R2780 (page 91)
மத்தேயு 26:57-68
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” மத்தேயு 16:16
நமது கர்த்தர் ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கப்பட்டபோது, காய்பா என்பவன் பிரதான ஆசாரியனின் ஸ்தானத்தில் காணப்பட்டான். இந்தக் காய்பா என்பவன்தான், “ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும்” என்று முன்கூட்டியே அறிவித்தவனாகவும் இருந்தான். மேலும் இவ்விஷயமானது, தேவன் எப்படிச் சில சமயம் பொல்லாத மனுஷர்களின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களைப் பயன்படுத்தி ஆழமான தீர்க்கத்தரிசன சத்தியங்களை வெளிப்படுத்துகின்றார் என்பதற்கு உதாரணமாகவும் அமைகின்றது (யோவான் 11:50; 18:14). யூதர்களுக்கு மாத்திரமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்தாருக்கும் இது நன்மையாக இருக்கப்போவது என்பது உண்மையே. அதாவது, ஆதாம் மற்றும் அவருடைய சந்ததியாரும் தெய்வீகத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படவும் மற்றும் தெய்வீகத் தயவினிடத்திற்கும், நித்திய ஜீவனிடத்திற்கும் திரும்பிடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இறுதியில் கொடுக்கப்படத்தக்கதாகவும், அவர்களுக்கு ஈடுபலி கொடுக்கப்படுவது நன்மையானதேயாகும்.
ஆனால், காய்பாவைப் பொறுத்தமட்டில் அவன் மனித ரீதியிலான நன்மையை மாத்திரம் அநேகமாக எண்ணியிருந்திருக்க வேண்டும். நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசுவின் மீதான ஜனங்களின் பிரியம் வளர்ந்து கொண்டுவருவதைக் காய்பா உணர்ந்துகொண்டவனாகக் காணப்பட்டான். உபதேசத்திலும் சரி, வாதம் பண்ணுவதிலும் சரி, இயேசுவுக்கு முன்பு, மிகவும் கற்றுத்தேர்ந்த பரிசேயர்களும், வேதபாரகர்களும் கூட நிகராக நிற்க முடியவில்லை என்றும் காய்பா உணர்ந்து கொண்டவனாகக் காணப்பட்டான். இன்னுமாக, இயேசுவின் போதனைகள் காய்பாவினுடையதற்கும், யூதா மார்க்கத்தின் பொதுவான பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் மிகவும் எதிராகக் காணப்பட்டபடியால், இயேசுவின் போதனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது மதரீதியான புரட்சிக்கு நேராக வழி வகுத்துவிடும் என்றும் காய்பா உணர்ந்துகொண்டவனாகக் காணப்பட்டான். இப்படியாக, புரட்சி நடக்கும் பட்சத்தில் ரோமர்களுக்கு முன்பு தங்கள் தேசத்திற்குக் காணப்படும் மரியாதை போய்விடும் என்றும், ஒப்பந்தத்தின்படி தங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டுள்ள சகல உரிமைகளும், சிலாக்கியங்களும்கூட ரத்து செய்துவிடப்படும் என்றும் காய்பா உணர்ந்துகொண்டான். காய்பாவைப் பொறுத்தமட்டில் அவனுடைய மனதில் இயேசுவுக்கான தீர்ப்பை அவன் ஏற்கெனவே நிர்ணயித்துக்கொண்டான். மேலும், அதைச் செயல்படுத்த, அதாவது இயேசுவைக் கொலை செய்து போடுவதற்கான வாய்ப்பை மாத்திரம் வகைதேடிக் கொண்டிருந்தவனாகக் காணப்பட்டான். காய்பா வெளிவேஷமாகவும், பெயரளவில் பயபக்தியுள்ள மனுஷனாக/மதவாதியாகவும் இருந்தபடியினாலும், நீதிக்குப் பிரதிநிதியாகவும் [R2780 : page 92] காணப்பட்டப்படியினாலும் அவன் இயேசுவின் மரணத்தை/கொலையை நீதியின் செயல்பாடு எனும் தோற்றத்தில், பொது ஜனங்களின் நன்மைக்கு அவசியம் எனக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் காணப்பட்டான்.
