R2771 – கர்த்தருடைய இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2771 (page 72)

கர்த்தருடைய இராப்போஜனம்

THE LORD'S SUPPER

மத்தேயு 26:17-30

“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” லூக்கா 22:19

கர்த்தருடைய இராப்போஜனத்தினுடைய அர்த்தம் மற்றும் அது ஆசரிக்கப்படுவதற்கான சரியான வேளை தொடர்புடைய விஷயத்தில் கிறிஸ்தவ மண்டலம் எங்கும் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது யூதருடைய பஸ்காவுக்கான நிஜமாக நிறுவப்பட்டது என்ற உண்மையினைப் பெரும்பாலான கிறிஸ்தவ மாணாக்கர்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். பழமை மிக்க சபைகளாகிய ரோமன் மற்றும் கிரேக்க கத்தோலிக்கச் சபைகள், எபிஸ்கோப்பல் சபைகள் முதலான சபைகளில், நமது கர்த்தருடைய மரணத்தை, அதன் ஆண்டு நிறைவு நாளில், ஆண்டுதோறும், நினைவுகூருதலாக ஆசரிப்பதற்கான பிரயாசம் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வாசரிப்பானது, யூதருடைய கணக்கிடுதலின்படி, யூதருடைய முதல் மாதமாகிய நீசான் மாதத்தில், அதாவது யூதர்கள் நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்த நாளாகிய 14-ஆம் தேதியன்று ஆசரிக்கப்பட்டு வந்தது. பின்னரோ நமது கர்த்தருடைய மரணத்தைக் குறிப்பிட்டக்காலப்பகுதியில் வரும் வெள்ளி அன்றும், அவரது உயிர்த்தெழுதலை ஞாயிறு அன்றும், அதாவது புனித வெள்ளி என்றும், ஈஸ்டர் ஞாயிறு என்றும் ஆசரிப்பதற்கு வசதியாகக் கணக்கிடும் முறைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கிறிஸ்வ மண்டலத்தில் பின்வந்த பிரிவினர்கள் மத்தியில், இவ்வழக்கமானது நடைமுறையில் இல்லாமல்போயிற்று மற்றும் அநேகமாக இதற்குக் காரணம், முடிந்தமட்டும் புராட்டஸ்டண்ட் வழக்கங்களுக்கும், ஆசரிப்புக்களுக்கும், கத்தோலிக்க [R2771 : page 73] வழக்கங்களுக்கும், ஆசரிப்புக்களுக்கும் இடையே அதிகமான வேறுபாட்டினைக் காண்பிப்பதற்கேயாகும். இதன்விளைவாகப் பெரும்பான்மையான புராட்டஸ்டண்டினர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை, யூதருடைய பஸ்காவுடன் தொடர்புப்படுத்திப்பார்க்கவும், வருடந்தோறும் நீசான் மாதம் 14-ஆம் தேதியில் ஆசரிக்கப்படுகின்றதான யூதருடைய ஆட்டுக்குட்டியின் மரணமானது, இந்நிழலுக்கு நிஜமாகவும், இந்நிழலினுடைய நிறைவேறுதலாகவும் காணப்படுகின்றதான நமது கர்த்தர் இயேசுவினுடைய மரணத்திற்கு நிழலாகக் காணப்படுகின்றது என்ற உண்மையினை உணர்ந்துகொள்வதற்கும் தவறிப்போகின்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

இப்படியாய்க் கவனிக்கத் தவறிப்போன விஷயத்தில் இவர்கள் முற்றிலும் பொறுப்பிலிருந்து விலகமுடியாது; ஏனெனில் பழமைமிக்க சபைகளானது நமது கர்த்தருடைய மரணத்தை, அதன் ஆண்டுநிறைவு நாளில் கொண்டாடினப்போதிலும், இவர்கள் நினைவுகூருதலுக்கு ஒத்திருக்கின்ற, ஆனால் வேதவாக்கியங்களினால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நிழலுக்குப் பொருந்தாததுமான மற்றச் சடங்குகளை அறிமுகப்படுத்தினார்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, சாதாரணமான கத்தோலிக்கன் ஒருவனுடைய மற்றும் புராட்டஸ்டண்டினன் ஒருவனுடைய மனதிற்கு, கத்தோலிக்க பூசைபலியானது, நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலாக மாத்திரமே தோன்றுகின்றது; ஆனால் இது, அதனுடைய உண்மையான அர்த்தம் இல்லை. திருப்பலியானது, இறையியல் கண்ணோட்டத்தின்படி சரியாய்ப் புரிந்துகொள்ளப்பட்டால் அது ஒரு புதிய பலியே ஒழிய, கல்வாரியில் இடம் பெற்றதான ஒரே பலியினுடைய நினைவுகூருதலல்ல. இதைக் கர்த்தருடைய இராப்போஜனத்தின் அடிக்கடியான ஆசரிப்பு என்று தவறாய்ப் புரிந்துகொண்ட புராட்டஸ்டண்டினர்கள், ஆரம்பக்காலங்களிலிருந்தே, நினைவுகூருதல் இராப்போஜனமானது, வசதிக்கேற்ற காலங்களிலெல்லாம் ஆசரிக்கப்பட்டு வருகின்றதென நம்புகிறவர்களாகிவிட்டனர். எனினும் இக்காரியம் தொடர்புடைய விஷயத்தில் புராட்டஸ்டண்டினர்கள் மத்தியில் பல்வேறு வகையான கருத்துக்கள் நிலவுகின்றதை நாம் காண்கின்றோம்; ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புவதற்கேற்ப, நலமானது என்று எண்ணுகிறதற்கேற்ப, சிலர் வாரந்தோறுமாகவும், சிலர் மாதந்தோறுமாகவும், சிலர் காலாண்டுதோறுமாகவும் ஆசரித்து வருகின்றனர்.

இம்மாதிரியான ஒழுங்கீனங்களானது, கர்த்தரினாலோ (அ) அப்போஸ்தலர்களினாலோ ஏற்படுத்தப்படவில்லை என்றும், நமது கர்த்தர் இதை இதற்கே உரிய ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் நிறுவினார் என்றும், “இதை….. போதெல்லாம்” என்ற வார்த்தைகளானது அப்பத்தையும், பாத்திரத்தையும் மாத்திரம் சுட்டிக்காட்டாமல், இந்நிகழ்வு ஆசரிக்கப்படுகின்றதான வேளையையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது என்றும் நாம் நம்புகின்றோம். திருப்பலிப்பற்றின ரோமன் கத்தோலிக்க உபதேசத்தைக்குறித்து விவரமாய் விளக்குவதற்கு நாம் இங்கு முற்படப்போவதில்லை, மாறாக திருப்பலியானது எந்த விதத்திலும், கிறிஸ்துவினுடைய உண்மையான பலிக்கான நினைவுகூருதல் ஆசரிப்பு இல்லையென்று நாம் ரோமன் (அ) கிரேக்க கத்தோலிக்கர்களுக்கு மிலேனியல் டாண் தொகுதி-111-இல், 98-104 வரையிலான பக்கங்களில் குறிப்பிட்டதை மாத்திரமே நம்முடைய வாசகர்களுக்கு இங்கு மேற்கோளிடுகின்றோம். கடந்தக் காலப் பாவங்களுக்குக் கிறிஸ்துவினுடைய முதல்பலியானது போதுமானதாய் இருக்கின்றதேயொழிய, அதற்குப் பின்னுள்ள பாவங்களுக்குப் போதுமானதல்ல என்றும், ஒவ்வொரு தருணங்களிலும் கிறிஸ்துவைப் புதிதாய் உண்டாக்குவதற்கும், ஏதேனும் குறிப்பிட்ட பாவத்திற்கென (அ) பாவங்களுக்கெனக் கிறிஸ்துவைப் புதிதாய்ப் பலிச்செலுத்திடுவதற்கும், முறையாய் ஏற்படுத்தப்பட்டதான கண்காணிகளுக்கும், குருக்களுக்கும் தேவன் அதிகாரம் கொடுத்திருக்கின்றார் என்றும் இவ்வுபதேசத்தினால் வலியுறுத்தப்படுகின்றது; High Mass/பாடல் பூசை என்பது ஒரு நபருடைய குறிப்பிட்ட பாவங்களுக்கானது; Low Mass/ சாதாரணமான பூசை என்பது சபையாருடைய பொதுவான பாவங்களுக்கானது ஆகும்.

