R4710 (page 357)
மத்தேயு 26:57-68
“அவர் வையப்படும்போது பதில் வையாமலும்…” 1 பேதுரு 2:23
இப்பாடத்தை நாம் திரு. சாண்டிலர் அவர்களால் கூறப்பட்டுள்ள சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கலாம். அவர் பின்வருமாறு கூறியுள்ளார், “மனுக்குலத்தினுடைய நீதித்துறை சார்ந்த வரலாற்றில், அநேக குறிப்பிடத்தக்கதான விசாரணைகள் நடைப்பெற்றுள்ளது. அத்தேனே பட்டணத்தின் வாலிபர்களைச் சீர்க்குலைத்ததற்கும், கிரேக்கர்களின் தேவர்களைத் தூஷித்ததற்கும், அத்தேனே பட்டணத்தின் ஜனநாயக அமைப்பை அழிக்க நாடினதற்குமான குற்றங்களுக்காக, அத்தேனே பட்டணத்தின் சட்டசபைக்கு முன்பாக நடைப்பெற்ற சாக்கிரெட்டீஸ் அவர்களின் விசாரணையானது, அருமையான ஜனங்கள் பற்றின வரலாற்றில் இன்னமும் வியக்கத்தக்க மற்றும் சுவாரசியமான பாகமாகவே காணப்படுகின்றது.”
“ஆல்பிரட் டிரெபஸ் அவர்களின் விசாரணைக்கூட இன்னமும், மனுஷர்களின் நினைவுகளில் காணவேபடுகின்றது. டிரெபஸ் ஒரு பிரமீதீயஸ்* என்று அவருடைய நண்பர்கள் கூறுவதுண்டு (*Prometheus – பிரமீதீயஸ் – கிரேக்க கடவுள்கள் வாழும் மலையிலிருந்து ஒளியைத் திருடி, மனுக்குலத்திற்குக் கொடுத்த ஓர் இராட்சதன் ஆவார். இந்தத் திருட்டிற்கான தண்டனையாக, இவன் பாறையில் கட்டப்படுவதற்கும், இவனுடைய கல்லீரலை உண்ணும்படிக்கு மாபெரும் கழுகை அனுப்புவதற்கும் சீயஸ் கடவுள் கட்டளையிட்டார்]. பிரஞ்சு தேசம் அதன் பிரிவினைவாதங்களினால் இன்னமும் பிரிவினையிலேயே காணப்படுகின்றது. டிரெபஸ் தேவனையோ (அ) கிறிஸ்துவையோ காட்டிக்கொடுத்த யூதாசாய் இராமல், மாறாக பிரான்ஸ் மற்றும் தாய்நாட்டையும் காட்டிக்கொடுத்த யூதாசாக இருக்கின்றாரென இவரது சத்துருக்கள் இன்னமும் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த விசாரணைகள் அனைத்தும், கலிலேயா ஊரானாகிய நாசரேத்தூர் இயேசுவினுடைய விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதலுக்கு முன்னதாக சர்வ சாதாரணமானவைகளாகவும், சுவாரசிய மற்றவைகளாகவும் உள்ளது.”
இயேசுவுக்கு யூதர்கள் செய்திட்ட தீங்குகளின் விஷயத்திலும், ரோமர்கள் வாயிலாக இயேசுவை யூதர்கள் சிலுவையில் அறையப்பண்ணிட்ட விஷயத்திலும், யூதர்கள் முழுமையாய்ப் பழியினின்று விலக்கப்பட்டவர்கள் என்று கூறுவது நமக்கடுத்தக் காரியமல்ல. எனினும் நடந்திட்ட அநியாயங்கள் தொடர்புடைய விஷயத்தில், நமது கணிப்பினுடைய தீவிரமானது/கடுமைத்தனமானது மட்டுப்படுத்தப்படுவதற்குரிய அனைத்தையும்கூட நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதும் ஏற்றக்காரியமாய் இருக்கும். அவர்களுடைய (யூதர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும்போது, எவைகள் குற்றத்திற்கான பொறுப்பைக்குறிக்கின்றது என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதும் ஏற்றக்காரியமாய் இருக்கும். இது அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு காரியமே. குற்றவாளியாகக் காணப்படும் ஒருவனுக்காய் வாதாடும் வழக்கறிஞர், தான் வழக்காடும் குற்றவாளிக்காக வழக்காடும்போது, குற்றவாளி குற்றத்தைச் செய்திடுவதற்குக் காணப்பட்ட நியாயமான காரணங்களை முன்வைப்பது கடமையாய் உள்ளது.