இயேசுவுக்கு எதிரான கூட்டத்தாருக்கு காய்பாவே கலகத் தலைவனாக இருந்திருக்க வேண்டும். காய்பாவும், அவனுடைய கூட்டத்தாருமே யூதாசிடம் பேரம் பேசினார்கள். இன்னுமாக, ஜனங்களால் சூழப்படாமல் தனிமையில் இயேசு இரவில் காணப்படுகையில், அவரைக் கைது செய்யத்தக்கதாக, யூதாசுடன் காய்பாவின் உடன் ஆசாரியர்களும், அவனுடைய அலுவலர்களும், அவனுடைய சேவகர்களுமே அனுப்பி வைக்கப்பட்டார்கள். இன்னுமாக, காய்பாவின் கட்டளைப்படியே நமது கர்த்தர் அவனுடைய மாமனாகிய அன்னாவிடம் முதலாவதாகக் கூட்டிச்செல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாம் அனுமானிக்கின்றோம். காய்பாவின் மாமனாகிய அன்னா என்பவன், யூதர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கையுடைய மனுஷனாக இருந்தான். இந்த அன்னா என்பவன், காய்பா பிரதான ஆசாரியனாகுவதற்கு முன்பு பிரதான ஆசாரியனாகக் காணப்பட்டான். மேலும், ரோமர்களால் அன்னாவுக்குப் பதிலாக காய்பா பிரதான ஆசாரியனாகப் பலவந்தமாக நியமிக்கப்பட்டிருப்பினும், யூதர் முறைபடி அன்னாவின் பணிக்கான காலம் இன்னும் முடிவுப்பெறவில்லை. இயேசு, அன்னாவிடம் அனுப்பட்டதற்கான காரணம், இயேசு கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படுவதற்கான மேலிடத்திலான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கேயாகும்; மேலும் அன்னாவின் ஒப்பந்தம் வழி வரும் செல்வாக்கைப் பெற்றுக்கொள்வதற்கேயாகும்.
கைது செய்த குழுவானது அன்னாவிடம் வந்தபோது, அன்னா, இயேசுவிடம் அவருடைய போதனைகள், முதலியவைகள் குறித்துக் கேள்வி கேட்டானே ஒழிய, அதிகாரம் இல்லாதபடியினால் அவ்வழக்குக் குறித்து விசாரணை செய்வதற்கு முற்படவில்லை. அன்னாவினுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க இயேசு மறுத்துவிட்டு, தாம் பேசினதைக் கேட்டவர்களிடம் கேட்கும்படிக்கு அன்னாவுக்கு அறிவுறுத்தினதில், இயேசு நீதிமன்றத்திற்குரிய அமைப்பின் முறையையே பின்பற்றினவராக மாத்திரம் காணப்பட்டு, கைதியை விசாரணை செய்யும் விஷயம் தொடர்பான பிரமாணத்தை அலட்சியம் பண்ணாத நடவடிக்கையை அன்னா கையாளுவதற்கு மெல்ல நினைப்பூட்டினார்/யோசனை அளித்தார். அன்னா இயேசுவினிடத்தில் குற்றம் கண்டுப்பிடிக்காமல் (அ) அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்காமல், இயேசுவைக் கட்டுண்டவராகக் [R2781 : page 92] காய்பாவினிடத்தில் அனுப்பி, இயேசுவைக் கைது செய்ததற்கான தனது ஒப்புதலை, செய்கையில் வெளிப்படுத்தினார். அதாவது, அவருடைய செய்கை பின்வரும் வார்த்தைகளை அறிவிப்பதுபோன்று இருந்தது; அதாவது, “இந்த மனுஷன் கைது செய்யப்பட வேண்டும் என்றும், இக்கைதி ஆபத்தானவன், அதாவது நம்முடைய கோட்பாடுகளுக்கும், அமைப்புகளுக்கும் எதிராக ஆபத்து விளைவிப்பவன் என்றும் நீ (காய்பா) கருதி, மேற்கொண்ட உன்னுடைய நடவடிக்கையை நான் அங்கீகரிக்கின்றேன்” என்பதாகும்.