குருவினுடைய ஆசீர்வாதமானது சாதாரணமான மெல்லிய அப்பத்தையும், திராட்சரசத்தையும், கிறிஸ்துவினுடைய நிஜமான சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றிவிடுகின்றது என்றும், இப்படியாகக் கிறிஸ்து பல்லாயிரமான குருமார்களால், ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் முறை மீண்டும் மீண்டுமாக உண்டாக்கப்பட்டு, பல்லாயிரம் பாவங்களுக்காக மீண்டும் மீண்டுமாகப் பலிச்செலுத்தப்படுகின்றார் என்றும், கத்தோலிக்க மார்க்கமானது வலியுறுத்திக் கூறுகின்றதாய் இருக்கின்றது. இவைகளனைத்துமே முற்றிலுமாகக் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்று நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம் மற்றும் பெரும்பான்மையான பாரம்பரியமான புராட்டஸ்டண்டினர்கள் (Orthodox Protestants) தங்கள் மனப்பூர்வமான ஒப்புதலை, நம்முடைய இந்த மறுப்பிற்குக் கொடுப்பார்கள். எனினும் புதிய புராட்டஸ்டண்ட் பிரிவினர்களை உருவாக்கினவர்கள் இக்காரியத்தைக் கவனிக்க தவறிவிட்டனர் என்பது, அவர்கள் பழமையான சபைகளில் திருப்பலி அடிக்கடி ஏறெடுக்கப்படும் காரியத்தை, தாங்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை அடிக்கடி, நினைவுகூரும்படியாக ஆசரிப்பதற்குக் காரணமாகப் பயன்படுத்துகையில் தெளிவாகுகின்றது. எனினும் (திருப்பலியில் இடம்பெறுவது போன்று) மிகவும் அடிக்கடி ஆசரிக்கும் காரியமானது ஞானமற்றதாகவும், நன்மைப் பயக்காததாகவும் இருக்குமெனப் பெரும்பான்மையான புராட்டஸ்டண்டினர் அறிந்தவர்களாகக் காணப்படுகின்றனர்; ஆகையால் பெரும்பான்மையானவர்கள் வருடத்திற்கு மூன்று (அ) நான்குமுறை மாத்திரம் அதுவும் இப்படியாகச் செய்வதன் மூலம் அவ்வாசரிப்பில் பங்கெடுக்கும் அனைவருக்கும், அது மிகுந்த தாக்கத்திற்குரியதாகவும், பயபக்திக்குரியதாகவும் காணப்படும் என்ற நம்பிக்கையில் ஆசரிக்கப்படுகின்றது. ஆனால் நம்முடைய கர்த்தருடைய மரணத்தை, அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிப்பதாகிய ஆதிமுறைமையே இன்னும் அதிக பயபக்திக்குரியதாக இருக்குமென நாம் எண்ணுகின்றோம்; இது தவிர ஆதிமுறைமைக்கே, வேறெந்த முறைமைகளுக்கும் இல்லாத வேதவாக்கியங்களின் ஒப்புதல் காணப்படுகின்றது என்றும் நாம் வலியுறுத்துகின்றோம்.

வேதவாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் வேறு சில தவறான கருத்துக்கள்

நமது கர்த்தருடைய மரணத்தை, ஒவ்வொரு கர்த்தருடைய நாளிலும் – ஒவ்வொரு வாரத்தின் முதல்நாளிலும் ஆசரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களாகிய நமது “பிளைமவுத் சகோதரரும்” (Plymouth Brethren), “டிசைப்பில்” (Disciple) நண்பர்களும், பெரிய தவறுக்குள் விழுந்துள்ளதாக நமக்குத் தோன்றுகின்றது. இப்படியாக ஆசரிப்பதிலுள்ள பொருத்தமின்மையானது பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றதாயிருக்கின்றது; முதலாவதாக இவர்கள் முற்றிலும் வேறுபட்டதும், சந்தோஷத்திற்குரிய ஈஸ்டர் தருணமுமாகிய நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலை நினைவுகூரும் நாளாகிய ஞாயிற்றுக் கிழமையன்று கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருகின்றனர். நாளினுடைய முக்கியத்துவத்தினைப் பார்க்கத் தவறிப்போன இவர்கள், நாளினுடைய வேளை/நேரம் தொடர்புடைய விஷயத்தைப் பார்க்கத் தவறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆதியில் நிறுவப்பட்டதான நினைவுகூருதலானது இரவில் பங்கெடுக்கப்பட்டது, ஆனால் காலையிலோ (அ) பிற்பகலிலோ அதை நினைவுகூரும் வழக்கம் இப்பொழுது இவர்களிடத்தில் நிலவுகின்றது.

இந்தக் கிறிஸ்தவ நண்பர்கள், வாரந்தோறும் ஆசரிக்கும் இந்தத் தங்கள் வழக்கத்தினை, காரணம் ஏதுமின்றி ஏற்படுத்திக்கொண்டார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது; ஆனால் இவர்கள் முன்வைக்கும் காரணங்களை நாம் பார்க்கையில், அவைகள் போதுமானவைகளாக இல்லையென்று காண்கின்றோம். இவர்கள் வலியுறுத்துவது என்னவெனில்: சீஷர்கள் வாரத்தினுடைய முதல்நாளில் அப்பம் பிட்பதற்கெனக் கூடுவதாக இடம்பெறும் வசனப்பகுதிகள் – உதாரணத்திற்கு அப்போஸ்தலர் 2:42,46; 20:7 என்பவைகள் நினைவுகூருதலின் இராப்போஜனத்தைப் பற்றியே குறிப்பிடுகின்றன என்பதாகும். ஆனால் இதற்குமாறாக வாரத்தினுடைய இந்த முதல்நாள் கூடுகைகளானது, அன்பின் விருந்துகள் என்றும், இது எந்த விதத்திலும் நமது கர்த்தருடைய நினைவுகூருதலின் இராப்போஜனத்தைக் குறிப்பதாகவோ (அ) இதன் இடத்தை எடுத்துக்கொள்வதாகவோ இருப்பதில்லையென்றும் நாம் எண்ணுகின்றோம். இந்தப் பல்வேறு பதிவுகளில், நமது கர்த்தருடைய இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றதும், அவரது சரீரத்தை அடையாளப்படுத்துகின்றதான புளிப்பில்லாத அப்பம்போன்று முக்கியத்துவம்வாய்ந்த அடையாளச் சின்னமாகக் காணப்படுகின்றதுமான “பாத்திரத்தைக்” குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பதும் கவனிக்கப்படலாம். சபைக்கு – தனது கர்த்தருடைய உயிர்த்தெழுதலினால் உண்டான அவளது சந்தோஷத்திற்குரிய நாளில், அன்பின் விருந்துகள் நிகழ்வது ஏற்புடையதாகும் மற்றும் இப்படிச் செய்வதற்கு முதல் ஞாயிறன்று நிகழ்ந்தவைகளே அவளை ஏவிற்று என்பதில் ஐயமில்லை; முதல் ஞாயிறன்று, நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் நாளில், அவரை எம்மாவு எனும் கிராமத்தில், அப்பம்பிட்குதல் மூலமாக அவ்விரண்டு சீஷர்களும் அடையாளம் கண்டுகொண்டார்கள்; அன்று சாயங்காலத்தில் பதினொரு பேரும் பந்தியிருக்க உட்காருகையில், அவர் “உங்களுக்குச் சமாதானம்” என்று கூறினார் மற்றும் அவர்களுடைய இருதயங்களானது அவர்களுக்குள் [R2771 : page 74] கொழுந்துவிட்டு எரியச்செய்தார் (லூக்கா 24:30,31; யோவான் 20:19). நமது கர்த்தருடைய இராப்போஜனமோ, அவரது மரணத்திற்கும், அவருடைய பாடுகளில் நாம் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென ஐக்கியம் கொள்வதற்கான நம்முடைய உடன்படிக்கைக்கும் நினைப்பூட்டுதலாக இருக்கத்தக்கதாக நிறுவப்பட்டது.

