R3759 (page 118)
“சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ, உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்.” லூக்கா 22:31,
32
பஸ்கா நாட்கள் சமீபித்தபோது நமது கர்த்தர், “என் ஆத்துமா மரணத்துக் கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்று கூறி, “தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்” தமக்காக விண்ணப்பம் பண்ணினதோடல்லாமல், தமக்கு அருமையாய் இருந்த பின்னடியார்களுக்கும் மிகுந்த அக்கறை கொண்டவராக, அவர்கள் பிரவேசிக்க இருக்கின்ற “சோதனைக் காலத்தைக்” குறித்து அவர்கள் உணரும்படி செய்வதற்காக, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்று கூறினார். நமது கர்த்தருடைய பூமிக்குரிய அனுபவங்களிலேயே இவ்வேளையானது மிகவும் சோதனைக்குரியதாய் இருந்தது மாத்திரம் அல்லாமல், இவ்வேளையானது, அவருடைய அப்போஸ்தலர்களுக்கும், விசேஷமாக யூதாஸ் மற்றும் பேதுருவுக்கும் மிகவும் சோதனைக்குரியதாய் இருந்தது. அப்போஸ்தலர்கள் மத்தியில் இந்த இரண்டு மனுஷர்களும் முக்கியமானவர்களாகக் காணப்பட்டார்கள். ஒருவர் அச்சிறு கூட்டத்தாருக்குப் பொருளாளராகவும், தேவைக்கானவைகளை வாங்கும் நபராகவும் காணப்பட்டார். பேதுருவோ, கர்த்தருடைய காரணத்திற்காக/நோக்கத்திற்காக விசேஷமான தைரியத்துடன் போராடுபவராகவும், பன்னிரண்டு பேரின் வாயாக இருந்து இயேசுதான் மேசியா என்ற அவர்களின் விசுவாசத்தை அறிவித்தவராகவும், கர்த்தரை எல்லாரும் கைவிட்டுப் போய்விட்டாலும், தான் ஒருபோதும் அப்படிப் போகமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறினவருமாவார். மனுஷனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, பதிமூன்று பேர் (இயேசு + பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்) மேல் வரும் எந்தச் சோதனையும், இவர்கள் மத்தியில் காணப்படும் பலவீனர்கள் மற்றும் முக்கியத்துவம் அற்றவர்கள் மீதே வருமே ஒழிய, இந்த மூன்று (இயேசு, பேதுரு, யூதாஸ்) முக்கியமானவர்கள் மீது வராது என்றே அனுமானிக்கப்படலாம்.
விசேஷமாகச் சோதிக்கப்பட்ட மூன்று பேரின் விஷயங்களை நாம் பார்க்கும்போது, சில முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். நமது கர்த்தருடைய வழிமுறை நேர்த்தியாக இருந்தது. அதாவது தாழ்மை, பயம் மற்றும் சோதனைகளை உணர்ந்துகொள்ளுதல் ஆகியவை அவரை விழிப்புடன் இருப்பதற்கும், ஜெபம் பண்ணுவதற்கும் நேராக வழிநடத்திற்று. எல்லாவிதத்திலும் வலிமையாய் இருந்த சோதனைகளுக்குத்தப்பி அவர் வெளிவந்தார். மேலுமாக, அவர் ஆசாரியர்கள் மற்றும் பிலாத்துவுக்கு முன்பு வெளியரங்கமாகக் குற்றம் சுமத்தப்பட்டபோதும், திரளான ஜனக்கூட்டத்திற்கு முன்பு அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தபோதும், அவர் மிகுந்த அமைதலுடன் காணப்பட்டார். காரணம், தேவன் அவரைப் பலப்படுத்தியிருந்தார். அவரே நமக்கான முன்மாதிரி. நாமும் அவரைப்போன்று ஆபத்துகளைச் சந்திக்க மறுக்காமலும், நம்முடைய சொந்த பலம் மற்றும் தைரியம் குறித்துப் பெருமை பாராட்டிக்கொள்ளாமலும் இருந்து தேவனுடைய கரங்களின் மேல் சாய்ந்துகொண்டு, அவருடைய கிருபையினால், ஜெயங்கொண்டவர்களாக வெளிவர வேண்டும்.
