யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம் – சகோ. யூஜின் பேர்ண்ஸ்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

(Beauties of the truth; volume 12, Number 1, Feb 2001)

யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம் - சகோ. யூஜின் பேர்ண்ஸ்

JOSEPH'S SILVER CUP - - Eugene Burns

யோசேப்பின் கதை என்பது பழைய ஏற்பாட்டிலுள்ள நீண்ட பதிவுகள் கொண்ட கதைகளில் ஒன்றாகும். (ஆதியாகமம் 37 முதல் 50-ஆம் அதிகாரங்கள், ஆக மொத்தம் 14 அதிகாரங்களாகும்). இது பாதக செயல்களும், மாபெரும் குணலட்சணங்களும் கலந்து காணப்படுகின்றதான, ஆத்தும தேடலை தூண்டும் ஒரு கதையாகும். பகைமையும், அன்பும் இரண்டுமே இக்கதையை நடத்திச் சென்றது மற்றும் தெய்வீக வழிநடத்துதலானது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றிடத்தக்கதாக இயக்கினதாகக் காணப்பட்டது. இறுதியில் அன்பு ஜெயங்கொள்கின்றது. தேவனுடைய திட்டத்தின் அருமையான பாகம் என்பது, அன்பு இறுதியில் ஜெயங்கொள்வதாகும். யாக்கோபிற்கும் இறுதியில் மகிழ்ச்சியான முடிவு காணப்படுகின்றது. அவர் யோசேப்பு மரித்துப்போய்விட்டார் என்று நம்பிக்கொண்டிருந்தார், ஆனால் யோசேப்பை உயிரோடே எகிப்தில் கண்டார். யாக்கோபினுடைய வாழ்க்கை முடிவடைகையில், தேவனுடைய உருக்கமான இரக்கத்தின் காரணமாக, யோசேப்பே யாக்கோபினுடைய கண்களை மூடுகின்றார் (ஆதியாகமம் 46:4). யாக்கோபின் சரீரமானது வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆபிரகாம் மற்றும் ஈசாக்குடன் மக்பேலா குகையில் அடக்கம் பண்ணப்பட்டது. இது தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீதான அவரது நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றதாய் இருந்தது.

“யோசேப்பிற்கான யாக்கோபின் அன்பு”

யோசேப்பு யாக்கோபினுடைய பிரியமுள்ள ராகேலின் குழந்தையாவார். யோசேப்பு தனது சகோதரர்கள் அநேகரைக் காட்டிலும் இளையவராகக் காணப்பட்டார், ஏனெனில் ராகேல் சில காலம் மலடியாகக் காணப்பட்டிருந்தாள். இறுதியில் ராகேல், யோசேப்பைப் பெற்றெடுத்தபோது, இதினிமித்தம் யோசேப்பு விசேஷித்த அன்பிற்குரியவரானார். இன்னும் குறிப்பாக யோசேப்பு பெருமகிழ்ச்சிக் கொடுத்த பிள்ளையாகக் காணப்பட்டார். இதன் காரணமாக, பெற்றோர்கள் யோசேப்பிற்குச் செல்லம் கொடுத்தவர்களானார்கள். இது யோசேப்பிற்கு நன்றாய் இருந்திருக்கும், ஆனால் இது அவரது சகோதரர்கள் மத்தியில் பொறாமையை உருவாக்கிற்று. எனினும் யோசேப்பு யாக்கோபுடன் நெருங்கிக் காணப்பட்டதின் காரணமாகவே, அவர் ஆபிரகாமின் வாக்குத்தத்தத்திலுள்ள தனக்கான சுதந்தரத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டவராகவும், உணர்ந்துகொண்டவராகவும் காணப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமானதாகும். யோசேப்பு எகிப்தில் கழித்த வருடங்களில், இந்தப் பொக்கிஷமான வாக்குத்தத்தங்களை அவர் நினைவுகூராத நாளே அநேகமாக இருந்திருக்காது; எகிப்தினுடைய இரட்சகராகுவதன் வாயிலாக, ஆபிரகாமின் வாக்குத்தத்தமானது நிறைவேற ஆரம்பிக்கலாம் என்றுங்கூட அவர் அநேகமாக எண்ணியிருக்கலாம்.

“பொறாமை / வைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது”

பொறாமையானது வளர ஆரம்பித்துவிட்டால், அது இயல்பாக நல்லதாய்க் காணப்பட்ட இருதயத்தை, தீமையானதாக மாற்றிப்போட்டுவிட முடியும். யோசேப்பின் சகோதரர்கள் அவரை எப்படிப் பகைத்தார்கள் என்றும், இறுதியில் அவரைக்கொன்றுபோட திட்டம் பண்ணினார்கள் என்றும் நாம் அனைவரும் நினைவுகூருகின்றோம். மூத்த குமாரனாகிய ரூபன், தனது சகோதரர்கள் யோசேப்பைக் கொன்றுபோடுவதற்கு விடவில்லை. யோசேப்பைக் குழிக்குள் அவர்கள் போட்டுவிடும்படிக்கு ரூபன் யோசனை தெரிவித்தார் மற்றும் பின்னர் வந்து யோசேப்பை விடுவிக்கலாம் என்று எண்ணினார். இங்கு மனிதனுடைய கோபமானது, எப்படித் தேவனது மகிமையை விளங்கப்பண்ணத்தக்கதாக தேவன் மாற்றிப்போட்டார் என்று நாம் பார்க்கின்றோம். தேவனுக்கு, யோசேப்பை எகிப்திற்குக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. யோசேப்பினுடைய சகோதரர்களின் கோபமானது, அவரை அடிமைத்தனத்திற்குள் விற்றுப்போடுவதற்குத் தேவன் அனுமதித்தார். யோசேப்பின் சகோதரர்கள் இப்படிச் செய்தது என்பது இழிவான மற்றும் கீழ்த்தரமானக் காரியமாகும். சகோதரர்கள் என்பவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து காணப்படுகின்றவர்களாகவும், ஒருவருக்கொருவர் உதவிபுரிகின்றவர்களாகவும் காணப்படுவார்கள். இந்த ஒரு படிப்பினையை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றச் சகோதரனுக்கோ (அ) சகோதரிக்கோ கெடுதல் பண்ணுவதற்கு நாம் விருப்பம் கொண்டவர்களாகக் காணப்படுவோமானால், நாம் நிச்சயமாய் சகோதரர்களிடத்தில் அன்புகூராததினால், மரணத்தினின்று ஜீவனுக்குக் கடந்து வந்தவர்களல்ல. சோதனையின் கீழ் அன்பு தோற்கையில், நாம் செய்யும் உச்சக்கட்டமான கெடுதல் நமக்கேயாகும். நாம் நமது சகோதரர்களை அன்புகூர வேண்டும். நம்முடைய பழைய சுபாவம் நம்முடன் காணப்படுகையில், எப்போதும் இது கூடாததுதான், ஆனால் நம்மிடத்தில் அன்பு இல்லையெனில் நாம் ஒன்றுமேயில்லை. முப்பது வயதிற்குக் கீழான அடிமைக்குரிய விலையாகிய இருபது வெள்ளிக்காசுகளுக்கு யோசேப்பு விற்கப்பட்டார், ஏனெனில் யோசேப்பு அப்போது பதினேழு வயதானவராக இருந்தார். இயேசு முதிர்ச்சியடைந்த மனிதனாகக் காணப்பட்டப்படியால், அவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம்தான் உள்ளதே ஒழிய, மற்றப்படி இவர்களிடமிருந்து வரும் படிப்பினைகள் ஒன்றே. அவர்கள் எப்படிப் பணத்தைத் தங்களுக்குள்ளாகப் பங்குபோட்டுக் கொண்டார்கள் என்பது பற்றி நமக்குச் சொல்லப்படவில்லை. இருபது வெள்ளிக்காசுகளைச் சரிசமமாகப் பங்குபோட்டால், பத்துச் சகோதரர்களுக்கும் இரண்டு வெள்ளிக்காசுகள் கிடைத்திருக்கும். அநேகமாகக் குற்றத்தினிமித்தமான வேதனை அவர்களை ஆட்கொண்டபோது, அவர்களில் சிலர் பணப்பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு மறுத்திருந்திருப்பார்கள்.

