R1786 (page 71)
கிறிஸ்தவர்கள் மத்தியில் புனித வெள்ளியை, நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலாகவும், ஈஸ்டர் ஞாயிறை, அவரது உயிர்த்தெழுதலுக்கான நினைவுகூருதலாகவும் ஆசரிப்பது வழக்கமாய்க் காணப்படுகின்றது. ஆனால் ஆதித் திருச்சபையாரைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஞாயிறும் நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான நினைவுகூருதலாக அவர்களுக்குக் காணப்பட்டது; அவர் சிலுவையில் அறையப்பட்ட அதே நாளின் முந்தின மாலையில், கடைசி இராப்போஜனம் புசிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தபட்டதான அவரது மரணமானது, வருடந்தோறும், யூதருடைய பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டதற்கான நிஜமாக, எபிரெயர்களினுடைய சந்திர காலக்கணக்கிடுதலின்படியான முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்று ஆசரிக்கப்பட்டுவந்தது. “பூர்வப்பாதைகளினிடத்திற்குத்” திரும்பிடுவதற்கான விருப்பத்தில், உலகத்தின் ஒவ்வொரு திசைகளிலும் காணப்படுகின்றதான அநேக வாட்ச் டவர் வாசகர்கள், ஆதித் திருச்சபையினுடைய இந்த வழக்கத்தின்படி கைக்கொள்கின்றனர். இந்த வழக்கத்தின் ஏற்புடைமை குறித்து, இதை மனித கணிப்பின்படி, மனித சபல புத்திபடி (அ) கொள்கையின்படி காலாண்டுதோறும் (அ) மாதந்தோறும் (அ) வாரந்தோறும் (அ) தினந்தோறும் ஆசரிப்பதற்கு நவீன வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒன்றிரண்டு காரணங்களை வைத்திருப்பவர்களால்கூடக் கேள்விகேட்க முடியாது.
அந்தக் கொள்கைகளில் இரண்டு மாத்திரமே, வேதவாக்கியங்களின்படியானது என்று வலியுறுத்திக் கூறப்படுகின்றது மற்றும் அவைகளுக்கு மாத்திரமே பதில் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாய் உள்ளது.
(1) கர்த்தருடைய மரணமானது தினந்தோறும் நினைவுகூர்ந்து ஆசரிக்கப்பட வேண்டும் என்கிறவர்கள், “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை மாத்திரமே சுட்டிக்காட்டுவார்களே ஒழிய, வேறு எதையும் இல்லை. இவர்கள் “போதெல்லாம்” எனும் இந்த வார்த்தைக்குக் கொடுக்கும் அர்த்தத்திற்கு, ஒருநாளில் மூன்று (அ) நான்குமுறை அல்லது ஒவ்வொரு மணி நேரமும்கூடப் பொருந்தும் என்பதை மறந்துவிடுகின்றனர். “என்னை நினைவுகூரும்படி இதைச் (வருடந்தோறும்) செய்யுங்கள்” என்று நமது கர்த்தர் கூறினபோது, “இதைச் செய்யுங்கள்” என்பதற்கே அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 11:25). கர்த்தருடைய சீஷர்கள் யூதர்களாய் இருந்தபடியால், அவர்கள் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பஸ்கா ஆட்டுக்குட்டியினை அடித்து, புசிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் மற்றும் இதுமுதல் தம்மை, ஆட்டுக்குட்டியினுடைய நிஜம் என்றும், தம்முடைய மரணமானது, ஆட்டுக்குட்டியினுடைய மரணத்திற்கான நிஜம் என்றும், முதற்பேறானவர்களின் சபையைக் கடந்துபோகுதல் என்பது (அ) மரணத்தினின்று, ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்க்கப்படுதலானது இஸ்ரயேலுடைய முதற்பேறானவர்களின் தப்புவிக்கப்படுதலுக்கு நிஜம் என்றும் அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று நமது கர்த்தர் விரும்பினார் (எபிரெயர் 12:23).
