R1625 (page 27)
இந்த வருடம், ஏப்ரல் 19-ஆம் தேதி, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்குப் பின்னர், நமது கர்த்தருடைய “கடைசி இராப்போஜனத்திற்கான” ஆண்டு நிறைவு நாளாய்க் காணப்படுகின்றது; இந்தக் “கடைசி இராப்போஜனத்தை” நமக்கான அவரது மரணத்திற்கான நினைவுகூருதலாக அவர் கொடுத்து, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார் (லூக்கா 22:19).
இந்தப் பத்திரிக்கையினுடைய கழிந்த வெளியீட்டில், கடைசி இராப்போஜனமானது, யூதருடைய பஸ்கா இராப்போஜனத்திற்குப்பதிலாக இடம்பெறத்தக்கதாகக் கொடுக்கப்பட்டது என்பதற்கும், அது பொருத்தமான வேளையில், வருடந்தோறும் ஆசரிக்கப்பட வேண்டும் என்பதற்குமான ஆதாரங்களைக் கொடுத்திருந்தோம். பஸ்கா ஆட்டுக்குட்டியானது, தேவ ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவுக்கு நிழலாய் இருப்பதுபோன்று, அதன் மரணமும், அவருடைய மரணத்திற்கு நிழலாய் இருக்கின்றது மற்றும் இதனால் அவருடைய மரணமும் அதே நாளில்தான் நிகழ்கின்றது. நமது கர்த்தர் மரித்த அதே நாளிலும், காட்டிக்கொடுக்கப்பட்டதான அதே இரவிலும், அவரால் கடைசி இராப்போஜனமானது நிறுவப்படத்தக்கதாக, நாளினுடைய துவக்கத்தினை மாலை 6 மணியிலிருந்து கணக்கிடும் விதத்தில் யூதருடைய காலக்கணக்கீடு முறைமை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது என்றும் நாம் காண்பித்திருந்தோம் (1 கொரிந்தியர் 11:23).
புதிய உடன்படிக்கையானது இன்னமும் அகற்றிப்போடாத நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் யூதனாகக் காணப்பட்டப்படியால், நிழலான ஆட்டுக்குட்டியினை முதலாவது புசிப்பது நமது கர்த்தருடைய கடமையாய் இருந்தது; இந்த இராப்போஜனம் முடிந்த பிற்பாடே அவர் தம்முடைய மாம்சத்திற்கும், இரத்தத்திற்கும் அடையாளங்களாக அப்பத்தையும், திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, இன்று வரையிலும் நாமும், அவரது ஜனங்கள் அனைவரும் ஆசரிப்பதில் மகிழ்ச்சியடையும் நினைவுகூருதலுக்கான இராப்போஜனத்தை நிறுவினார்.
நிழலான ஆட்டுக்குட்டியினுடைய இடத்தை நமது கர்த்தர் எடுக்கையில், அவரால் நீசான் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்று சிலுவையில் அறையப்பட முடியும்; நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய நினைவுகூருதல் மற்றும் அதனால் உண்டான நிழலான கடந்துபோகுதலின் இடத்தில், அவரது மரணத்திற்கான நினைவுகூருதலும், இதனால் உண்டாகும் கடந்துபோகுதலும் இடம்பெறுவதினால், நிழலானது நினைவுகூர்ந்து ஆசரிக்கப்பட்டதுபோலவே, நிஜத்தினுடைய ஆசரிப்பும் வருடாந்தர ஆசரிப்பாகவே இருக்க வேண்டும்.
