R465 (page 3)
இது இஸ்ரயேலர்களுடைய மிக முக்கியமான பயபக்திக்குரிய அனுசரிப்புகளில் ஒன்றாக இருந்தது மற்றும் இன்னமும் இருந்து வருகின்றது. இது நிழலான ஜனங்களென அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட “நியாயப்பிரமாணத்தினுடைய” முதலாம் அம்சமாகக் காணப்பட்டது.
இவ்வனுசரிப்பு நிறுவப்பட்ட விவரங்கள் யாத்திராகமம் 12-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பழுதற்ற ஓர் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட வேண்டும்; அதன் இரத்தமானது, வீட்டு வாசலினுடைய நிலைக்கால்களிலும், மேற்சட்டத்திலும் தெளிக்கப்படுகின்றது மற்றும் இப்படியாக தெளிக்கப்பட்டுள்ள வீடுகளுக்குள், குடும்பத்தினர்கள் அந்த ஆட்டுக்குட்டியினுடைய மாம்சத்தை, புளிப்பில்லாத அப்பத்துடனும், கசப்பான கீரையுடனும் புசித்தார்கள். (யூதர்களுடைய முதலாம் மாதத்தின் 14-ஆம் தேதியின்) அந்த இரவில், தெளிக்கப்பட்ட இரத்தத்தின் காரணமாகவும், ஆட்டுக்குட்டி புசிக்கப்பட்டதின் காரணமாகவும், இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் கடந்துபோகப்பட்டார்கள் அல்லது எகிப்தியர்களின் முதற்பேறானவர்கள் சந்தித்திட்ட மரணத்தின் வாதையினின்று தப்புவிக்கப்பட்டார்கள். இச்சம்பவத்தின் காரணமாகவும் மற்றும் அடுத்த நாளில் இஸ்ரயேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று, சுதந்திரமடைந்து வெளியேறினதின் காரணமாகவும், தேவனுடைய கட்டளையின் பேரில், இஸ்ரயேலர்கள் ஒவ்வொரு வருடமும், அதன் ஆண்டுநிறைவு நாளில் அதை நினைவுகூர்ந்து ஆசரித்தார்கள். (யாத்திராகமம் 12:14)
இஸ்ரயேலர்கள் இந்த அனுசரிப்பினுடைய எழுத்துக்களை மாத்திரமே பார்த்தார்களே ஒழிய, நிழலாகிய அதன் அர்த்தத்தைப் பார்க்கவில்லை. அப்போஸ்தலனை 1 கொரிந்தியர் 5:7-ஆம் வசனத்தினுடைய வார்த்தைகளை எழுதும்படிக்கு ஏவி, அவ்வனுசரிப்பிற்குரிய அர்த்தத்திற்கான திறவுகோலை ஒருவேளை தேவனுடைய பரிசுத்த ஆவியானது, நமக்குக் கொடுக்கவில்லையெனில், நாமும் இஸ்ரயேலர்களைப் போலவே இருளில் காணப்பட்டிருப்போம். “ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” (1 கொரிந்தியர் 5:7)
இப்படியாக இக்காரியத்தின் மீது, பரிசுத்த ஆவியானது நமது கவனத்தைக் கொண்டுவந்த பிற்பாடு, மேலும் தேவனுடைய ஆட்டுக்குட்டியாகிய இயேசுதான், பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய நிஜம் என்பதையும், இஸ்ரயேலின் முதற்பேறானவர்களுக்கு, நிழலான ஆட்டுக்குட்டியினுடைய மரணம் அவசியமாய் இருந்ததுபோன்று, இயேசுவினுடைய மரணமானது, முதற்பேறானவர்களாகிய சபை மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு அவசியமாய் இருக்கின்றது என்பதையும் தெளிவாய்க் காண்பிக்கக்கூடிய மற்ற வேதவாக்கியங்களையும் நாம் கண்டுபிடித்தோம். இப்படியாக பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு, நாம் இப்பொழுது தம்முடைய சீஷர்களுடன், கடைசி பஸ்காவைப் புசித்திட்ட இயேசுவின் வார்த்தைகளினிடத்திற்கும், செயல்பாடுகளினிடத்திற்கும் கடந்துவருகின்றோம்.
தேவன் மிகவும் சரியாய்ச் செயல்படுபவர் ஆவார்; நிழலான ஆட்டுக்குட்டியானது, முதலாம் மாதத்தின் 14-ஆம் தேதியில் அடிக்கப்பட்டக் காரியமானது, தேவனுடைய திட்டத்தில், இயேசு அதே கால வேளையில் மரிப்பார் என்ற உண்மைக்கான நிழலாக (அ) முன்னடையாளமாக இருந்தது. இயேசு தம்முடைய சீஷர்களுடன் பஸ்காவை அனுசரிக்கவும் மற்றும் அதே நாளில் உண்மையான “ஆட்டுக்குட்டியென” அடிக்கப்படவும்தக்கதாக தேவன் யூதர்கள் மத்தியில் காலக் கணக்கிடுதலை ஒழுங்குப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. (நாளினுடைய கணக்கிடுதல் விஷயத்தில், ஒரு நடுராத்திரியிலிருந்து, மறு நடுராத்திரி வரை என்று இப்பொழுது காணப்படும் வழக்கத்தின்படி யூதருடைய நாள் கணக்கீடு காணப்படாமல், மாறாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து, அடுத்துவரும் மாலை 6 மணிக்கு நிறைவடைவதாய் இருக்கின்றது). ஆகவே இயேசுவும், சீஷர்களும் பஸ்காவை சுமார் 8 மணியளவு புசித்தார்கள் மற்றும் அதே இரவில் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் அதே நாளில்தானே மரித்தார்; இப்படியாகவே அனைத்து எழுத்துக்களும், எழுத்தின் உறுப்புகளும் நிறைவேற வேண்டியிருந்தது மற்றும் நிறைவேறவும் செய்தது.
