R325 (page 2)
“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால்… பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1 கொரிந்தியர் 5:7,8.
மத்தேயு 26:26,28 மற்றும் லூக்கா 22:7-20 மற்றும் 1 கொரிந்தியர் 11:23-26 ஆகிய வசனங்களில் இடம்பெறும் கர்த்தருடைய இராப்போஜனம் நிறுவப்பட்டது குறித்த பதிவுகளிலிருந்து, இது நமது கர்த்தருடைய மரணத்தை வருடந்தோறும் நினைவுகூரும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது இதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிக்கப்படுவது ஏற்றதாயிருக்கும் என்றும் பார்க்கின்றோம். இது “நமது பஸ்காவும்,” உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவ ஆட்டுகுட்டியுமான கிறிஸ்து இயேசுவினால், யூதருடைய பஸ்காவிற்குப்பதிலாக நிறுவப்பட்டது என்பது தெளிவாய்த் தெரிகின்றது (யோவான் 1:29).
இதன் காரணமாக, இதை நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாளில், (யூதருடைய முதல் மாதத்தின், 14-ஆம் தேதியன்று) ஆசரிப்பதற்கென நாம் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடுகின்றோம்.
அடிக்கடி ஆசரிக்க விரும்புகிறவர்களோடு நாம் சண்டையிடுகிறதில்லை; இன்னுமாக இதைக் கண்டிப்பான (அ) கட்டாயமான ஆசரிப்பு என்றும் நாம் எண்ணுகிறதில்லை. நமக்கான ஈடுபலி விலைக்கிரயத்தை “நம்முடைய பாவங்களை நிவிர்த்திச் செய்கிற கிருபாதார பலியை; நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திச் செய்கிற கிருபாதார பலியை”- இப்படியாய் நினைவுகூருவதில் நாம் சந்தோஷம் அடைவதாலேயே, நாம் இதை ஆசரிக்கின்றோம்.
இந்த வருஷம் கர்த்தருடைய மரணத்தை நினைவுகூர்ந்து ஆசரிப்பதற்கான வேளையானது, ஏப்ரல் 2-ஆம் தேதி, மாலை 6 மணிக்குப் பிற்பாடாகும்; இதுவே இயேசுவும், அவரது சீஷர்களும் இதைப் புசித்த வேளைக்கொத்த வேளை என்றும், அடுத்தநாள் பிற்பகல் 3 மணியானது, இயேசு மரித்த வேளைக்கு ஒத்தவேளை என்றும் நாம் நம்புகின்றோம் (மத்தேயு 27:46-50).
ஆகையால் கிறிஸ்துவினுடைய பிட்கப்பட்ட சரீரத்தையும், அவரது சிந்தப்பட்ட இரத்தத்தையும் நினைவுகூரத்தக்கதாக அலிகெனி பட்டணத்திலுள்ள (Allegheny City), செடர் அவன்யூ-வின் (Cedar Avenue) எண்: 80-இல் உள்ள J. L. ரஸல் அவர்களின் இல்லத்தில், ஏப்ரல் 2-ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை 7:45 மணிக்கு ஒரு கூடுகை நடைபெறும். இப்படியாக இதை (இதன் ஆண்டு நிறைவு நாளில்) பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவரது சரீரத்தின் கடைசி அங்கத்தினன், அவரோடுகூட மரித்து, அவருக்கு ஒப்பாய் மாறி, மகிமையடைந்து, புதிய சிருஷ்டியெனப் பூரணப்படுவது வரையிலும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கின்றவர்களாய் இருப்போம். ஏனெனில், “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய (மரணத்தின்) இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? (நம்முடைய பங்கடைதலாய் இருக்கிறதல்லவா?) நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் (அவருடைய மரணத்தில்) ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 10:16,17). ஆகையால் நாம் புசித்து, பானம் பண்ணும்போது, அவரது பலியின்மீதான நமது ஈடுபாட்டை மாத்திரம் நாம் தெரிவியாமல், அவரோடுகூட மரிப்பதற்கும், அவரது பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்குமான நம்முடைய உடன்படிக்கையையும்கூடத் தெரிவிக்கின்றவர்களாய் இருப்போம் (மத்தேயு 20:22,23 பார்க்கவும்).
இது எப்போதும் இங்கு விலையேறப்பெற்ற தருணங்களாய்க் காணப்படுகின்றன மற்றும் கடந்த வருடத்தில் இரண்டு பேர், மூன்றுபேர், இருபதுபேர், ஐம்பதுபேர் கொண்ட பல்வேறு கூட்டத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதங்களை வைத்துப்பார்க்கையில், அவர்களும் இதே ஆசீர்வாதங்களை அனுபவித்துள்ளதாகத் தெரிகின்றது. “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே; ஆகையால் துர்க்குணம், பொறாமை முதலான புளிப்புகளைக் களைந்து, பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்;” கிறிஸ்துவின் சரீரமாக – புளிப்பில்லாத அப்பமாக இருப்போமாக ஒவ்வொரு அங்கத்தினனும் பெருமிதம்/பெருமைக்கொள்ளாமல், எளிதில் பிட்கப் படத்தக்கவர்களாய் இருப்போமாக.
(எந்த ஓர் எபிரெய குடும்பத்தாரிடமிருந்தும் வாங்கிக்கொள்ள முடிகின்றதான புளிப்பில்லாத ரொட்டிகளையும் மற்றும் உலர் திராட்சரசத்தையும் நாம் பொதுவாய்ப் பயன்படுத்துவதுண்டு.
பஸ்காவின் சோதனை
யோவான் 18:11; சங்கீதம் 116:13
என் பிதா ஊற்றின பாத்திரத்தில்
நான் பானம்பண்ணாதிருப்பேனோ?
விலையேறப்பெற்ற பரிசுத்தமான நினைவுகளை
நான் சிந்தியாமலிருப்பேனோ?
அவருடைய அன்பு எனக்குத் துன்பத்தையே அனுப்பி
சந்தோஷத்தை அனுப்பாமல் இருந்தாலும்,
எல்லா நண்பர்களும் எனைக் கைவிட்டாலும்
நான் அவரிடம் முறையிடுவேனோ?
சத்துருக்கள் என்னைத் தவறாய்க் காட்டி
எனக்குத் துன்பம் உண்டாக்கினாலும்
பிதா இவையெல்லாவற்றையும் அறிந்திருப்பதால்
நான் மனநிறைவோடு இருப்பேனோ?
முன்பு எனக்கு நண்பனாய் இருந்தவன்
இப்பொழுது யூதாசாய் மாறியிருப்பினும்;
அவரது அன்பில் இன்னும் எனைச் சேர்த்து
அணைத்திருக்கின்றார் இயேசு.
விசுவாசமற்ற நண்பனின் அன்பையும்
இழப்பையும் அவர் அறிவார்.
இறுதிவரை நான் வைக்கும் ஒவ்வோர்
அடியையும் அவர் அறிவார்.
அவருடைய அன்பு எனை அணைத்திருப்பதினால்
நான் கீழே விழுவதில்லை.
என் பிதா ஊற்றின பாத்திரத்தை
நான் முழுவதுமாகப் பருகுவேன்.
– Hattie O. Henderson. (R5875)