“யோசேப்பு தன்னுடைய குணலட்சணத்தை வனைந்திடுவதற்கு, தனது சூழ்நிலைகளை அனுமதித்திடவில்லை” – SUB HEADING

ஒருவருடைய கிரியைகளுக்குச் சூழ்நிலைகள் காரணமாகுகின்றது என்று நவீன காலக் கருத்துக்கள் காணப்படுகின்றது. ஜனங்கள் தங்களது சூழ்நிலைகளின் காரணமாகவே நல்லவர்களாக (அ) மோசமானவர்களாக நடந்துகொள்கின்றனர் என்று விவரிக்கப்படுகின்றது. எந்தச் சூழ்நிலைகளில் நாம் காணப்பட்டாலும், நாம் நம்முடைய உயர்வான கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் எனும் உயர்ந்த தளத்தில் வாழ முடியும். இதுவே யோசேப்பிடமிருந்ததான படிப்பினையாகும். யோசேப்பு குற்றவாளிகளுடன் சிறைச்சாலையில் காணப்பட்டபடியால், அவர் குற்றவாளியாகிவிடவில்லை. யோசேப்பின் சகோதரர்கள் கீழ்த்தரமானவர்களாகவும், பகைமை உள்ளம் கொண்டவர்களாகவும் காணப்பட்டதினிமித்தம், யோசேப்பும் அவர்களைப் போன்று காணப்படவில்லை. யோசேப்பு தன்னுடைய நேர்மையைத் தக்கவைத்துக்கொண்டார், அதுவும் இப்படி நேர்மையாய் இருப்பதற்குப் பலன் ஏதும் இல்லாமல், தண்டனை மாத்திரமே இருந்தபோதிலும், தன்னுடைய நேர்மையைத் தக்கவைத்துக் கொண்டவரானார். ஏன்? ஏனெனில் அவர் உயர்வான தளத்தில் ஜீவியம் செய்தவராய் இருந்தார் மற்றும் சண்டையும், கொடூரமும் ஆளுகைச் செய்கின்ற தளத்திற்கு இறங்கிடுவதற்கு அவர் தன்னை அனுமதித்திடவில்லை. தனக்குத் தவறு செய்தவர்களைக்கூட யோசேப்பு பழிவாங்கிடுவதற்குத் திட்டம் பண்ணிடவுமில்லை. ஆனால் அவர் கசப்புக்கொண்டிருப்பதற்கும், பழிவாங்குவதற்கும் அநேகம் காரணங்கள் இருந்தது. அவர் தனது சகோதரர்களினாலும், போத்திபாரினாலும், அவரது பொல்லாத மனைவியாலும் மற்றும் இரண்டு வருடங்களாக யோசேப்பைப் பார்வோனிடத்தில் குறிப்பிடுவதற்கு மறந்துபோன பானப்பாத்திரக்காரனாலும் மோசமாய் நடத்தப்பட்டிருந்தார்.

தேவன் யோசேப்போடே காணப்பட்டார் என்றும், யோசேப்பு செய்த யாவையும் வாய்க்கப்பண்ணினார் என்றும் ஆதியாகமப் பதிவானது நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தேவன் அவரோடுகூட இல்லாததுபோன்று தோன்றலாம். போத்திபாருடைய மனைவி அவரைத் தவறாய்க் குற்றஞ்சாட்டினபோது, தேவன் அவரோடுகூட இல்லாததுபோன்று தோன்றலாம். யோசேப்பு சிறையில் கூடுதலாக இரண்டு வருடங்கள் காணப்பட்டபோது, தேவன் அவரோடுகூட இல்லாததுபோன்று தோன்றலாம். எனினும் தேவன் அவரோடுகூட இருந்து, யோசேப்பு எதைச் செய்தாரோ, அதைத் தேவன் வாய்க்கப்பண்ணினார். யோசேப்பு பாவம் செய்யாதவராகவும், அறிவுகூர்மையான மற்றும் நியாயமான விதத்தில் மேற்பார்வையிடுவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் வியக்கத்தக்க திறமையுடையவராகவும் காணப்பட்ட மனிதனாவார். எனினும் அவர் சிறையில் காணப்பட்டு, தனது ஜீவியத்தின் சிறந்த சில வருடங்களை அடிமையாக (அ) குற்றவாளியாகச் செலவழித்தார். இப்படிப்பட்ட துன்பமான சூழ்நிலைகளில், நம்மில் எத்தனை பேரால் ஜெயங்கொள்ள முடியும்? நமக்கு முன் இருக்கும் பர்வதங்களைத் தேவன் எடுத்துப்போட்டு விடமாட்டாரோவென ஏங்குவது/விரும்புவது மனித இயல்புதான், ஆனால் தேவனோ நாம் அவர் அருளும் பலத்தினால் பர்வதங்களில் ஏறிச்செல்வதற்கு விரும்புகின்றார்.

பார்வோனுடைய சொப்பனத்திற்கான அர்த்தத்தை விளக்குவதற்கென யோசேப்பு சிறையிலிருந்து வெளிக்கொண்டு வரப்பட்டார் என்பதையும், பிற்பாடு அவர் எகிப்தினுடைய அதிபதியானார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது” என்று நாம் ஆதியாகமம் 41:44-ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். இங்குப் பார்வோன் தேவனை அடையாளப்படுத்துகின்றார். யோசேப்பு கிறிஸ்துவை அடையாளப்படுத்துகின்றார். பார்வோனுக்கும் மற்றும் யோசேப்பிற்கும் இடையில் எத்தகைய பிரம்மாண்டமான உறவு ஏற்பட்டது. முப்பது வயதை மாத்திரமே அடைந்தவராகவும், பதிமூன்று வருடங்களாக அடிமையாகவும், சிறைக்கைதியாகவும், வாடிவதங்கினவராகவும் காணப்பட்ட ஒரு மனிதனிடத்தில் (யோசேப்பினிடத்தில்) மலைக்கப்பண்ணும் எத்தகையதோர் வல்லமை வந்துள்ளதை யோசித்துப் பாருங்கள். யோசேப்பின் உத்தரவில்லாமல் ஒருவனும் தன் கையையாவது, தன் காலையாவது அசைக்கக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்குமானால், அவருக்கு வழங்கப்பட்ட வல்லமை எத்துணை பரந்தது என்பதைக் கற்பனை பண்ணிப்பாருங்கள். இக்கட்டளையானது மிகைப்படுத்தின நடையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் இது யோசேப்பு முழு வல்லமையையும், அதிகாரத்தையும் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகின்றதாய் இருந்தது.

பூரண விளைவுடைய ஏழு வருடங்கள் என்பது சுவிசேஷ யுகமாகிய, கிருபையின் காலத்தில் கிறிஸ்துவுக்குள்ளாக தேவனால் அருளப்பட்ட கிருபையையும், தாராளத்தையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஏழு வருட பஞ்ச காலம் என்பது கிறிஸ்து பிரதானமாய் ஆளுகைச் செய்யப்போகின்றதான மத்தியஸ்தர் இராஜ்யத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அந்த இராஜ்யத்தில் ஒருவனாலும், தன்னுடைய சொந்த நீதியில் நிற்க முடியாது. மத்தியஸ்தர் ஜனங்களை, நீதியினுடைய இம்மியும் பிசகாத கோரிக்கைகளிலிருந்து பாதுகாப்பார். கிறிஸ்து ஜனங்களை ஆதரிப்பார்/தாங்குவார். பஞ்சம் கொடிதாகுகையில் ஜனங்கள் பார்வோனின் ஊழியக்காரர்களாகத்தக்கதாக தங்கள் உடைமைகளையும், தங்களையும் விற்க வேண்டியிருந்தது. இக்காரியமானது, எப்படி அனைத்து மனிதர்களும் தங்களைத் தேவனிடத்தில் அர்ப்பணிக்க வேண்டுமென்பதையும், எப்படி மனிதர்கள் அனைவரும் கிறிஸ்து இராஜ்யத்தைப் பிதாவினிடத்தில் ஒப்புவிக்கையில் முற்றிலும் தேவனுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருப்பார்கள் என்பதையும் சித்தரித்துக் காட்டுகின்றது. ஜனங்கள் ஜீவிப்பதற்கான ஒரே வாய்ப்பு, நிஜமான யோசேப்பு அவர்கள் மீது வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமேயாகும். மனுக்குலம் சொந்தமாய் மனித பரிபூரணத்தை அடைவது வரையிலும், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பு நிற்பதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய மத்தியஸ்தரின் நீதி, அவர்களுக்கு அருளப்படுவது அவசியமாகும். நிஜமான யோசேப்பினுடைய ஏற்பாடுகளில்லாமல், அவர்கள் அனைவரும் மரித்துப்போவார்கள் மற்றும் அவர்களால் ஒருபோதும் பூரணத்தையோ அல்லது தங்களுக்குச் சொந்த நீதியையோ அடைந்திட முடியாது.

நாமோ நம்முடைய ஜீவியங்களை இக்காலத்தில் (சுவிசேஷ யுகத்தில்) அர்ப்பணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். கிருபையின் காலத்தின்போது, நாம் நம்முடைய உடைமைகளையும், நமது சித்தங்களையும் தேவனிடத்தில் ஒப்புகொடுக்கின்றோம். இராஜ்யத்தில் நம்முடைய வேலையானது, மனிதர்களைச் சுயசித்தத்திற்குத் தரித்திரராக்குவதும், அவர்களைத் தேவனுடைய சித்தத்திற்குக் கீழாகக் கொண்டு வருவதுமாகும். (நிஜமான) யோசேப்பு வைத்திருக்கும் உணவை வாங்க வேண்டுமானால், அவர்கள் தங்கள் பொக்கிஷமான உடைமைகளையெல்லாம் கையளித்துவிட்டுக் காலியாக்கிக்கொள்ள வேண்டும் மற்றும் இறுதியாக தங்களையும் ஒப்புயர்வற்ற தேவனிடத்தில் முழுமையாய்க் கையளித்திட வேண்டும் (யோசேப்பு கொண்டிருக்கும் இந்த உணவை அவர்கள் உண்கையில், அவர்கள் நீதியில் வளருகின்றவர்களாய் இருப்பார்கள்) (ஆதியாகமம் 47:24,25). இஸ்ரயேலர்கள் பத்தில் ஒரு பங்கை (தசமபாகமாக) ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள். யோசேப்பு எகிப்தியர்களைப் பார்வோனுக்கு ஐந்தில் ஒரு பங்கைக் கொடுக்கப்பண்ணினார் – தேவனுடைய இராஜ்யத்தில் இரண்டு மடங்கு தசமபாகம் கொடுத்தல் வேண்டும்.