“இதோ உன் இராஜா வருகிறார்” எனும் தீர்க்கத்தரிசனத்தை நிறைவேற்றும் வண்ணமாகவும் மற்றும் அதே வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப் படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக அது வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற பஸ்கா நிழலிலுள்ள அம்சத்தினை நிறைவேற்றும் வண்ணமாகவும், இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, கழுதையின்மேல் ஏறி, பட்டணத்திற்கு வந்தபோது, தாம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக அல்லது நிராகரிக்கப்படத்தக்கதாக தம்மை ஜனங்களுக்கு முன்வைத்தார். (மத்தேயு 21:4; யாத்திராகமம் 12:3) “பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார் … மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரயேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்” என்று நாம் வாசிக்கிற பிரகாரமாக, பஸ்காவிற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, இயேசு தம்மை இறுதியாக இஸ்ரயேல் ஜாதியாருக்கு (அ) வீட்டாருக்கு முன்வைத்தார் (யோவான் 12:1, 12, 13). அவர்களது இராஜா கழுதைக்குட்டியின் மீது ஏறி, அவர்களிடத்தில் வந்தார். அவரோ அவர்களுக்காகக் கண்ணீர்விட்டு, “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள்” என்று கூறினார். (மத்தேயு 23:38, 39)
இயேசு பஸ்காவினுடைய உட்கருத்தை அறிந்திருந்தார், ஆனால் சீஷர்களோ அறிந்திருக்கவில்லை. இயேசு தனிமையில் காணப்பட்டார்; எவராலும் அவரைப் புரிந்துகொள்ள முடியாது; எவராலும் அவரை உற்சாகமூட்ட முடியாது. அவர் காரியங்களைச் சீஷர்களுக்கு விவரித்திருந்தாலுங்கூட, அவர்களால் அவரது விளக்கத்தைப் புரிந்து கொள்ளவோ (அ) உணர்ந்துகொள்ளவோ முடியாது, காரணம் அவர்கள் இன்னமும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படவில்லை. அவர்கள் ஆதாமின் பாவத்திலிருந்து, நீதிக்கு ஏதுவாய்த் தீர்க்கப்படாதது வரையிலும், ஜெநிப்பிக்கப்படவும் முடியாது – அதாவது அவர்களை மரணத்தின் வல்லமையினின்று மீட்டுக்கொள்ளும் இரத்தத்தைச் சிந்தின அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய புண்ணியத்தினால் பாவத்திலிருந்து கடந்துபோகப்படுவது அல்லது விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் நிலைவரும் வரையிலும் அவர்கள் ஜெநிப்பிக்கப்பட முடியாது.
முன்பு ஒருவரும் கடந்து செல்லாத இடுக்கமான வழியில், இயேசு இவ்வாறு தனிமையாகக் கடந்து செல்லுகையில் – நமக்கான முன்னோடியாகவும், தலைவராகவும் அவர் இவ்வழியில் தனிமையாகக் கடந்து செல்லுகையில், அவரது இருதயமானது, சில சமயங்களில், மரணத்திற்கு ஏதுவாக மிகவும் துக்கமடைந்ததில் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை. “வேளை வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.” (லூக்கா 22:14-16) உண்மையான ஆட்டுக்குட்டி அன்றைய தினமே இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து அடிக்கப்படுவதன் மூலமாக எப்படிப் பஸ்காவின் காரியம் நிறைவேற ஆரம்பிக்கும் என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென இயேசு ஆசையாயிருந்தார்.