இது ஆதிக்கால திருச்சபையினருடைய வழக்கமாக இருந்துள்ளது என்று நாம் பார்த்திருக்கின்றோம்; அவர்கள் பல நூற்றாண்டு காலமாக நாம் பின்பற்றுகிற யூத காலக்கணக்கீடு முறைமையையே கைக்கொண்டு வந்தனர்; அதாவது நீசான் மாதம் 13-ஆம் தேதியின் மாலையாகிய 14-ஆம் தேதியின் துவக்கம் எனும் காலக்கணக்கிடுதலாகும். இப்படியான காலக்கணக்கீடு முறைமையானது பிற்பாடு ரோம சபையால் மாற்றப்பட்டது; எனினும் நமது கர்த்தருடைய மரணத்தை வருடந்தோறும் ஆசரிக்கும் கருத்தும், வழக்கமும் இன்னமும் ரோம சபையாலும், கிரேக்க சபையாலும், சிரியன் சபையாலும், இங்கிலீஷ் சபையாலும் “புனித வெள்ளியன்று” கைக்கொள்ளப்பட்டு வருகின்றது.
புராட்டஸ்டண்ட் சபைகளானது, (திருப்பலி) பூசை பலியெனும் ரோம சபை உபதேசத்தை, கர்த்தருடைய இராப்போஜனத்துடன் குழப்பிக்கொண்டனர்; ஆனால் இவைகள் இரண்டிற்கு இடையில் எந்தத் தொடர்புமே இல்லை; (மிலேனியல் டாண் புத்தகத்தின் தொகுதி-III, பக்கம்-98 முதல் 101 வரை, பூசைபலிக் குறித்துப் பார்க்கவும்); மேலும் இதன் காரணமாக இவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட தேதிக்கும் எந்த ஒரு காரணத்தையும் காணாததினாலும், “இதைப் பானம்பண்ணும்போதெல்லாம்” என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளானது, எப்போது வேண்டுமானாலும் ஆசரிப்பதற்கான முழு அனுமதியைக் கொடுக்கின்றது என்று எண்ணிக்கொண்டதாலும், பல்வேறு காலங்களையும், வேளைகளையும், காலை, மதியம், இரவு மற்றும் மாதந்தோறும், மாதத்திற்கு இருமுறை, காலாண்டுதோறும் என்று தெரிவு செய்துகொண்டனர். ஆனால் அப்போஸ்தலனோ இதைப் பானம்பண்ணும் ஒவ்வொரு முறையும் (வருடந்தோறும்) என்ற அர்த்தத்திலேயே குறிப்பிட்டுள்ளார் என்று நாம் புரிந்துகொள்கின்றோம்.
சில அருமையான கிறிஸ்தவ ஜனங்கள் இந்த இராப்போஜனத்தை வாரத்தின் முதல் நாள்தோறும் நினைவுகூர்ந்து ஆசரிக்கும் தப்பறைக்குள்கூட விழுந்துள்ளனர்; காரணம் இவர்கள் நிஜம் நீக்கிப்போட்டதான நிழல் தொடர்புடைய விஷயத்தில், இராப்போஜனத்தின் அர்த்தம் என்னவென்று கவனிக்கத் தவறியுள்ளனர்; காரணம் இவர்கள் தங்களுடைய இந்த நடவடிக்கைக்கு, புதிய ஏற்பாட்டில் இடம்பெறும், “வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் [R1625 : page 68] கூடிவந்திருக்கையில்” என்ற வசனப்பகுதியினை எடுத்துக்காட்டாகத் தவறுதலாய் எண்ணிக்கொள்கின்றனர். இவ்வசனப்பகுதியானது, வாரத்தின் முதல்நாள்தோறும் அப்பம் பிட்குதலானது ஆதிக்கால சீஷர்களின் வழக்கமாய் இருந்தது என்பதை உண்மையில் சுட்டிக்காட்டுகின்றது; ஆனால் இது இங்கு நினைவுகூருதல் இராப்போஜனமே குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதை நிரூபிப்பதில்லை. திராட்சப்பழ ரசமானது, நினைவுகூருதலில் அப்பத்தைப்போன்று முக்கியமானதாகும்; ஆனால் இது, அப்பம் பிட்குதலுக்கும், ஜெபித்தலுக்குமெனக் கூடின இந்த வாரந்தோறுமான கூடுகைகளில், ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் நமது கர்த்தருடைய மரணத்தை அல்ல, அவரது உயிர்த்தெழுதலையே கொண்டாடினார்கள். இவர்கள் கடைசி இராப்போஜனத்திற்கான நினைவுகூருதலுக்காக அல்ல, மாறாக நமது கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளில் அப்பம் பிட்கையில் தங்கள் கண்கள் திறக்கப்பட்டதையும், தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும், தங்கள் பார்வையினின்று அவர் மறைந்து போனதையும் நினைவுகூரும் வண்ணமாகவே அப்பம் பிட்டுக்கொண்டார்கள்.
