தம் உண்மையாயும், தைரியமாகவும் இருந்ததாகப் பார்க்கின்றோம்; தம்முடைய பாதுகாப்பிற்கெனத் தம்மால் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமானத் தூதரைப் பிதாவிடம் கேட்டிருக்கவும், பெற்றிருக்கவும் முடியும் என்றுமுள்ள அவரது நம்பிக்கையையும் நாம் பார்க்கின்றோம். ஆனால் தம்முடைய பலியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு உதவி வேண்டி விண்ணப்பிப்பதற்குப்பதிலாக, அவர் அவைகளை உண்மையாய்ச் சகிப்பதற்கு வேண்டிய உதவியையே விண்ணப்பித்தார். இங்கு அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியார்களுக்கு எத்தகையதொரு படிப்பினைக் காணப்படுகின்றது!
இன்னொரு பக்கத்தில், அவரது உண்மையுள்ள சீஷர்கள் மத்தியில், மிகுந்த தைரியமானவர்கள்கூட, ஆண்டவரைவிட்டு, ஓடிப்போனார்கள் என்றும், அவர்களில் ஒருவர் தனது துணிவின்மையினால், தனது கர்த்தரையே மறுதலித்தார்! என்றும் நினைவுகூருகின்றோம். நம்மை மீட்டுக்கொண்டவருடன் பாடுபடுவதற்கான நமது விருப்பத்தின், நமது தைரியத்தின், நமது விசுவாசத்தின் அளவுத் தொடர்புடைய விஷயத்தில், நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துபார்ப்பதற்கான எத்தகையதொரு தருணமாய் இது காணப்படுகிறது! எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் (அ) சூழ்நிலையிலும் நமது ஆண்டவரை மறுதலிக்கமாட்டோம் என்றும், நம்முடைய உதடுகளினால் மாத்திரமல்லாமல், நம்முடைய நடத்தையினாலும் அவரை அறிக்கைப்பண்ணுவோம் என்றுமுள்ளதான தீர்மானங்களினால் மனதைத் தாங்கி ஆதரிப்பதற்கு எத்தகையதொரு சிலாக்கியம் இப்படியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
யேகோவா தேவனுடைய ஜனங்களெனத் தங்களைக்குறித்து அறிக்கைப் பண்ணினவர்களே ஜீவாதிபதியைச் சிலுவையில் அறைந்துப்போட்டார்கள் என்ற எண்ணத்தினால் நாம் அதிர்ச்சியடைகின்றோம்! இது மாத்திரமல்லாமல் இவர்களது மதத் தலைவர்கள், இவர்களது பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், பரிசேயர்கள் மற்றும் நியாயசாஸ்திரிகளே இந்தப் பயங்கரமான செய்கைக்குப் பொறுப்பாளிகளாய் இருக்கின்றனர். “உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்பட [R5642 : page 71] வேண்டாம்; அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை நினைவுகூருகின்றோம்.