முதன்மை வகிக்கும் அநேக யூதர்கள் மற்றும் விசேஷமாக ஆசாரியர்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் காய்பா ஏற்கெனவே பெற்றுக்கொண்டிருந்தான். மேலும், இந்த ஆசாரியர்களும் காய்பாவின் “குழுவின்” அங்கங்களாகவும் காணப்பட்டார்கள். கைதியாகிய இயேசு, அன்னாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில்தான், ஆலோசனை சங்கத்தாரின் அங்கத்தார்களிடம், அவர்களின் சமாதானத்தைக் கலைத்துப்போட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும், அவரை விசாரணை செய்யும்படிக்கு வர வேண்டும் என்றும் அறிவிப்புக் கொடுக்கப்படத்தக்கதாக பல்வேறு திசைகளிலும் தூதுவர்கள் வேகமாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் அனுமானிக்கின்றோம். இயேசு காய்பாவிற்கு முன்பு கொண்டுவரப்படும்போது, சுமார் அதிகாலை இரண்டு மணியளவு காணப்பட்டிருந்திருக்க வேண்டும். சூரியன் மறைந்து போவதற்கும், சூரியன் உதிப்பதற்கும் இடையில் காணப்படும் காலப்பகுதியில் கைதி விசாரணை செய்யப்படுவதை யூதர்களுடைய பிரமாணமானது தடை செய்கின்றது. மேலும், இப்படியாகப் பிரமாணத்திற்கு எதிராக இவ்வேளைகளில் வழங்கப்படும் தீர்ப்பு, சட்டப்படி செல்லாததாகவும், சட்டத்திற்கு விரோதமானதாகவும் கருதப்படும். பிரதான ஆசாரியனோ, தான் ஏற்கெனவே தீர்மானித்திருந்த தீர்ப்பின்படி, கைதியை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் காரியத்தை முடிந்த அளவுக்கு வேகமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், சூரியன் உதிப்பதற்குள் தனது இவ்வழக்கைத் தனக்குச் சாதகமாக கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆவலுடன் காணப்பட்டான். எப்படி இருப்பினும், இந்த விசாரணைகள் வெறும் நாடகம்தான். ஆயினும் சூரியன் உதிக்கும்போது, கூடும் ஆலோசனை சங்கத்தார் முன்பு, என்ன நிரூபணங்கள் வைக்க வேண்டும் என்று அறிய வேண்டியிருந்ததினால், காய்பா சட்டத்திற்கு விரோதமாகவும், உடனடியாகவும் இயேசுவை விசாரணை செய்ய ஆரம்பித்து, சாட்சிகளை அழைத்தான்.
இயேசு தம்முடைய மேசியாத்துவத்தைக் குறித்துத் தெரிவித்ததாக தன்னிச்சையாக சொல்லப்பட்டது என்பதில் ஐயமில்லை; சுவிசேஷபதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, பொது ஜனங்கள் மத்தியிலும், தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மத்தியிலும்கூட, அவர் தம்மை வெளிப்படையாக மேசியா என்று அறிவிக்கவுமில்லை மற்றும் தம்முடைய வார்த்தைகளை மிகவும் காத்து அடக்கிக் கொண்டவராகவும் இருந்தார். பேதுருவோ முதலாவதாக, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமரனாகிய கிறிஸ்து (மேசியா)” என்று அறிக்கைப்பண்ணினார். இதற்கு இயேசு, பேதுரு உண்மையைச் சொன்னார் என்றும், இப்படிச் சொல்லுவதற்கு பேதுரு பரிசத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டுள்ளார் என்றும் ஒப்புக்கொள்ள மாத்திரமே செய்தார். ஆகவே, மேசியா தொடர்பான விஷயத்தில் காய்பா சாட்சியாளர்களைத் தேடினபோது, திருப்திகரமான சாட்சி அளிக்கக்கூடிய எவரையும் அவனால் கண்டுபிடிக்க இயலாமல் போயிற்று. முக்கியமான சாட்சி ஒன்றைத் தன்னால் கூற முடியும் என்று எண்ணி முன் வந்த ஒரு சாட்சியாளர், ஆலயம் தொடர்பான நமது கர்த்தருடைய வார்த்தைகளைத் தவறாய்த் திரித்து, சில காரியங்களைக் கூறினார். ஆனால், இந்தச் சாட்சியை உறுதி செய்துகொள்வதற்கு இரண்டாம் சாட்சியாளரை அவர்கள் தேடினபோது, முதலாம் சாட்சியாளர் சொன்ன அதே காரியங்களைச் சாட்சியளிக்க நபர் இல்லாமல் போயிற்று. இப்படிப்பட்ட விசாரணைகளில் குறைந்த பட்சம் இரண்டு சாட்சியாளர்களாகிலும் இருக்க வேண்டும் என்பது யூதர்களின் பிரமாணமாக இருந்தது.