கர்த்தருடைய இராப்போஜனத்தின் முதலாம் ஆசரிப்பு

நம்முடைய இந்தப் பாடமானது, முதலாம் நிறுவுதலை நமக்குச் சுட்டிக்காண்பித்து, அது பஸ்கா ஆரம்பிப்பதற்கு முந்தினநாளில், அதாவது நீசான் மாதம் 14-ஆம் தேதியில் ஆசரிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. பஸ்கா தொடர்புடையதான நியாயப்பிரமாணமானது, மிகவும் துல்லியமான விவரங்களைக் கொடுத்ததாய் இருந்தது. ஆட்டுக்குட்டியானது நீசான் மாதம் 10-ஆம் தேதி வீட்டிற்குள்ளாகக் கொண்டுபோகப்பட வேண்டும் மற்றும் 14-ஆம் தேதி அடிக்கப்பட்டு, 15-ஆம் தேதியினுடைய விடியலுக்கு முன்னதான, இரவிலே புசிக்கப்பட வேண்டும். நிஜத்தில் இயேசு தம்மை 10-ஆம் தேதியன்று அந்த ஜாதியினிடத்திற்கு முன்வைத்தார். ஆனால் அவரது உண்மையுள்ளவர்களாகிய சிலரைத் தவிர, மற்றப்படி அவர்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தார்கள் மற்றும் 14-ஆம் தேதியன்று அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்டதான அதே யூத நாளில்தான், நம்முடைய இந்தப் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான பஸ்காவை அவர் புசித்தார் மற்றும் பிற்பாடு அவர் காட்டிக்கொடுக்கப்பட்டார். (யூதர்களுடைய நாளானது சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பித்து, அடுத்த சாயங்காலம்வரை நீடிக்கின்றது). பதிவுகளை வைத்துப்பார்க்கும் போது நமது கர்த்தரும், அவரது சீஷர்களும், யூதர்கள் பொதுவாய்ப் புசித்ததான நாளுக்கு முந்தினநாளில் பஸ்கா இராப்போஜனத்தைப் புசித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; ஏனெனில் யோவானுடைய சுவிசேஷத்தில், நமது கர்த்தர் பஸ்காவைப் புசித்த பிற்பாடு பிலாத்துவிற்கு முன்னிலையில், அவரது அரண்மனையில் காணப்படுகையில், அவரைக் குற்றப்படுத்தினவர்களாகிய பரிசேயர்கள் பஸ்காவை இன்னும் புசிக்கவில்லை என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டப் பின்னர் சாயங்காலம் வரையிலும் அவர்கள் புசிப்பதில்லையென்றும் நாம் வாசிக்கின்றோம் (யோவான் 18:28; 19:14).

நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களிடத்தில், “நான் பாடுபடுவதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்று கூறினதாக ஒரு சுவிசேஷகர் பதிவு செய்கின்றார். இது அவர் ஒரு யூதனாக முழுமையாகவும், நியாயப்பிரமாணத்தின்படியாகவும் அனுசரிப்பதற்குக் கடமைப்பட்டிருந்த, யூத சடங்கினுடைய அவரது கடைசியான ஆசரிப்பாய்க் காணப்பட்டது. நமது கர்த்தரும், சீஷர்களும் 14-ஆம் தேதியினுடைய எந்தக் குறிப்பிட்ட மணிவேளையில் பஸ்காவில் பங்கெடுத்தார்கள் என்பதை நாம் திட்டவட்டமாய் அறிய முடியாது; எனினும் பஸ்காவைப் புசித்தப்பிற்பாடு, அநேகமாக நடுஇரவுக்குச் சமீபமாக, நமது கர்த்தர் தம்முடைய சொந்த மரணத்திற்கான புதிய நினைவுகூருதலை, கர்த்தருடைய இராப்போஜனத்தை நிறுவியிருக்க வேண்டும்; நியாயப்பிரமாணத்தினுடைய பஸ்கா இராப்போஜனத்திற்குப்பதிலாக இதை நிறுவினார் மற்றும் இதைக்குறித்துத் தம்முடைய பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிட்டார்: “ஆகையால் நீங்கள் இதைச் செய்யும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” “இதை” என்பது நிஜமான ஆட்டுக்குட்டியை, “உலகத்தின் பாவத்தைச் சுமந்துத் தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை” அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; மற்றும் “இதைச் செய்வது” என்பது – அப்பத்தைப் பிட்பதும், திராட்சப்பழ ரசத்தைப் பானம்பண்ணுதலும் – நமது கர்த்தருடைய மரணத்தைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; இது நிழலில் இடம்பெற்ற மரணத்தைத் தெரிவிப்பதில்லை, ஏனெனில் நிஜமானது இப்பொழுது வந்துவிட்டது மற்றும் இதே நாளில், இன்னும் சில மணி நேரங்களுக்குப் பிற்பாடு, அவர் கொல்லப்படப் போகின்றார், சிலுவையில் அறையப்படப் போகின்றார். இப்படியாக நமது கர்த்தர் புதிய நிறுவுதலுக்காக, தம்முடைய சபைக்காக ஆழமான மற்றும் விரிவான அஸ்திபாரமிட்டார் மற்றும் இதை யூத நிழலிலிருந்து பிரித்துக் காண்பிக்கும் வண்ணமாக, விசுவாசிகளுக்குத் தம்மை நிஜம் எனவும், இதில் அடங்கும் மேலான அர்த்தத்தையும் சுட்டிக்காண்பித்தார்; உண்மையான இஸ்ரயேலர்கள் அனைவரும், பார்வோனிடமிருந்தில்லாமல், பார்வோனின் நிஜமாகிய சாத்தானிடமிருந்து விடுதலையடைவதே, தேவனுடைய ஜனங்களில் முதற்பேறானவர்கள் அனைவரும் மரணத்தினின்று, திரளான ஜீவனுக்கு, அதாவது நித்தியமான ஜீவனுக்குள் விடுவிக்கப்படுவதே – மேலான அர்த்தமாய்க் காணப்படுகின்றது.