இங்கு நினைவுகூருதல் இராப்போஜனம்தான் நடைப்பெற்றதென்றால், அது அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்திருக்கும். நம்மைப்போன்று ஆதிக்கால சீஷர்களும், தினந்தோறும் அப்பம் பிட்டனர் (அ) அப்பம் புசித்தனர்; ஆனால் நமது கர்த்தருடைய மரணத்தை அல்ல, மாறாக அவரது உயிர்த்தெழுதலை நினைவுகூருவதற்காக வாரத்தினுடைய முதல்நாளில் ஒன்றுகூடினார்களே ஒழிய, மற்றபடி அப்பம் பிட்பதற்கு என்று அவர்கள் ஒன்றுகூடி வருவதில்லை.
இந்த வாரக்கூடுகைகளானது, யூதர்கள் அனைவருக்குமான வழக்கம் என்பதை சிறு ஆய்வுகள் பண்ணினாலே புரிந்துவிடும்; வாரத்தினுடைய முதல் நாளுக்குப்பதிலாக, யூதர்கள் [R1626 : page 68] வாரத்தின் கடைசி (அ) 7-ஆம் நாளிலும், பண்டிகை நாட்களிலும், (Social Meals) “விருந்து உணவு உண்பதற்கென” ஒன்று கூடுவார்கள். இது குறித்து Mc Clintock மற்றும் Strong’s Religious Cyclopedia-வின், தொகுதி 8-இல், பக்கம் 68-இல் இடம்பெறும் வரிகளை, நாம் மேற்கூறிய காரியங்களை உறுதிப்படுத்துவதற்கு என்று மாத்திரம் மேற்கோள் இடுகின்றோம்; அது பின்வருமாறு:
“ஓய்வுநாள் தொடர்பான கடுமையான சட்டங்களின் காரணமாக, எந்த இஸ்ரயேலனும், “ஓய்வு நாள் பிரயாணம்” என்ற ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குமேல் நடக்கக்கூடாது என்றும், ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது. ஓய்வுநாளில் தங்களுடைய விருந்தினைப் பல்வேறு இடங்களில் ஆசரிப்பவர்களாகக் காணப்பட்ட சதுசேயர்கள் (அ) ஆசாரிய குழுவினரால், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம் மற்றும் தாங்கள் விரும்பும் எதையும் இங்கும், அங்குமாய் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்; ஏனெனில் இந்த விருந்துகளை இவர்கள் ஓய்வுநாளின் புனித ஆசரிப்புகளுக்கு உட்படாத தங்களது ஆசாரிய மற்றும் பலியின் வேலைகளின் ஒரு பாகமாகக் கருதினர். ஆனால் ஆசாரிய விருந்துகளைப்போன்று, தங்கள் ஓய்வுநாள் உணவுகளைப் பெற்றிருந்ததான பரிசேயர்களோ, கடுமையான ஓய்வுநாள் சட்டங்களினால் உண்டாகும் சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தனர்.”