சாட்சியாளர்களைப் பெற்றுக்கொள்ளாததில், தன்னுடைய முயற்சிகள் தோல்வியடைய, கடுங்கோபம் அடைந்த காய்பா, வேறுவிதமான திட்டத்தை அதாவது, சட்டவிரோதமான திட்டத்தைக் கையாள தீர்மானித்தான். அதாவது, தனது கைதியாகிய இயேசு குற்றம் சாட்டப்படுவதற்கு ஏதுவான சில வார்த்தைகளைப் பேசத்தக்கதாக, கைதியை எரிச்சலூட்ட முற்படுவதே அவனுடைய திட்டமாகக் காணப்பட்டது. ஆகவே, காய்பா அநீதியான காரியத்தைக் கண்டு, கடுங்கோபம் மூண்டு, ஆவேசத்துடன் தான் இருப்பதுபோன்றும், மிகவும் கெடுதலான சாட்சியை தான் கேட்டு ஆவேசம் அடைந்தது போன்றும் தோன்றும்விதத்தில் எழுந்து நின்று, கைதியான இயேசுவை நோக்கி, அவருக்கு எதிராக கூறப்பட்ட சாட்சியை அவர் கேட்டாரோ என்று வினவி, தம்மைத் தற்காத்துக் கொள்ளும்படிக்கு அவர் ஏதேனும் ஒருவேளை சொல்ல விரும்புகின்றாரோ என்று கேட்டான். நமது கர்த்தர் எவ்வித பதிலும் கூறவில்லை. தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் அங்கு நிற்கவுமில்லை. மேலும் தம்மை பாதுகாத்துக்கொள்ள நினைத்திருந்தாலும்கூட, அங்கு அவர் எதிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அவசியமுமில்லை; ஆலயம் தொடர்பான விஷயம் குறித்துக் கர்த்தர் பேசின விஷயங்களில் எவ்வித குற்றமுமில்லை; ஒருவேளை ஆலயம் தொடர்பாக அவர் பேசின விஷயங்களுக்குப் பன்னிரண்டு சாட்சியாளர்கள் சாட்சியளித்தாலும் கூட அதில் எவ்விதமான குற்றமும் கண்டுபிடிக்க முடியாது. காய்பா தோற்றுப்போனான், ஆனாலும் அவன் திறமைமிக்க மனுஷனாகக் காணப்பட்டப்படியினால், அவன் உடனடியாகத் தன்னுடைய தந்திரங்களை மாற்றிவிட்டு, இயேசு தம்மை மேசியா என்று கூறும் விஷயம் உண்மையா என்பதை அறிந்துகொள்ள விரும்பினதுபோன்று, “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்” என்று கூறி, இயேசுவை ஆணையின் கீழ்க் கொண்டுவந்தான் (மத்தேயு 26:63).