இக்காரியங்களானது யோசேப்பைத் தாராளமானவர் போன்று காண்பிப்பதில்லை, ஆனால் இவைகளே நித்திய ஜீவனுக்கான நிபந்தனைகளாகும். “வெள்ளாடு வகுப்பார்” இவ்வேற்பாட்டினை விரும்புவதில்லை. இவர்கள் இராஜ்யத்தினுடைய நிபந்தனைகளின் கீழ்க் கொஞ்சம் எரிச்சலடைவார்கள், மற்றும் தங்களுக்குத் தாங்களே சிறந்த நிபந்தனைகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு விருப்பமுடையவர்களாய் இருப்பார்கள். மனுக்குலமானது உண்மையில் ஐந்தில் நான்கு பங்கு கொண்டிருப்பார்கள் என்பதையும், அது அவர்கள் தேவையைவிட மிக அதிகமானதே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனுக்குலமானது தங்கள் பிரயாசங்களில் ஐந்தில் ஒரு பங்கை மாத்திரம் பொதுவான நன்மைகளுக்கென்று கொடுப்பார்களானால், இந்த உலகமானது எவ்வளவு ஐசுவரியமாய்க் காணப்படும். தேவன் எப்போதாவது பூமியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டது உண்டா? இல்லை! அவர் ஒருபோதும் அப்படிச் செய்வதுமில்லை. எனினும் மனுக்குலத்தினுடைய நன்மைக்கென்று மனுக்குலம் செய்கிறவைகளை, தேவனும், கிறிஸ்துவும் தங்களுக்கே செய்ததாகக் கருதிக்கொள்வார்கள்.

“நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” (ஆதியாகமம் 44:18). இவைகள் யோசேப்பிடம், யூதா பேசிட்ட வார்த்தைகளாகும். ஆம் தேவன் அருளின வல்லமையையும், அதிகாரத்தையும் கிறிஸ்து செயல்படுத்துவார். அநேகமாக யோசேப்பு இப்படியான அதிகாரத்தில் காணப்படுகின்றார் என்பதற்காக எகிப்தியர்கள் கோபம் கொண்டிருந்திருக்கலாம். எகிப்தியர்கள் யோசேப்பினுடைய அதிகாரத்தை உதறித்தள்ள முற்பட்டிருக்கலாம் என்று நான் எண்ணுகின்றேன். எனினும் யோசேப்பினுடைய அதிகாரத்தின் கீழிலிருந்து வெளியேறுவதற்குப் பார்வோன் ஒரு எகிப்தியனைக்கூட விடவில்லை. கிறிஸ்து இப்பொழுது நம்முடைய தலையாக இருக்கின்றார். நாம் இப்பொழுது/இக்காலத்தில் தலையைப் பற்றிக்கொள்ளவில்லையெனில், அக்காலத்தில் உலகம் அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நாம் எதிர்ப்பார்த்திட முடியாது. கிறிஸ்துவினுடைய மணவாட்டியாக விரும்புபவர்கள் இப்பொழுதும் மற்றும் எப்பொழுதும் கிறிஸ்துவினுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பம் உள்ளவர்களாய்க் காணப்பட வேண்டும். வேறு சிந்தையுடையவர்கள், அவருடைய மணவாட்டியாகிட முடியாது.

“மேன்மையான அதிகாரத்திற்குக் கடும்போட்டி”

உலகத்தில் ஏற்பட்ட பெரும்பான்மையான வலி மற்றும் பாடுகளானது, அதிகாரம் பெற்றுக்கொள்வதற்கென முயற்சி செய்கின்றதான பிசாசு மற்றும் சுயநலமான மனிதர்களிடமிருந்தே வந்ததாய் இருக்கின்றது. உலகத்தில் ஆளுகையும், அதிகாரமும் பெற்றுக்கொள்வதற்கான தேடுதலிலேயே நிம்ரோத்தினுடைய பாபேல் கோபுரம் கட்டப்பட்டது. பேராசையினால் இயக்கப்பட்டதான இந்தத் திட்டத்தினை, தேவன் குறுக்கிட்டு, தடுக்க வேண்டியதாய் இருந்தது. மனித சரித்திரத்தினுடைய ஆரம்பம் துவங்கியே ஜாதிகள்/தேசங்கள் யுத்தத்தில் காணப்படுகின்றனர். பலத்த ஜாதியார், பலமற்ற ஜாதியார்மேல் ஆளுகைச் செய்வதன் மூலமாகவும், அவர்களை அடிமைப்படுத்துவதின் மூலமாகவும், அவர்களைச் சூறையாடிப் போட்டனர். இதைப் போன்றதான ஆவியைப் பெந்தெகொஸ்தேவுக்கு முன்னதாக அப்போஸ்தலர்கள் மத்தியிலுங்கூடப் பார்க்க முடிகின்றது. “நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்” என்று மாற்கு 9:33,34-ஆம் வசனங்களில் நாம் வாசிக்கின்றோம். போதகரிடம் தங்களது தர்க்கம் பற்றின உண்மையைக் கூறிடுவதற்கு அவர்கள் வெட்கப்பட்டார்கள்.

பிற்காலங்களில் கிறிஸ்தவ சபையில் கண்காணிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டது என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறதில்லை. கண்காணிகளினுடைய எண்ணிக்கை பெருகினபோது, கண்காணிகளுக்கெல்லாம் கண்காணியாக யார் இருக்க வேண்டும்? என்ற கேள்வி உடனடியாக எழும்பினது. பரிசுத்த திருச்சபைகள் அனைத்திற்கும், ரோமிலுள்ள கண்காணியே தலைவர் ஆவார் என்று அறிவித்து, இப்பிரச்சனையைச் சக்கரவர்த்தி ஜஸ்டீனியன் முடித்து வைத்தார். அப்போது துவங்கி, உலகத்தையும், மனித மனங்களையும் கட்டுப்படுத்தி ஆளும் ஆசையுள்ள இராஜாக்கள் மற்றும் குருமார்கள் ஆண்ட இருண்ட யுகத்திற்குள்ளாக, உலகமானது அமிழ்ந்துபோனது. இந்த இரக்கமற்ற மற்றும் கொலையாட்டமான ஆளுகைக்குச் சாத்தான் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளார். இந்த உலகத்தில் செலுத்தப்படும் அதிகாரமானது பாவத்தினால் மிகவும் கெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அதிகாரங்களுமே எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் அகற்றப்பட வேண்டுமென்ற முடிவிற்குள்ளாகச் சிலர் கடந்து வந்துள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் தொடர்புடைய மிக அதிகப்படியான கோரிக்கைகள் எழும்பியுள்ளது. உரிமைகளுக்கான இந்தத் தேடலில், பெரும்பாலும் அனைத்து அதிகாரங்களும் எதிர்க்கப்படுகின்றன மற்றும் ஜனங்கள் மனிதனுக்கான அதிகாரம் வரையறையற்றதாக காணப்பட வேண்டுமெனக் கற்பனை பண்ணிக்கொண்டு காணப்படுகின்றனர்.

அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடு எதிர்க்கப்படுகின்ற மற்றும் மறுக்கப்படுகின்ற காலப்பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உலகத்தினுடைய இந்த ஒழுங்கின்மையின் ஆவியானது நம் இரத்தத்திற்குள் ஊடுருவுவதற்கு நாம் அனுமதித்திடக் கூடாது. கிறிஸ்துவினுடைய தலைமைத்துவத்தை விரும்புகின்றவர்களையும், ஏற்றுக்கொள்பவர்களையுந்தான் தேவன் தேடிக்கொண்டிருக்கின்றார் என்பதை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய ஜீவியங்களில் தினந்தோறும் கிறிஸ்து நம்முடைய தலையாகக் காணப்பட வேண்டும். உயிர்த்தெழுதலிலும், நாம் சதாகாலமும் கிறிஸ்துவினுடைய தலைமையின் கீழிலேயே காணப்படுவோம்.

யோசேப்பிடமிருந்துள்ளப் படிப்பினை என்னவெனில், அவர் முழு அதிகாரத்தையும் செயல்படுத்தினவராகக் காணப்பட்டப்போதிலும், அவர் தன்னை முழுமையாகப் பார்வோனுடைய அதிகாரத்தின் கீழேயே வைத்துக்கொண்டவராகக் காணப்பட்டார், அதாவது கிறிஸ்து எப்போதும் தமது பிதாவினுடைய தலைமை அதிகாரத்தை அங்கீகரித்ததுபோல, யோசேப்பும் காணப்பட்டார். அவருக்கு எந்தக் கட்டுக்கடங்காத ஆசைகளும் இருக்கவில்லை. கட்டுப்பாடற்ற ஆசைகளானது லூசிபரை அழித்துப்போட்டது. இது தலையைப் பற்றிக் கொண்டிராத எந்தக் கிறிஸ்தவனையுங்கூட அழித்துவிடும்.

“ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்” (ஆதியாகமம் 45:8). இது அருமையான வேதவாக்கியமாகும். யோசேப்பு அத்தேசத்தினுடைய தந்தையாகியுள்ளார்; அவர்கள் அவர் மூலமாக மாத்திரமே ஜீவித்தார்கள். கிறிஸ்து உலகத்திற்கான நித்திய பிதாவாகக் காணப்படுவார். அவர் இறுதியில் மனுக்குலத்தைத் தேவனிடத்தில் கொண்டு வருவார். யோசேப்பினுடைய தகப்பன்துவம் பஞ்சகாலத்தின் போதுதான் ஆரம்பித்ததா? பரிபூரணமான விளைவினுடைய வருஷங்களின் போது ஆரம்பித்ததா? யோசேப்பு அடிமைப்படுத்தப்பட்டு, மற்றும் கடுமையான மற்றும் வலி நிறைந்த சூழ்நிலைகளில் தேவனுடைய வழிநடத்தல்களைக் கற்றுக் கொண்டதான சிறையில் இருக்கும் காலங்களிலா ஆரம்பித்தது? மகத்துவம் அடைதலுக்கு முன்பாக தாழ்மையே உள்ளது. கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் இப்போதும், உண்மையான பராமரிப்பு செய்தலின் ஆவியைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்தக் கிருபை மற்றும் தயவின் காலங்களில் நாம் உலகத்திற்கான பொதுவான பாடுகளில் பங்கடைவதில், நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய்க் காணப்பட வேண்டும். இது நாம் உலகத்தாரை (அக்காலத்தில்) அர்ப்பணிப்பிற்குள்ளாகக் கொண்டுவருவதற்கு ஏதுவாயிருக்கும். நாம் யோசேப்பிடம் கற்றுக்கொள்கின்ற நடைமுறை சார்ந்த பாடம் என்னவெனில், அவர் ஜனங்கள் விஷயத்தில் கடினமனதுடன் நடந்துகொண்டார் என்பதேயாகும். ஜனங்களைப் பார்வோனுடைய முழுக்கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவரும் விதத்திலேயே யோசேப்பு ஜனங்களைக் கையாண்டவராகக் காணப்பட்டார். இப்போது காண்பிக்கப்படுகின்றதான தாராளமான அன்பை அப்போது யோசேப்பு காண்பிக்கவில்லை. “ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்” என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள் (ரோமர் 11:22). தேவன் முழுக்க இரக்கமுள்ளவர் என்பதும், கண்டிப்பே இல்லாதவர் என்பதும் தேவன் குறித்த, நவீன கால கருத்தாகும். ஆனால் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேவனானவர், தயவும், கண்டிப்பும் உள்ளவர் ஆவார். இந்தப் படிப்பினையை நம்முன் வைத்துக்கொள்வோமாக.

“யோசேப்பு தனது சகோதரர்களைக் கடினமாய் நடத்தினார்”

யோசேப்பு தனது சகோதரர்கள் தனது முன்னிலையில் வந்தபோது, முதலாவதாக அவர்களை வேவுக்காரர்களெனக் குற்றஞ்சாட்டினார். அவர்கள் தானியம் வாங்க வந்து, அநேக பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொண்டார்கள். “அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான். மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுக்கட்டும்” (ஆதியாகமம் 42:17-19). இங்கு நமது கர்த்தர் எப்படித் தம்முடைய எபிரெய சகோதரர்களை மூன்று நாட்கள் (தேசம் இயேசுவைப் புறக்கணித்தது துவங்கி, அவரது இரண்டாம் வருகை வரையிலான மூன்று ஆயிரவருட நாட்கள் பாகம்) சிதறிக் காணப்படப்பண்ணினதையும் மற்றும் மூன்றாம் (ஆயிரவருட) நாளில் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் போஷிக்கத்தக்கதாக, தங்கள் வீடுகளுக்குத் திரும்பிடுவதற்கு அனுமதித்திட்டார் என்பதையும் நாம் காண்கின்றோம். இது கிறிஸ்துவின் மரணம் துவங்கி, அவர் திரும்பிவந்து, தமது கவனத்தைத் தமது சகோதரர்கள் மீது செலுத்தி, அவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்குச் சில ஏற்பாடுகளுடன் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு அனுமதிப்பது வரையிலுமான காலத்தை உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது.

யோசேப்பு அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தபோது, அவர்கள் தங்கள் பாவங்களை எபிரெய மொழியில் ஒப்புக்கொண்டார்கள், அதுவும் யோசேப்பால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்பது தெரியாமல் ஒப்புக்கொண்டார்கள். தவறு செய்தமைக்கான அவர்களது மனவுளைச்சலையும், குற்ற உணர்வையும் குறித்து யோசேப்பு கவனித்துக் கொண்டிருந்தபோது, அவரால் அவரது கண்ணீர்களை அடக்கிக்கொள்ள முடியாததினால், அவர் அப்புறம் செல்ல வேண்டியிருந்தது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது (ஆதியாகமம் 42:24). நம்முடைய நாட்களில் எத்தனை யூதர்கள், இயேசுவுக்கு நிகழ்ந்தவைகளைக் குறித்து, தங்களது துக்கக்கரமான சரித்திரத்தை வேதனையோடு அடிக்கடி திரும்பிப்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நான் எண்ணுவதுண்டு. அநேகருடைய இருதயங்களில் இந்தத் தவறுக்கான மனவுளைச்சல் இருக்கின்றது என்று நான் உறுதியாய் நம்புகின்றேன், ஆனால் இதை அவர்களால் வெளிப்படையாய்ப் புறஜாதிகளிடத்தில் ஒப்புக்கொண்டிட முடியாது. எபிரெய பாஷையில் மாத்திரமே தவறுக்கான இந்த மனவுளைச்சல் கேட்கப்பட்டது. உண்மையான மன்னிப்பிற்கு முன்னதாக தவற்றை ஒப்புக்கொள்ளுதல் நடைபெறுகின்றது. இக்காரியம் இரகசியமாக ஆரம்பித்துவிட்டது என்றும், சகரியா 12:10-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதன் நிறைவை அடையும் என்றும் நாம் நம்புகின்றோம்; “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.” இத்தருணமே, யோசேப்பு அவர்களிடத்தில், “நான் யோசேப்பு” என்று சொல்லக்கூடிய தருணமாகும். அது எத்தகைய மகிழ்ச்சிகரமாயுள்ள மீண்டுமான ஒன்று சேருதலாகும். நிஜத்தில் கிறிஸ்து தம்மை இஸ்ரயேலுக்கு வெளிப்படுத்தி, அவர்கள் அவரது திறந்த கரங்களுக்குள்ளாக விழும்போது, அது ஒரு மாபெரும்/முக்கியமான தருணமாய்க் காணப்படும்.

எனினும் அவர்களைச் சிறையிலிருந்து வெளியே விட்டவுடனே, யோசேப்பு தான் யார் என்பதை, தனது சகோதரர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அவர் மிகவும் கடினமாய் நடந்துகொள்ளும் காரியம் ஒன்றைச் செய்கின்றார். அவர் சிமியோனைப் பிரிக்கின்றார்; “அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தார்” என்று நாம் ஆதியாகமம் 42:24-ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். ஏன் சிமியோன்? மற்றச் சகோதரர்கள் தங்கள் குடும்பங்களினிடத்திற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கையில், ஏன் சிமியோன் இவ்வாறாகக் கட்டப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டார்? இது மிகவும் வேதனையானதும், தாழ்மைப்படுத்துவதாகவும் காணப்பட்டது. சகோதரர்கள் மத்தியில் ரூபன் மாத்திரமே குற்றமற்றவர். இவர் தனது குற்றமற்ற நிலைமையை ஆதியாகமம் 42:22-ஆம் வசனத்தில் குறிப்பிடுகின்றார். யோசேப்பை அடிமையாக விற்றுப்போடுவதற்கான ஆலோசனையைச் சகோதரர்களுக்குக் கொடுத்திட்ட யூத யூதாவை, யோசேப்பு ஏன் கட்டவில்லை? (ஆதியாகமம் 37:27). ஏன் என்று நமக்கு நிச்சயமாய்த் தெரியாது, ஆனால் யோசேப்பை அவர்கள் விற்றபோது, சிமியோன் தான் யோசேப்பைக் கட்டினார் என்றும், யோசேப்பு தனது சகோதரர்களிடம் கெஞ்சினபோது, சிமியோன் கொஞ்சமும் யோசேப்பிற்கு அனுதாபம் காண்பிக்கவில்லை என்றும் நாம் எண்ணுகின்றோம். கட்டப்படும் போதுள்ள மனவேதனையை சிமியோனே இப்பொழுது உணரவேண்டியவராய் இருந்தார். சிமியோன் தனது சகோதரர்கள் விடுதலையடைந்து வீடு திரும்புவதையும், தான் சிறையில் தள்ளப்படுவதையும், கட்டப்படுவதையும் பார்க்க வேண்டியிருந்தது. சிமியோன் தனக்கான சில மருந்துகளைப் பானம் பண்ண வேண்டியிருந்தது மற்றும் அது இனிமையாய் இருப்பதில்லை. ஒருவேளை சிமியோன் போதுமானளவுக்குத் தவறுக்கான இருதயத்தின் வருந்துதலைக் காண்பிக்காமல் இருந்திருக்கலாம் மற்றும் யோசேப்பு தனது கடுமையான கையாளுதலைப் பயன்படுத்தி, சிமியோன் உண்மையாய் இருதயம் வருந்தும் நிலைக்குக் கொண்டு வரப்படுவதற்கு உதவினார். ஒரு விஷயத்தை இங்குக் கவனிக்கவும், அதென்னவெனில் யூதாவும், மற்றச் சகோதரர்களும் சிமியோனுக்காக எந்த மன்றாட்டையும் ஏறெடுக்கவில்லை; யாரும் சிமியோனுக்காக தங்களைக் கையளிக்கவில்லை.