சத்தியத்திற்கான எதிர்ப்பும், ஒளியைச் சுமப்பவர்களுக்கான துன்புறுத்தலும் இன்று கிறிஸ்தவம் என்று அழைக்கப்படும் உலகத்தின் மிக முக்கியமான பிரதிநிதிகளிடமிருந்து வருவதைக் காண்கையில், நாம் ஆச்சரியமுற வேண்டாம். இந்த உண்மையானது நம்மை எதிர்ப்பவர்களையோ (அ) நமது கர்த்தரை மரணத்திற்கு ஏதுவாய்த் துன்புறுத்தினவர்களையோ பகைப்பதற்கு நம்மை வழிநடத்திடக்கூடாது. இக்காரியம் தொடர்புடையதான அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளாகிய “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்” (அப்போஸ்தலர் 3:17) என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆ, ஆம்! (மத உலகத்தாரின்) இருதயம் மற்றும் மனதின் குருட்டுத்தன்மையும், அறியாமையுந்தான் தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவினுடைய பாடுகள் அனைத்திற்குமான அடிப்படையாகக் காணப்படுகின்றது. இவைகள் தங்களினுடைய தலையானவருடைய உபத்திரவங்களில் குறைவானதை, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் நிறைவேற்றுவதுவரையிலும், இப்பொழுது காணப்படுவதற்குப் பிதா அனுமதித்துள்ளார் (கொலோசெயர் 1:24). சீக்கிரமாகவே நமது அருமை கர்த்தர் கூறியுள்ள பிரகாரமாகவே, இப்பொழுது அவரது பிட்கப்பட்ட சரீரத்தில் பங்கெடுத்து, அவரோடுகூடச் [R5643 : page 71] சத்தியத்தின் ஊழியத்தில் பிட்கப்படுகிறவர்களும், இப்பொழுது பாடுகள் மற்றும் சுயத்தை வெறுத்தல் எனும் அவரது பாத்திரத்தில் பங்கெடுப்பவர்களும், திரைக்கு அப்பால், இராஜ்யத்தில் அவரோடுகூடச் சந்தோஷத்தின் புதிய திராட்சரசத்தைப் பருகுவார்கள். (மத்தேயு 26:29)
அந்த மகிமையான காலையில், உலகைப் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கும் மாபெரும் வேலை ஆரம்பமாகும்; சீர்த்தூக்குதலின் மாபெரும் வேலை, “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் திரும்பக்கொடுத்தலின் காலங்கள்” ஆரம்பமாகும் (அப்போஸ்தலர் 3:21). நினைவுகூருதலின் அனுசரிப்பில் பங்கெடுப்பவர்கள் ஒவ்வொருவரின் மனதிற்கு முன்பாகக் காணப்பட வேண்டிய சிந்தையானது, பரிசுத்த பவுல் அடிகளாரின் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதாவது, “அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;” “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;” “ஏனெனில் அவை அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவமாய் இருக்கின்றது;” “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” (ரோமர் 8:1-8) என்பதேயாகும்.
விலையேறப்பெற்ற இரத்தத்தினுடைய புண்ணியத்தினால் முதற்பேறானவர்களான நம்முடைய பாவங்களைக் கடந்துபோகுதல் குறித்தும், நமது பாக்கியமான கர்த்தருடன், அவரது பாடுகளின், மகிமையின் அனுபவங்களில் நாம் பங்கடைவது குறித்துமான இந்தச் சிந்தனைகளுடன், சோதனைகளும், கஷ்டங்களும் இருந்தாலுங்கூடச் சந்தோஷத்தோடே பஸ்கா பண்டிகையை ஆசரிப்போம். இப்படியாக அவரது பின்னடியார்களென உண்மையாய்த் தொடர்ந்து செய்துவருவோமானால், வெகு சீக்கிரத்தில் கர்த்தரால் ஆதரிக்கப்படுபவர்களை, அதாவது இறுதியில் மகா இராஜாவுக்குச் செவிக்கொடுத்து, அவரை அறிந்துகொண்டு, அவருக்குக் கீழ்ப்படியும் யாவரையும், பாவம் மற்றும் மரணத்தினுடைய ஆளுகையிலிருந்து, எகிப்திலிருந்து, கானானுக்கு நேராய் வழிநடத்திடும் மாபெரும் சிலாக்கியத்தினை நாம் பெற்றுக்கொள்வோம். ஆம், சகோதரர்களே, அப்போஸ்தலரின் வசனத்தின்படி, “நமது பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.”
தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலை நிறுவின தருணத்தின்போது, ஆண்டவர் அப்போஸ்தலர்களுடனான தம்முடைய சம்பாஷணையில் கூறினதாவது: “இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் இராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 26:29). இங்கு நமது கர்த்தர் இரண்டு மகா நாட்களை – பாடுபடுகிற நாளையும் மற்றும் மகிமையின் நாளையும் வித்தியாசப்படுத்துகின்றார். இந்தச் சுவிசேஷயுகமானது பாடுபடுகிற நாளாய்க் காணப்படுகின்றது. ஆயிரவருட நாளானது, மகிமையின் நாளாகக் காணப்படும் மற்றும் இது விசேஷமாக “கிறிஸ்துவினுடைய நாள்” என்று பேசப்படுகின்றது.