இந்தக் கண்ணோட்டத்திலிருந்து, நாம் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் காணப்பட்டிருந்த யூத ஜனங்களைக் கண்ணோக்கும் போது, சூழ்நிலைகளைக் குறித்த மிகுந்த நியாயமான கண்ணோட்டத்தை நம்மால் அடையமுடிகின்றது. யூதர்களின் நடவடிக்கைக் குறித்த பரிசுத்தவானாகிய பேதுருவின் வார்த்தைகளை நாம் முதலாவதாகக் கவனித்துக்கேட்கலாம். “ஜீவாதிபதியைக்கொலை செய்தீர்கள்; சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்று பரிசுத்தவானாகிய பேதுரு கூறினார் (அப்போஸ்தலர் 3:15-17). ஒருவேளை அறிந்திருப்பார்களேயானால், இவர்கள் ஜீவாதிபதியைக் கொலை செய்திருக்கமாட்டார்கள்.
தங்களுக்குத் தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், இராஜாவாகவும்; மோசேயைப் போன்று, ஆனால் மோசேயைப்பார்க்கிலும் பெரியவராகவும்; தாவீது மற்றும் சாலொமோன் போன்று, ஆனால் இவர்களைப்பார்க்கிலும் பெரியவராகவும், மெல்கிசெதேக்கைப்போன்று ஆனால் [R4710 : page 358] மெல்கிசெதேக்கிலும் பெரியவராகவும் இருப்பாரென முன்னுரைக்கப்பட்ட மாபெரும் மேசியாவானவர், “துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாய்த்” தோன்றுவாரென யூதர்கள் ஒருகணம்கூட எண்ணிப்பார்க்கவில்லை. அவர் “துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” என்று மேசியாவைக் குறித்துத் தீர்க்கத்தரிசியினால் எழுதப்பட்டதாய் இருந்தாலும் (ஏசாயா 53:3), இவைகள் மற்றத் தீர்க்கதரிசனங்களில் முன்னுரைக்கப்படும் அவரைக் குறித்த மகிமையான காரியங்களினால் அவர்களின் புரிந்துகொள்ளுதலின் கண்களுக்கு முன்பாக மறைக்கப்பட்டன. அவர்கள் மகிமைகளைக் கண்ணோக்கினார்கள். ஆனால் அவர்கள் பாடுகளைக் கண்ணோக்கவில்லை. இன்றுவரையிலும் தங்கள் ஜாதி சந்தித்த பாடுகளானது, இறுதியில் தங்களுக்கு நன்மையைக் கொண்டுவரும் என்றே எண்ணுகின்றவர்களாகக் காணப்படுகின்றனர். தீர்க்கதரிசனங்கள் ஒரே இடத்தில் காணப்படுவதில்லை, மாறாக “இங்கே கொஞ்சமாகவும், அங்கே கொஞ்சமாகவும்” சிதறிக்காணப்படுகின்றன; அக்காலத்தில் அவைகள் புரிந்துகொள்ளக்கூடாதபடிக்கு, இப்படியாகச் சிதறிக்காணப்பட்டன; நமது கர்த்தர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து வந்து தீர்க்கத்தரிசனங்களை விளக்குவது வரையிலும், கர்த்தருடைய சீஷர்களாலும்கூடப் புரிந்துகொள்ளப்படவில்லை; பின்னர் இப்படியாகவே காரியங்கள் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டுள்ளது என்றும், மனுஷகுமாரன் தம்முடைய மகிமைக்குள் பிரவேசிப்பதற்கு முன்பும், இஸ்ரயேலையும் மற்றும் உலகத்தையும் ஆசீர்வதிப்பதற்கு முன்பும், அவர் பாடுபட வேண்டியுள்ளது என்றும் சீஷர்கள் புரிந்துகொள்வதற்குப் பரிசுத்த ஆவியினால் உதவப்பட்டார்கள்.