நிஜத்தில் (யோசேப்பு அடையாளப்படுத்தும்) இயேசுவை யார் கட்டினார்கள் என்பதை நாம் அறிவோம். அது இயேசுவைப் பகைத்து, அநேக தருணங்களில் அவரைக் கொன்று போடுவதற்கு நாடின மதத்தலைவர்கள் ஆவர். இறுதியில் இவர்கள் யூதாசினுடைய உதவியினால், இயேசுவைக் கட்டி, பிலாத்துவினிடத்தில் அவரை ஒப்புக்கொடுத்தார்கள். பின்னர் இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக்கு இவர்கள் பிலாத்துவை நச்சரித்தார்கள். ஐந்து முறை பிலாத்து, “இவரிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணேன்” என்றார். எனினும் இந்த மதத் தலைவர்கள் இயேசுவைக் கட்டுவதில் மாத்திரம் ஜெயங்கொள்ளாமல், இயேசு உயிர்த்தெழுவது வரையிலான காலப்பகுதி வரையிலாகிலும் அவரை ஒழித்துக்கட்டினவர்களாய் இருந்தார்கள்.

யோசேப்பின் (இயேசுவின்) சகோதரர்கள் சிதறடிக்கப்படுதல் எனும் சிறைச்சாலையினின்று விடுவிக்கப்பட்டு அவர் முன் நிற்கையில், சிமியோன் நம்முடைய நாட்களிலுள்ள யாருக்கு நிழலாக இருக்கின்றார்? இப்படிச் சிந்திக்கையில், இன்னும் கூடுதலான கடினமான அனுபவங்கள் பெற்றுக்கொள்வதற்கு அவசியமுள்ள ஒரு யூத வகுப்பார் நம்முடைய நாட்களில் காணப்படுவதாகத் தோன்றுகின்றது. யோசேப்புக்கு முன்பாக நின்ற எபிரெய சகோதரர்கள் அனைவரும் அவரைப் புறக்கணித்திருந்தவர்களாகக் காணப்பட்டனர். சிமியோனே இன்னும் கூடுதலான கடினமான அனுபவங்களுக்குள் அனுமதிக்கப்பட்டார் (ஆதியாகமம் 42:24). நம்முடைய நாட்களில் யாருக்குச் சிமியோன் அடையாளமாய் இருக்கின்றார்? கிறிஸ்துவினுடைய இராஜ்யம் எனப் போலியாய்த் தங்களைக் காண்பித்துக்கொண்டிருக்கின்றதான பெயர்க்கிறிஸ்தவ சபையுடன், தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றதான யூதர்கள், இன்னும் கூடுதலான உபத்திரவத்தை அடையப்போகின்றவர்களாகக் காணப்படுகின்றனர் என்பதாகத் தோன்றுகின்றது. இவர்கள் எகிப்தில் (அ) பாபிலோனில் கட்டிப்போடப்படப்போகின்றனர். இயேசுவை மேசியாவென ஏற்றுக்கொண்டவர்களும், அதேசமயம் சபைகளுடனும், யூதர்களைக் கொடுமைப்படுத்தும் கொடுமைகளுடனும் தங்களை இணைத்துக்கொள்வதற்கு விருப்பமற்றுக் காணப்படுகின்றவர்களுமான யூதர்கள், அதாவது (Messianic Jews) மேசியாவின் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் யூதர்களைக் குறித்து நான் இங்குக் கூற வரவில்லை. இவர்கள் திரித்துவம் கொள்கையினைத் தள்ளியும், கிறிஸ்தவ மண்டலத்தைத் தள்ளியும், மேசியாவில் மாத்திரம் நம்பிக்கைக்கொள்ள விரும்புகின்றவர்களாய் இருக்கின்றனர். சிமியோன் திரியேக கிறிஸ்துவையும், எரிநரகத்தில் எரிக்கும் கிறிஸ்துவையும் ஏற்றுக்கொண்டு, போலி கிறிஸ்தவ சபைகளில், அதிலும் பெரும்பாலும் இவான்சலிக்கல் சபைகளில் (Evangelical Churches) தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றவர்களாகிய யூதர்களை அடையாளப்படுத்துகின்றார் என்று நாம் எண்ணுகின்றோம்.

பாபிலோனில் அங்கமாகியுள்ள யூதர்கள் பாபிலோன் அழிந்துபோகும்போது, இன்னும் அதிகமான உபத்திரவங்களுக்குள்ளாகக் கடந்து போவார்கள். இவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்குள்ளாகும் அந்த அமைப்பில் கட்டப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள். நம்முடைய நாட்களிலுள்ள இவர்களுக்கே சிமியோன் அடையாளமாய்க் காணப்படுகின்றார். ஆம் சிமியோன் வகுப்பாருடைய சகோதரர்கள் தங்கள் குடும்பங்களையும், யாக்கோபையும் போஷிக்கத்தக்கதாக, தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்புகையில், இவ்வகுப்பார் கிறிஸ்தவ மண்டலத்தில் கட்டப்பட்டவர்களாய் இருப்பார்கள். பென்யமீனைத் தங்களோடுகூடக் கொண்டுவரத்தக்கதாக, ஒன்பது சகோதரர்களும், உணவுகளுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

“இரண்டாம் சந்திப்பு”

யோசேப்பினுடைய சொந்த சகோதரனாகிய பென்யமீன் எனும் தங்களது சகோதரனோடுங்கூட, அவர்கள் யோசேப்பின் முன் நின்றபோது, யோசேப்புடனான அடுத்த சந்திப்பு நடைப்பெறுகின்றது. அவர்கள் தங்களோடுகூடப் பென்யமீனைக் கொண்டுவருவது என்பது நிறைவேற்றுவதற்கு மிகக்கடினமானக் காரியமாகும் (ஆதியாகமம் 42:16,19). பென்யமீனை எகிப்திற்கு அனுப்ப வேண்டுமென்ற நிலை வந்தபோது, அது எவ்வளவாய் யாக்கோபினுடைய இருதயத்தை உடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் பஞ்சத்தின் காரணமாக யாக்கோபுக்கு வேறு வழி இருக்கவில்லை. யோசேப்பு இயேசுவுக்கு நிழலாய் இருப்பதுபோன்று, பென்யமீன் திரள்கூட்டத்தாருக்கு நிழலாய்க் காணப்படுகின்றார். யோசேப்பு தனது ஐந்து சகோதரர்களை, தனது பத்துச் சகோதரர்களுக்கு அடையாளமாய் நிறுத்தினார். “தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்” (ஆதியாகமம் 47:2) என்று நாம் வாசிக்கின்றோம். ஐசுவரியவான் மற்றும் ஏழை லாசரு கதையிலும் ஐந்து சகோதரர்கள், பத்துக் கோத்திரத்தை அடையாளப்படுத்துகின்றனர் (லூக் 16:19-31).

யோசேப்பின் சகோதரர்களுக்கும், யோசேப்பிற்குமான இரண்டாம் சந்திப்பிற்கான நிஜமானது, நிஜமான பென்யமீன் (திரள் கூட்டத்தினர்), இஸ்ரயேல் தேசத்தாருடன், கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கையில் நடைபெறும். பென்யமீன் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளை அடையாளப்படுத்துபவராய் இருப்பினும், இவர் தனது சகோதரனாகிய யோசேப்பைப் புறக்கணிக்கவில்லை என்பதைக் கவனிப்பதற்குச் சுவாரசியமாய் இருக்கின்றது. பென்யமீன் தனது சகோதரர்கள் புரிந்த குற்றத்தில், பங்குடையவர் அல்ல. திரள் கூட்டம் கிறிஸ்துவை அன்புகூர்ந்ததுபோலும், அந்தக் கற்பாறையின் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாய் இருந்தது போலும், பென்யமீனும் தனது சகோதரனாகிய யோசேப்பை அன்புகூர்ந்தவராய்க் காணப்பட்டார். யோசேப்பு ஏற்பாடு பண்ணியிருந்த விருந்தில், பென்யமீன் பெற்றுக்கொண்டதான ஐந்து மடங்கு பங்கானது, விசேஷித்த தயவினை அடையாளப்படுத்துகின்றதாய் இருந்தது (ஆதியாகமம் 43:34). எப்படி “யோசேப்பு தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர் என்றான். யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்” என்பதை கவனியுங்கள் (ஆதியாகமம் 43:29,30). இங்குக் கிறிஸ்து தமது சகோதரனாகிய திரள் கூட்டத்தாருக்காக உள்ளம் பொங்குவதைப் பார்க்கின்றோம். எனினும் யோசேப்பு தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்த இன்னும் தயாராய் இல்லை.