பேதுருவின் சம்பவம், சூழ்நிலை நமக்கு நன்கு ஞாபகத்தில் உள்ளது. பலமுள்ள நல்ல மனுஷன் பேதுரு. அவர் தனக்கான ஆபத்துக்களை உணர்ந்து கொள்ளவில்லை. ஆதலால், அவர் சாத்தானின் தந்திரங்களுக்கு ஆயத்தமாய் இருக்காமல், மிகவும் சோதனையான நிலைமைக்குள் அனுமதிக்கப்பட்டப்படியால், பேதுரு பெருமை பாராட்டிக்கொண்ட தைரியம் பறந்து போய்விட்டது. அவருடைய பலமுள்ள குணம் மறைந்துவிட்டது. கர்த்தரை நிந்தனையாய்ப் பேசி அவரை மறுதலித்தும்விட்டார். மனிதன் எளிதில் விழக்கூடியவன் என்பதற்கான எத்துணை பாடமாக இது அமைகின்றது. மேலும், நாமும் பிசாசின் தந்திரங்களினால் மேற்கொள்ளப்பட்டு, சிக்க வைக்கப்படுவோம் என்பதற்கான பாடமாகவும் இது அமைகின்றது. நாம் சோதனைக்குள் விழுந்துவிடாதப்படிக்கு நாம் விழித்திருந்து, ஜெபம் பண்ணுவது நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அவசியமாய் உள்ளது. “எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (KJV); “எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” (திருவிவிலியம்) என்று கர்த்தர் நாம் ஜெபம் பண்ணுவதற்குக் கற்றுக்கொடுத்த மாதிரியை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருப்பது அவசியமாகும். “Abandon us not in temptation, but deliver us from the evil one” (Diaglott) (மத்தேயு 6:13).
யூதாசுக்கு அது ஒரு கேடு காலமாக இருந்தது; உண்மையுள்ள இருதயமுள்ள பேதுரு, விழித்திருந்து ஜெபம் பண்ணி, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாததினால், எதிராளியானவன் [R3760 : page 119] அவரை ஏமாற்றி, வஞ்சித்து, தவறாய் வழிநடத்த முடிந்ததானால், சரியான இருதயம் இல்லாமல், சுயநலம், சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க நாடுதல், பேராசைகொண்டிருந்த யூதாசிடம் எதிராளியானவன் என்னவெல்லாம் செய்யக்கூடும்? யூதாசின் மீதான சாத்தானின் உடனடியான செயல் நடந்தேறினது என்பதில் நமக்கு ஐயமில்லை. யூதாஸ், எதிராளியானவனின் கண்ணிக்குள் உடனே சிக்குண்டு விழுந்து, போதகரை முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக்கொடுக்கும்படிக்கு தனது இருதயத்தையும், சக்தியையும் ஒப்புக்கொடுத்துவிட்டார். உண்மையும், உத்தமமுமாய்க் காணப்பட்டும், சற்று நேரம் தடுமாற்றம் அடைந்ததும், பயம் அடைந்ததும், விழித்து ஜெபம் பண்ணி தன்னைக் காத்துக்கொள்ளாததுமான பேதுருவின் விஷயத்திலிருந்து, யூதாசின் விஷயம் முற்றிலும் வேறுபட்டதாகும். இந்த இரண்டு மனிதர்களையும் சூழ்ந்த ஆபத்து ஒன்றாயிருப்பினும், இவர்களுடைய இருதயத்தின் நிலை வேறுபட்டு காணப்பட்டப்படியினால், இவர்கள் இருவரின் சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டதாகும்.