நிழலைத் தெளிவாய்ப் பார்க்கின்றவர்களால், நிஜம் கடந்து வருவதுவரையிலும், நிழலினால் கடந்து போகமுடியாது என்றும், பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலுக்கான நிஜமானது, அதன் ஆண்டுநிறைவு நாளில், அதாவது நீசான் மாதம் 14-ஆம் தேதியில் நிகழவேண்டும் என்றும் உணர்ந்துகொள்ள முடியும். ஆகையால்தான் “அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை” என்பதாக வேதவாக்கியங்களில் இடம்பெறுகின்றது (யோவான் 7:30; 8:20). தேவன் இக்காரியங்களை எல்லாம் முன்கூட்டியே அறிந்திருந்தார் மற்றும் [R2772 : page 74] இது சம்பந்தமான அனைத்தையும் அவர் முன்னேற்பாடு பண்ணியிருந்தார் மற்றும் நிழலானது இவைகளை மிகத் தெளிவாய்க் குறிப்பிடுகின்றது. நாம் இனி நிழலை ஆசரிப்பதில்லை; நிழலினுடைய இடத்தில், தேவ ஆட்டுக்குட்டியினுடைய நிஜமான பலி இடம்பெற்றது என்று நம்பி, கிறிஸ்தவர்களென நாம், நிஜத்தினுடைய நினைவுகூருதலாக “இதைச்” செய்கின்றோம்; ஏனெனில் அப்போஸ்தலன் கூறுவதுபோன்று, “நம்முடைய பஸ்காவாகிய (ஆட்டுக்குட்டியாகிய) கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” (1 கொரிந்தியர் 5:7,8).

நிழலான சுடப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய பஸ்கா இராப்போஜனத்தைக் கர்த்தரும், அப்போஸ்தலர்களும் புசித்துக்கொண்டிருக்கையில், நமது கர்த்தர் அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். இதை நமது கர்த்தர் கூறினபோது அவர் “ஆவியில் கலங்கினதாக,” உணர்வினை வெளிப்படுத்தினதாக யோவான் நமக்குத் தெரிவிக்கின்றார். தம்முடைய மரணம் தொடர்புடையதான உண்மைகளையும், விவரங்களையும் அவர் முன்னமே அறிந்திருந்தபடியால் அவர் காட்டிக்கொடுக்கப்படுகிற காரியமானது, அவரது இந்த மன உணர்விற்குக் காரணமாய் இருந்திருக்காது என்பதில் நமக்கு நிச்சயமே. அவரது துக்கத்திற்கானக் காரணமானது, தம்மால் மிகவும் பரிவோடு காக்கப்பட்டவர்களிலும், பராமரிக்கப்பட்டவர்களிலும் ஒருவன் இப்பொழுது நன்றியற்றவனாகவும், பரிசுத்தமற்றவனாகவும் போவதுகுறித்த சிந்தனையேயாகும் என நாம் நியாயமாய் அனுமானிக்கின்றோம்; அவரது துக்கம் யூதாசுக்காகவே என்பது உறுதியே. அவர் இப்படிக் கூறினதினிமித்தமாக, சீஷர்கள் “ஆண்டவரே, நானோ?” என்ற கேள்விகளைக் கேட்டனர்; கிரேக்க வார்த்தையினுடைய அர்த்தத்தின்படி பார்க்கையில், கேள்வியின் அர்த்தம் என்னவெனில், ‘ஆண்டவரே, நீர் என்னையா குற்றஞ்சாட்டுகின்றீர்? இது நான் இல்லை, அல்லவா?” என்பதாகும். சீஷர்கள் அனைவரும்கூடத் துக்கமடைந்தார்கள். அநேகமாக இந்த வேளையிலுள்ள இந்த அனுபவத்திலும்கூட அவர்கள் கடந்துபோக வேண்டியிருந்தது; ஏனெனில் இவைகளெல்லாம் அவர்களுக்கு முன்பாகக் காணப்படுகின்ற சோதனையான காலங்களுக்கென அவர்களை ஆயத்தப்படுத்தத்தக்கதாக, அவர்களுக்கு அவசியமாய்க் காணப்பட்டது என்பது நிச்சயமே.

மற்றவர்களோடுகூட இதே கேள்வியை யூதாசும் கேட்டார்; ஏனெனில் இப்படியாகக் கேட்கவில்லையெனில், அது தனது குற்றத்தைத் தானே ஒப்புக்கொள்வதைக் குறிப்பதாகிவிடும். தாம் துணிக்கையைத் தோய்த்து யாருக்குக் கொடுப்பாரோ, அவனே என்பது நமது கர்த்தருடைய பதிலாகக் காணப்பட்டது மற்றும் அவர் துணிக்கையைத் தோய்த்து, யூதாசுக்குக் கொடுத்தார் மற்றும் யூதாசும் வாங்கின பின் வெளியே போனார் (யோவான் 13:25-30). இந்த நிகழ்வுகள் அனைத்தும், யூதாசினுடைய இருதயத்தைக் கரையப்பண்ணி, எல்லாம் முடிந்துபோவதற்கு முன்னதாக, அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வழிநடத்தப்படுவதற்குப்பதிலாக – வாதைகளை நிறுத்துவதன் மூலம் பார்வோனுக்குப் பாராட்டப்பட்டதான தெய்வீக இரக்கமானது, பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல – யூதாசுக்குள்ளும் வெறுப்பின்/தீய நினைவின் ஆவி உண்டானது. எதிராளியானவனுடைய யோசனைகளை எதிர்ப்பதற்குப்பதிலாக, அவன் முழுமையாய்ச் சாத்தானின் ஆவியினால் நிரம்பி, “சாத்தான் அவனுக்குள் முற்றும், முழுமையாய்ப் புகுந்து” தீமைச் செய்வதற்கான கருவியாகச் சாத்தான் அவனது இருதயத்தை ஆட்கொள்ளும்வரை, அதிகமதிகமாய் அவ்வாலோசனைகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தான்; மற்றும் கர்த்தர் மற்றும் சீஷர்கள் மத்தியில் தன்னைப் பொருந்தாதவனாக யூதாஸ் உணர்ந்தபடியால், அவன் வெளியே போனான் என்பதில் ஐயமில்லை.

[R2772 : page 75]

ஆகையால் அநேகமாக நமது கர்த்தர் சீஷர்களின் பாதங்களைக் கழுவினபோதும் மற்றும் பின்னர் அப்பம் மற்றும் திராட்சப்பழரசத்தை, தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலாக நிறுவினபோதும், யூதாஸ் சீஷர்களோடு காணப்படாதது தெரிகின்றது. அவன் இல்லாமல் இருந்தது நல்லதே; இதுபோலவே கிறிஸ்துவினுடைய உண்மையான, நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க சீஷர்கள் மாத்திரமே, அவரது மரணத்தை, அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிப்பதற்குக் கூடிடுவது கூடுமட்டும் பெரிதும் விரும்பப்படுவதாக. எனினும் நாம் இருதயத்தைக் கணிப்பதற்கு இயலாதவர்களாய் இருக்கின்றோம் என்பதை நினைவில்கொண்டு, நினைவுகூருதலின் பந்திக்கு வருகிறதற்கு, மீட்படைவதற்கென்று கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினை விசுவாசிப்பவர்களும், கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்பைப் பண்ணியுள்ளதாக அறிக்கைப்பண்ணுகிறவர்களுமான அனைவரும் வரவேற்கப்பட வேண்டும். உடன் சீஷர்களெனத் தங்களைக்குறித்து அறிக்கைப் பண்ணிக்கொள்பவர்களை ஆராயும் விஷயத்தினைத் தேவனிடத்திலேயே விட்டுவிடுவோமாக.