இக்கேள்விக்கான பதிலானது, தம்மைத் தேவதூஷணம் சொன்னதாக பழிச் சுமத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று நமது கர்த்தர் அறிந்திருந்தார்; கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் கூற வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இல்லை; எனினும், அவர் மரணத்தைத் தவிர்த்துவிடுவதற்கும் நாடவில்லை. அவர் தாம் பருகும்படிக்குப் பிதா தமக்குக் கொடுத்துள்ள பாத்திரத்தில் பானம் பண்ண வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானத்துடன் காணப்பட்டார். ஆகவே அவருடைய பதில் மத்தேயு சுவிசேஷத்தின் படி, “நீர் சொன்னப்படிதான்”; அதாவது நீர் உண்மையைத்தான் சொல்லுகின்றீர் என்றும், மாற்கு சுவிசேஷத்தில், “நான் அவர் தான்”, அதாவது நான் தேவனுடைய குமாரனாகிய மேசியா (மத்தேயு 26:64; மாற்கு 14:62) என்றுமுள்ள விதத்தில் காணப்படுகின்றது. இன்னுமாக இன்று, தாம் இங்கு இழிவாகக் கருதப்படுவதையும், எள்ளி நகையாடப்பட்டு விசாரணை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள், ஏற்றக்காலங்களில் தாம் தேவனால் கனப்படுத்தப்பட்டு, உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து, மாபெரும் நியாயாதிபதியாக, மேசியாவாக வானத்தின் மேகங்களின்மேல் வெளிப்படுவதை அடையாளங்கண்டுகொள்வார்கள் என்றும் கூறினார்.
காய்பா அவரைத் தேவதூஷணம் சொன்னதாகக் குற்றம் சுமத்தி, தீர்ப்பளிக்க வேண்டும் என்று தனக்குள் ஏற்கெனவே முடிவு பண்ணியிருந்த திட்டத்திற்கு, இயேசுவின் இவ்வார்த்தைகள் [R2781 : page 93] மிகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக இருந்தது. இதையே, காய்பாவும் எதிர்ப்பார்த்தான். ஆகவே, நீதியான கோபம் கொண்டது போன்றும், அவமதிப்பு நடந்தது போன்றும் காய்பா தன்னுடைய “சிம்லா” அல்லது மேல் அங்கியைக் கிழித்துக்கொண்டு தேவதூஷணம்! என்று கத்தினான். நாம் தேவதூஷணம் பேசினதைக் கேட்டோமே! என்று கத்தினான். பின்னர், இந்தக் கொலைப்பாதகத்திற்கு ஏற்கெனவே ஆதரவு அளித்த ஆலோசனை சங்கத்தின் அங்கத்தாரை நோக்கி, அவர்கள் இந்த நிரூபணத்தில் திருப்தி அடைந்துள்ளார்களா என்று கேட்டான். அவர்களும் ஏற்கெனவே அவர்களுக்குள் தீர்மானித்து வைத்திருந்தபடி, இவ்வழக்குத் தேவதூஷணம் பற்றினது என்றும், மிகவும் தெளிவாக உள்ளது என்றும், இயேசு மரணத்திற்குப் பாத்திரவான் என்றும் ஒப்புக்கொண்டார்கள்.
டாக்டர் சி.எச்.பிலாம்டிர் அவர்கள் இப்படியாகக் கூறுகின்றார் : “சாக்கிரடிஸ் அல்லது சக்யா மௌனி போன்று, நமது கர்த்தரையும் வேறு வழியின்றி ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒரு மாபெரும் போதகராக மாத்திரமே காண்கின்றவர்களுடைய கண்ணோட்டங்களுக்கு எதிராய்த் தீர்மானம் அளிப்பதற்கு, மேற்கூறப்பட்ட வேத வார்த்தைகள்தான் முழுச் சுவிசேஷ பதிவுகளிலேயே ஆற்றல்மிக்கதாய் இருக்கின்றது. இயேசுவின் வாழ்கையிலேயே ஆபத்தான சூழ்நிலை வந்தபோது, அதாவது உண்மையை அறிவிப்பது தவிர்க்கப்பட்டால், தமது ஜீவன் தப்புவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை வந்தபோது அவருடைய வார்த்தைகளானது, கர்த்தரை ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒரு மாபெரும் போதகராக மாத்திரமே பார்க்கிறவர்களின் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டுள்ள தமது உரிமைகளை வலியுறுத்துகின்றதாகவும், இயேசு யார் என்று நம்பிக்கொண்டிருக்கும் மிகுந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்களின் சகல நம்பிக்கைகளுக்கும் இசைவாகவும் இருக்கின்றது.” மிகவும் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள்தான், நமது