சீஷர்களால் கிரகித்துக்கொள்ள முடிகிற மட்டும் கிரகித்துக் கொள்ளத்தக்கதாக, இயேசு பஸ்காவின் அர்த்தம் பற்றின சத்தியத்தை வெளிப்படுத்துவதே, அவர் சீஷர்களுடன் இந்தப் பஸ்காவைப் புசிப்பதற்கு விசேஷமாக ஆசைப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். “அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்;” “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய [R466 : page 3] இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.” (மாற்கு 14:22; லூக்கா 22:17-20)
நிழலான ஆட்டுக்குட்டியிலிருந்து, நிஜமாகிய தம்மிடத்திற்குச் சீஷர்களுடைய மனங்களைத் திருப்பிடுவதும், தாம் நிறைவேற்றவிருக்கும் நியாயப்பிரமாணத்தினுடைய பஸ்காவெனும் அம்சத்தை அனுசரிப்பது இனிச் சரியாய் இருக்காது என்பதைக் காண்பிப்பதும்தான் ஆண்டவருடைய நோக்கமாய் இருந்தது என்பதில் நமக்கு ஐயமில்லை. (பஸ்காவினுடைய) ஆட்டுக்குட்டியினுடைய இடத்தில் வரும் அவரைப்பற்றின நினைவுகூருதலின் அம்சங்களாக சீஷர்களுக்கு இனி அப்பம் மற்றும் இரசம் இடம்பெறப்போகின்றது. இப்படியாகப் பார்க்கப்படும்போது, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகள் ஆற்றல் மிக்கதாய்க் காணப்படுகின்றது; அதாவது நிழலான விடுதலையை நினைவுகூரும் வண்ணமாக, இனிமேல் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியைக் கொல்ல வேண்டாம், மாறாக உண்மையான விடுதலைக்கு, உண்மையான கடந்துபோகுதலுக்கு ஆதாரமாய்க் காணப்படும் என்னுடைய மாம்சத்திற்கும், ஜீவனுக்கும் அடையாளமாய்க் காணப்படும் அப்பத்தையும், இரசத்தையும் பயன்படுத்துங்கள். ஆகவே என்னையும், என்னுடைய வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளுகிற யாவரும், இதுமுதற்கொண்டு, என்னை நினைவுகூரும்படிக்கு இப்படியாகச் செய்யுங்கள்” என்ற விதத்தில் இயேசுவின் வார்த்தைகள் காணப்பட்டது.
இப்படியாக இராப்போஜனத்தை, தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலாகவும், யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்த பஸ்காவிற்கு மாற்றாகவும் நமது கர்த்தர் நிறுவினார். ஏன் முதலில் இயேசு நிழலான ஆட்டுக்குட்டியைப் புசித்தார்? என்று கேட்கப்படலாம். அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவராக பிறந்தார் என்றும், அதன் சகல அம்சங்களையும் அவர் அனுசரிக்க வேண்டியவராக இருந்தார் என்றும் நாம் பதிலளிக்கின்றோம். அவர் தம்முடைய சிலுவையில் நியாயப்பிரமாணத்தை அறைந்துபோட்டு, நியாயப்பிரமாணத்தை முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டதால், பஸ்கா அல்லது இதற்கு மாற்றாக இடம்பெறும் கர்த்தருடைய இராப்போஜனம் தொடர்புடையதான பிரமாணத்திலிருந்து நாம் விடுதலையுடையவர்களாகக் காணப்படுகின்றோம் – ஆனால் ஒவ்வொரு வருடமும் நமது கர்த்தருடைய மரணத்தின் நினைவு நாளை அனுசரிப்பதை சிலாக்கியம் எனக் கருதுபவர்களில் நாம் அடங்கினவர்களாய் இருக்கின்றோம்; “பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே, ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.”(1 கொரிந்தியர் 5:7-8)
நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதற்குரிய, மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தருணமானது எப்போது (அ) ஏன் புறக்கணிக்கப்பட்டுப்போனது என்பதைக் கணிப்பது கடினமான காரியமாகும், ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மாபெரும் போதகர் (இயேசு) நினைவுகூருதலின் விஷயத்தில் ஏதோ தவறு செய்துவிட்டார் என்றும், வருடத்திற்கு ஒருமுறை நினைவுகூருதலை அனுசரிப்பதைக் காட்டிலும், அடிக்கடி அனுசரிப்பது அனுகூலமாய் இருக்கும் என்றும் பக்திவைராக்கியமுள்ள சில போதகர்கள் எண்ணியிருப்பார்கள் என்பதிலும், இவர்கள் “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்ற வார்த்தைகள் மூலம், பவுல் நினைவுகூருதலை அடிக்கடி அனுசரித்தாலும் ஒன்றுமில்லை என்று போதித்துள்ளதாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்பதிலும் ஐயமில்லை (1 கொரிந்தியர் 11:26). ஆனால் நினைவுகூருதல் குறித்துப் பவுல் பேசியுள்ளவைகள் அனைத்தையும் ஜாக்கிரதையாய் ஆராய்ந்துப் பார்க்கும்போது, காரியங்களை இவர்கள் புரிந்துகொண்டுள்ளது போன்று அவர் சொல்லவில்லை என்பது உறுதியாகும். “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து” (1 கொரிந்தியர் 11:23). இங்கு இயேசுவினால் தெரிந்துகொள்ளப்பட்டதான நேரம், மிகவும் சரியான நேரமாக மாத்திரமாய் இராமல், நினைவுகூருதலானது அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே நிறுவப்பட்டதை விசேஷித்த வெளிப்படுத்தல் மூலம் கர்த்தரிடத்திலிருந்து, பவுல் பெற்றுக்கொள்ளுமளவுக்கு, அந்த நேரம் மிகவும் சரியான நேரமாகக் காணப்பட்டது என்பதையும் கவனிக்கவும்.