அப்பம் மற்றும் பாத்திரத்தினுடைய அடிப்படையான அர்த்தம்

நினைவுகூருதலாகப் புளிப்பில்லாத அப்பத்தினை சீஷர்களுக்கு முன்வைக்கையில் இயேசு, “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்றார். அவரது வார்த்தைகளினுடைய அர்த்தமாவது, “இது என் சரீரத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது” என்பதாகும். அப்பமானது உண்மையில் அவரது சரீரமாக இருக்கவில்லை; ஏனெனில் அவரது சரீரம் எந்த விதத்திலும், இதுவரையிலும் பிட்கப்படவில்லை. பலி இன்னமும் நிறைவேறி முடியாததினால், அவர்களாலும், எந்த விதத்திலும், அவரில் நிஜத்தில் (அ) உண்மையில் பங்கெடுக்க முடியாது. எனினும் புளிப்பில்லாத அப்பமானது, நமது கர்த்தருடைய பாவமற்ற மாம்சத்தைக் குறிக்கின்றதென நாம் அடையாளம் கண்டுகொள்ளும் போதும் அடையாளம் முழுமையாய் உள்ளது; புளிப்பானது, நியாயப்பிரமாணத்தின்கீழ் பாவத்திற்கான அடையாளமாகவும், பஸ்கா காலங்களில் புறம்பாக்கிப்போடுவதற்கு விசேஷமாய்க் கட்டளையிடப்பட்டுள்ளதாயும் காணப்படுகின்றது. வேறொரு தருணத்தின்போது, இயேசு கொடுத்திட்ட பாடமானது, இந்த அடையாள சின்னத்தினை நமக்கு விளக்குகின்றதாய் இருக்கின்றது. அவர் “வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்; ஜீவ அப்பம் நானே என்றார்.” (யோவான் 6:33,35)

இந்த ஜீவ அப்பத்தை நாம் எவ்வாறு புசிக்க வேண்டும் (அ) சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அப்பம் எதைக் குறிக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வது நமக்கு அவசியமாய் இருக்கின்றது. இக்காரியம் தொடர்பான நமது கர்த்தருடைய விளக்கத்தின்படி, அது அவர் நமக்காகப் பலிச்செலுத்தின அவரது மாம்சத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் நமது மனித சுபாவத்தில் வரத்தக்கதாக, தாம் மனிதனாகுவதற்கு முன்னதாகக் காணப்பட்ட ஆவிக்குரிய ஜீவியின் நிலையினையும், அதன் மகிமையினையும் துறந்து வந்திருந்தாலும், அவர் மனிதனாகுவதற்கு முன்பாகக் காணப்பட்ட ஆவிக்குரிய ஜீவி நிலையானது பலிச்செலுத்தப்படவில்லை. நமது கர்த்தராகிய இயேசு பரிசுத்தராகவும், மாசில்லாதவராகவும், குற்றமற்றவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும், அதாவது தகப்பனாகிய ஆதாமினால் கறைப்படுத்தப்படாதவராகவும், மற்றும் இதனால் பாவமற்றவராகவும் காணப்பட்டக் காரியமே, அவரை ஆதாம் மற்றும் இவர் சந்ததிக்கான மீட்பராக்கிற்று மற்றும் “ஏற்றக்காலங்களில் விளங்கிவந்ததான, அனைவருக்குமான மீட்கும் பொருளாக” அவர் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கும் அனுமதித்தது.

பாவிகளுக்காக நமது கர்த்தராகிய இயேசுவின் தூய, கறையற்ற மனுஷீகச் சுபாவமே கொடுக்கப்பட்டது என்று நாம் காண்கையில், நாம் எதைச் சொந்தமாக்கிடுவதற்கான சிலாக்கியம் பெற்றிருக்கின்றோம் என்று நாம் காண்கின்றோம். அவர் எதை நமக்காக ஒப்புக்கொடுத்தாரோ, அதையே நாம் “புசிக்க” வேண்டும், சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்; அவரது பரிபூரண மனுஷீக சுபாவமானது, மனுக்குலம் முழுவதையும் மரணத்தண்டனையிலிருந்து மீட்பதற்காகவும், அவர்கள் இணங்குகையில் அவர்களை மனித பூரணத்திற்கும், நித்திய ஜீவனிடத்திற்கும் திருப்புவதற்காகவும் கொடுக்கப்பட்டது. நம்முடைய கடந்தகால பாவங்கள் யாவற்றையும் இரத்துச் செய்ததாக ஒருவேளை தேவன் கருதினாலும், மனித பூரணத்தினை அடைந்திடுவதற்கான உரிமையை நாம் உடையவர்களாக இருக்கின்றோமெனத் தேவன் ஒருவேளை கண்டுகொண்டாலும், இது நம்மைப் பூரணமும் படுத்தாது, நித்திய ஜீவனுக்கான உரிமையையும் தராது என்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ஆதாமின் சந்ததியிலுள்ள எவரேனும் இயேசுவின் பலியில் நன்மையடைய வேண்டுமானால், அவர் இரண்டாம் வருகை வந்து, முழு உலகத்திற்கான மத்தியஸ்தராக, தீர்க்கத்தரிசியாக, ஆசாரியராக, இராஜாவாக இருந்து, அக்காலத்தில் அருளப்படுகின்றதான அருமையான சிலாக்கியங்களைப் பயன்படுத்துகின்றதான அனைவரையும் பரிபூரணத்திற்கும், தேவனுடன் இசைவான நிலைக்கும் திருப்புவதற்கு உதவுவது அவசியமாய் இருக்கின்றது.

இதே ஆசீர்வாதத்தை இந்த யுகத்தின் சுவிசேஷசபையானது, தங்கள் மீட்பரிலான விசுவாசத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்கின்றனர்; அதாவது விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைப் பெற்றுக்கொள்கின்றனர்; நாம் ஒருபோதும் பெற்றிராததும், ஒருபோதும் இழந்துபோகாததும், கிறிஸ்து மீட்டுக்கொள்ளாததுமான, ஆவிக்குரிய சுபாவத்திற்கு நீதிமானாக்கப்படவில்லை; மாறாக தந்தையாகிய ஆதாம் பெற்றிருந்ததும், அவரால் இழந்துபோகப்பட்டதும், கிறிஸ்து தம்முடைய பாவமற்ற சொந்த மாம்சத்தை, நமக்கான மீட்கும்பொருள் பலியாகக் கொடுத்து, அவர் மீட்டுக்கொண்டதுமான மனுஷீக சுபாவத்திற்கு நீதிமானாக்கப்பட்டுள்ளோம். அப்பத்தில் பங்கெடுத்தல் என்பது கர்த்தர் மனுஷீக உரிமைகளையும் சிலாக்கியங்களையும் பலிசெலுத்தினதன் காரணமாக அடையப்பெற்றதான, மனுஷீக உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் அனைத்திற்குமான – நீதிமானாக்கப்படுதலை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளுதலை, நமதாக்கிக்கொள்ளுதலை நமக்கு முதலாவது குறிக்கின்றதாய் இருக்கின்றது.

