R1800 (page 94)
மாற்கு 14:12-26; மத்தேயு 26:17-30; லூக்கா 22:7-30; 1 கொரிந்தியர் 11:23-25.
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்”
வசனங்கள் 12-16; பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட, புளிப்பில்லாத அப்பத்தினுடைய முதலாம்நாள், நீசான் 14-ஆம் தேதியாகும் (R1786 – பார்க்கவும்). பஸ்கா பண்டிகையானது 15-ஆம் தேதி துவங்கி, 7 நாட்கள் நீடித்ததாய் இருந்தது; ஒரு நாளானது முந்தினநாளின் சூரிய அஸ்தமனத்தோடு மாலை 6 மணியோடு துவங்குகின்றது. (யாத்திராகமம் 12:18-20) இந்த ஒரு தருணத்தின்போது புளிப்புப் பயன்படுத்துவதற்குத் தடைப்பண்ணப்பட்டிருந்தது, காரணம் நினைப்பூட்டுதலாய் இருந்திடுவதற்கேயாகும்; அதாவது (1) அப்பம் புளிப்பதற்குக் காத்திருக்க முடியாத அளவுக்கு அவர்கள் எகிப்தினின்று அவசரமாய்ப் புறப்பட்டதற்கு நினைப்பூட்டுதலாகும் (யாத்திராகமம் 12:34,39) மற்றும் (2) எகிப்தில் அவர்கள் அடைந்த பாடுகளுக்கு நினைப்பூட்டுதலாகும்; இந்த அவர்களின் பாடுகளினிமித்தம் அது சிறுமையின் அப்பம் என்று அழைக்கப்பட்டது. (உபாகமம் 16:3); ஆனால் (3) அதன் பிரதான அர்த்தமாவது, பாவத்தைக் களைந்துபோடுவதாகும்; ஏனெனில் புளிப்பு என்பது கெட்டுப்போகச் செய்கின்றபடியால், அது தூய்மையின்மைக்கு அடையாளமாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 5:6-8; மத்தேயு 16:6) இஸ்ரயேலும் மற்றும் அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று அடைந்த விடுதலையும், பாவம் மற்றும் மரணம் எனும் அடிமைத்தனத்தினின்றுள்ள உலகத்தினுடைய விடுதலைக்கு நிழலாய் இருக்கின்றது என்று பார்க்கும்போது, இந்தப் பண்டிகையானது, ஆயிரவருட யுகத்தின்போதான உலகத்தினுடைய சரியான நிலைமைக்கு நிழலாய் இருக்கின்றது. கிறிஸ்து மூலமாய்ப் பாவம் மற்றும் மரணத்திலிருந்துள்ள மாபெரும் விடுதலையையும், மற்றும் மகா உபத்திரவக் காலத்தையும் அனுபவித்திருக்கும் உலகமானது, அவர்கள் தங்களிடமிருந்து பாவம் எனும் புளிப்பைக் களைந்துபோடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுவார்கள் மற்றும் தங்கள் விடுதலையைக் குறித்த நன்றியுடன் கூடிய நினைவுகூருதலில், சுயநலம் எனும் புளிப்போடும் இல்லாமல், துர்க்குணம், பொல்லாப்பு எனும் புளிப்போடும் இல்லாமல், மாறாக துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே (தேவனுடைய நன்மைகளில் களிகூருகின்றவர்களாகவும், பங்கெடுக்கின்றவர்களாகவும் இருந்து) பண்டிகையை ஆசரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவார்கள்.
[R1800 : page 95]
கிறிஸ்துவினுடைய பலிக்கு முன்னடையாளமான பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலானது எப்போதும் நீசான் 14-ஆம் தேதியன்று செய்யப்படுகின்றது (யாத்திராகமம் 12:6); ஆகையால் கிறிஸ்துவினுடைய பலியும், அதே நாளில் நடைபெற்று, இவ்விதமாய் நிழல் முன்னுரைத்திருந்தபடி நிறைவேறினது. ஆட்டுக்குட்டியினுடைய பலியானது, “முதற்பேறான சபையினுடைய” இரட்சிப்பிற்கென்றும், இஸ்ரயேல் ஜாதி நிழலாய்க் காணப்படுகின்றதான சர்வ சிருஷ்டிக்குமான அடுத்து சம்பவிக்கயிருக்கும் விடுதலைக்குமான கிறிஸ்துவினுடைய பலிக்கு நிழலாய்க் காணப்பட்டது.