திராட்சப்பழரசமானது, சொல்லர்த்தமான பாத்திரமானது, இரண்டு கருத்துக்களைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. திராட்சரச பாத்திரமானது, திராட்சப்பழமானது அதன் ஜீவனை இழந்துபோவதன் காரணமாக உண்டாகுகின்றது. திராட்சப்பழமானது, அதன் தனித்துவத்தை இழந்துபோகின்றதாய் இருக்கின்றது. சாறு பிழிந்தெடுக்கப்படுகின்றது மற்றும் இப்படியாகத் திராட்சப்பழரசமானது பயன்பாட்டிற்கென ஆயத்தம் பண்ணப்படுகின்றது. திராட்சரச பாத்திரமானது திராட்சச்சாறானது திராட்சப்பழம் பிழியப்படுவதை மாத்திரமல்லாமல், இரசத்தின் காரணமாக உண்டாகும் மகிழ்ச்சியையும்கூட அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இப்படியாகவே அடையாளமான பாத்திரத்தில், நாம் பானம்பண்ணும் விஷயத்திலும் காணப்படும். நமக்கு அது நமது இரட்சகருடைய பாடுகளையும், மரணத்தையும் மற்றும் இந்தப் பாடுகளில் அவரோடுகூட நாம் பங்கடைவதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆனால் திராட்சரசமானது, சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையுங்கூட அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் இப்படியான அர்த்தத்தில் வேதவாக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் முந்தின பத்தியில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டதான வார்த்தைகளாகிய திராட்சப்பழரசத்தின் விஷயத்தில், பாத்திரமானது இராஜ்யத்தின் சந்தோஷங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
நமது கர்த்தர் இயேசுவுக்கான பூமிக்குரிய அனுபவங்களினுடைய விஷயத்தில், பிதா அவருக்கு ஒரு குறிப்பிட்ட பாதையை அமைத்து வைத்திருந்தார். இந்தப் பாதையானது, பாடுகள் மற்றும் மரணம் எனும் அவருடைய பாத்திரமாகக் காணப்பட்டது. ஆனால் அவர் இந்தப் பாத்திரத்தில் உண்மையாய்ப் பானம்பண்ணிட்ட பிற்பாடு, அவருக்கு வித்தியாசமான/வேறே பாத்திரம், வேறே அனுபவம், அதாவது கனம், மகிமை மற்றும் அழியாமை கொடுக்கப்படும் என்று பிதா அவருக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். மேலும் அவருடைய பின்னடியாளர்களாகுவதற்கு விரும்புகிறவர்களுக்கும் இதே செய்தியை, அதாவது அவரோடுகூடப் பாடுபட்டார்களானால், அவரோடுகூட மரணம் எனும் அவரது பாத்திரத்தில் பானம் பண்ணினார்களானால், அப்போது அவர்கள் சந்தோஷமாகிய அவரது வருங்கால பாத்திரத்திலும் பங்கடைவார்கள் என்று இரட்சகர் முன்வைக்கத்தக்கதாக, பிதா அவருக்கு அதிகாரம் அளித்தவரானார்.
“தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன், அதை இழந்துபோவான்.” திராட்சரச ஆலைகளினால் அடையாளப்படுத்தப்படுகின்றதான சோதனையான அனுபவங்கள் வாயிலாக நாம் அனைவரும் கடந்துபோக வேண்டும். தெய்வீக ஊழியத்தில், நாம் நமது ஜீவியங்களை ஒப்புக்கொடுத்திட வேண்டும். மனிதன் எனும் விதத்தில் நாம் தடையம் இல்லாமல் போவதற்கும் மற்றும் புதிய சிருஷ்டிகளாகுவதற்கும் வேண்டி, நாம் நம்மை நொறுக்கும் அனுபவங்களுக்குள் ஒப்புக்கொடுத்திட வேண்டும். அவரோடேகூட பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோமே” ஒழிய, மற்றப்படியல்ல. ஆகையால் அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கான அழைப்பை நாம் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். பாத்திரமானது அதன் கடைசிவரை குடித்து முடிக்கப்படாததுவரையிலும், நாம் அடுத்தப் பாத்திரத்தை, அதாவது இராஜ்யத்தினுடைய சந்தோஷங்களாகிய பாத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. நமது கர்த்தர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தபோது, அது அவருக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொணர்ந்ததாய் இருப்பினும், அது அவருக்கு இறுதி தருணம் வரையிலும், அதாவது “முடிந்தது” என்று சத்தமிட்டது வரையிலும், சோதனையான/ துயரம் நிறைந்தவேளை போன்றதாகவே இருந்தது. இப்படியாகச் சபையின் விஷயத்திலும் காணப்படும். நாம் பாத்திரத்திலுள்ள அனைத்தையும் பானம் பண்ணிட வேண்டும்; பாத்திரத்திலுள்ள எதுவும் மீதியாய் வைக்கப்படக்கூடாது.