இதுபோலவே திராட்சப்பழ ரசமானது நமக்காகக் கொடுக்கப்பட்டதான நமது கர்த்தரின் ஜீவன் – அவரது மனுஷீக ஜீவன், அவரது ஆத்துமா நம் பொருட்டாக மரணத்திற்குள் ஊற்றப்பட்டதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; மேலும் இதை நாம் நமதாக்கிக்கொள்ளுதல் என்பதும், நமது கர்த்தருடைய பலியானது பெற்றுத்தந்ததான திரும்பக்கொடுத்தலுக்கான உரிமைகளையும், சிலாக்கியங்களையும் நாம் ஏற்றுக்கொள்வதை முதன்மையாகக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

அப்பம் மற்றும் பாத்திரத்தினுடைய இரண்டாவது மற்றும் ஆழமான அர்த்தம்

நாம் ஏற்கெனவே பார்த்துள்ளபடி ஆயிரவருட யுகத்தின்போது உலகமானது கிரியையினாலும், கீழ்ப்படிதலினாலும் நீதிமானாக்கப்படுவதற்கு முன்னதாக, இந்தச் சுவிசேஷயுகத்தின்போது சபையை விசுவாசத்தினால் நீதிமான்களாக்குவதிலுள்ள தேவனுடைய நோக்கமானது, இப்பொழுது காண்கிறவர்களும், கேட்கிறவர்களும், மனிதனுக்காக அன்பானது ஏறெடுத்துள்ளதான மாபெரும் பலியை இப்பொழுது உணர்ந்துகொள்பவர்களுமான இந்த வகுப்பார், தங்கள் சரீரங்களை ஜீவப் பலியாக ஒப்புக்கொடுப்பதற்கும், மற்றும் இவ்விதமாய்க் கர்த்தர் இயேசுவோடுகூட, அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென அவரது பலியில் பங்கடைவதற்கும் அனுமதிக்கப் படுவதற்கேயாகும். நினைவுகூருதலுக்கான இந்த ஆழமான மற்றும் கூடுதலான அர்த்தத்தினை அவர் வெளிப்படையாய்க் குறிப்பிடவில்லை. இது “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்று அவர் குறிப்பிட்டவைகளில் ஒன்றாயிருக்கும் என்பதில் ஐயமில்லை (யோவான் 16:12, 13).

சத்தியத்தின் ஆவியானது அப்போஸ்தலனாகிய பவுல் வாயிலாகப் பேசி, நினைவுகூருதலின் இந்த இரண்டாம் மற்றும் மிக உயர்வான அர்த்தத்தினைத் தெளிவாய் விவரிக்கின்றது; ஏனெனில் அர்ப்பணித்துள்ள சபைக்கு அவர் எழுதுகையில் அவர், “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!” [R2772 : page 76] (1 கொரிந்தியர் 10:16 திருவிவிலியம்); அதாவது கிறிஸ்து தம்முடைய உண்மைக்கான பலனாகப் பெற்றுக்கொண்டதான மகிமையில், நாமும் அவரோடுகூடப் பங்காளிகளாகக் கருதப்படத்தக்கதாக, உடன் பலிச்செலுத்துபவர்களெனக் கிறிஸ்துவோடுகூட உள்ள மரணம் வரையிலுமான நம்முடைய பங்குகொள்ளுதலாய் இருக்கிறதல்லவா? – “ஏனெனில் அநேகரான நாம் ஒரே அப்பமும், ஒரே சரீரமுமாய் இருக்கிறோம்” என்று கூறுகின்றார் (1 கொரிந்தியர் 10:16,17).

இந்த அடையாளமான கட்டளையினுடைய இரண்டு கண்ணோட்டங்களும் மிகவும் முக்கியமானவைகளாகும். நமது கர்த்தருடைய பலியின் மூலமான நமது நீதிமானாக்கப்படுதலை, நாம் முதலாவதாகப் பார்ப்பது அவசியமாயிருக்கின்றது. முழுக்கிறிஸ்து, தெய்வீக கண்ணோட்டத்தின்படி இயேசுவைத் தலையாகப் பெற்றுள்ளதான, அநேக அங்கத்தினர்களையுடைய ஒரு சரீரமாக இருக்கின்றது என்றும், இந்தச் சபை முழுவதும் பிட்கப்பட வேண்டுமென்றும், அதன் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் கர்த்தர் இயேசுவின் சாயலாக வேண்டும் மற்றும் அவரது பலியின் அடிச்சுவடுகளில் நடக்க வேண்டுமென்றும் நாம் உணர்ந்துகொள்வதும் ஏற்றக் காரியமாயிருக்கின்றது (1 கொரிந்தியர் 12:12-14). இதை நாம் நம்முடைய ஜீவியங்களைச் சகோதர சகோதரிகளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் செய்கின்றோம்; அதாவது கிறிஸ்து தம்முடைய ஜீவியத்தை அனைவருக்காகவும் ஒப்புக்கொடுத்தது போல், நாமும் செய்வதின் மூலம் செய்கின்றோம்.

நமது கர்த்தர் தம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை ஒப்புக்கொடுக்காதது போன்று, நாமும் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை ஒப்புக்கொடுப்பதில்லை. அவர் தம்முடைய உண்மையான பூரண மாம்சத்தைப் பலிச்செலுத்தினதுபோன்று, நாமும் உண்மையாய்ப் பூரணமாய் இராததும், ஆனால் பூரணமானதாகக் கருதப்படுகிறதுமான நீதிமானாக்கப்பட்ட நம்மைப் பலிச்செலுத்திட வேண்டும். இதுபோலவே பாத்திரமும் பாடுகளை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அநேகம் திராட்சப் பழங்களின் சாறாக இருப்பினும் அது ஒரு பாத்திரமாக இருப்பதுபோலவே, அநேகம் மணிகளினின்று உண்டானதாயினும் அது ஒரு அப்பமேயாகும். கோதுமை மணிகளானது மனிதனுக்கான அப்பமாக வேண்டுமானால், அவைகளால் அதன் ஜீவனையோ, மணியாக அதன் தனித்தன்மையையோ தக்கவைத்துக்கொள்ள முடியாது. திராட்சப்பழங்களானது, உலகத்திற்கு ஜீவனளிக்கும் ஆவியாக வேண்டுமானால், அது திராட்சப்பழங்கள் எனும் அதன் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. இப்படியாகக் கர்த்தருடைய ஜனங்கள் ஒரே அப்பத்திலும், ஒரே பாத்திரத்திலும் பங்கெடுப்பவர்களாய் இருக்கின்றார்கள் என்ற பரிசுத்த பவுல் அவர்களுடைய வார்த்தையினுடைய அருமையை நாம் பார்க்கின்றோம்.

பாத்திரமானது, fruit of the vine/ திராட்சப்பழரசமானது (திராட்சரசமாக/wine ஒருவேளை இருந்திருந்தாலும்கூட எங்குமே பாத்திரமானது wine/திராட்சரசம் என்று குறிப்பிடப்படவில்லை), இரத்தத்தை அதாவது ஜீவனைக் குறிப்பதாக நமது கர்த்தர் குறிப்பாய்த் தெரிவித்துள்ளார்; அது தக்கவைக்கப்பட்ட ஜீவனை அல்ல, மாறாக சிந்தப்பட்ட, விட்டுக்கொடுக்கப்பட்ட, ஒப்புக்கொடுக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட ஜீவனைக் குறிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். இந்த ஜீவனானது, பாவ மன்னிப்புண்டாகும்படிக்கு என்றும், அவருடையவர்கள் அனைவரும் அதைப் பருக வேண்டும் மற்றும் அவரது பலியினை ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தினால் தங்களுடையதாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் நம்மிடம் கூறுகின்றார். விசுவாசத்தின் மூலமாக நீதிமானாக்கப்பட்டுள்ள அனைவரும், ஜீவனை இந்த ஆதாரத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவிற்குப் புறம்பே அழியாமையைப் பெற முடியுமென யார் ஒருவராலும் கூறப்படுவது ஏற்றதாயிருக்காது. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதன் விளைவாக ஜீவன் கிடைக்குமெனக் கூறுவதும் ஏற்றதாயிருக்காது. ஏதோ ஒரு மாபெரும் போதகர் மீதான விசுவாசமும், அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிவதும் நித்திய ஜீவனைக் கொண்டுவருமென்று கூறுவதும் ஏற்றதாயிருக்காது. முழு உலகத்திற்கான மீட்கும்பொருளாக ஒருமுறை சிந்தப்பட்டதான இரத்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமே அல்லாமல், மற்றப்படி வேறெந்த வழியிலும் நித்திய ஜீவனை அடைய முடியாது. “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” இதுபோல அவரது பாத்திரத்தில் [R2773 : page 76] பானம் பண்ணிடுவதற்கும், ஒரே அப்பத்தின் அங்கத்தினர்களென அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கும், அவரது மரணத்திற்குள்ளான ஸ்தானத்தில் அவரோடுகூட அடக்கம் பண்ணப்படுவதற்கும் மற்றும் இப்படியாக மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்கும் நேரான அவரது உயிர்த்தெழுதலில் அவரோடுகூடக் காணப்படுவதற்குமான கர்த்தருடைய அழைப்பினை ஏற்றுக்கொள்வதின் மூலமாக மாத்திரமே ஒழிய மற்றப்படி புதிய சுபாவத்தினை அடைவதற்கு வேறு வழியில்லை (ரோமர் 6:3-5; 8:17).