ஆம், யூதர்கள் போன்று, இன்றும் அநேகம் கிறிஸ்தவர்களும் இவ்விஷயத்தில் மிகவும் குழப்பமடைந்துக் காணப்படுகின்றனர். இஸ்ரயேலையும், சகல மனுக்குலத்தையும் பொதுவாய் ஆசீர்வதிப்பதற்கும், சீர்த்தூக்குவதற்குமான மேசியாவின் மகிமையான இராஜ்யத்தின் ஆளுகைக் குறித்த கருத்தை அநேகர் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர். “கிறிஸ்துவின் பாடுகள்தான்’ அவரது மகிமையின் இராஜ்யத்திற்கான வழியை ஆயத்தம்பண்ணி, இராஜ்யத்தைக் கொண்டுவருவதாக இருக்கும் பட்சத்தில், (அந்த இராஜ்யம் இன்னமும் வராததினால்) இந்தக் குழப்பமடைந்துள்ள கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தின்படி ஒன்றில் தெய்வீகத் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாகக் காணப்பட வேண்டும் அல்லது அவரது மகிமையின் இராஜ்யம் என்பது, இவர்களுடைய கண்ணோட்டத்தின்படி, “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக” என்று நமது கர்த்தரால் கற்றுத் தரப்பட்ட ஜெபத்திற்கு முழு இசைவாகவும் உள்ள பரலோக இராஜ்யமாக (மாத்திரமே) காணப்பட வேண்டும். கிறிஸ்துவின் தலைப்பாகத்தினுடைய பாடுகள் முடிவடைந்தவுடன், “கிறிஸ்துவின் சரீரத்தினுடைய” பாடுகள், அதாவது அவரது சரீரமாகிய சபையின் பாடுகள், “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுகிற” காரியம் ஆரம்பமாகியுள்ளது என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ளாததே பிரச்சனையாகும் (கொலோசெயர் 1:24). கர்த்தருக்குப் பின்னாக, கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையானது, பிரயாணத்தின் முடிவுவரையிலும், அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சிலுவையைச் சுமந்து முடித்தவுடன், மகிமையின் இராஜ்யம் வரும். இஸ்ரயேலின் குருட்டுத்தனம் எடுத்து மாற்றப்படும் மற்றும் கர்த்தருடைய ஆசீர்வாதமானது, முழுப் பூமியையும் நிரப்புகிறதாய் இருக்கும்.
ஸ்தேவானைக் கல்லெறியும்படிக்குத் தர்சு பட்டணத்துச் சவுலை வழிநடத்தின அதே ஆவிதான், இயேசுவைச் சிலுவையில் அறைந்திட்ட யூதர்களிடத்திலும் காணப்பட்டது. சவுல் மன்னிக்கப்பட்டதுபோன்று, இஸ்ரயேலும் மன்னிக்கப்படும்; “கர்த்தர் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவார்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன (சகரியா 12:10); ஆனால் அவர்களது துக்கம் சந்தோஷமாய் மாறும்; ஏனெனில் யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை மன்னித்ததுபோன்று, தாம் சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாய் இருந்தவர்களை, பூமியின் சிங்காசனத்தில் காணப்படும் மாபெரும் நிஜமான யோசேப்பும் மன்னிப்பார்.
இன்று காணப்படும் ஜனங்களிலிருந்து வேறுபட்டவர்களாக, யூதர்கள் அன்று காணப்படவில்லை. அரசியல் செல்வாக்கிற்காக, மதநம்பிக்கை அற்றவர்கள், சில உயர்வான ஸ்தானங்களில் யூதர்களின் மத்தியில் காணப்பட்டதாக, வரலாறு தெரிவிக்கின்றது; ஆகவேதான் நமது கர்த்தருடைய முதலாம் வருகையின்போது, பிரதான ஆசாரியனாக, ஒரு சதுசேயன் காணப்பட்டான் என்று பார்க்கின்றோம்; சதுசேயர் என்பவர்கள் இஸ்ரயேலுக்குத் தேவனால் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை முற்றிலும் நம்பாதவர்களாகவும், மரணத்திலிருந்ததான உயிர்த்தெழுதலில் நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுபவர்களாவர். இப்படியாகவே விசுவாசிக்காதவர்களாகவும், உயர் ஸ்தானம் வகிப்பவர்களாகவும் இருக்கும் பிரதான ஆசாரியர்கள், யூதர்கள் மத்தியிலும் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் மத்தியில், விசுவாசிகள் அல்லாத வேதசாஸ்திரிகள் (Doctors of Divinity) காணப்படுகின்றனர்; [R4711 : page 358] தாங்கள் முற்றிலும் விசுவாசியாதவர்கள் என்று ஒப்புக்கொள்ளும், மிகவும் பிரபலமான அநேக ரபீக்கள், யூதர்கள் மத்தியில் காணவேபடுகின்றனர். இப்படிப்பட்டதான அவிசுவாசியான கிறிஸ்தவனும், யூத ஊழியர்களும் ஒரு குற்றமற்ற மனிதனுக்கு எதிரான அநீதியான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கிடுவார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. அப்படிச் செய்வார்களா (அ) இல்லையா என்பதை நாம் அறியோம். அநேகமாக இனிமேல்தான் இது குறித்து ஆராய்ந்திட வேண்டும். ஆனால் தெய்வீக வெளிப்படுத்தல்களிலும், மனிதனுடைய காரியங்களிலான தெய்வீக மேற்பார்வையிலுமுள்ள விசுவாசமானது இல்லாமல் போகும்போது, இயல்பாகவே விசுவாசத்தை இழக்கிறவர்கள் அதிகமதிகமாய் கொள்கைவாதிகளாகி, சபை மற்றும் நாட்டினுடைய காரியங்களின் வழிநடத்துதல் தொடர்புடைய விஷயங்களில், குறிப்பாகக் “கொள்கையை” மனித ஞானத்தின் உச்ச நிலையெனக் கருதுவார்கள் என்பதை நாம் அறிவோம்.