கர்த்தருடைய மரணத்திற்குரிய சரியான நினைவுகூருதலை அனுசரிக்கத்தக்கதாக, சபையானது எத்தனை தரம் அந்த அப்பத்தைப் பிட்டு, அந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணிட வேண்டும்? ஆண்டுதோறும் அவரது மரணத்தினுடைய நினைவு நாளில் மாத்திரமே செய்ய வேண்டும். எப்படி அமெரிக்காவிற்கான சுதந்திரமானது, வருடந்தோறும் அது சுதந்திரமடைந்த நாளாகிய ஜூலை 4-ஆம் தேதியில் கொண்டாடப்படுகின்றதோ, இப்படியான விதத்திலேயே கர்த்தருடைய நினைவுகூருதலும் அனுசரிக்கப்பட வேண்டும். (அமெரிக்காவின் சுதந்திரத்தை) ஜூலை 4-ஆம் தேதியில் கொண்டாடாமல், பொருத்தமற்ற பல்வேறு தினங்களில் சிலர் கொண்டாடிட முற்பட்டால், அது விநோதமாகவே பார்க்கப்படும். மேலும் ஜூலை 4-ஆம் தேதியைக்குறித்து “இதை நீங்கள் கொண்டாடும் போதெல்லாம், நீங்கள் தேசத்தினுடைய பிறப்பை அறிவிக்கிறவர்களாய் இருப்பீர்கள்” என்று சொல்லப்பட்டால், ஒரு வருடத்தில் அநேகம் தருணங்களில் கொண்டாடப்படுவதைக் குறித்துப் பேசப்பட்டுள்ளதாக யாரேனும் புரிந்துகொள்வார்களா? இப்படியே கர்த்தருடைய இராப்போஜனமும், அதன் ஆண்டுநிறைவு நாளில் மாத்திரமே அனுசரிக்கப்பட வேண்டும்.
ஆதித் திருச்சபையினர் கர்த்தருடைய இராப்போஜனத்தை வாரத்தினுடைய முதல் நாள்தோறும் புசித்து வந்ததைச் சுட்டிக்காட்டும் பதிவுகள், வேதவாக்கியங்களில் காணப்படுவதைத் தாங்கள் காண்பதாக சிலர் எண்ணுகின்றனர். இது ஒருவேளை உண்மையானால், இக்காரியத்தில் இதற்குமேலாக கூறிடுவதற்கு எங்களுக்கு எதுவுமில்லை என்பதே நமது பதிலாக இருந்திருக்கும்; ஆனால் இப்படியான பதிவுகள் எங்கிருக்கின்றது? இவர்கள் நமக்கு “வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்” என்ற அப்போஸ்தலர் 20:7-ஆம் வசனத்தைக் காட்டுகின்றனர். ஆனால் இங்குக் கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலாகத்தான் அப்பம் பிட்கப்பட்டுள்ளது என்பதற்கான ஏதேனும் சாட்சியம் உள்ளதா? ஏன் இங்கு நடைபெற்ற காரியம் கர்த்தருடைய இராப்போஜனம் என்று குறிப்பிடப்படவில்லை மற்றும் திராட்சரசம் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது? அப்பமாகிய அடையாளத்தைப்போன்று பாத்திரம் எனும் அடையாளமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லையா? எம்மாவு என்னும் கிராமத்தில் “அவர் அப்பத்தைப் பிட்டப்போது” இரண்டு சீஷர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதாக எழுதப்பட்டுள்ளப்படியால், அங்குப் பிட்கப்பட்டது சாதாரணமான போஜனத்திலும் மேலானது என்று யாரேனும் சொல்லக்கூடுமோ? அவர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தைப் புசித்தார்கள் என்று யாரேனும் சொல்லக்கூடுமோ? யாரும் இப்படியாகச் சொல்லமாட்டார்கள்.
வாரத்தின் முதல் நாளானது (அ) கர்த்தருடைய நாளானது, நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதற்குரிய சரியான நாளாய் இருப்பதற்குப் பதிலாக மிகவும் பொருத்தமற்றதாக இருக்கின்றது. இயேசுவின் மரணத்தையும், கர்த்தருடைய இராப்போஜனம், கெத்செமனே மற்றும் கல்வாரியின் துயரமான காட்சிகளையும் நினைவுகூருவதற்குரிய ஒரு நாளாக, வாரத்தின் முதல் நாளானது ஆதிச் சபையினரால் நியமிக்கப்படுவதற்கு (அ) பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, வாரத்தின் முதல்நாளானது, அவர்களுக்கு மகிழ்ச்சியின் நாளாகவும், களிகூருதலின் நாளாகவும் மற்றும் “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்துள்ளார்” என்று கூறி, ஓசன்னா சாற்றுவதற்குரிய நாளாகவும் காணப்பட்டது. இதனாலேயே இந்நாளின் பெயர் இப்படியாகக் காணப்படுகின்றது மற்றும் இதனாலேயே சபையால் இந்நாளானது தொழுதுகொள்வதற்கும், துதிப்பதற்குமுரிய நாளாக பொதுவாய் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
வாரத்தினுடைய முதல்நாளாகிய, கர்த்தருடைய நாள்தோறும், அப்பம் பிட்கும் வழக்கமானது, அநேகமாக சீஷர்கள் சொற்பமானவர்களாய்க் காணப்பட்டப்படியால், கர்த்தருடைய நாளில் ஒன்றுகூடுவதற்கெனச் சில சமயங்களில் நீண்ட தூரம் பிரயாணப்பட்டு வருகையில், ஒன்றுசேர்ந்து போஜனம் பண்ணுவதிலிருந்து ஆரம்பித்தக் காரியமாக இருக்க வேண்டும். இன்னும் அநேகமாக முதல் நாளில் அப்பம் பிட்கப்படும்போது, இயேசு உயிர்த்தெழுந்த பிற்பாடு, எப்படி அடிக்கடி முதல் நாளன்று தங்களுக்குத் தோன்றி காட்சி அளித்தார் என்பதையும், எப்படித் தாங்கள் புசித்துக்கொண்டிருக்கும்போது, இயேசு இப்படியாகத் தோன்றினார் என்பதையும் அவர்கள் நினைவுகூர்ந்தபோது, எண்ணங்களிலும், சிரத்தையிலும் ஏற்பட்ட ஆசீர்வாதமான ஓர் இணைதலின் காரணமாகவுங்கூட இந்த வழக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும். (லூக்கா 24:35)
சபையில் கர்த்தருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் கொண்டாடத்தக்கதாக, ஒரு காலத்தில் நிறுவப்பட்டிருந்த இந்த வழக்கத்தினுடைய மங்கின சுவடுகளானது, உரோமன் திருச்சபை மற்றும் ஆயர் திருச்சபைகளால் “புனித வெள்ளி” என்ற நவீன தோற்றத்தில் இன்னமும் அனுசரிக்கப்பட்டு வந்தாலும், மற்றக் கிறிஸ்தவ பிரிவுகளால் கிட்டத்தட்டக் கவனிக்கத் தவறப்பட்டுள்ளது.