நம்முடைய ஆராதனை அனைத்திலும், பயபக்தியோடுகூட எளிமையும் கலந்திருக்க வேண்டும்; மற்றும் இந்த நினைவுகூருதலின் விஷயத்திலுள்ள நமது கர்த்தருடைய முன்மாதிரியானது, எளிமை மற்றும் பயபக்தியுடன், பரிசுத்தத்தையும் குறிப்பிடுகின்றாய் இருக்கின்றது.
ஏப்ரல் 19-ஆம் தேதி, வியாழன் மாலை 6 மணிக்குமேல், மீட்பரை அன்புகூருகிறவர்களும், விசுவாசத்திலும், நடக்கையிலும் அவரது பின்னடியார்களாகக் காணப்படுவதற்கு வாக்குறுதிக் கொடுத்துள்ளவர்களும், “நம்முடைய பாவங்களுக்கான; நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களுக்குமான” அவரது மரணத்தினை ஆசரிப்பார்களாக. உங்கள் வசதிக்கேற்ப விலையேறப்பெற்ற விசுவாசத்தில் ஒத்திருப்பவர்களுடன், ஒன்றுகூடிடுவதற்கும், சரித்திரத்தின் இந்த மாபெரும் நிகழ்வை ஆசரிப்பதற்கும் விரும்புகிறவர்களுடன் கூடிக்கொள்ளுங்கள். மீட்பரில் விசுவாசமுள்ள அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணிக்கொள்பவர்களுடைய கூடுகையாக அது காணப்பட வேண்டும்; ஆனால் இப்படியாக அறிக்கைப் பண்ணிக்கொண்டு மற்றவர்கள் எவரேனும் வருவார்களானால், அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம்; யூதாஸ் கர்த்தருடனும், மீதி பதினொரு பேருடனும் கூடிக்கொண்டான் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இன்னுமாக உங்களில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன், பாதங்களைக் கழுவுபவனாக இருப்பான்; அதாவது தேவனுடைய ஜனங்களைப் பூமிக்குரிய அசுசிகளிலிருந்து சுத்திகரிக்கும் எளிமையான பணிவிடையைக்கூடச் செய்பவனாவான் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.
நமது கர்த்தரினால் பயன்படுத்தப்பட்ட அடையாளங்கள் புளிப்பில்லாத அப்பம் மற்றும் திராட்சப்பழரசமுமாகும் (fruit of the vine). யூத அயலார்களிடமிருந்து சில பணத்திற்குப் புளிப்பற்ற ரொட்டிகள் பெற்றுக்கொள்ளப்படலாம்; இல்லையேல் இதற்கொத்த மாவு மற்றும் தண்ணீரினால் செய்யப்பட்ட ரொட்டிகளும்/water crackers பயன்படுத்தப்படலாம். நமது கர்த்தர் அநேகமாக “லைட்” ஒயின் (Light Wine) பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அவர் “திராட்சப்பழரசம்” (fruit of the vine) என்று மாத்திரம் குறிப்பிட்டார்; ஆகையால் நாம் புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச் சாற்றை (grape juice) அல்லது உலர்த் திராட்சையைத் தண்ணீருடன் வேகவைத்து, உண்டுபண்ணும் உலர் திராட்சரசத்தை/சாற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படிப் போதையூட்டும் திராட்சரசமானது/wine, திராட்சப்பழரசமாக இருக்குமோ, அதுபோலவே இதுவும் திராட்சப்பழரசமாக இருக்கும். எப்படி அநேகர் இன்று மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்பதினாலும், எப்படி எளிதில் கிடைக்கப்பெறும் திராட்சரசத்தினைச் சுவைத்துப்பார்ப்பது என்பதே தவறாய் வழிநடத்திவிடும் என்பதினாலும் நமது கர்த்தர் நாம் கூறுவதை அங்கீகரிப்பார் என்று நாம் நம்புகின்றோம்.
ஏப்ரல் 1-ஆம் தேதியினுடைய நம்முடைய வெளியீட்டில், இந்த அடையாளங்களுடைய அர்த்தம் தொடர்பாக நாம் சில கருத்துக்களைக் குறிப்பிடுவோம்.