கர்த்தருடைய வார்த்தைகளின் உருவத்தைத் திரித்துக் கொள்ளாமல் அப்படியே விசுவாசிக்கின்றவர்களாய் இருக்கின்றார்கள். அதாவது, உலகம் உண்டாகுவதற்கு முன்பு இயேசு பிதாவோடு இருந்தார் என்றும், பிதா அவரை உலகத்திற்கான மீட்பராக உலகத்திற்கு அனுப்பினார் என்றும், “அவர் பேசுகிறதுபோல ஒருவனும், ஒருக்காலும் பேசினதில்லை” என்றும், அவர் மற்ற மனுஷர்களிடமிருந்து வேறுபட்டவராக இருந்தார் என்றும்,” “அவர் பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாய்” இருந்தார் என்றும், மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவின் ஜீவன் மாசற்றதும், பிதாவிடத்திலிருந்து அவர் வந்தார் என்றும் விசுவாசிக்கின்றவர்களே மிகுந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இயேசு, “நான்தான் பிதா, யேகோவா” என்று ஒருபோதும் தமக்கென்று உரிமை கொண்டாடிக்கொள்ளாத வார்த்தைகளை, சில குறைந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் அவருக்காக உரிமை கொண்டாடி கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், எல்லா யுகங்களில் உள்ள மிகுந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்களோ, இயேசுவுக்காக இப்படி உரிமை கொண்டாடி அறிவிப்பதைத் தவிர்த்துள்ளனர்.
“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கின்றார்” என்றும், “பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றும் உள்ள நமது கர்த்தர் இயேசுவின் வார்த்தைகளை மிகுந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றார்கள். பிதாவும், குமாரனும் ஒன்றாயிருக்கின்றார்கள் என்பது அவர்கள் ஒரு நபராகவே இருக்கின்றார்கள் என்பதைக் குறிக்காமல், ஒரே இருதயம், மனம், நோக்கம் உடையர்களாய் இருக்கின்றார்கள் என்பதையே குறிக்கின்றது என இவர்கள் உணர்ந்து/அறிந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த ஒன்றாய் இருத்தலானது, இயேசு தம்முடைய ஜனங்களுக்காக ஜெபம் பண்ணுகையிலும் வெளிப்படுகின்றது; “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவான் 17:11). இன்னுமாக மிகுந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு, பரம பிதாவின் பிரதிநிதி என்றும், குமாரனைக் (பிதாவின் தற்சொரூபமாய் இருப்பவரை) காண்கிறவன் பிதாவைக் காண்கிறான் என்றும், இதுவே காணமுடியாத தேவனை மனுக்குலம் பார்ப்பதற்கான ஒரே வழி என்றும், மனுஷர் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமானவரை, அவருடைய ஒரே பேறான குமாரன் மாத்திரம் அருமையாக மனுஷர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ஒப்புக்கொள்கிறவர்களாய் இருக்கின்றார்கள் (யோவான் 1:18).
புத்தியுள்ளவர்களும், சிந்திக்கிற ஆற்றலுள்ள, பக்தியுள்ள கிறிஸ்தவர்களோ, நமது கர்த்தர் இயேசு வேறு இடங்களில் பேசின வார்த்தைகளுக்கும், இங்குப் பேசின வார்த்தைகளுக்கும் முரண்பாட்டைக்காணாமல், இசைவையே பார்க்க முடியும். கர்த்தர் இயேசு தம்மைப் பரம பிதா என்று கூறினதாக, யூதர்கள் ஒரு கணம்கூட எண்ணிக்கொள்ளவில்லை. இது கேட்கப்பட்ட கேள்வி அல்ல. மேலும், யூதர்கள் மேசியாதான் பிதா என்று எண்ணாமல், மேசியா பிதாவின் பிரதிநிதியாக, தேவனுடைய குமாரனாகத்தான் இருப்பார் என்றே அவர்களும் கருதினார்கள். “இதோ, நான் என் தூதனை (ஊழியன்) அனுப்புகிறேன்” என்றே நாம் வாசிக்கின்றோம் (மல்கியா 3:1). இயேசு தேவதூஷணம் பேசினதாகக் கூறப்பட்டதற்கான காரணம், அவர் தம்மைப் பிதா என்று கூறினார் என்று கருதப்பட்டதால் இல்லை, மாறாக அவர் தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறினதினாலேயே ஆகும். இதே குற்றச்சாட்டு முன்பொரு