காவல் கோபுரத்தின் வாசகர்களில் அநேகர், நமது கர்த்தருடைய மரணத்தின் நினைவுகூருதலை, அதன் ஆண்டு நிறைவுநாளில் அனுசரிப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். கர்த்தருடைய மரணமானது, நிழலாகிய பஸ்காவின் இடத்தை எடுத்துக் கொள்கின்றது என்று நம்புகின்ற நாம், அந்த நாளை யூதர்களின் (அ) சந்திரன் நாள்காட்டியின்படி கணக்கிடுகின்றோம்; ஆகவே இந்நாளானது பெரும்பாலும், சூரிய நாள்காட்டியின்படி கணக்கிடப்படும் “புனித வெள்ளியின்” தியதியிலிருந்து முற்றிலும் வேறு தியதியாகவே காணப்படுகின்றது. (1883-ஆம் வருடத்தில்) இந்த வருடத்தில் பஸ்காவானது, வாரத்தின் முதல் நாளில், ஏப்ரல் 22-ஆம் தியதியன்று, மாலை 6 மணிக்கு வருகின்றதாய் இருக்கின்றது; ஆகவே ஏப்ரல் 22-ஆம் தியதியன்று மாலை 3 மணிக்குக் கர்த்தருடைய மரணம் சம்பவித்ததாய் இருக்கும்; மேலும் கர்த்தருடைய இராப்போஜனமானது ஏப்ரல் 21-ஆம் தியதி, சனிக்கிழமை மாலையன்று, 7 முதல் 8 மணிக்குள் புசிக்கப்பட வேண்டும். பஸ்கா பண்டிகை ஆரம்பிப்பதற்கு முந்தின நாளின்போது, ஆட்டுக்குட்டியானது அடிக்கப்படுவதை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். எப்போதுமுள்ள வழக்கத்தின்படியே அது அனுசரிக்கப்படும். புளிப்பில்லாத அப்பம்* மற்றும் ரசத்தினுடைய அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் நாம் பேசுகின்ற அதே வேளையில், இவை இரண்டையும் பயன்படுத்திச் செய்யப்பட்ட முதல் நினைவுகூருதலின் ஒழுங்கின் மாதிரியைப் பின்பற்றிடவும் நாம் நாடிட வேண்டும். [ *புளிப்பில்லாத அப்பமானது எந்த ஒரு எபிரெய குடும்பத்திடமிருந்தும் வாங்கப்படலாம் ]
பிட்கப்பட்ட அப்பம் மற்றும் பாத்திரத்தின் அர்த்தத்தை இங்கு நாம் சுட்டிக்காண்பிப்பது, சிலருக்குப் பயனுள்ளதாய் இருக்கும்.