இராஜ்யத்தில் கொண்டாடுதல்

(நினைவுகூருதலுக்கான இராப்போஜனம் நிறுவப்பட்ட தருணத்தின்போது) நமது அருமை கர்த்தர் எப்போதும்போல், அவரது போதனைகள் அனைத்தினுடைய முக்கிய அம்சமாகிய இராஜ்யம்குறித்துச் சிலவற்றைப் பேசவேண்டும் என்றிருந்தார். உண்மையுள்ளவர்களாகக் காணப்படும் பட்சத்தில், இராஜ்யத்தில் ஒரு பங்கினை அடைவார்களென அவர் வாக்களித்தவர்களிடம், தாம் ஓர் இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதற்கெனப் புறப்பட்டுப்போக வேண்டும் என்றும், தாம் திரும்பிவந்து, அந்த இராஜ்யத்தில் அவர்கள் பங்கடையத்தக்கதாக, தம்மோடுகூட அவர்களை ஏற்றுக்கொள்வார் என்றுமாக தாம் கூறியிருந்தவைகளை, அவர்களுக்கு நினைப்பூட்டினார். இன்னுமாக தம்மால் நிறுவப்படுகின்றதான இந்த நினைவு கூருதலானது, இராஜ்யத்தில் அதன் நிறைவேறுதலைக் காணும் என்று இப்பொழுது கூறுகின்றார்.

என்ன அர்த்தத்தில் இவ்வாக்கியத்தினைக் கர்த்தர் கூறினார் என்பதைத் துல்லியமாய்த் தீர்மானிப்பது சிரமமானக் காரியமாக இருப்பினும், அவரது பாத்திரம் அடையாளப்படுத்துகின்றதான பாடுகள் மற்றும் சோதனைகளின் விளைவாக, இராஜ்யத்தில் பெருமகிழ்ச்சிக் காணப்படும் என்று அர்த்தப்படும் வகையில் அவர் பேசியுள்ளார் என்று புரிந்துகொள்வது முரண்பாடாய்க் காணப்படாது. “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்.” பிதாவினுடைய சித்தத்திற்கான உண்மையானக் கீழ்ப்படிதலின் காரணமாகச் சகிக்கப்பட்ட சோதனைகளையும், கஷ்டங்களையும் அவர் திரும்பி நோக்கிப்பார்த்து, இவைகளின் பிரமாண்டமான பலனை, அதாவது மனுக்குலம் அனைத்தின்மீது கடந்துவரும் இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அவர் காண்கையில், இவைகளில் களிகூருவார். முதலாவது நீதிமானாக்கப்பட்டதிலும், பின்னர் அர்ப்பணிப்பிலும், அவரோடுகூடப் பாடுபடுவதிலும் இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணினவர்களாகிய அவரது சீஷர்கள் அனைவரும் இந்தப் பெருமகிழ்ச்சியில் பங்கடைவார்கள். இவர்கள், அவரோடுகூட ஆளுகைச் செய்வதற்கான, அவரது வாக்குத்தத்தத்தினைப் பெற்றிருக்கின்றனர், மற்றும் ஆளுகை ஆரம்பித்து, இராஜ்யத்தின் வேலை ஸ்தாபிக்கப்பட்டிருக்கையில், இவர்களும், கர்த்தரும் தங்கள் பூமிக்குரிய ஓட்டம் நிறைவடைவது வரையிலும் நாளுக்குநாள் தேவன் தங்களை வழிநடத்தின வழியினை, அது “இடுக்கமான வழியாக,” சுயத்தைப் பலிச் செலுத்தும் வழியாக, சுயத்தை வெறுக்கும் வழியாக இருப்பினும், அவ்வழியினைத் திரும்பி நோக்கிப்பார்த்து, துதிப்பார்கள்.

தாம் கைது செய்யப்படுவதற்கும், மரிப்பதற்குமான வேளை அருகாமையில் இருப்பதை அறிந்திருந்த நமது அருமை ஆண்டவரின் விசுவாசமானது, அந்தத் துயரமான வேளைகளினுடைய பரீட்சைகளில் நிலைநின்றது. அப்பத்திற்கும், பாத்திரத்திற்கும் அவர் பிதாவுக்கு ஸ்தோத்திரம் ஏறெடுத்ததானக் காரியமானது, அப்பம் பிட்கப்படுதலும், திராட்சப்பழம் நசுக்கப்படுதலும் குறிக்கின்றதான பாடுகள் யாவற்றிலும், சந்தோஷத்தோடே உடன்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஏற்கெனவே அவர் பிதாவின் ஏற்பாட்டில் திருப்தியடைந்தவராய் இருந்தார். இந்த ஒரு மனநிலைக்கு இசைவாகவே, அவர்கள் புறப்படுகையில், பாட்டுப்பாடினார்கள் – சந்தேகத்திற்கிடமின்றி பூமியில் அவரது ஓட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்ததற்காகவும், இதுவரையிலும் தமக்குத் தேவையான கிருபை போதுமானதாய் இருந்ததற்காகவும் துதி மற்றும் ஸ்தோத்திரப்பாட்டு ஏறெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வருஷத்து நினைவுகூருதலின் இராப்போஜனம்

நமது கர்த்தருடைய மரணத்தின் ஆண்டுநிறைவு நாளானது, யூத கணக்கீட்டின்படி, ஏப்ரல் 3-ஆம் தேதி, புதன்கிழமை வருகின்றதாய் இருக்கின்றது. அவரது நினைவுகூருதலை ஆசரிப்பதற்கான ஏற்றநேரம், “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே”, அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று இரவாய் இருக்கும்; அதுவும் சரியாய் 6 மணிக்கு அல்லாமல், கொஞ்சம் நேரம் தேவையான ஆயத்தங்களைச் செய்வதற்காகவும், அடையாளத்தினுடைய அர்த்தத்தினைக் கொஞ்சம் ஆராய்வதற்கும், முழுக்காரியத்தையும் மறுபடியும் எண்ணிப்பார்ப்பதற்குமெனச் செலவிட்டப் பின்னர், ஆசரிக்கப்பட வேண்டும்.

வழக்கத்தின்படியே அலிகெனியிலுள்ள (Allegheny) சபையார், நாம் ஆக்கினைத் தீர்ப்பினின்று மீட்கப்படுவதற்கு ஏதுவாய்க் காணப்பட்டதான மாபெரும் நிகழ்வினை [R2773 : page 77] ஆசரிப்பதற்கென்றும், நாம் மகிமைக்கும் கனத்திற்கும், அழியாமைக்கும் நேரான அவரது உயிர்த்தெழுதலில், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய வேண்டுமெனில், அவரோடுகூட மரிப்பதற்கான நம்முடைய அர்ப்பணிப்பை ஆசரிப்பதற்கு என்றும், இந்த ஆண்டுநிறைவு நாளில் ஒன்றுகூடிடுவார்கள்.