தருணத்திலும் அவர் மேல் சுமத்தப்பட்டது (யோவான் 10:29-36). அங்கு அவர் தம்மை தேவனுடைய குமாரன் என்று கூறிக்கொள்கின்றார் என்பதே குற்றம் என அவரைக் குற்றம் சாட்டினார்கள்/கூறினார்கள். இயேசு, தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறுவதின் மூலம் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கி, அதாவது பிதாவினுடைய சுபாவம் போன்ற சுபாவம் கொண்டவர் என்று கூறுகின்றார் என்றே அவர்களது குற்றச்சாட்டுக் காணப்பட்டது. அத்தருணத்தில் அவர்களுடைய சொல் புரட்டுதலுக்குப் பதில் கொடுக்கும் வண்ணமாக, சங்கீதத்தில் உள்ள வாக்கியங்களைக் கோடிட்டுக் காட்டினார்; அதாவது சுவிசேஷ யுகத்தின் சபையாகிய சகல கர்த்தருடைய ஜனங்களும், தேவனுடைய குமாரர்கள் என்று அழைக்கப்படும் காரியம் சங்கீதம் 82:6-ஆம் வசனத்தில் இடம்பெறுவதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். மேலுமாக, விசுவாசத்தின் வாயிலாக, நீதிமானாக்கப்படுவதின் மூலமாக பிதாவிடத்தில் உறவிற்குள்ளாக வருகிறவர்களுக்கும் கூட, “தேவனுடைய குமாரர்கள்” என்ற பெயர் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்குமாயின், பிதாவுடன் முழு இசைவுடன் என்றென்றும் காணப்படும் தேவனுடைய குமாரனாகியதாமும் அப்பெயரை உரிமையுடன் சூட்டிக்கொண்டார் என்றும் அவர்களுக்குச் சுட்டிக் காண்பித்தார்.
ஆலோசனை சங்கத்தாரின் இந்தக் கூட்டம் முடிந்த பிற்பாடு, அவர்கள் சூரியன் உதிக்கும் அளவு காக்கவேண்டியிருந்தது. விடியும்போது, ஆச்சாரமாக கூட்டம் நடத்தப்பட்டு, தேவ தூஷணம் என்னும் குற்றம் மீண்டுமாக உறுதி செய்யப்படும். இப்படிச் செய்வதின் மூலம் எல்லாம் சட்டப்பூர்வமாக நடந்தது போன்று காட்சியளிக்கப்படும் (மத்தேயு 27:1). இதற்கிடையில் நமது கர்த்தர் சுமார் மூன்று மணி நேரமளவும் கட்டப்பட்ட நிலையில் பிரதான ஆசாரியனுடைய அரண்மனையின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தார். இச்சமயத்தில்தான், கைதியான இயேசுவைத் திட்டி, ஏசி, பழிதூற்றி, புண்படுத்தி பிரதான ஆசாரியனின் சேவகர்கள், பெரிய ஸ்தானத்தில் இருந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். சிலர் அவர் மேல் துப்பினார்கள். சிலர் தங்கள் கைகளினாலும், கம்புகளினாலும் அவரை அடித்தார்கள். இப்படியாக, தங்கள் கீழ்த்தரத்தையும், குறுகிய மனப்பான்மையையும் வெளிப்படுத்தினார்கள். அவருடைய கண்களைக் கட்டி, அவரை அடித்து, அவரை யார் அடித்தார் என்று சொல்வதன் மூலம் அவர் தீர்க்கத்தரிசியா, இல்லையா என்று கேட்ட காரியமானது அவர்களுக்கு மிகவும் ரம்மியமான துன்புறுத்தும் முறையாகவும் சற்று நேரம் காணப்பட்டது. இப்பதிவுகள் நமக்குக் காட்டுவதை நாம் பார்க்கையில், இவைகள் அனைத்தையும் நமது கர்த்தர் முறுமுறுக்காமல் சகித்துக்கொண்டார். இவைகள் அனைத்தையும் இயேசு, தமது பிதா தமக்காக ஆயத்தம் பண்ணின பாத்திரத்தின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டார். இதைத்தான் அப்போஸ்தலர், “ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே” என்று குறிப்பிடுகின்றார் (எபிரெயர் 12:3,4). பிதா நமக்கென்று ஆயத்தம் பண்ணின பாத்திரத்தை நாம் ஒருவேளை ஏற்க மறுப்போமானால், அப்பாத்திரமானது அநேகமாக மிகுந்த கசப்பான காடியுடன் பின்னர் நம்மிடத்தில் மீண்டும் வரலாம். ஒருவேளை அதை நாம் முற்றிலும் தவிர்த்துவிட்டால், நமது கர்த்தரோடு கனம், மகிமை மற்றும் அழியாமையில் நாம் பங்குக்கொள்ளத்தக்கதாக நம்மை ஆயத்தம் பண்ணும் நோக்கத்திற்காக இப்போது அனுமதிக்கப்படும் சோதனையான அனுபவங்களை நாம் தவிர்த்துவிட்டால், நாம் இவைகளில் கர்த்தரோடு கூடப் பங்கடைய முடியாது.