உதாரணத்திற்குச் சரித்திரத்தை எடுத்துப்பார்க்கும்போது, நமது கர்த்தருடைய நாட்களில், யூத மார்க்கத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள், அவிசுவாசிகளாவர் (சதுசேயராவர்); மேலும் இவர்களுடைய கொள்கையானது, ரோம சக்கரவர்த்தியின் உதவியினை அடைவதும், சாமானிய ஜனங்களைத் தங்களுடையக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள நாடுவதுமாகும் என்பதை நம்மால் எளிதில் காணமுடிகின்றது. ஆகவே இப்படிப்பட்டவர்களுக்கு, உயர்க்குடிப்பிறப்பை உடையவராக, அதாவது தாவீதின் குடும்பத்திலும், யூத கோத்திரத்திலும் பிறந்தவராக இருப்பினும், ஏழையாக இருக்கும் ஒரு மனிதன், கொஞ்சம் மீனவர்களையும், ஆயக்காரர்களையும், இன்னும் சிலரையும் ஆதரவு திரட்டிக்கொண்டு, தம்மையே இராஜாவென அறிவிப்பதும், தம்முடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவது அருகாமையில் உள்ளது என அறிவிப்பதும், கல்விமான்களைக் கவருகின்றது இல்லையென்றாலும், அவர் தரத்திலுள்ள சாதாரண ஜனங்களை அவர் கவருவதும், ஏதோ சில இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையைக்கொண்டு, ஜனங்களின் வியாதிகளை அவர் சொஸ்தப்படுத்துவதும், பேராபத்தாய்த் தோன்றியிருக்க வேண்டும். இக்காரியங்கள், அதாவது இயேசுவின் கீர்த்தி இப்படியாகத் தொடர்ந்துகொண்டே சென்றால், விஷயங்கள் சீக்கிரமாய், ரோம சக்கரவர்த்தியின் செவிகளுக்குப் போய்ச் சேரும் என்றும், இதனால் தங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் தள்ளுபடிப் பண்ணப்படும் என்றும், தாங்கள் அதிகாரத்தை எதிர்க்கும் கலகவாதி ஜாதியினர் எனக் கருதப்படுவர் என்றும் இவர்கள் சிந்தித்திருப்பார்கள் என்பதை நம்மால் நன்கு கற்பனைச் செய்துபார்க்க முடிகின்றது.