“இதைச் செய்யுங்கள்;”அதாவது பஸ்காவினை ஆசரியுங்கள் என்பது, யூதர்களுக்கான நியாயப்பிரமாணத்தினுடைய கட்டளையாக இருக்கின்றது; ஆனால் தம்முடைய பின்னடியார்களை நியாயப்பிரமாண உடன்படிக்கையினின்று விடுவித்து, புதியதான உடன்படிக்கையின் கீழ் அவர்களை ஏற்றுக்கொண்டபோது, அவர் “இதைச் செய்யுங்கள்” என்றும், வேறு எதையாகிலும் செய்யுங்கள் என்றும் கட்டளையிடவில்லை, மாறாக அன்பு செய்யவே சொன்னார்; இது புதியதான உடன்படிக்கையினுடைய நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது என்று கர்த்தர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம் (வருடந்தோறுமே ஒழிய, அடிக்கடியல்ல, மற்றும் யூதர்கள் தங்கள் [R1787 : page 71] பஸ்காவினை ஆசரிக்கும் எண்ணிக்கைக்குக் குறைவாயுமல்ல, அதிகமாகவுமல்ல) (நிழலான பஸ்காவையும் மற்றும் அடித்து, புசிக்கப்பட்டதான நிழலான ஆட்டுக்குட்டியையும் நினைவுகூரும்படியாய் இல்லாமல், மாறாக) என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்;” அதாவது யாருடைய மரணத்தினாலும், இரத்தத்தினுடைய தெளிக்கப்படுதலினாலும், நீங்கள் மரணத்தினின்று, ஜீவனுக்குள் கடந்து போயுள்ளீர்களோ மற்றும் யாருடைய மாம்சத்தை (அடையாளமான) விதத்தில் புசித்ததன் வாயிலாக, நீங்கள் இருளின், பாவத்தின், ஒடுக்குதலின் இராஜ்யத்தினின்றும், (பார்வோன் நிழலாய்க் காணப்படுகின்றதான) சாத்தானுடைய ஆளகையினின்றும், மோசே மற்றும் யோசுவா அடையாளப்படுத்தும் தேவனுடைய அபிஷேகிக்கப்பட்டவருடைய வழிநடத்துதலின் கீழ் பரமகானானுக்குப் பிரயாணிப்பதற்கான பலத்தைப் பெற்றுக்கொள்கின்றீர்களோ அவரை – ” உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவ ஆட்டுக்குட்டியினை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”
(2) கர்த்தருடைய மரணத்தை ஞாயிறுதோறும் ஆசரிப்பவர்கள், அந்த நாளானது, முற்றிலும் இன்னொரு காரியத்தினை மரணத்திலிருந்தான நமது – கர்த்தருடைய உயிர்த்தெழுதலை நினைவுகூரும் நாளாக இருக்கின்றது என்பதை நன்கு அறிவார்கள்; எனினும் இவர்கள் ஆதித் திருச்சபையாரால் வாரத்தின் முதல்நாள்தோறும் செய்யப்பட்டு வந்த “அப்பம் பிட்கும்” காரியத்தினால், தங்களது வழக்கத்தினை (ஞாயிறுதோறும் கர்த்தருடைய மரணத்தை நினைவுகூரும் வழக்கத்தினை) நியாயப்படுத்துகிறவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் அவசரப்பட்டு, தவறுதலாய் அர்த்தம் கொண்டுள்ளனர்; அந்த “அப்பம் பிட்குதலானது” சாதாரணமான உணவுகளாக (அ) அன்பின் விருந்துகளாகக் காணப்பட்டு, இரண்டு காரணங்களுக்காகப் புசிக்கப்பட்டன; பசிக்காகப் புசிக்கப்பட்டது மற்றும் இன்னும் விசேஷமாக அவர்கள் கர்த்தருடைய உயிர்த்தெழுதலை நினைவுகூரும்படிக்கு அந்நாளில் ஒன்றுகூடினபடியாலும் புசித்தார்கள்; ஏனெனில் இரண்டு தருணங்களின் போது, அவரது சம்பாஷணையும், வேதவாக்கியங்களை அவர் விளக்கினதும், அவர்களது பயங்களைப் புறம்பாக்கிப்போட்டு, நம்பிக்கையைத் தூண்டிவிட்டு, வெட்கப்படுத்தாத நம்பிக்கையினால் அவர்களது இருதயங்களை, அவர்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரியப்பண்ணினபோது, அவர் அப்பம் பிட்குதல் மூலம் தம்மை, அந்தக் குறிப்பிட்ட நாளில் (ஞாயிறு) அவர்களுக்கு வெளிப்படுத்தினார் (லூக்கா 24:32; ரோமர் 5:5). கர்த்தர் பரமேறிப்போவதற்கு முன்னதாக, மீண்டுமாக இரண்டு தருணங்களில், சாதாரணமான உணவு உட்கொண்டிருக்கையில், தம்மைச் சீஷர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஊக்குவித்தார்; மற்றும் அநேகமாக இந்த இரண்டு தருணங்களும், வாரத்தினுடைய முதல்நாளில்தான் நடந்திருக்கும் (யோவான் 20:26;21:13).