பஸ்கா வாரத்தின்போது, விருந்தோம்பலானது எருசலேமில் கடமையாகக் கருதப்படுகின்றது; ஆகையால்தான் கர்த்தர் மேல்வீட்டறையைக் கேட்டுக்கொண்ட போது, அவ்வறையை அவருக்குக் கொடுத்திடுவதற்கு உரிமையாளர் ஆயத்தத்துடன் காணப்பட்டார். அநேகமாக 14-ஆம் வசனம் தெரிவிப்பது போல அம்மனுஷன் விசுவாசியாக இருந்திருக்க வேண்டும் அல்லது 15-ஆம் வசனம் காண்பிகின்றது போன்று, முன்கூட்டியேகூட ஏதேனும் ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கலாம்.
வசனங்கள் 17-21; யார் பெரியவராய் இருக்க வேண்டும் என்பதற்கான வாக்குவாதம்பற்றி லூக்கா அவர்களால் மாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள (லூக்கா 22:24) காரியமானது அநேகமாக அவர்கள் பந்தி அமர்ந்தபோது துவங்கியிருந்திருக்க வேண்டும்; ஒவ்வொருவரும் கர்த்தருக்கு அருகாமையில் காணப்பட வேண்டும் என்று விரும்பினவர்களாகக் காணப்பட்டனர் மற்றும் இப்படியாகக் கொஞ்சம் சுயநலத்திற்கு ஒத்த ஆவியை வெளிப்படுத்துகின்றவர்களாய் இருந்தனர். இந்த ஒரு தருணத்தின்போதுதான் கர்த்தர் மிகவும் நெஞ்சைத்தொடும் வண்ணமாக தாழ்மைக்கான விளக்கம் கொடுத்தார் மற்றும் இந்த மிக அவசியமான பண்பு இல்லையெனில், அவர்களால் பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசித்திட முடியாது எனும் உண்மையானது சீஷர்களுடைய மனங்களில் வலியுறுத்தி, பதியவைக்கப்பட்டது. (யோவான் 13:5)
சீஷர்களில் ஒருவன் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்று கர்த்தர் அறிவித்ததின் நிமித்தமாக சீஷர்களுடைய மனோநிலையானது, உடனடியாக தாழ்மை பற்றிக் கொடுக்கப்பட்ட பாடத்தினுடைய பலனை வெளிப்படுத்தினதாய் இருந்தது. அவர்கள் அதிக தன்நம்பிக்கை உடையவர்களாய் இருக்கவில்லை, மாறாக ஒவ்வொருவரும் தங்கள் உறுதியைக் குறித்துப் பயமடைந்தவர்களாக, ஆண்டவரே அவரா? (அ) இவரா? என்று கேட்காமல், மாறாக ஆண்டவரே நானோ? என்று விசாரித்தார்கள். அவர்கள் சுயப்பரிசோதனை செய்யும் ஆவியை உடையவர்களாய் இருந்தனர்.
ஆண்டவருடைய எச்சரிப்பை யூதாஸ் ஆர்வமற்றுக் கேட்டுக்கொண்டிருந்த காரியம் மற்றும் நிதானமாய்த் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது மற்றும் தீமையில் பொல்லாப்பான பிடிவாதம் ஆகியவை, வெளிப்படுத்தின அவரது இருதயத்தின் கடினமும், மாய்மாலத்தினுடைய ஆழமும், பதினொரு பேரிடம் காணப்பட்ட தாழ்மை மற்றும் அன்பின் ஆவிக்கு எதிரிடையாய்க் காணப்பட்டது. இது சாத்தானின் வல்லமைக்கு மனமுவந்து ஒப்புக்கொடுக்கும்/அடிப்பணியும் ஆத்துமாவிற்கான நம்பிக்கை ஏதேனும் இல்லாத நிலைக்கு உதாரணமாய்க் காணப்படுகின்றது. வசனம் 21, யூதாஸ் சீர்ப்பொருந்திடுவதற்கான எந்த நம்பிக்கையின் வெளிச்சத்தையும் வீசிடவில்லை. யோவான் 17:12-ஆம் வசனத்தையும் பார்க்கவும். தேவனுடைய காருண்யமானது, யூதாசினுடைய இருதயத்தைக் கடினப்படுத்த மாத்திரமே செய்தது; ஆகையால் அவரைக் குணப்படுத்த எதுவும் இல்லை.