“யோசேப்பினுடைய வெள்ளிப்பாத்திரம்”

திட்டம் இப்பொழுது பிரம்மாண்டமடைகின்றது. யோசேப்பு தனது சகோதரர்களுடைய சாக்குகளில் பணத்தை வைக்கின்றார் மற்றும் பென்யமீனுடைய சாக்கில் (மாம்சீக இஸ்ரயேல் மற்றும் வாக்களிக்கப்பட்ட தேசம் தொடர்புடைய சத்தியமாய் அநேகமாகக் காணப்படும்) தனது வெள்ளிப்பாத்திரத்தை வைத்துவிடுகின்றார். இது அனைவருக்கும் சீர்க்குலைவை உண்டாக்கிற்று. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் மற்றும் இப்பொழுது பென்யமீன் இல்லாமல், அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலைமை நிலவியது. யோசேப்பை அடிமையாக விற்றுப்போடுவதற்கான ஆலோசனையை வழங்கின அதே யூதா, இப்பொழுது தன்னுடைய ஜீவியத்தையே கையளிக்க முன்வந்தார். தனது பாத்திரம் யாரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவரே தனக்கு வேலைக்காரனாகக் காணப்பட வேண்டுமென்று யோசேப்பு விடாப்பிடியாய் நின்றார். திரள் கூட்டத்தினர் “இரவும், பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிப்பார்கள்” என்பதை நாம் அறிவோம். “அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” (ஆதியாகமம் 44:18,33,34) என்று நாம் வாசிக்கின்றோம். இத்தருணத்திற்காகவே யோசேப்பு காத்துக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 44:16-இல் யூதா தனது பாவங்களை யோசேப்பினிடத்தில் ஒப்புக்கொண்டார். யூதா பென்யமீனுக்குப் பதிலாக, அவரது அடிமை ஸ்தானத்தை எடுக்க விரும்பினதைப் பார்த்து, யோசேப்பினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த யூதாதான் முன்பு யோசேப்பை அடிமையாக விற்றுப்போடுவதற்கு ஆலோசனை வழங்கினவர் ஆவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; ஆனால் இப்பொழுது யூதா ஓர் அருமையான நபராக மாற்றம் அடைந்துள்ளார். யூதா தனது தந்தையாகிய யாக்கோபைக் குறித்தும், தனது சகோதரனாகிய பென்யமீனைக் குறித்தும் அக்கறைகொண்டிருந்தார். பென்யமீனுக்குப் பதிலாக தன்னைக் கையளிக்க வேண்டுமானால், யூதாவிடம் மாபெரும் குணங்கள் காணப்பட்டிருந்திருக்க வேண்டும். சிமியோனுக்காக யாரும் தங்களைக் கையளிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். யூதா அடிமையாகப் போவதில்லை. அவரது அருமையான இருதய நிலைமையானது, இறுதியில் அவரை விடுதலையாக்குகின்றது.

இது சுவாரசியமாக உள்ளது. வெளிப்படுத்தல் 16-ஆம் அதிகாரத்தில் “ஏழு தூதர்கள்,” “ஏழு பொற்கலசங்களை” ஊற்றுகின்றனர்; இவர்கள் “தேவனுடைய மகிமையினால் நிரம்பப்பட்டிருந்த” ஆலயத்திலிருந்து புறப்பட்டு வந்தார்கள். தெய்வீக நியாயத்தீர்ப்புகள் அடங்கின “பொற்கலசங்கள்,” இந்த “ஏழு தூதர்களிடம்” கொடுக்கப்பட்டன. பொற்கலசங்கள் தேவனுடைய கோபாக்கினையால் நிரம்பி இருந்தது. ஆலயத்திலிருந்து புறப்பட்டு வருகின்றதான இந்த “ஏழு தூதர்களின்,” அதாவது தேவனுடைய உண்மை சபையின் வேலையில், பென்யமீன் உள்ளடங்குவதில்லை. பொன் தெய்வீகம் சம்பந்தப்பட்டதாகும். திரள் கூட்டத்தாரை அடையாளப்படுத்தும் பென்யமீனிடம், யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம் கொடுக்கப்பட்டதைக் கவனியுங்கள். ஆகையால் வெள்ளி, திரள் கூட்டத்தினர் சம்பந்தப்பட்டதாய் இருக்கின்றது. வெளிப்படுத்தல் 16:15-ஆம் வசனத்தில், திரள் கூட்டத்தினருக்கான கர்த்தருடைய செய்தி காணப்படுகின்றது; “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.” திரள் கூட்டத்தினரைச் சுற்றி அனைத்தும் வீழ்ந்து, அழிந்துகொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் நீதியின் வஸ்திரத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதே திரள் கூட்டத்திற்குக் கொடுக்கபட்டச் செய்தியாகும். கிறிஸ்து திரள் கூட்டத்தினருக்கு வழங்குவதுபோன்றே, யோசேப்பு தனது வெள்ளிப்பாத்திரத்தை, பென்யமீனுடைய சாக்கில் வைக்கின்றார் என்பதை நாம் பார்க்கின்றோம். இது பென்யமீனுக்கு மிகுந்த உபத்திரவத்தின் மற்றும் திகைப்பின் காலத்தை ஏற்படுத்தினது. யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம் தன்னிடம் காணப்பட்டப்படியால், பென்யமீன் தீர்ப்பிற்குள்ளானவராகக் காணப்பட்டார். திரள் கூட்டத்தினரும் மகா உபத்திரவத்திற்குள்ளாகுவார்கள், ஏனெனில் அவர்களுடைய சாக்கில் “வெள்ளிப்பாத்திரமாகிய” சத்தியங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

எப்படி வெள்ளிப்பாத்திரமானது, பென்யமீனுடைய சாக்கில் மறைத்து வைக்கப்பட்டதோ, அப்படியே கிறிஸ்துவும் தம்முடைய சத்தியங்களைத் திரள் கூட்டத்தாரிடத்தில் வைப்பார் மற்றும் அவர்கள் யோசேப்பாகிய கிறிஸ்துவுக்குரிய சில முக்கியமான சத்தியங்களைப் பெற்றுக்கொண்டவர்களாகக் காணப்படுவார்கள். அது எந்தச் சத்தியங்களாக இருக்கும்? மாம்சீக இஸ்ரயேல் தொடர்புடையதான சத்தியங்களே, திரள் கூட்டத்தினர் பெற்றிருக்கும் சத்தியமாக இருக்குமென்று நான் எண்ணுகின்றேன். ஆகையால் இஸ்ரயேலை அழித்துப்போடுவதற்கென எடுக்கப்படும் எந்த முயற்சியும் வாய்க்காதே அழிந்துபோகும் என்பதை திரள் கூட்டத்தினர் அறிந்திருப்பார்கள். இஸ்ரயேலுக்கு எதிராக கோகும், மாகோகும் வருகையில், இந்தப் படையெடுப்பைப் பெயர்ச்சபைகளானது ஆசீர்வதிக்கும். எனினும் இந்த நோக்கம் தோல்வியைத் தழுவும் என்று திரள் கூட்டத்தினர் அறிந்திருப்பார்கள். இந்த நோக்கத்திற்கு எதிராக திரள் கூட்டத்தினர் பேசி, தங்கள் மீது கோபாக்கினியை வருவித்துக்கொள்வார்கள்.

யூதா யாரை அடையாளப்படுத்துகின்றவராய் இருப்பார்? மாம்சீக இஸ்ரயேலர்கள் மத்தியிலான உண்மையுள்ளவர்களை யூதா அடையாளப்படுத்துகின்றார்; இவர்கள் ஒரு கட்டத்தில் பெயர்ச்சபை அமைப்புகள் திரள் கூட்டத்தாருக்கு எதிராக திரும்புகையில், திரள் கூட்டமாகிய பென்யமீன் வகுப்பாரைப் பாதகத்தினின்று பாதுகாப்பதற்கெனப் பேசுபவர்களாகவும், முயற்சிக்கின்றவர்களாகவும் காணப்படுவார்கள். நிஜமான யோசேப்பு யூதாவினுடைய இருதயத்திலுள்ள தவறுக்கான உளைச்சலைக் கண்டு, தம்மை அதற்குமேல் தம்முடைய மாம்ச சகோதரர்களிடத்தில் மறைத்துக்கொள்ள முடியாத தருணமானது ஒரு மாபெரும் திசைத் திருப்பமாகக் காணப்படும். “அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல், யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு” என்றார் (ஆதியாகமம் 45:1-3). தனது சகோதரர்களுக்கான தனது உணர்வுகளை, யோசேப்பு உலகமாகிய எகிப்தியர்களிடமிருந்து மறைக்க முயற்சிக்கின்றார், ஆனால் சீக்கிரத்தில் கிறிஸ்து தம்மை, தம்முடைய மாம்சீக சகோதரர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். இது அருமையாய் இருக்கின்றதல்லவா?

கோகினுடைய படையெடுப்பு வீழ்ச்சியடையும்போது, திரள் கூட்டத்தினர் மகா உபத்திரவத்தில், இந்தப் பூமியை விட்டுக்கடந்து போவார்கள். “இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்” (எசேக்கியேல் 38:23). இப்படியாக தனது மாம்சீக ஜனங்கள் மீதான யோசேப்பினுடைய (கிறிஸ்துவினுடைய) அன்பானது, முழு உலகத்துக்கும் தெரியவரும். (சில தனித்தன்மையான விதத்தில் திரள் கூட்டத்தினரை) பென்யமீனை, யூதா (மாம்சீக இஸ்ரயேலர்) பாதுகாக்க முற்பட்ட பின்னரே, யோசேப்பு (கிறிஸ்து) தன்னை, தனது சகோதரர்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்பதைக் கவனியுங்கள்.