இஸ்ரயேலின் இராஜாக்கள் வருவதுபோன்ற விதத்தில், பஸ்காவுக்கு முன்னதாக, இயேசு எருசலேமுக்கு கழுதையின் மீது வந்ததும், ஜனங்கள் அவரைச் சூழ்ந்து, “கர்த்தருடைய நாமத்தில் வருகிற, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” எனச் சத்தமிட்டதுமான விஷயங்களானது, உச்சக்கட்ட நிகழ்வாய்க் காணப்பட்டது; மேலும் இது ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்து மற்றும் இதன் விளைவாக, ரோமர்களால் தங்கள் தேசமானது அழிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு குற்றமற்ற மனிதன் மரிப்பது மிகவும் நலமாய் இருக்குமென, மதத்தின் ஸ்தானங்களில் காணப்படும் இந்த அவிசுவாசியான யூதர்களையும், அரசியல்வாதிகளையும் நம்பவைத்தது. இப்படிப்பட்டதான ஒரு காரியம் தொடர்புடைய விஷயத்தில், இதைப்போன்றே இந்தப் பிரகாசமடைந்துள்ள நாட்களில் வாழும் எத்தனை அமெரிக்க பிரசங்கிமார்களும், நீதிபதிகளும், அதிகாரிகளும் முடிவெடுக்க விரும்புபவர்களாய் இருப்பார்கள்! இந்தக் கொள்கைதானே, சக்கரவர்த்திகளின் விஷயத்தில் எப்போதும் நிலவி வருகின்றது? இப்படிப்பட்ட ஓர் அமைதியின்மை ஜெர்மனியின் தலைநகரத்திலும், இத்தாலியிலும், பிரான்சிலும், ஆஸ்திரேலியாவிலும், ரஷ்யாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் ஏற்படுவதாகக் கொஞ்சம் கற்பனைப் பண்ணிக்கொள்ளுங்கள். இப்படியான ஓர் ஊர்வலம் போய் முடிந்த பிற்பாடு, இயேசு ஆலயத்திற்குச் சென்று, நீண்டகாலமாய்ப் புறக்கணிக்கப்பட்ட பிரமாணம் ஒன்றைச் செயல்படுத்துவதையும் மற்றும் இப்படியாக அவர் தம்முடைய மத உரிமைகளைச் செயல்படுத்துவதையும் கொஞ்சம் கற்பனைப் பண்ணிப்பாருங்கள்; இன்னுமாக யூதர்களின் பிரதானமான ஆலயங்களின் வெளிப்புறங்களிலிருந்து காசுக்காரர்களையும், வியாபாரிகளையும் துரத்துவதையும் கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்! இப்படியாகச் செய்யும் ஒரு நபர், இன்றைய காலங்களில் என்ன செய்யப்படுவார்? மிகவும் நாகரிகமான தேசங்களில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாரா? என்றோ, மிகவும் நாகரிகம் இல்லாத தேசங்களில் அவர் அடிக்கப்படுவாரா (அ) கொல்லப்படுவாரா? என்றோ நாம் அறியோம். ஆகவே இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நமக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகைமையின் ஆவிக்குப்பதிலாக, அனுதாபமே ஏற்படும்; அதாவது ஒரு பக்தியுள்ள ஜாதியானது, தங்களை இந்த அளவுக்கு அரசியல்வாதிகளின் கரங்களுக்குள் அடங்கிவிடுவதற்கு அனுமதித்துள்ளதைப் பார்க்கையில் அனுதாபமே ஏற்படுகின்றது.
பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை வெட்டின பிற்பாடு (இயேசுவினால் காயம் ஆற்றப்பட்டிருப்பினும் பரிசுத்தவானாகிய பேதுரு, போதகருக்கு என்ன சம்பவிக்கும் என்பதைக் காணத்தக்கதாக, போதகரை பிரதான ஆசாரியனுடைய பிரகாரம்வரை பின்தொடர்ந்து வந்தது மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. எந்த ஒரு கடுமையான குற்றச்சாட்டாக இருப்பினும், இரவு வேளையில் கைதியை விசாரணை செய்வது யூதர்களுடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிராய் இருந்தபோதிலும், இயேசுவை இரவு வேளையிலேயே குற்றஞ்சாட்டி விசாரணை செய்தார்கள். ஆனால் இதற்கு ஒரு சாக்குப்போக்கு வைத்திருந்தார்கள்; இது ஒரு முக்கியமான சூழ்நிலையாகும்; அவசரமாய்ச் செயல்படுவது அவசியமாய் இருந்தது; ஏனெனில் செய்யப்படப்போகிற காரியங்கள் விரைவாய்ச் செய்யப்பட வேண்டியிருந்தது; இயேசு பொது ஜனங்கள் மத்தியில் கொண்டிருந்த மாபெரும் செல்வாக்கினை, அந்த அவிசுவாசியான அதிகாரிகள் உணர்ந்திருந்தார்கள். இயேசு திறமிக்க, ஆனால் தீங்கற்ற மோசடிக்காரர் என்று அவர்கள் நம்பினார்கள். இயேசு எந்தக் குற்றமும் புரியவில்லை, ஆனால் அவர் சமாதானத்தைக் குலைத்தவராய் இருக்கின்றபடியால், அவருடைய ஜீவனை எடுத்துப்போடுவது சரியான காரியம் என்று அவர்கள் எண்ணினார்கள். பஸ்கா பண்டிகை சமீபமாய் இருந்தது மற்றும் அது ஒரு வாரம் நீடிக்கும் மற்றும் அந்த வாரத்தில் ஒருவரின் மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது அவர்களுடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிரான காரியமாக இருந்தது. பாலஸ்தீனியா [R4711 : page 359] முழுவதிலிருந்தும் எருசலேமின் உள்ளிலும், வெளியிலும் ஒன்று முதல் இரண்டு மில்லியன் ஜனங்கள் காணப்படும் தருணத்தில், ஜனங்கள் மீது இயேசுவால் அவ்வாரத்தில் செலுத்தப்படப்போகும் செல்வாக்கைக் குறித்தும் அவர்கள் அஞ்சினார்கள். தாங்கள் செய்யப்போகும் காரியங்கள் திடீரென்றும், திட்டவட்டமாயும் இருக்கவேண்டுமென, அவர்கள் ஏற்கெனவே தீர்மானமாய் இருந்தார்கள். இவைகள் கைது செய்வதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. தங்களுடைய ஜாதிக்கு நன்மையானதாக இருக்குமென அவர்கள் எண்ணியிருந்த, அவர்களது கொலைப்பாதகத் திட்டங்களை நிறைவேற்றிடுவதற்காக, அந்த நடுராத்திரி வேளைக்கு ஆயத்தத்துடன், காத்திருந்தனர்.