ஊழியக்காரன், கர்த்தருக்கு மேலானவன் அல்ல. மேலும், போதகரையே அவர்கள் அடித்து, துப்பி, குத்தினார்கள் என்றால், போதகரின் ஊழியர்களும் இதேவிதமான அனுபவங்களுக்குள் கடந்து போகும்போது, ஆச்சரியம் கொள்ளவோ அல்லது முறுமுறுக்கவோ கூடாது. மேலும், [R2782 : page 94] இப்படிப்பட்டவைகள் அவர்களுக்குச் சம்பவிக்கையில் அவர்களும் கர்த்தரைப்போன்று, அவைகளை, பிதா ஆயத்தம் பண்ணின பாத்திரமாகக் கருதி, முறுமுறுக்காமல் சகிக்க வேண்டும். இன்னுமாக, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தனைகளில் சிலவற்றை அனுபவிப்பதற்கு, தாங்களும் பாத்திரவான்களாகக் கருதப்பட்டதை எண்ணி நன்றி செலுத்த வேண்டும். கொலொசேயர் 1:24; 2 தீமோத்தேயு 1:8; 2:3; யாக்கோபு 5:11.
“உங்களுக்கு வரும் துன்பங்கள் நீங்கள் தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது” (திருவிவிலியம்) என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகின்றார் (1 பேதுரு 4:15). ஒருவேளை நம்முடைய சொந்த தவறுகளினிமித்தம் நம்மீது பாடுகள் வருமாயின், நாம் அதில் தேவனை மகிமைப்படுத்த முடியாது, மாறாக வெட்கப்படவே வேண்டும். ஆனால், ஒருவன் கிறிஸ்தவன் போன்று சத்தியத்தினிமித்தமாகவும், நீதியினிமித்தமாகவும் பாடுபடுவானாகில், அவன் வெட்கப்பட வேண்டியதில்லை. இன்றைய காலங்கள் அறிவுடைய நாட்களாக இருக்கிறபடியினாலும், இயேசு நன்கு பிரபலமானவராய் இருக்கிறபடியினாலும் இப்பொழுது பாடுகள் வராது என்று சிலரால் வலியுறுத்தப்படுகின்றது. “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று அப்போஸ்தலர் கூறுவது இன்றும் உண்மையாகதான் உள்ளது. இன்று இயேசுவின் நாமத்தைத் தரித்துக்கொண்டிருக்கும் அநேகருக்கு இயேசுவை யார் என்றும், பிதாவை யார் என்றும் தெரியாமல் இருக்கின்றார்கள். மேலும், இவர்களிடத்தில் அவருடைய ஆவியும் இல்லை. இவர்கள் அன்றைய நாட்களில் மோசேயின் பெயரில் சுகம் கொண்டு, நியாயசாஸ்திரிகளாக மோசேயின் ஆசனத்தில் இருந்தும், மோசே மற்றும் தேவனுடைய பிரமாணங்களை அறியாமல், புரிந்துகொள்ளாமல் காணப்பட்டவர்களுக்கு ஒப்பாவார்கள் (1 பேதுரு 4:15,16; 2 தீமோத்தேயு 3:12).