வழக்கம்போல் ஆராதனையானது இங்குப் பைபிள் ஹவுஸ் சேப்பலில் (Bible House Chapel), எண்: 58, ஆர்க் தெருவில், மாலை 7:30 மணிக்கு நடைபெறும். தங்களுக்கான ஈடுபலியென நமது கர்த்தர் இயேசுவினுடைய மரணத்தை விசுவாசிப்பவர்களும், அவருக்கு முழுமையாய் அர்ப்பணித்துள்ளவர்களுமானவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் இந்த வருடத்தில், தொலைவில் உள்ளவர்கள் எவருக்கும் நாம் விசேஷித்த அழைப்பு விடுப்பதில்லை; [R1626 : page 69] மற்றும் வேறு கூடுகைகள் எதற்கும் ஏற்பாடு பண்ணப்படவில்லை. அருகாமையிலுள்ள பட்டணங்களில், யாரேனும் தனியாகக் காணப்படுகின்றார்களானால், அத்தகையவர்கள் எங்களோடுகூடக் கலந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம்; ஆனால் இந்த நினைவுகூருதலுக்கெனக் கூடிடுவதற்கு இரண்டு (அ) மூன்று பேர்கள் காணப்படுவார்களானால், அத்தகையவர்கள் உள்ளூர்களிலேயே ஒன்றுக்கூடிடும்படிக்கு நாம் யோசனைக் கூறுகின்றோம்.
கடந்தமுறை இங்கு மாநாடுகள் நடைப்பெற்றபோது, உள்ளூர்களில் மிகவும் அவசியமாய்க் காணப்படவேண்டியவர்கள், அங்கு இராததினால், உள்ளூர்களிலுள்ள விசுவாசிகளினுடைய பல்வேறு கூடுகைகள் தடைப்பட்டன மற்றும் சிரமத்திற்குள்ளாயின என்பதை நாங்கள் வேதனையுடன் அறிந்துகொண்டோம். இந்த வருஷம் இக்காரியத்தினை மாற்றிடுவதற்கு நாம் விரும்பி, அறிவுறுத்துவது என்னவெனில்: எங்கெல்லாம் இரண்டு (அ) மூன்று பேர்தான் கூடமுடிகின்ற நிலையிருக்கின்றதோ, அவர்கள் அவ்வாறே கூடிடுவார்களாக; பெரியளவிலான விசுவாசிகளின் எண்ணிக்கையையுடைய கூட்டத்தாருக்கும், சிறிய அளவிலான விசுவாசிகளின் எண்ணிக்கையையுடைய கூட்டத்தாருக்கும் அருகாமையிலுள்ள இடங்களில் தனித்திருப்பவர்கள் காணப்படுவார்களானால், இவர்கள் பெரிய கூடுகையில் கலந்துகொள்வதைக்காட்டிலும், சிறிய கூடுகையில் கலந்துகொள்வதற்கு முன்னுரிமைக் கொடுத்து, இப்படியாக இவர்களது வந்திருத்தலின் அவசியத்தை அதிகமாய் நாடுகின்ற சிறிய கூட்டத்தாருக்கு உதவிசெய்து, உற்சாகப்படுத்திடுவார்களாக. மற்றவர்களுக்கு நன்மைசெய்ய நாடுபவர்கள், தாங்களும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
“நமது பஸ்காவாகிய” கிறிஸ்துவே, மோசேயைப்போன்ற தீர்க்கத்தரிசியாவார். பஸ்கா நிறுவப்பட்டபோது, “கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக” என்றார் (யாத்திராகமம் 12:1,2). இதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன. மனிதன் யாரிடமிருந்து ஜீவனைப் பெற்றுக்கொண்டானோ அந்த முதலாம் ஆதாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார்; மற்றும் தேவன் இந்த ஆக்கினைத் தீர்ப்பின் காரணமாக மனிதனுடன் உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கவில்லை. பஸ்காவை