தம்மை மாம்சத்தில் இருக்கும் தமது மாம்சீக சகோதரர்களாகிய இஸ்ரயேலர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, அவர்களை நீண்ட காலமாக கிறிஸ்து ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கின்றார். எனினும் முடிவில் மிகச் சடுதியாக அவர் தாமாகவே தம்மை, தமது மாம்சீக சகோதரர்களுக்கு வெளிப்படுத்துவார் என்று நம்முடைய பாடம் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. மாம்சீக இஸ்ரயேல் தொடர்புடையதான சத்தியமாகிய யோசேப்பினுடைய வெள்ளிப்பாத்திரத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக, விசேஷித்த சோதனைக்குள் பென்யமீன் கடந்துசெல்லத்தக்கதாக, யோசேப்பு பென்யமீனை மாத்திரம் அனுமதித்திருப்பது தெரிகின்றது. யூதா பென்யமீனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளத்தக்கதாக, தன்னை ஒப்புவிப்பது வரையிலும், யோசேப்பு தனது சகோதரர்களுக்கு ஆசீர்வாதங்களையும், துயரங்களையும், இரண்டையுமே கொடுத்தவராகக் காணப்படுகின்றார். (பென்யமீன் யோசேப்பினுடைய சொந்த சகோதரனாகவும், முதற்பேறான சபையின், சகோதரனாகவும் காணப்படுகின்றார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்). நிஜமான யூதா, திரள் கூட்டத்தாரின் பாடுகளை மாற்றிடுவதற்குச் சில சிறந்த பிரயாசங்களை எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கு இக்கதை உத்தரவாதம் அளிக்கின்றது.

இதை நான் நமக்கு முன்பாக அண்மையில் நிறைவேறப்போகின்றதான தீர்க்கத்தரிசனத்திற்கான மற்றுமொரு ஜன்னலை/திரையைத் திறப்பதற்கே குறிப்பிடுகின்றேன். யோசேப்பின் கதையானது, அநேக விதங்களில் நிழலாக இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. திரள் கூட்டத்தாருக்கும், கிறிஸ்துவுக்கும், யூதாவுக்கும், கோகின் படையெடுப்பிற்கும், அர்மகெதோனுக்கும் இடையிலான சம்பந்தங்களை நாம் புரிந்திடுவதற்கு உதவியாகவே, அநேகமாக இந்த நிழலான கதைக் கொடுக்கப்பட்டிருக்கலாம். கிறிஸ்துவின் சகோதரர்களாகிய திரள் கூட்டத்தாரைப் பாதுகாக்கத்தக்கதாக சிறந்த விதத்தில் செயல்படுவதின் மூலமே அல்லாமல், வேறெந்த விதத்தில் ‘யூதா வகுப்பார்’ தங்கள் தவறுக்கான உண்மையான மனவுளைச்சலையும், அருமையான இருதய நிலைமையையும் காண்பிக்க முடியும். இப்படிச் செயல்படுவதின் மூலம், திரள் கூட்டம் காப்பாற்றப்படுகிறதில்லை. “எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்” என்று யோசேப்பு கூறினதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் (ஆதியாகமம் 44:17). திரள் கூட்டத்தினர் சிங்காசனத்திற்கு முன்பாக, தேவனுடைய ஆலயத்தில் நின்று அவரைச் சேவிப்பார்கள். யூதாவினுடைய மன்றாட்டே, கிறிஸ்து தம்முடைய இருதயத்தை, தமது மாம்சீக சகோதரர்களிடத்தில் திறக்கச் செய்தது.

“ஏழு வருடங்கள் விதைத்தல் (அ) நடுதல் இல்லை”

ஜனங்கள் ஏழு வருட பஞ்ச காலத்தின்போது, ஜீவிக்க முடிந்ததற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் ஏழு வருடங்கள் விதைக்கவோ (அ) நடவோ இல்லை என்பதை அறிந்து கொள்வது முக்கியமானதாகும். ஒருவேளை ஜனங்கள் விதைத்திருந்திருப்பார்களானால், அவர்களால் தொடர்ந்து ஜீவித்திருந்திருக்க முடியாது. பஞ்சம் கொடியதாகிக் கொண்டிருந்தபோது, எகிப்தியர்களுடைய இருதயங்களைத் திகில் ஆட்கொண்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு நிச்சயமே. அறுவடைக்காக அவர்கள் தானியங்களை நட விரும்புவது இயல்பே. யோசேப்பிற்குக் கீழ்ப்பட்டிருப்பதன் மூலமாக மாத்திரமே அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். “தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்” (ஆதியாகமம் 45:6) என்று நாம் வாசிக்கின்றோம். ஏழு வருட பஞ்ச காலத்தின் முடிவில் அவர்கள் அடுத்து விதைத்ததைக் குறித்து, “பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்” (ஆதியாகமம் 47:23) என்று நாம் வாசிக்கின்றோம். அப்போது அவர்கள் தங்கள் அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கை பார்வோனுக்கு, அதாவது தேவனுக்கு (அ) பொது நலனுக்குக் கொடுக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள்.

“விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரயேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்” (எபிரெயர் 11:22). இது யோசேப்பின் சார்பிலான முக்கியத்துவமுள்ள/ அர்த்தம் நிறைந்த செய்கையாகும். யோசேப்பால் எகிப்திலேயே மகா நினைவு தூண்களுடைய கல்லறை ஒன்றைச் சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அவரது பெயர் மிகவும் பிரஸ்தாபம் பெற்றிருந்தது மற்றும் அந்தத் தேசத்தாரும் அவருக்குக் கடமைப்பட்டிருந்தனர். எனினும் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபிற்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தத்தை யோசேப்பு ஒருபோதும் மறந்து போகாதவராகக் காணப்பட்டார். என்ன நடந்தாலும், அவர் எகிப்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கப் போவதில்லை.

ஒரு காலத்தில் இழிவானவர்களாகவும், வெறுக்கத்தக்கவர்களாகவும் காணப்பட்டவர்கள், அருமையான மற்றும் அன்பான/அக்கறையான ஜனங்களாக மாறிவிடலாம் என்பதை யோசேப்பின் கதை நிரூபிக்கின்றதாய் இருக்கின்றது. ஒரு மனுஷன் தான் மனம்திரும்பவும், சீர்ப்பொருந்தவும் நினைக்கும்போது எப்படியாக இருப்பானோ அப்படிப்பட்ட நிலையோடு, அவனது தற்போதைய நிலை குறுக்கிடக்கூடாது. “நான் (சரியான தீர்மானங்களை எடுத்திருந்திருப்பேனானால்) இப்படியாக இருந்திருப்பேனே” எனும் வார்த்தைகளே நாவு (அ) பேனா வெளிக்கொணர்ந்த துயரம் நிறைந்த வார்த்தைகளாகும் என்று ஒரு கவிஞன் கூறியுள்ளார். மனிதர்கள் இப்பொழுது எப்படி இருக்கின்றார்கள் என்பதும், பிற்காலத்தில் எப்படியாக இருக்கப்போகின்றார்கள் என்பதும் வேறுபட்ட காரியங்களாகும். அனைத்துக் காரியங்ளும் சரியான தேர்ந்தெடுத்தல்களையும், சரியான தீர்மானங்களையுமே சார்ந்துள்ளது. தவறான தேர்ந்தெடுத்தல்களையும் மற்றும் தவறான தீர்மானங்களையும் எடுத்தவர்கள், தாங்கள் ஒருவேளை வேறு மாதிரியான தீர்மானங்களை எடுத்திருந்திருப்பார்களானால் நலமாய்க் காணப்பட்டிருந்திருக்குமே என்று நொறுங்கின இருதயங்களுடன் திரும்பிப் பார்ப்பதுமுண்டு. “இப்படியாக இருந்திருப்போமே” என்ற (வருந்துகிற) கிறிஸ்தவர்களாக நாம் இருக்க விரும்பவில்லை.

‎”பென்யமீனைக்குறித்து மீண்டும் பார்க்கலாம்”

சிமியோனைக் காட்டிலும், நாம் உண்மையில் பென்யமீன் மீதே அதிக கவனம் செலுத்துகின்றோம். பென்யமீனே, கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய சகோதரனாகக் காணப்படுகின்றார். பென்யமீன் மீதும், மாம்சீக இஸ்ரயேலர்கள் அனைவரின் மீதும் இவ்வளவு பெரும் துயரம் கொண்டுவரத்தக்கதாக ஏன் நிஜமான யோசேப்பு, தமது வெள்ளிப்பாத்திரத்தைப் பென்யமீனுடைய சாக்கில் வைக்கின்றார்? யோசேப்பு தனது சகோதரனாகிய பென்யமீனைக் கண்டபோது, அவர்பால் யோசேப்பின் ஆத்துமா பொங்கினது என்பதும், அழத்தக்கதாக அவர் அறையைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது என்பதும் நமக்கு நினைவில் இருக்கின்றது (ஆதியாகமம் 43:30). யோசேப்பு தனது சகோதரனாகிய பென்யமீனுக்கு ஐந்து மடங்கு பங்கு கொடுத்தார்! யோசேப்பு பென்யமீனிடத்தில் மிகமிகப் பிரியமாய் இருந்தார். பிற்பாடு பென்யமீனுடைய சாக்கில் தனது வெள்ளிப்பாத்திரத்தை யோசேப்பு வைத்துவிட்டு, பென்யமீனைக் கள்வனைப்போன்று காணச் செய்துவிடுகின்றார். எதுவும் பொருந்தாதது போன்று தோன்றுகின்றது. பென்யமீன் சொல்லர்த்தமாகவே யோசேப்பினுடைய அடிமையாகுவதற்கான எந்த அபாயத்திலும், உண்மையில் காணப்படவில்லை, அப்படித்தானே? தான் மிகவும் நேசித்த சகோதரனுக்கு எந்தத் தீங்கும் வருவதற்கு யோசேப்பு நிச்சயமாய் அனுமதிக்க மாட்டார். தனது தந்தையாகிய யாக்கோபிடமிருந்து, தனது சகோதரர்கள் பென்யமீனை மிகவும் சிரமப்பட்டே கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதையும் யோசேப்பு அறிவார். தனது தந்தைக்கு இன்னும் வேதனை உண்டாக்குகின்றதான எதையும், நிச்சயமாய் யோசேப்பு செய்யப்போகிறதில்லை. தனது சகோதரர்களைப் பரீட்சித்துப் பார்க்கவே யோசேப்பு இந்த வெள்ளிப்பாத்திரத்தைப் பென்யமீனுடைய சாக்கில் வைத்தார். பென்யமீன் மீது தீங்கு வரப்போவதுபோன்று நிலைமை காணப்பட்டால், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