ஆகையால் ஆதித் திருச்சபையினர் கர்த்தரோடுகூட ஆவியில் ஐக்கியம் கொள்ளத்தக்கதாக, வாரத்தின் முதல்நாள்தோறும் ஒன்று கூடிடும் வழக்கத்தினை ஏற்படுத்தினதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; மற்றும் தங்களுக்குக்கிடைத்த முதலாம் அனுபவத்தையும், இருதயம் கொழுந்துவிட்டெரிந்ததையும் குறித்த நிகழ்வுகளையும், நினைவுகளையும் தங்கள் மனங்களுக்கு முன்பாக உற்சாகமூட்டும் விதத்தில் நிறுத்தி, நினைவூட்டுகிறதான “அப்பம் பிட்குதலையும்” மற்றும் வேறே அம்சங்கள் எதையேனும் அவர்கள் தொடர்ந்து செய்யும் காரியத்திலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்த வழக்கத்திற்கும், “நமது பஸ்காவாகிய கிறிஸ்து” அடிக்கப்பட்டபடியால் ஆதிக் கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கருதின வருடந்தோறுமான பஸ்காவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை (1 கொரிந்தியர் 5:7,8). நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து, தம்முடைய பலியை, தம்முடைய மாம்சம் மற்றும் தம்முடைய இரத்தத்திற்கான அடையாளங்களாகிய அப்பம் மற்றும் திராட்சரசத்தினால் அடையாளப்படுத்துகின்றார்; ஆனால் அன்பின் விருந்துகள் (அ) “அப்பம் பிட்கப்படுதல்” குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில், திராட்சரசம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை; இன்னுமாக இந்த அப்பம் பிட்குதல்களானது, தலையாகிய நமது கர்த்தருடைய மற்றும் அவரது சரீரமாகிய சபையினுடைய பாடுகள் மற்றும் மரணத்திற்கான நினைவுகூருதல்களாக ஆசரிக்கப்பட்டன என்று எந்தவொரு குறிப்புக்கூட இடம் பெறுவதுமில்லை.
கிறிஸ்தவர்களாகிய நாம், யூதருடைய பஸ்காவையும், யூதர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டதையும் ஆசரித்துக்கொண்டாடுவதில்லை; நாம் நிழலான ஆட்டுக்குட்டியை அடித்து, புசிப்பதுமில்லை. யூதர்கள் விஷயத்தில் (நீசான்) மாதத்தின் 10-ஆம் தேதியன்று ஆட்டுக்குட்டி தெரிந்தெடுக்கப்படுவதும், 14-ஆம் தேதியன்று ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதுமானவைகள், 15-ஆம் தேதி துவங்கி, ஒருவாரமளவும் நீடிக்கும் பஸ்கா பண்டிகையினின்று வேறானதாகும். யூதர்கள் விசேஷமாகப் பண்டிகையை ஆசரித்தனர்; நாம் தேவனுடைய மாபெரும் ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தை நினைவுகூருகின்றோம் மற்றும் ஆயிரவருட காலையின் விடுதலைக்காகக் காத்திருப்பவர்களாக, இந்தச் சுவிசேஷ யுக இரவில், நாம் நம்முடைய ஆட்டுக்குட்டியினை, துன்பங்கள் எனும் கசப்பான கீரைகளுடன், தற்போது புசிப்பதன் விளைவாக வரும் முழுமையான மற்றும் நித்தியமான சந்தோஷத்திற்கு நிழலாக மாத்திரமே யூதர்களுடைய ஏழு நாட்கள் கொண்ட பண்டிகைக் காணப்படுகின்றது என்று நாம் புரிந்திருக்கின்றோம். மாம்சீக இஸ்ரயேலினுடைய குருட்டுத்தன்மையானது விலக ஆரம்பிக்கும்போது, கிறிஸ்துவே பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய நிஜம் என்றும், அவரது மரணத்தின் வாயிலாக கடந்துவருகின்றதான ஆசீர்வாதங்களானது, பஸ்கா ஆசீர்வாதங்களுக்கான நிஜங்கள் என்றும், புரிந்துகொள்வார்கள்.