இப்படியாகத்தானே கர்த்தருடைய சகல பின்னடியார்களின் விஷயத்திலும் காணப்படும் அல்லவா? சோதனைகள் நம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக வருகையில், வேறுபட்ட முடிவுகளை/பலன்களைக்கொண்டு வருவதற்கான இரகசியமும் இதுதான் அல்லவா? இன்றைய யூதாஸ் வகுப்பாரும், எப்போதும்போல், சோதனைகள் அவர்களுக்கு வரும்போது, அவைகளைஅவர்கள் ஏற்றுக்கொண்டு, அச்சோதனைகளில் நன்கு தங்களது பொழுதைப்போக்கி, பேராசை (அ) தவறான கவர்ச்சிகளின் ஆவிக்குள் பிரவேசித்தவர்களாகி, அதினால் விழுங்கப்பட்டும் போய்விடுகின்றனர். பேதுரு வகுப்பாரும் எப்போதும்போல், இன்றும் நம் மத்தியில் உண்மையான இருதயத்துடனும், அதேசமயம் எதிராளியானவனின் கவர்ச்சிகளிலிருந்து பாதுகாக்கப்படத்தக்கதாக, போதுமான அளவு விழிப்பும், ஜெபமும் அற்றவர்களாய்க்காணப்பட்டு, சில சமயங்களில் எதிர்பாராத விதத்தில் வீழ்ச்சியடைந்து, சில நிமிடங்கள் கர்த்தரை அவமதிப்புச் செய்வதோடல்லாமல், தங்களுடைய சொந்த இருதயத்தையும், மனசாட்சியையும் கூட அவமதிப்புச் செய்துவிடுகின்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். இந்த இரண்டு வகுப்பாருக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் இருதய நிலையே ஆகும். பேதுரு வகுப்பார் தாங்கள் செய்ய விரும்பாததையே செய்துவிடுகின்றனர் (அ) அவர்கள் உண்மையில் செய்ய விரும்புவதைச் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். மேலுமாக, இவர்களுடைய பிரச்சனை, இவர்களுடைய மாம்சத்தின் பெலவீனமாகவும், எதிராளியானவனின் வல்லமையான மேற்கொள்ளுதலாகவும், தேவையான வேளையில் உதவி அளிக்கப்படும் என்று கர்த்தர் வாக்களித்துள்ள உதவியைப் பெற்றுக்கொள்ள தவறிப்போகிற தன்மையாகவும் காணப்படுகின்றது.
யூதாஸ் வகுப்பாரின் இருதயத்தில் உண்மை காணப்படுவதில்லை. மாறாக, சுயநலமே காணப்படுகின்றது. மேலும், இவர்கள் இருதயப்பூர்வமாக எதிராளியானவனுடைய திட்டங்களுக்குள் பிரவேசிப்பதினால், இவர்கள் தங்களுடைய முழு மனதோடு இத்தவறான வழியில் செல்கின்றனர். பேதுருவும், யூதாசும் மனம் வருந்தின போதிலும், ஒருவர் மீண்டுமாக தெய்வீகத் தயவிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்றும், மற்றவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் நாம் பார்க்கையில், தேவன் அவர்களுக்கிடையே வித்தியாசம் காட்டுவது வெளிப்படுகின்றது. அதாவது இருதயத்தில் நேர்மை கொண்டவரும், அதேசமயம் சிக்குண்டவராக/அகப்பட்டவராக மாத்திரம் காணப்பட்ட பேதுரு, மீண்டுமாகச் சீர்ப்பொருந்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டார். ஆனால் பிற்பாடு மனவருந்தினதினி மித்தம் யூதாசிடம் மனசாட்சி காணப்பட்டிருப்பினும், தேவனுடைய பார்வையில் இன்றியமையாததாய்க் காணப்படும் இருதயப்பூர்வமான உண்மையான மனவருத்தம் அவரிடம் காணப்படவில்லை. என்னதான் யூதாஸ் கர்த்தரோடு நெருக்கமாக பழகினவராய் இருந்தாலும், அவரிடத்தில் உண்மையான இருதயப்பூர்வமான மனவருத்தம் காணப்படாதது மன்னிக்கப்பட முடியாததாகும்.