நிறுவினதிலும், ஆசரித்ததிலும், ஜனங்கள் நிழலான விதத்தில் மரணத்திலிருந்து, ஜீவனுக்குள் கடந்துபோகப்பட்டவர்களாய் இருந்தனர். மற்றவர்கள் சங்காரம் பண்ணப்பட்டபோது, இவர்களது மாம்சீக ஜீவன்களானது பாதுகாக்கப்பட்டது; மேலும் இந்தப் பாதுகாக்கப்படுதலானது, மிகவும் பெரிதான மற்றும் நிரந்தரமான ஒன்றிற்கு நிழலாய் இருக்கின்றது. பஸ்கா ஆட்டுக்குட்டியினைப் பயன்படுத்தும் விஷயத்தில் இரண்டு கருத்துகளானது விசேஷமாய்க் கவனிக்கப்பட வேண்டும். முதலாவது இரத்தம் பற்றியதாகும்; “அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்” (யாத்திராகமம் 12:1-28). ஆதிக்காலங்களிலேயே இரத்தத்தைப் புசிப்பதானது தடைப்பண்ணப்பட்டிருந்தது: “மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்” (ஆதியாகமம் 9:4). இந்தத் தடையானது அடிக்கடி கூறப்பட்டது மற்றும் இதற்கு விசேஷமான ஒரு காரணமும் உள்ளது: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.” (லேவியராகமம் 17:11). பஸ்காவின் இரத்தம் சிந்தப்படுதலும், தெளிக்கப்படுதலும், “ஜீவனுக்கு ஜீவன்” கொடுக்கப்படுகிற, அதாவது ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டவர்கள் நீதிமானாக்கப்படுவதற்கு முன்னதாக, தெய்வீக நீதியானது எதிர்ப்பார்க்கின்ற “ஜீவனுக்கு ஜீவன்” கொடுக்கப்படுகிற காரியத்திற்குச் சிறந்த “நிழலாய்” இருக்கின்றது. இது “நிழல்” மாத்திரமே; எனினும் நிஜமானது பின்னர் வந்தது: “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18,19). இன்னொன்று மாம்சம் பற்றியதாகும்: “அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா” (யாத்திராகமம் 12:8,11). இரத்தம் சிந்துதலினால், இஸ்ரயேலர்களின் ஜீவன் பாதுகாக்கப்பட்டது; ஆனால் அவர்களுக்கு முன்பாக வனாந்தரப் பிரயாணம் காணப்பட்டது மற்றும் அவர்கள் மாம்சத்தையும் புசிக்க வேண்டும். இந்த அம்சமும்கூட, “நமது பஸ்காவாகிய” தேவாட்டுக்குட்டிக்குச் சிறந்த “நிழலாய்க்” காணப்படுகின்றது. அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தினுடைய சிந்துதலினால், நாம் ஜீவன் பெற்றிருக்கின்றோம். ஆனால் இதுமாத்திரமல்ல ஜீவித பிரயாணம் மேற்கொள்ளப்பட வேண்டும், ஜீவியத்தின் சத்துருக்கள் ஜெயங்கொள்ளப்பட வேண்டும், ஜீவிதத்தின் வேலைகள் செய்து முடிக்கப்பட வேண்டும் மற்றும் ஜீவியத்தின் பயிற்சிகள் முழுமையடைய வேண்டும். இவைகள் அனைத்திலும் சோர்வுகளும், களைப்புகளும் உள்ளன; ஆனால் நம்முடைய பலமானது, பரலோக உணவினால் புதுப்பிக்கப்படுகின்றது: “என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்;” “என்னிடத்தில் வருகிறவன் ஒருகாலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலும் தாகமடையான்” (யோவான் 6:27-58).
– ரீபிரிண்ட்ஸ், பக்கம் 1321.