அப்பத்தைக்குறித்து நமது கர்த்தர் கூறினதாவது: “இது என் மாம்சம்” ஆகும்; அதாவது புளிப்பில்லாத அப்பமானது, நமக்காகப் பிட்கப்பட்ட அல்லது பலிச் செலுத்தப்பட்ட அவரது மாம்சத்தை, அவரது மனுஷீகத்தை அடையாளப் படுத்துகின்றதாய் இருக்கின்றது. அவர் தம்மையே நமக்காகப் பலிச்செலுத்தாதது வரையிலும் நம்மால் நித்தியமான ஜீவனை ஒருபோதும் பெற்றுக் கொள்ளமுடியாது; அவர் சொன்னதுபோல: “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை.” (யோவான் 6:53)
இயேசுவின் சரீரம் பிட்கப்பட்டதான காரியமானது, மனிதன் புசித்தால், ஒருபோதும் மரியாமல் இருக்கப்பண்ணுகின்றதான, ஜீவ அப்பத்தை அளிக்கிறதாக மாத்திரம் காணப்படாமல், இன்னுமாக அது ஜீவனுக்கு நேரான “இடுக்கமான வழியையும்” திறந்தது மற்றும் ஜீவனுக்கு நேராய் வழிநடத்துகின்றதான இடுக்கமான வழியில் நடப்பதற்கு உதவியான, ஆவிக்குரிய உணவாகிய சத்தியத்தை நாம் அடையத்தக்கதாக, முத்திரையை உடைத்தது. இப்படியாகப் பிட்கப்பட்ட அப்பமானது, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று தம்மைக்குறித்துக் கூறினவரின் பிட்கப்படுதலை அடையாளப்படுத்துவது பொருத்தமானதே என்று நாம் காண்கின்றோம். (யோவான் 14:6)
ஆகையால் பிட்கப்பட்ட அப்பத்தை நாம் புசிக்கையில் – அவர் மரித்திருக்க-வில்லையெனில், அவர் நமக்காகப் பிட்கப்பட்டிருக்கவில்லையெனில், நாம் ஒருபோதும் பிதாவினிடத்திற்கு வந்திருக்க முடியாது என்றும், நாம் என்றென்றும் ஆதாமினுடைய பாவத்தினுடைய சாபத்தின் கீழிலும், மரணத்தினுடைய நுகத்தின் கீழிலும் காணப்பட்டிருந்திருப்போம் என்றும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மற்றுமொரு கருத்து: பயன்படுத்தப்பட்ட அப்பமானது, புளிப்பற்றதாகும். புளிப்பு என்பது கெடுக்கிற ஒன்றாக, சீரழிக்கும் ஒன்றாக இருப்பதினால், பாவத்திற்கான அடையாளமாய் இருக்கின்றது மற்றும் பாவம் மனுக்குலத்தில் கொண்டுவந்ததான சீரழிவையும், மரணத்தையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இந்த அடையாளமானது, நமது கர்த்தர் இயேசு பாவம் இல்லாதவராக இருந்தார் என்பதை, கறைதிறையற்ற ஆட்டுக்குட்டி என்பதை, “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவருமாய்” இருந்தார் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் ஆதாமின் சந்ததியில் வந்தவராய் இருந்திருப்பாரானால், வழக்கம்போல் ஏதோ ஒரு பூமிக்குரிய தந்தை வாயிலாக தமது ஜீவனைப் பெற்றவராக இருந்திருப்பாரானால், அவரும்கூட மற்ற மனிதர்களைப்போலவே ஆதாமின் பாவத்தினால், புளிப்பானவராய் இருந்திருப்பார்; ஆனால் அவருடைய ஜீவனானது கறைதிறை இல்லாமல், உயர்ந்த பரலோக நிலையிலிருந்து, பூமிக்குரிய நிலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலைமையில் வந்ததாய் இருந்தது; ஆகவே அவர் “வானத்திலிருந்து வந்த அப்பம்” என்று அழைக்கப்பட்டார் (யோவான் 6:41). ஆகவே தேவன் அருளியுள்ளதான தூய்மையான, புளிப்பற்ற, மாசற்ற அப்பத்தினைக்குறித்து உணர்ந்துகொள்வோமாக மற்றும் அவரைப் புசிப்போமாக; அதாவது சத்தியத்தைப் புசித்து, ஜீரணிப்பதன் வாயிலாக அவரை நாம் புசிப்போமாக; அதிலும் விசேஷமாக – விசுவாசத்தின் வாயிலாக அவரது நீதியை நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுதல் எனும் சத்தியத்தைப் புசிப்போமாக; மேலும் அவரை வழியாகவும், ஜீவனாகவும் அடையாளங்கண்டுகொள்வோமாக.
இந்த நினைவுகூருதல் அடையாளங்கள் தொடர்புடையதான இன்னும் ஆழமான ஓர் அர்த்தத்தை, அப்போஸ்தலன் தெய்வீக வெளிப்படுத்துதலின் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்பமானது நமது கர்த்தர் இயேசுவை மாத்திரம் அடையாளப் படுத்துகின்றதாயிராமல், நாம் அவரைப் புசித்தப் பிற்பாடு (அவரது நீதியை நமக்குரியதாக்கிக்கொள்வதன் வாயிலாக நாம் நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு) நாம் அர்ப்பணத்தின் வாயிலாக, உலகத்திற்கான உணவாகிய அந்தப் பிட்கப்பட்ட ஒரே அப்பத்தின் பாகமாக, நாம் அவரோடு இணைந்தவர்களானோம் என்றும் அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். (1 கொரிந்தியர் 10:16) இது நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகளாகிய நாம், எதிர்க்கால மகிமைகளில் அவரோடுகூட உடன் சுதந்தரர்களாகுவதற்கும், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதும், பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஜீவன் வழங்குவதுமான மாபெரும் வேலையில் பங்காளிகளாகுவதற்குமுரிய நிபந்தனையாய்க் காணப்படுகின்ற கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும் இப்பொழுது பங்கடைவதற்கான சிலாக்கியத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
இதே கருத்தானது, அப்போஸ்தலனால் மீண்டும் மீண்டுமாகவும், பல்வேறு அடையாளங்களினாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்தைக் காட்டிலும், இவ்வடையாளமே ஆற்றல் மிக்கதாய்க் காணப்படுகின்றது; அதாவது தங்கள் தலையோடுகூட (கிறிஸ்துவின் சரீரமாகிய – கொலோசியர் 1:24 பார்க்கவும்) சபையே இப்பொழுது பிட்கப்படுகின்றதான “ஒரே அப்பமாக” இருக்கின்றனர். இது நமது தலையானவருடனான நமது ஐக்கியத்திற்கும், உறவிற்கும் குறிப்பிடத்தக்கதான விவரிப்பாய்க் காணப்படுகின்றது.