இந்த இரண்டு மனுஷருடைய இருதயங்களில் காணப்படும் வித்தியாசத்தினிமித்தம், கர்த்தரானவர் ஒருவருக்காக பிதாவுக்கு முன்பு பரிந்து பேசுகிறவராகவும், மற்றவருக்கு பரிந்து பேசுபவராக இராதவராகவும் இருக்க முடியும் என்று நம்முடைய பாடத்தின் ஆதார வசனத்தில் உள்ள நமது கர்த்தருடைய வார்த்தைகள் நமக்கு நிச்சயம் அளிக்கின்றது. பேதுரு, இருதயத்தில் கர்த்தருக்கு உண்மை கொண்டிருந்தும், மாம்சத்தில் பலவீனமுள்ள தன்மையுடன், பாதுகாப்பிற்காக அளிக்கப்பட்டுள்ள தெய்வீக ஏற்பாடுகள் குறித்துக் கவனமற்று/அஜாக்கிரதையாய் இருப்பவர்களுக்கு அடையாளமாய் திகழ்கின்றார். பேதுரு இன்னமும், கர்த்தருடைய ஆடுகளில் ஒன்றாகவேதான் இருக்கின்றார். ஆகையால், அவர் இன்னமும் மேய்ப்பனின் பராமரிப்பிற்குக் கீழாகவேதான் காணப்படுகின்றார். பேதுரு இன்னமும் கர்த்தருடைய அங்கங்களில் ஒருவராகத்தான் இருக்கின்றார். ஆகவே, இவருடைய நலன்கருதி தலை ஏறெடுக்கும் அக்கறைக்கும், மேற்பார்வைக்கும் இவர் இன்னமும் கீழ்ப்பட்டவராகவேதான் காணப்படுகின்றார். கர்த்தர் நேசித்து, தமது ஜீவனையே கொடுத்துவிட்ட, அவருக்கென்று நியமிக்கப்பட்டுள்ள கற்புள்ள கன்னிகையின் அங்கங்களில் ஒருவராக இன்னமும் பேதுரு காணப்பட்டார். ஆகவே, நிச்சயிக்கப்பட்ட மணவாளனாக அவர் ஏறெடுக்க வேண்டிய விண்ணப்பங்களைச் சரியானபடி ஏறெடுப்பார், எடுக்கவும் செய்தார்.
ஆனால், யூதாசின் விஷயத்தில், அவருடைய இருதயமானது, சுயநலத்தினிமித்தம் தூரம் போய்விட்டது. இன்னுமாக, கர்த்தருக்குக் கொடுக்கும் மதிப்பும் மற்றும் ஊழியத்தின் ஆரம்பத்தில் கர்த்தருக்காக அவர் கொண்டிருந்த அன்பும் யூதாசின் இருதயத்திற்குத் தூரமாயின. இன்னுமாக, ஊழியத்தின் ஆரம்பத்தில் கர்த்தர் மீது யூதாஸ் கொண்டிருந்த அன்பானது மரித்துப் போய்விட்டது. மேலும், அது சுயநலம் மற்றும் பேராசையினால் விழுங்கப்பட்டும் போய்விட்டது. இப்படியாக, கர்த்தரிடத்திலிருந்து முற்றிலுமாக விலகிப்போன இருதயத்திற்குள் சாத்தான் பிரவேசித்தான் என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. இப்படியாக, யூதாஸ் தனது இருதயத்தையும், பலத்தையும், அர்ப்பணிப்பையும் கர்த்தரிடத்திலிருந்து விருப்பத்துடன் திரும்பப் பின்னுக்கு எடுத்துவிட்டு, இவைகள் அனைத்தையும், சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுத்தும் தன்னுடைய உள்ளார்ந்த நோக்கத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டதால், அவர் எதிராளியானவனின் ஆயுதமானார். ஆகவேதான், “தாம் சிலுவையில் அறையப்பட வேண்டியது இடறல்கள் வருவது அவசியம். – ஆனாலும், எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” என்று நமது போதகர் கூறினார். (மத்தேயு 18:7)
நம்முடைய அனுபவங்களில் நாம் பார்த்த வரையிலும், பஸ்கா காலங்கள் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களுக்கு எப்போதும் விசேஷித்த ஆபத்துகள் மற்றும் விசேஷித்த நெருக்கங்கள் நிறைந்த சூழ்நிலைகளில் ஒன்றாகக்காணப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில் நாம் அறியாத ஏதோ சில காரணங்களுக்காக, எதிராளியானவன் விசேஷித்த விதமான வல்லமை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றான். பஸ்கா காலம் சமீபிக்கையில், நாம் காலம் காலமாகப் பார்த்து வந்தது என்னவெனில், சத்தியத்தின் மீது ஏதோ விதத்திலான தாக்குதல் மற்றும் சத்தியம் தொடர்புடைய விஷயங்களில் ஏதோவிதமான சில விசேஷமான சோதனைகள் (அ) பரீட்சைகள் மூலம் சாத்தானின் செயல்பாடுகள் வெளிப்படுகின்றன. உண்மையான இருதயமுடைய கர்த்தருடைய சீஷர்களில் ஒருவரும், அவருடைய கரங்களிலிருந்து, எதிராளியானவனால் பிடுங்கிப்போடப்பட முடியாது என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருப்பினும், கர்த்தர் தம்முடைய சீஷர்கள் சோதனைக்குள் பிரவேசித்து விடாதப்படிக்கு, விழித்திருந்து, ஜெபம் பண்ணுங்கள் என்று கூறின புத்திமதியின் மேல் நாம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டுமென நாம் விரும்புகின்றோம்/கருத்துத் தெரிவிக்கின்றோம்.