கிறிஸ்துவினுடைய சரீரமானது, அவர்களுடைய ஓட்டத்தை நிறைவுபண்ணும் போது, கிறிஸ்துவினுடைய பாடுகள் அனைத்துமே நிறைவடைந்துவிடும். நமது கர்த்தர் மகிமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அவருக்குச் சந்தோஷத்தினுடைய புதிய பாத்திரமானது கொடுக்கப்பட்டது. அப்போது தேவனுடைய தூதர்கள் அனைவரும் அவரைத் தொழுதுகொண்டார்கள். சீக்கிரத்தில் நமக்கான சந்தோஷத்தின் பாத்திரமானது, நமக்குக் கொடுக்கப்படும். நித்திரையிலிருந்த பரிசுத்தவான்கள் விழித்தெழுந்து, தங்களுடைய பலனுக்குள் பிரவேசித்து, ஆசீர்வாதத்தின் பாத்திரத்தைப் பெற்றுக்கொண்டபோது, அது மகிமையானதொரு வேளையாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை (வேதாகம பாடங்கள், தொகுதி 3, பக்கங்கள் 290- 301; தொகுதி 4, பக்கங்கள் 865-866 பார்க்கவும்). மேலும், ஆண்டவருடைய வருகையின்போது, உயிரோடிருப்பவர்களாய்க் காணப்பட்டவர்கள் ஒவ்வொருவராய், வீட்டிற்குள் சேர்க்கப்படுகின்றார்கள். நாமும் உண்மையுள்ளவர்களாய்க் காணப்பட்டால், சீக்கிரத்தில் அவர்களோடுகூட இந்தச் சந்தோஷத்தின் பாத்திரத்தில் பங்குபெறுகின்றவர்களாய் இருப்போம் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்துவினுடைய அங்கத்தினர்கள் அனைவரும் திரைக்குப் பின்னாக வருவதுவரையிலும், பூரண ஆனந்தம் அடையப்படாது என்று நாம் நம்புகின்றோம். அப்போது அவரது சிங்காசனத்தில் நாம் பங்கடைந்து, அவரது மகிமையிலும் பங்குபெறுவோம். அப்போது நமது அருமை கர்த்தருடன் இராஜ்யத்தில், புதிய இரசத்தை நாம் பானம்பண்ணுவோம்; ஏனெனில் இதுவே அவரது உண்மையுள்ள பரிசுத்தவான்கள் அனைவருக்குமான வாக்குத்தத்தமாக இருக்கின்றது.
“யூத பலிபீடத்தில் கொல்லப்பட்ட
எல்லா மிருகங்களின் இரத்தமும்
குற்ற மனசாட்சியைத் தணித்திடாது
அல்லது கறைகளை முற்றும் கழுவாது.
“ஆனால் பரம ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து
நமது பாவங்கள் அனைத்தையும் நீக்குகிறார்;
உயர்ந்த நாமமுடையவரின் ஒரு பலி
அவைகளைக் காட்டிலும் விலையேறப்பெற்ற இரத்தம்.
“எனது ஆத்துமா திரும்பிப்பார்க்கிறது
அவர் சுமந்த சுமையை,
அவரது ஜீவனை எனக்காக ஊற்றும்பொழுது
அங்கே பார்க்கிறது அதன் மீட்கும்பொருளை.”