“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்;” “அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.’ (1கொரிந்தியர் 10:16, 17 – KJV; திருவிவிலியம்)
‘திராட்சரசமானது’ நமது கர்த்தரினால் பலிச்செலுத்தப்பட்ட ஜீவனை அடையாளப்-படுத்துகின்றதாய் இருக்கின்றது. “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மரணத்தில் கையளிக்கப்பட்ட ஜீவனுக்கான அடையாளம்)” (மத்தேயு 26:27,28).
பாவத்தின் காரணமாக ஆதாமின் சந்ததி இழந்துபோனதான ஜீவனுக்கான மீட்கும்பொருளாகக் கர்த்தர் தமது ஜீவனைக் கொடுப்பதன் மூலமே, புதிய உடன்படிக்கையின் கீழ் விசுவாசம் [R467 : PAGE 4] மற்றும் கீழ்ப்படிதலின் வாயிலாக மனிதர்களுக்கு ஜீவனுக்கான உரிமை கடந்துவர முடியும். (ரோமர் 5:18, 19). சிந்தப்பட்ட இரத்தமானது, “அனைவருக்குமான மீட்கும் பொருளாக” (விலையாகக்) காணப்பட்டது; இது அனைவருக்காகவும், நமது மீட்பரினாலே கொடுக்கப்பட்டதாய் இருந்தது; ஆனால் அவர் பாத்திரத்தைச் சீஷர்களிடத்தில் கொடுத்து, அதைப் பருகும்படிக்கு அவர்களிடம் கூறினதாவது, தம்முடைய பாடுகளில் அவர்கள் பங்காளிகளாகுவதற்கான அல்லது பவுல் குறிப்பிட்டுள்ளதுபோன்று “கிறிஸ்துவின் உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுவதற்கான” அழைப்பாய்க் காணப்பட்டது (கொலோசெயர் 1:24). விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு, நாமாய் முன்வந்து கிறிஸ்துவின் காரணங்களை/நோக்கங்களை ஆதரிப்பதின் வாயிலாக, அவரது பாடுகளில் பங்குகொள்வோமானால், நாம் தேவனால் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகவும் மற்றும் இயேசுவின் பாடுகளில் பங்கடைபவர்களாகவும் கருதப்படுவோம் என்பதே நம்முன் வைக்கப்பட்ட காரியமாகும். “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் (சிந்தப்பட்ட இரத்தம் – மரணம்) பங்குகொள்ளுதல் அல்லவா?” (1 கொரிந்தியர் 10:16 திருவிவிலியம்). “பாத்திரத்தினுடைய” மதிப்பினை நாம் அனைவரும் உணர்ந்தவர்களாக, கிறிஸ்துவோடுகூட, அவரது பாடுகள் மற்றும் அவமானத்தின் “பாத்திரத்தில்” பங்குகொள்வதற்கான வாய்ப்பிற்காக, தேவனை ஸ்தோத்திரிப் போமாக; இப்படியானவர்கள் அனைவரும், அவரோடுகூட மகிமைப்படுத்தப்படுவர் என்ற நிச்சயமும் கொண்டிருக்கலாம். (ரோமர் 8:17)
பாத்திரமானது அவரது அவமானத்தில் நமது பங்குகொள்ளுதலையும், அவரது பலியில் நமது பங்குகொள்ளுதலையும், அதாவது நமது மனுஷீகத்தின் மரணத்தையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், நமது கர்த்தரும், பாத்திரத்திற்கு இந்த அர்த்தத்தைச் சாற்றினவராய் இருந்தார். உதாரணத்திற்கு அவரது சிங்காசனத்திலுள்ள எதிர்க்கால மகிமைக் குறித்த வாக்குறுதியை அவரது சீஷர்களில் இருவர், அவரிடத்தில் கேட்டபோது, அவரோ: “நீங்கள் கேட்டுக் கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கக்கூடுமோ?” என்றார். அவர்களது இருதயப்பூர்வமான உறுதிமொழியின் நிமித்தமாக, “என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்றார். திராட்சப்பழரசமானது, இரத்தம்/இரசம் வெளியே வருமளவுக்குத் திராட்சையைப் பிழிவதை மாத்திரம் குறிக்காமல், பிற்பாடு கடந்துவரும் புத்துணர்வையும்கூடக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; ஆகையால் “கிறிஸ்துவின் பாடுகளில்” இப்பொழுது பங்குகொள்ளும் நாம், அவரது மகிமைகளிலும், கனங்களிலும் மற்றும் அழியாமையிலும் சீக்கிரத்தில் பங்குகொள்வோம் – அதாவது இராஜ்யத்தில் அவரோடுகூடப் புதிய திராட்சரசத்தைப் பருகும்போது ஆகும்.
ஆகையால் மிகவும் அன்புக்குரியவர்களே, நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதற்குக் கூடுகையில் நாம் செய்கிற காரியத்தினுடைய அர்த்தத்தினை மனதிற்குக் கொண்டுவருவோமாக; அவருடைய ஜீவனால் ஊக்குவிக்கப்பட்டு, ஜீவ அப்பத்தினால் பலப்படுத்தப்பட்டுள்ள நாம், அவருடைய மரணத்திற்குள்ளாக அவரோடுகூடப் பானம்பண்ணுவோமாக மற்றும் மற்றவர்களைப் போஷிக்கத்தக்கதாக அவரோடுகூட நாம் பிட்கப்பட வேண்டும் என்று முன்பில்லாத அளவுக்கு மிகவும் உறுதியுடன் முன்னேறுவோமாக. “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோத்தேயு 2:11,12).