வசனங்கள் 22-24; அப்பம் மற்றும் திராட்சரசமாகிய அடையாளங்களினுடைய வெளிப்படையான அர்த்தத்தினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. பிட்கப்பட்ட அப்பமானது, நம்முடைய மீட்பிற்கென்று கிறிஸ்துவினுடைய மனுஷீகம் பலிச்செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இந்தப் பலியினுடைய பயன்களானது விசுவாசத்தின் மூலமாக தனித்தனியே சொந்தமாக்கிக்கொள்ளப்பட வேண்டும்; இப்படிச் சொந்தமாக்கிக்கொள்ளும் காரியமானது, அதைப் புசிக்கும் காரியத்தினால் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய, அவரது சிந்தப்பட்ட இரத்தத்திற்கு அடையாளமான திராட்சரச பாத்திரமானது, பிட்கப்பட்ட அப்பத்திற்குரிய அதே அர்த்தத்தினை உடையதாய் இருக்கின்றது; இதில் நாம் பங்கெடுத்தல் என்பதும்கூட, அவரது பலியினுடைய பயன்களை நம்முடையதாக்கிக் கொள்வதையும், இப்படியாய் நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கின்றதாக இருக்கின்றது. ஆகையால்தான் கர்த்தர், “நீங்கள் (விசுவாசத்தினால்) மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். (யோவான் 6:53) இந்த அர்த்தத்தோடுகூட அப்போஸ்தலனாகிய பவுல், இன்னொரு அர்த்தத்தையும் காண்பிக்கின்றார் (1 கொரிந்தியர் 10:16,17); அதாவது அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென அவரது பலியில், அவரோடுகூட நம்முடைய பங்கெடுத்தலைக் காண்பிக்கின்றார் – “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17 திருவிவிலியம்)
[R1801 : page 95]
இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, யோவானால் பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த அனைத்து அறிவுரைகளின், தேற்றுதல்களின், ஆறுதலின், நம்பிக்கையின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டன மற்றும் மனதைத்தொடும் அந்த ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. (யோவான் 13:33-38; 14-17 வரையிலான அதிகாரங்கள்) இந்தக் காலப்பகுதியானது சீஷர்களால் ஒருபோதும் மறக்கப்படவில்லை மற்றும் இதன் தாக்கமானது, அவர்களது பிந்தைய நடத்தைகளில் மிகவும் வெளிப்பட்டதாய் இருந்தது.
வசனம் 25; தற்காலத்தினுடைய பாடுகள் அனைத்தும் முடிவடைகையில் கிறிஸ்து மற்றும் சபையினுடைய இறுதி ஜெயத்தை முன்னறிவிக்கின்றதாய் இருக்கின்றது. அப்பொழுது அவர்கள் ஒன்றாய்க் கூடிக்கொண்டாடிடும் விருந்திற்கு, புதிய மற்றும் பாக்கியமான அர்த்தமிருக்கும்; அது அவர்களது விசுவாசத்தினுடைய வீரத்திற்கும், மிகுந்த கடுமையான பரீட்சைகளின்கீழ்த் தெய்வீக நோக்கத்திற்கான அவர்களது உண்மைக்குமான ஞாபாகார்த்தமான கொண்டாட்டமாயும் மற்றும் அந்த விசுவாசம் மற்றும் உண்மையினுடைய வெற்றியில், ஒன்றாய்ச் சேர்ந்து களிகூருவதாயும் இருக்கும்.
வசனம் 26; “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.” (மாற்கு 14:26) அவர்கள் கலைந்துபோவதற்குப்பதிலாக, சேர்ந்துபோனார்கள். யூதாஸ் தனது மிகக் கொடூரமானத் திட்டத்தை நிறைவேற்றிட போனபோது, கர்த்தருடைய துக்கத்தையும், எச்சரிப்புகளையும் கவனித்தவர்களாகப் பதினொருபேரும் தங்கள் அன்பினாலும், அனுதாபத்தினாலும் அவரைத் தேற்றிடுவதற்கும், அவருக்கு உதவிபுரிந்திடுவதற்கும் நாடினார்கள்.