அடுத்துவரும் காலையில், காரியங்கள் அனைத்தும் துரிதமாய்ச் செயல்படுத்தப்படத்தக்கதாக, சாட்சியங்கள் திரட்டுவதற்கான ஏற்பாடாக மாத்திரமே, இரவு வேளையின் விசாரணை நடைபெற்றது.
அவர்களுக்குக் குற்றச்சாட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது; ஏனெனில் இரக்கத்தின் கிரியைகளையும், ஞானத்தின், சீர்த்திருத்தலின் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளையும் அல்லாமல், வேறு எதை இயேசு செய்திருக்கின்றார் மற்றும் பேசியிருக்கின்றார்? தேவனைத் தூஷிப்பது என்பது யூதர்களுடைய பிரமாணத்தின்படி, கடுமையான குற்றச்சாட்டாகக் காணப்பட்டது. இயேசு தேவனைத் தூஷித்ததாக நிரூபிப்பது எளிமையாக இருக்கும் என்பதால், அதினால் இயேசுவைக் குற்றஞ்சாட்டலாம் என்றிருந்தார்கள். ஆலயத்தின் அருகாமையில் இயேசு காணப்பட்டபோது, “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று கூறியிருந்தார். “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்”. இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர் இயேசு சொல்லர்த்தமான ஆலயத்தைக் குறித்து இப்படிப் பேசினதாகப் புரிந்து கொண்டார்கள். இதை அவர்கள் தேவதூஷணம் என்று குற்றஞ்சாட்டினார்கள். காரணம் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு பல வருடங்களாயிருக்க, இயேசு அதை மூன்று நாட்களில் கட்டி எழுப்புவது என்பது, அவரிடத்தில் தெய்வீக வல்லமை இருப்பதாக அவர் தெரிவிப்பதாய் இருக்கும். இயேசுவைக் கொன்றுபோட வேண்டுமென்று முன்பே திட்டமிட்டிருந்தவர்களுக்குக்கூட, இந்தக் குற்றச்சாட்டுப் போதுமானதாய், ஆற்றல் மிக்கதாய்க் காணப்படவில்லை. அவர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் குற்றச்சாட்டுக்கு, கொஞ்சம் நீதியின் சாயத்தைத் தீட்டிட விரும்பினார்கள். ஆகவே தங்கள் முன்னிலையிலேயே, இயேசு காரியங்களை ஒப்புக்கொள்ளத்தக்கதாக, பிரதான ஆசாரியன் நாடி, “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்” என்றார்; “அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச்சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். சத்தத்தைக் கேட்ட முற்றத்திலிருந்த கும்பல்/கீழ்த்தரமான ஜனங்கள், தாங்கள் முன்காலங்களிளெல்லாம் செய்து வந்தது போன்று, இப்பொழுதும் கைதியைக் கீழ்த்தரமாய் நடத்திடுவதற்குச் சுதந்தரத்தை உணர்ந்தவர்களாக, அவரை உமிழ்வதன் முலம், அவர் மீதான தங்கள் வெறுப்பினைக் காண்பித்தார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.” (மத்தேயு 26:64-68) “அவர் வையப்படும்போது, பதில் வையாமல் இருந்தார்.”