கிறிஸ்துவின் அங்கங்கள் அனைவரும், ஒருவேளை ஒருவர் தனியாக இருப்பின், அவருங்கூட ஆண்டவரோடு நினைவுகூருதலை அனுசரிக்கலாம்; ஆனால் கூடுமான மட்டும் அந்த ஒரே அப்பத்தின் அங்கங்கள் அனைவரும் ஒன்றுகூடிட வேண்டும். அனுசரிப்பில் சம்பிரதாயங்கள் எதுவும் வேண்டாம் என்றாலும், “சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்பட வேண்டும்.
மற்றுமொரு கருத்து: இப்படியாக “நம்முடைய பஸ்காவை” (அ) அதன் ஆண்டு நிறைவு நாளில் அதை நினைவுகூருவது ஏற்றக் காரியமாக இருப்பினும், இன்னொரு கோணத்தில் நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், அவரைப் புசித்துப் பானம்பண்ணுகிறவர்களாக இருந்து, நமது கர்த்தருடன் இந்தப் பரிசுத்தமான ஐக்கியம் கொண்டவர்களாய் இருக்கின்றோம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இஸ்ரயேலர்கள் தங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியினை, “கசப்பான கீரைகளுடன்” புசித்த இரவானது, முழுச் சுவிசேஷ யுகத்திற்கும் நிழலாய் இருக்கின்றது; மேலும் அவர்கள் எகிப்திலிருந்து, அடுத்து வந்த காலை வேளையில் விடுதலையானார்கள். இப்படியாகவே நம்முடைய விஷயத்திலுங்கூடக் காணப்படுகின்றது, அதாவது நாம் நம்முடைய ஆட்டுக்குட்டியை, கசப்பான சோதனைகளுடனும், பொல்லாங்கனுடைய உபத்திரவங்களுடனும் தற்கால யுகத்தில் புசிக்கின்றோம், ஆனால் காலையிலோ களிப்பும் மற்றும் பூமியிலிருந்தும், தீமையின் ஆளுகையிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் நமக்கான விடுதலையும் கடந்துவருகின்றது. காலை ஏற்கெனவே விடிந்துகொண்டிருக்கின்றது, ஆகவே “கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றிடுவதற்கு” அதிகம் துரிதப்படுவோமாக. (கொலோசெயர் 1:24)
(கர்த்தருடைய) இந்தக் கட்டளையின் அர்த்தம் தொடர்பாக, நாம் மேலே முன்வைத்திட்ட கருத்துக்களை, அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துபவராக இருந்து, அதன் அர்த்தம் பற்றின சரியான புரிந்துகொள்ளுதலுக்கான அவசியத்தைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் பின்வருமாறு எச்சரிக்கின்றார்: “இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, (அதன் அர்த்தம் குறித்த புரிந்துகொள்ளுதலுடனும் மற்றும் உணர்ந்துகொள்ளுதலுடனும்) இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் (அதன் உண்மையான அர்த்தத்தினை – கிறிஸ்துவின் பாடுகளிலும் மற்றும் மரணத்திலும் உள்ள நம்முடைய பங்கெடுத்தலை சரியாய்ப் புரிந்துகொள்ளாத காரணத்தினால்) இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாயிருக்கிறார்கள் அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.” (1 கொரிந்தியர் 11:27-30)
பவுலினுடைய கருத்துக்களிலுள்ள உண்மைக்கு நாம் ஒவ்வொருவரும் சாட்சிப் பகர முடியும். சபையில், அதாவது பெயர்ச் சபையில் மாத்திரமல்லாமல், உண்மையான சபையின் அங்கத்தினர்களிலும் அநேகர், “பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ளவர்களில்” அநேகர், பலவீனமடைந்து, வியாதிப்பட்டுள்ளனர் மற்றும் அநேகர் முற்றிலும் நித்திரைக்குள் போய்விட்டனர், அதாவது ஆவிக்குரிய காரியங்களுக்கு மரித்துப் போய்விட்டனர் மற்றும் மரித்துப்போன கிளைகளென, திராட்சச்செடியிலிருந்தும், ஜெயங்கொள்ளும் சபையிலிருந்து வெட்டப்பட்டுப் போய்விட்டனர். (யோவான் 15:2)
ஆகவே நாம் வருடந்தோறும் நம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும்போது, நாம் பலவான்களாகவும், ஆவிக்குரிய உற்சாகத்தினால் நிரப்பப்பட்டவர்களாகவும் காணப்பட வேண்டுமெனில், “மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காதவர்களாகக்” காணப்பட வேண்டுமெனில், நாம் நம்மைச் சோதித்து அறிந்துகொள்வோமாக மற்றும் நாம் ஏற்றக் காலத்தில் அவருடைய மகிமையில் பங்கடையத்தக்கதாக இப்படியாகப் பாடுகளிலும், அந்தச் சின்னங்களிலும் பங்குகொள்வோமாக!