யூதாஸ்தான், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் என்று இயேசு அறிந்திருந்தபடியினால், இயேசு, யூதாசின் நடவடிக்கையைக்கண்டு ஆச்சரியமோ, அங்கலாய்ப்போ அடையவில்லை. மேலும், “தம்முடனே அப்பம் புசிக்கிறவன் தம்மேல் அவன் குதிங்காலைக் தூக்குவான்” மற்றும் தமக்கு உதவியாளனாகவும், கூட்டாளியாகவும், பிராண சிநேகிதனுமாய் இருந்தவன் தமக்குச் சத்துருவாக வேண்டும் என்பதான இந்த அனைத்து எண்ணங்களும் நம்முடைய அருமையான போதகருக்குக் கவலையான தாக்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும் (யோவான் 13:18; சங்கீதம் 41:9). நமது கர்த்தரானவர், அவருடைய கொடுமையான சத்துருவின் மீதும் அனுதாபப்படக்கூடியவராக இருந்தார். அதேசமயம், எதிராளியானவனுடைய திடீர் தாக்குதலை முதலில் எதிர்த்துப்போராட முடியாமல் இருந்தும், பிற்பாடு தெய்வீக இரக்கம் மற்றும் உதவியினால் குணமடைந்த பேதுருவுக்கும் கூட அனுதாபம் காட்டக் கூடியவரானார்.
கிறிஸ்துவின் சரீரம் ஒன்றாய் இருப்பதினாலும், தம்முடைய அங்கங்களிலேயே மிகச் சிறியவரான ஒருவருக்கு ஏதேனும் செய்யப்பட்டால், அது அவருக்கே/கிறிஸ்துவுக்கே செய்யப்பட்டதாகும் எனக் கர்த்தர் கூறியிருப்பதினாலும், சுவிசேஷயுகத்தின் ஆரம்பம் முதல், இன்றுவரை யூதாஸ் வகுப்பாரும், பேதுரு வகுப்பாரும் எந்த அளவுக்கு தங்கள் உடன்/கிறிஸ்துவினுடைய சரீர அங்கங்களைக் காட்டிக் கொடுக்கவோ (அ) மறுதலிக்கவோ செய்கின்றார்களோ, அவைகள் எல்லாம் கர்த்தரை மறுதலித்து, காட்டிக் கொடுப்பதாகவே கருதப்படுகின்றது. ஆகவே, “உன் விசுவாசம் ஒழிந்து போகாதப்படிக்கு உனக்காக நான் வேண்டிக்கொண்டேன்” என்று பேதுருவிடம் நம் கர்த்தர் கூறின வார்த்தைகளுடைய முக்கியத்துவத்தை நாம் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
பேதுரு வகுப்பார் அனைவரின் சார்பாக கர்த்தரே பிதாவுக்கு முன்பு பரிந்து பேசுபவராகவும், பிரதிநிதியாகவும், தலையாகவும் காணப்படுகின்றார். கர்த்தருடைய உதவி இல்லாமல் மற்றும் நம் சார்பாக அவர் பிதாவின் முன்னிலையில்தோன்றி, அவருடைய சொந்த பலியினால் உண்டான புண்ணியத்தை நம் சார்பாக