[R1787 : page 72]
தேதியைக் கணக்கிடுதலில், யூதருடைய முறைமையையே, அதாவது நமது கர்த்தரும், ஆதிச் சபையும் பின்பற்றினதுமான முறைமையை நாம் பின்பற்றுகின்றோம் மற்றும் அது எளிமையானதும்கூட. யூதருடைய (மதச்சார்புடைய) வருடமானது இளவேனில் – இளவேனிற் சம இரவு பகல் நாளுக்குப் பின்னரான அமாவாசை அன்று துவங்குகின்றது. இதிலிருந்து யூதர்கள் தங்கள் மாதத்தினை எண்ணத் துவங்குவார்கள். இந்த வருடம் இளவேனிற் அமாவாசையானது, மார்ச் 26-ஆம் தேதியில் காணப்படுகின்றது மற்றும் இந்த முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியானது, ஏப்ரல் 8-ஆம் தேதியாகும். ஆனால் எபிரெய கணக்கிடுதலின்படி ஒருநாளானது, முந்தின நாளின் மாலை 6 மணியிலிருந்து துவங்குவதினால், நீசான் மாதம் 14-ஆம் தேதியானது, ஏப்ரல் 7-ஆம் தேதி, ஞாயிறு, மாலை 6 மணிக்குத் துவங்குகின்றதாய் இருக்கிறது. ஆகையால் அந்த நாள் மாலை 8 மணியளவானது கர்த்தருடைய இராப்போஜனத்தினுடைய ஆண்டு நிறைவு நாளாய்க் காணப்படுகின்றது.
அந்த வேளையில், நம்முடைய வழக்கத்தின்படியே அலிகெனியிலுள்ள (Allegheny) சபையானது, சரித்திரத்தின் பக்கங்களில் பதிவுபண்ணப்பட்டுள்ளதான மாபெரும் நிகழ்வின் நினைவுகூருதலை ஆசரிப்பார்கள்; அதாவது மற்றவர்களுக்குப் பெரிதாய்த் தோன்றாததும், ஆனால் அனைவருக்குமாய்க் கொடுக்கப்பட்டதான மீட்கும்பொருளில் விசுவாசம் உள்ளவர்களுக்கு மிகவும் பெரிதாய்த் தோன்றுகிறதுமான மாபெரும் நிகழ்வின் நினைவுகூருதலை ஆசரிப்பார்கள். அந்த வேளையில் மாநாட்டிற்கோ (அ) பொதுவான கூடுகைகளுக்கோ எந்த ஏற்பாடுகளும் நாங்கள் செய்யவில்லை; ஆனால் அலிகெனி (Allegheny) பட்டணத்தைக் கடந்துபோகிறவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள். இதேமாதிரி சிதறி பல இடங்களில் காணப்படும் ஒரே மனமுடையவர்கள் செய்திடுவதற்கு நாம் பரிந்துரைக்கின்றோம்; அதாவது தங்கள் அருகே குடிக்கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுடன் ஒன்றுகூடிடுவதற்கும், 18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நமது கர்த்தரினால், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதான மாதிரியினுடைய எளிமைக்கு முடிந்தமட்டும் ஒப்பாக ஆசரித்திடுவதற்கும் நாம் பரிந்துரைக்கின்றோம்.
அப்பம் மற்றும் திராட்சரசமானது, நம் நிமித்தமான நமது கர்த்தருடைய பலியினை அடையாளப்படுத்துகிறதாக மாத்திரம் இராமல், அவரது சரீரமாகிய (அ) சபையாகிய நாம் ஒரே அப்பத்தின் அங்கத்தினர்களென இப்பொழுது மற்றவர்களுக்காகப் பிட்கப்படுவதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இப்படியாய் நாம் கர்த்தரோடு பலியில் பங்கடைபவர்களாகவும், பின்னர் அவரது மகிமையில் பங்கடைபவர்களாகவும் இருப்போம் “கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” (ரோமர் 8:17).