யோசேப்பை அடிமையாக விற்றுப்போடுவதற்கு ஆலோசனை தெரிவித்த அவரது சொந்த சகோதரனாகிய யூதா, அன்பும், அக்கறையுமுள்ள மனிதனாக மாறியிருப்பதை யோசேப்பு கண்டபோது, அவர் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானார். பென்யமீன் இல்லாமல் தாங்கள் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்த யூதா, தன் தகப்பனாகிய யாக்கோபிற்காக பயம்/கலக்கம் அடைந்தார். அவரது குமாரனாகிய யோசேப்பை அவர்கள் அவரிடமிருந்து ஏற்கெனவே பறித்துவிட்டனர். அவர்களால் பென்யமீன் இல்லாமல் திரும்பிச் செல்ல முடியாது, ஆகையால் பென்யமீனுக்குப் பதிலாக, யூதா தன்னைக் கையளிக்கின்றார். இக்கட்டத்தில் இதற்குமேல் ஒரு கணம்கூட யோசேப்பால் தன்னை, தன்னுடைய சகோதரர்களிடத்தில் மறைத்துக்கொள்ள முடியவில்லை. எகிப்தியர்கள் அனைவரையும் அறையிலிருந்து வெளியேற கட்டளையிட்டு, யோசேப்பு மிகவும் சத்தமிட்டு அழுதார்; எகிப்தியர்கள் அனைவரும் அவர் அழுவதைக் கேட்குமளவுக்கு, அவர் மிகவும் சத்தமாய் அழுதார்.

இதுவும் கிறிஸ்துவுக்கு நிழலே. தமது மாம்சீக சகோதரனும், இஸ்ரயேலின் முன்னணி கோத்திரமுமாகிய யூதா, செய்த தவறுக்கான மனவுளைச்சலை வார்த்தையினால் வெளிப்படுத்துவதற்கு மாத்திரமல்லாமல், தனது சகோதரனாகிய பென்யமீனைக் காப்பாற்றத்தக்கதாக, அடிமையாகப் பாடுபடுவதற்குரிய விருப்பத்தினை வெளிப்படுத்துவதற்கும், நிஜமான யோசேப்பு காத்துக்கொண்டிருக்கின்றார். அத்தருணத்திலேயே கிறிஸ்து தம்மை, தம்முடைய சகோதரர் அனைவருக்கும் மற்றும் உலகத்துக்கும் வெளிப்படுத்திடுவார். இக்கட்டம் வருவது வரையிலும் யோசேப்பு அவர்களிடத்தில் கொஞ்சம் கடினமாகவே நடந்துகொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யோசேப்பு அவர்களைத் தொடர்ந்து அழுத்தம் நிறைந்த மற்றும் கலக்கம் நிறைந்த சூழ்நிலைகளுக்குள்ளாக அனுமதித்தார், எனினும் அனைத்திலும் அவர் அவர்களுக்கு மிகுந்த உபகாரியாகவே காணப்பட்டார். அவருடைய தாராளத்தினால், மாத்திரமே அவர்கள் ஜீவிப்பதற்கான ஆகாரங்களை/ஏற்பாடுகளைப் பெற்றவர்களாய் இருந்தார்கள்.

இவைகளெல்லாம் எப்படி இனிவரும் நாட்களில் சம்பவிக்கும் என்பது பற்றி நமக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை. அர்மகெதோன் உச்சக்கட்டம் அடைகையில் மற்றும் கிறிஸ்தவ மண்டலமான தேசங்கள் எருசலேமை எதிர்பாராத நேரத்தில் தாக்கப் போகையில், அப்போது இஸ்ரயேல் குறித்ததான சத்தியங்கள் பென்யமீனுடைய (திரள் கூட்டத்தாருடைய) சாக்கிலிருந்து வெளியே வருவதற்கு வாய்ப்புண்டு. இஸ்ரயேல் மற்றும் எருசலேமிற்கு எதிரான தங்களுடைய சிலுவைப்போரை, திரள் கூட்டத்தினர் கண்டிப்பதினிமித்தமாகப் பெயர்ச்சபைகள், திரள் கூட்டத்தினருக்கு எதிராக எழும்புவார்கள். இக்கட்டத்தின்போது, மாம்சீக இஸ்ரயேலர்கள் மத்தியிலுள்ள உண்மையுள்ளவர்களாகிய சிலர், திரள் கூட்டத்தைக் காப்பாற்றத்தக்கதாகப் பேசுவார்கள். இது திரள் கூட்டத்தினரைக் காப்பாற்றப் போகிறதில்லை, ஏனெனில், திரள் கூட்டத்தினர் இறுதியில் ஜெயங்கொண்டு, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கத்தக்கதாக, “மகா உபத்திரவத்தின்” வழியாய் வரவேண்டும்.

மாம்சீக இஸ்ரயேலர்களிலுள்ள உண்மையுள்ளவர்களை அடையாளப்படுத்துகின்றதான “யூதா”, திரள் கூட்டத்தாரை அடையாளப்படுத்தும் பென்யமீனுக்குப் பதிலாக தன்னைக் கையளிப்பது வரையிலும், கிறிஸ்து தம்மை மாம்சீக இஸ்ரயேலர்களுக்கும், உலகத்திற்கும் வெளிப்படுத்துவதில்லை என்பதே இப்பாடத்தினுடைய ஒட்டுமொத்தக் கருத்தாகும். அத்தருணத்திலேயே கிறிஸ்து, “நான் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு” என்று கூறுவார்.

இறுதியில் அருமையான சகோதர சகோதரிகளே நாம் இன்று ஏன் இங்கிருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய சத்தியத்திற்கு மாத்திரமே நாம் ஜீவிக்க வேண்டும் மற்றும் அதற்காக மாத்திரமே நாம் மரிக்கவும் வேண்டும்.
ஆமென்!

என் ஆத்துமாவே, காலம் குறைவாய் உள்ளது!
வழியில் நடக்காமல், காலங்கடத்திக்கொண்டிருப்பதற்குக் காலமில்லை,
சுகபோகமாய் இருப்பதற்குக் காலமில்லை,
விளையாடித் திரிவதற்குக் காலமில்லை,
உலகப்பிரகாரமான சிநேகங்களுக்கோ (அ) சந்தோஷங்களுக்கோ காலமில்லை,
உலகப்பிரகாரமான பாரங்களுக்கோ (அ) வேடிக்கைகளுக்கோ காலமில்லை
என் ஆத்துமாவே காலம் குறைவாய் உள்ளது!

முறுமுறுப்பதற்கோ (அ) குறை கூறிடுவதற்கோ காலமில்லை,
இருதயத்தின் வலிகளுக்குச் செவிசாய்த்திடுவதற்குக் காலமில்லை,
கண்ணீர் விடுவதற்கோ (அ) துக்க கீதம் இசைப்பதற்கோ காலமில்லை,
இன்னும் எவ்வளவு தூரம்? எவ்வளவு காலம்? என்று
கேட்பதற்குக் காலமில்லை என் ஆத்துமாவே
காலம் குறைவாய் உள்ளது!

ஆ, ஆம் காலம் குறைவுதான் – எனினும் போதுமான நேரமுள்ளது
மிகச் செங்குத்தும், கரடுமுரடுமான உந்தன் வழியில் ஓடிடுவதற்கே.
“இரவு” வருவதற்கு முன்பு முதிர்ந்திருக்கும் வயல்களை அறுத்திடுவதற்கு
மாத்திரமே காலம் உள்ளது இதற்கு மாத்திரமே, என் ஆத்துமாவே,
இதற்கு மாத்திரமே காலம் உள்ளது!

உந்தன் இருதயத்தைத் தூய்மைபடுத்திடுவதற்கு மாத்திரமே காலம் உள்ளது,
உந்தன் “அழைப்பதனை உறுதிப்படுத்துவதற்கு” மாத்திரமே காலம் உள்ளது,
கிறிஸ்துவுடன் என்றென்றும் ஆளுகை செய்திடத்தக்கதாய்க்
“கதவு” வழியாய்ப் பிரவேசித்திடுவதற்கு மாத்திரமே காலம் உள்ளது –
இதற்கு மாத்திரமே, என் ஆத்துமாவே,
இதற்கு மாத்திரமே காலம் உள்ளது!
– சகோதரி ஜெர்ட்ரூட் W. சைபெர்ட்