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றதான அருமையான நண்பர்கள் (இதைப் புரிந்துகொண்டுள்ளவர்களுக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாய்க் காணப்படுகின்றதான) இந்தப் பாக்கியமான நினைவுகூருதலை அலட்சியப்படுத்திட வேண்டாம் என்று நாம் பரிந்துரைக்கின்றோம். சிறு கூட்டத்தாராய் இருப்பவர்கள், பெரிய கூட்டத்தாருடன் இணைந்து ஆசரிக்கத்தக்கதாகச் செல்லுங்கள் என்று நாம் அறிவுரைக் கூறுவதில்லை, மாறாக ஒவ்வொரு சிறு கூட்டத்தாரும் தங்கள் வழக்கத்தின்படி ஒன்றுகூடிட அறிவுறுத்துகின்றோம்; ஏனெனில் இப்படியாகச் செய்வதே ஆதித் திருச்சபையின் வழிமுறையாக இருந்தது. சந்தோஷமான இருதயத்தோடு, நாம் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்; அதுவும் நமக்கான நமது கர்த்தருடைய பலித் தொடர்புடையது மாத்திரமல்லாமல், அவரோடுகூட மரிப்பதற்கான நமது உடன்படிக்கைத் தொடர்புடையதுமான அதற்கே உரிய பயபக்தியுடன் ஆசரிக்கக்கடவோம். ஒவ்வொரு சபை கூட்டத்தாரிலுமுள்ள வழிநடத்துபவர்கள் (முடிந்தால் சில எபிரேய குடும்பத்திடமிருந்து) புளிப்பில்லாத அப்பத்தையும், ஒன்றில் புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாற்றை (unfermented grape juice) அல்லது உலர்ந்த திராட்சரசத்தை (raisin juice) அல்லது திராட்சப்பழரசத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தங்கள் பண்ணிடவேண்டும். (wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராகவே நம்முடைய பரிந்துரை காணப்படுகின்றது; ஏனெனில் இது மாம்சத்தில் பெலவீனமாய்க் காணப்படும் சிலருக்குச் சோதனையாக அமையலாம்; எனினும் திராட்சரசமே (wine) பயன்படுத்தப்படும்படி குறிப்பிடப்பட்டுள்ளது என்று யார் மனசாட்சியில் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு ஏற்பாடுகள் பண்ணப்படலாம். சிலருடைய மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்கெனச் சிறிதளவு புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தை (fermented wine), புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாற்றுடன் (unfermented grape juice) அல்லது உலர்ந்த திராட்சரசத்துடன் (raisin juice) சேர்ப்பது தவறாகாது.

இந்தச் சிறு கூடுகைகளானது ஆரவாரமில்லாமல் காணப்படுவதற்குப் பரிந்துரைக்கின்றோம். ஒழுக்கமாயும், கிரமமாயும், அமைதியாயும், நாம் ஆசரிக்கப் போகின்றதான மாபெரும் செய்கை தொடர்புடையதான விலையேறப்பெற்ற நினைவுகளினால் நிரம்பினவர்களாக, ஒன்றுகூடுவோமாக. ஆசரிப்புகளிலும், சடங்குகளிலும், நம்முடைய கவனம் அதிகமாய்க் காணப்படாதிருப்பதாக. மற்ற விஷயங்களில் செய்வதுபோல, இதிலும் நமது கர்த்தரைப் பிரியப்படுத்துபவைகளைச் செய்திடுவதற்கு நாடுவோமாக; மற்றும் இப்படியாகச் செய்யப்படும் பட்சத்தில் பங்கெடுக்கும் யாவருக்கும், இவ்வனுசரிப்பு நன்மை பயக்கின்றதாயிருக்கும் என்பதில் நமக்கு நிச்சயமே.

விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தை அறிக்கைப் பண்ணுகிறவர்களும், நமது இரட்சகரின் ஊழியத்திற்கான அர்ப்பணிப்பும் பண்ணியுள்ளவர்களுமான எவருமே இந்த அடையாளங்களில் பங்கெடுப்பதற்குத் தடைப்பண்ணப்படக்கூடாது என்று இதற்கு முன்பும் நாம் கருத்துத் தெரிவித்திருக்கின்றோம். உண்மையான இருதயமற்றோர், இந்த ஐக்கியத்தின் சிலாக்கியத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் “கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்” என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளைக்குறித்து சிலர் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டங்களின் காரணமாகப் பயப்படுபவதினால், அப்படியானவர்களுக்கு விளக்கம்கொடுத்து தெளிவுப்படுத்த வேண்டியுமுள்ளது (1 கொரிந்தியர் 11:29). இந்த மாபெரும் செய்கையை, நினைவுகூருதலை ஆசரிப்பதான சிலாக்கியத்தினை கைவிடமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றதான இந்தப் பயப்படுகிறவர்களுக்காக, அப்போஸ்தலனால் இங்குக் குறிப்பிடப்படும் வகுப்பாரைக்குறித்து நாம் இங்கு விவரிக்கின்றோம்; பலியினுடைய உண்மையான முக்கியத்துவத்தினை உணர்ந்து கொள்ள தவறுகின்றவர்களும், இந்த ஆசரிப்பை வெறுமனே சடங்காச்சாரமாகக் கண்டுகொள்பவர்களும்தான் அப்போஸ்தலனால் அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்பாரில் இடம்பெறுவார்கள் என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது. இவர்கள் ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகின்றார்கள்; ஏனெனில் இவர்கள் காரியத்தை ஆராய்ந்துப்பார்த்தார்களானால், இவர்கள் இந்தச் சுவிசேஷயுகத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றதான “சிறுமந்தையினரை” கர்த்தர் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றார் என்பதைத் தெளிவாகப் பார்க்கமுடியும். இதைச் செய்ய இவர்கள் தவறுவது என்பது ஆக்கினைத்தீர்ப்பையும், கண்டனத்தையும் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது; இவர்கள் கர்த்தரையும், அவரது பலி முதலானவைகள் எதையும் அறிந்திராத உலகத்திலுள்ள மற்றவர்களைக்காட்டிலும் அதிகப் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றனர்.

இந்த மகத்துவமிக்க நினைவுகூருதலை நாம் ஆசரிக்கையில், நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காகவும், நமது மீட்பரோடுகூட உடன் பலிச் செலுத்துபவர்களென நாம் அனுபவிக்கும் மகத்துவமான சிலாக்கியங்களுக்காகவும், கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுவதற்கான சிலாக்கியத்திற்காகவும் நன்றியினைக் காணிக்கையாக்கிடுவதற்கு நாம் மறவாதிருப்போமாக. இந்த ஒரு தருணத்தில் துக்கித்தல்களும், ஆழ்ந்த சிந்தித்தல்களும், தியானித்தல்களும், இருதயத்தை முழுக்க ஆராய்வதும் காணப்பட்டாலும், கர்த்தர்போலவே நாமும் விசுவாசத்தினால் ஜெயங்கொண்டு, இருளிலிருந்து நம்மை தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவந்தவரும், இப்பொழுது நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றதான மாபெரும் நிகழ்வில் பங்குபெற நமக்குச் சிலாக்கியம் அருளினவருமானவரின் புண்ணியங்களை அறிவித்து முன்னேறுவோமாக.