செயல்படுத்தவில்லையெனில், நம்மில் ஒருவரும் நிலைநிற்க முடியாது; இயேசுவோடுகூடப் பங்கடையும்படி தேவன் நம்மை அழைத்த ஆசீர்வாதங்களைப்பெற நாம் தகுதியற்றவர்களாய்ஆகி, பாத்திரமற்றவர்களென நியாயம் தீர்க்கப்பட்டுப்போய்விடுவோம். இப்படிப்பட்டவர்களுக்காக நமது கர்த்தர் ஜெபம் பண்ணி, இப்படியாக பரிந்துபேசி, அவர்களிடத்தில் [R3760 : page 120] காணப்பட்ட வேண்டுமென்றே செய்யப்படாத குறைபாடுகளை சரிசெய்திருக்க, கர்த்தருடைய ஆவி பெற்றிருப்பவர்களும், பேதுரு வகுப்பார் மேல் அன்பும், இரக்கமும், அனுதாபமும் கொண்டு, அவர்களுக்கு உதவியளிக்கும் வண்ணமாக அவர்களிடம் பேச வேண்டும். ஆனால் வெளிப்படையான மற்றும் திட்டம்போட்டுச் செயல்பட்டதான சத்துருவும், துரோகியுமான யூதாசுக்கு, போதகர் எவ்விதமான இப்படிப்பட்ட அனுதாப வார்த்தைகளைக்கொண்டிராதது போன்று, இப்படிப்பட்டவர்களுக்காக நமக்கு மனக்கவலை உணர்வுகள் காணப்பட்டாலும், அவர்களுடைய தீமையான கிரியைகளுக்கு ஒத்தாசை (அ) ஆதரவு தெரிவிக்கும் எவ்விதமான உணர்வுகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. ஏதேனும் ஓர் அப்போஸ்தலன், யூதாசுடன் கூடச் செயல்பட்டிருப்பாரானால், அது அவனுடைய பொல்லாத கிரியைகளில் பங்குகொள்வதாகிவிடும்.
பேதுருவுக்கும், இவரைப்போன்ற பண்பும், அனுபவமும் பெற்றிருக்கும் மற்றவர்களுக்கும் நாம் எவ்வளவுதான் அனுதாபம் கொண்டிருப்பினும், மேலும் பேதுரு தனக்காக விழித்திருந்து, ஜெபம் பண்ணும் விஷயத்தில் அஜாக்கிரதையுடன் காணப்பட்ட விஷயத்தில், அவருக்காக கர்த்தர் ஜெபம் பண்ணினதினிமித்தம், பேதுரு பின்வாங்கிப்போகாமலும், தேவனுடனான தன்னுடைய உறவை இழந்துபோகாமலும் இருந்ததினிமித்தம், நாம் எவ்வளவுதான் பேதுருவோடு சேர்ந்து களிகூர்ந்தாலும், நாம் பேதுரு வகுப்பாரில் ஒருவராக இருப்பதற்கு நாடாமல், நமது கர்த்தர் தாமே அடையாளப்படுத்தும் வகுப்பாரில் ஒருவராக இருக்கவே நாம் நாட வேண்டும். தற்காலத்தில் எதிராளியானவனின் சோதனைகளினால் மேற்கொள்ளப்படாத அளவிற்கு உண்மையுடனும், விழிப்புடனும், ஜெபத்துடனும் காணப்படும் வகுப்பாரில் ஒருவராக நாம் இருக்கக்கடவோம்.
நாம், “அறுவடையின்” காலத்தில் இருக்கின்றோம். அதாவது, கோதுமையிலிருந்து களையைப் பிரித்து எடுப்பதற்கான காலம் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், கோதுமையினின்று பதரைப் பிரிக்கக்கூடியதான, புடைக்கும் வேலைக்கான காலம் வந்துவிட்டது. கோதுமை மற்றும் பதர் எனும் நிழலானது, கடந்துபோன காலங்களில் உள்ள சபைக்குரிய அனுபவங்களுக்கு ஓரளவு பொருந்தக்கூடியதாக இருப்பினும், அது, “யுகங்களின் முடிவில்” காணப்படும் சபைக்கு விசேஷமாகப் பொருந்தக்கூடியதாக இருக்கின்றது என்பதில் நமக்கு நிச்சயமே. அதாவது, யூதர் யுகத்தின் முடிவில் (அ) அறுவடையின் போது, வாழ்ந்த சபை அங்கங்களுக்கும், சுவிசேஷயுகத்தின் முடிவில் (அ) அறுவடையின் போது, அதாவது இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் சபை அங்கங்களுக்கும் விசேஷமாகப் பொருந்தக்கூடியதாக இருக்கின்றது. நமது கர்த்தர் இத்தகைய புடைப்புகளை அனுமதிப்பதில் பிரியமுள்ளவராக இருக்கின்றார். அவைகள் அவசியமாயும் காணப்படுகின்றது; அதாவது யூதாஸ் வகுப்பாரை முற்றிலும் புடைத்து எடுப்பதற்கும், பேதுரு வகுப்பார் சோதனைகளினாலும் மற்றும் பிரச்சனைகளினாலும், தங்கள் சொந்த பலவீனங்கள் குறித்த உணர்ந்துகொள்ளுதலினாலும் தூண்டப்படுவதற்கு ஏதுவாகவும், தேவனுடைய பாதுகாக்கும் கிருபை தங்களுக்கு இல்லையெனில், தாங்கள் முழுமையாய்த் தோற்றுவிட நேரிடும் என்பது பற்றின அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாகவும், சகல வல்லமையுள்ள அவர்களுடைய தலையாய் இருப்பவர் மேல் விசுவாசம் கொள்ளவும், அதிகமதிகமாய்ச் சாந்தத்திலும், விழிப்பிலும், ஜெபத்திலும் வளர்ச்சிக்கொள்ளத்தக்கதாக இவ்வனுபவங்கள் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட படிப்பினைகள் அவர்களுக்கு உதவியாய் இருப்பதற்கு ஏதுவாகவும் சோதனைகள் அவசியமாய்க் காணப்படுகின்றது.
“பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்கு” என்ற வார்த்தைகள் தற்காலமானது பூச்சக்கரத்தின் குடிகளுக்குச் சோதனைக் காலமாய் இருக்கும் என்று சுட்டிக் காட்டுகின்றது (வெளிப்படுத்தல் 3:10). இன்னுமாக “அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்” என்ற வார்த்தைகள் மூலம் தற்காலமானது உண்மை சபையாருக்கும் கூடக் கடுமையான சோதனைக் காலமாய் இருக்கும் என்றும், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு என்னும் பொன், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கற்களே அக்கடுமையான சோதனையில் நிலைநிற்கும் என்றும் உள்ள வாக்குறுதியையும் நாம் நினைவுகூருகின்றோம். (1 கொரிந்தியர் 3:13)
எங்கெல்லாம் பூரணமான அன்பின் நிலை எட்டப்படவில்லையோ, அதை இந்த நாளின், “அக்கினியானது,” இந்த நாளின் புடைப்புகளானது வெளிப்படுத்திவிடும். அதாவது, குறைவு பெற்றவர்களைக் கர்த்தர் பிரித்துவிடுவார். இது துக்கத்தை உண்டு பண்ணுகிறதாய் இருக்கும். அதாவது, மாம்சீக உறவுகள் துண்டிக்கப்படும்போது, அருமையானவர்களிடத்தில் காணப்பட்ட நம்பிக்கைகள்/எதிர்பார்ப்புகள் அழிக்கப்பட்டுப் போகும்போது, நமக்குத் துக்கம் ஏற்படும் என்றாலும், இவ்விஷயம் தொடர்பாக, கர்த்தர் நமக்கு அளிக்கும் செய்தியானது, கர்த்தரால் கட்டளையிடப்படாத அந்நிய அக்கினியைச் செலுத்தின ஆரோனின் உடன் ஆசாரியர்கள் மரித்தபோது, அவர்களினிமித்தம் ஆரோனுக்கும், அவருடைய மற்றக் குமாரருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையில் நிழலாகக் காணப்படுகின்றது. “பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். மோசே ஆரோனையும், எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின் மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக” லேவியராகமம் 10:1,6). உயிரோடிருக்கிற மீதமுள்ள ஆசாரியர்கள், கர்த்தரால் அறுப்புண்டுப்போகப் பண்ணினவர்களுக்காக துக்கம் அனுசரிக்கவோ (அ) புலம்பவோ கூடாது என்று கர்த்தருடைய வாயாக இருந்த மோசே அறிவிக்கின்றார். மேலும் அவர்கள் ஒருவேளை துக்கம் அனுசரிப்பார்களானால், அது அவர்களை, கர்த்தருக்கு முன்பு உண்மையற்றவர்களாகவும், இவ்விஷயத்தில் விளங்கும் தேவனுடைய ஞானம், நீதி மற்றும் அன்பை அங்கீகரிப்பதில்/ஏற்றுக்கொள்வதில் தவறிப் போகிறவர்களாகவும் காண்பித்துவிடும்.
“கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” அளவு நம்முடைய நாட்களில் உள்ள “புடைப்புகள்” காணப்படும் என்று, அதாவது கர்த்தருக்கும், அவருடைய தெய்வீக ஏற்பாடுகளுக்கும் நாம் கொண்டிருக்கும் நம்முடைய அன்பையும், நம்முடைய உண்மையையும் நிரூபிக்கும் அளவு சோதனைகள் கடுமையாக, அதாவது விசாரணை செய்யும் விதத்தில் காணப்படும் என்று மிகத் தெளிவாகக் கர்த்தர் தம்முடைய தீர்க்கத்தரிசனத்தில் வெளிப்படுத்தியுள்ளார் (மத்தேயு 24:24). உண்மையுள்ளவர்கள் வஞ்சிக்கப்பட்டுப்போவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இவர்களுடைய மகிமையான தலை அவர்களுக்கான ஆதரவாளராக நிற்கின்றார். இவர்கள் அவருடைய பின்னடியார்கள் ஆவார்கள். இவர்கள் அவருக்கென்று நிச்சயிக்கப்பட்டவர்களும், அவருடைய அங்கங்களும் ஆவார்கள். அவர் இவர்களுடைய தலையாகவும், பிரதிநிதியாகவும், ஸ்தானாபதியாகவும் காணப்படுகின்றார். மேலுமாக, அவர் இவர்களுக்காக, பரிந்துபேசுகின்றார். இவர்களுக்காக விண்ணப்பமும், ஜெபமும் ஏறெடுக்கின்றார். மேலுமாக, இவர்களுடைய விசுவாசம் ஒழிந்துபோவதில்லை; ஏனெனில் இவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள் ஆவார்கள்; ஏனெனில் இவர்கள் எவ்வளவுதான் மாம்சத்தில் பெலவீனர்களாக இருந்தாலும், இருதயத்தில் இவர்கள் பூரணர்களாகவும், அவருக்கும் மற்றும் அவருடைய நோக்கத்திற்கும் மற்றும் தங்களுடைய உடன் அங்கங்களுக்கும் முற்றிலும் உண்மையானவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பதினாலேயேயாகும்.
ஆகவே, வருடத்தின் இக்காலக்கட்டத்தில், எப்போதும் கூறுவதுபோன்று, மீண்டுமாக, “சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து, ஜெபம் பண்ணுங்கள்” என்ற போதகரின் வார்த்தைகளைத் தொனிக்கப்பண்ணுகின்றோம். போதகரின் வார்த்தைகள் எப்படி இரு வகுப்பாருக்கு விழுந்ததோ, அப்படியே நம்முடைய வார்த்தைகளும் இரு வகுப்பார் காதுகளில் விழுகின்றது. அதாவது, சிலர் நம்முடைய இந்த எச்சரிப்பையும் பெரிதாகக் கருதிக்கொள்ளாமல், தங்களையே ஆபத்திற்குள் திணித்துக்கொள்வார்கள். வேறு சிலரோ போதகரின் சத்தத்தில் உள்ள எச்சரிப்புக்குச் செவிசாய்த்துக் கொள்வார்கள்; மேலும் இவர்களுக்கோ இது தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தேவனுடைய வல்லமையின் ஒரு ஒரு பாகமாகக் காணப்படும்.