R5883 – அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R5883 (page 115)

அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்

THE PRINCIPLES OF LOVE AND JUSTICE CONTRASTED

“நன்மை தீமைப் பற்றின கொள்கைகளைக் குறித்த தெளிவான புரிந்துகொள்ளுதலும், உணர்ந்துகொள்ளுதலும் மற்றும் இவற்றினால் ஆளப்பட வேண்டும் என்ற முழுமையான தீர்மானமும், தேவனுடைய சபையின் அங்கத்தினர்களுக்கான சமாதானத்திற்கும், வளமைக்கும் அவசியமாயிருப்பதுபோன்று, வேறெதுவும் காணப்படுவதில்லை. கிறிஸ்தவர்கள் மத்தியிலும்கூட ஆவிக்குரிய வளர்ச்சியையும், வளமையையும் பெரிதும் குறுக்கிடுமளவுக்குக் கிரியைகள் சம்பந்தப்பட்ட கொள்கைகளின் விஷயத்தில் வேற்றுக்கருத்துகள் இருக்கவே செய்கின்றன. இம்மாதிரியான சிரமங்களானது அன்பின் கோரிக்கைகளுக்கும், நீதியினுடைய கோரிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தினைக் காணத் தவறுவதினாலேயே பெரும்பாலும் எழும்புகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இந்தக் கொள்கைகளையும், தேவனுடைய பிள்ளைகள் மத்தியில் இவற்றின் செயல்பாடுகளையும் குறித்துப் பார்ப்பது பிரயோஜனமானதாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.

நீதியானது, சிலசமயங்களில் சரிசமமான தராசுகளினாலும், சிலசமயங்களில் சதுர வடிவத்தினால் (square) மற்றும் திசைக்காட்டியினாலும் (compass) விவரிக்கப்படலாம்; இவை இரண்டும் நீதியின் தன்மைகளை விவரிக்கும் பொருத்தமான அடையாளங்களாகும். நீதியானது கிரியை விஷயத்தில் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விதியினின்று திசைமாறிடுவதுமில்லை மற்றும் அது எதிலும் விட்டுக்கொடுப்பதுமில்லை. அது முற்றிலும் வரையறுக்கப்பட்டதாகும். அது “”அதிக எடைச் செலுத்தப்பட்டால், அதற்கென்று ஒன்றும் செய்கிறதில்லை. அதில் கிருபையோ, இருதயமோ, அனுதாபமோ, தயவோ கிடையாது. அது சத்தியம் மற்றும் நியாயத்தின்படி இம்மியும் பிசகாமல் துல்லியமாய் அளவிடுகிற ஒன்றாயிருக்கின்றது. நீதி செய்யப்பட்டால், நீதி செய்தவருக்கு எந்த நன்றியும் ஏறெடுக்கப்படுகிறதில்லை. நீதி செய்தவர் கடமையை நிறைவேற்றினவராக மாத்திரம் இருப்பார்; ஒருவேளை நீதி செய்வது புறக்கணிக்கப்பட்டால் அது குற்றமாக இருக்கும் மற்றும் நீதி செய்தால் எந்த மேன்மையும் அல்லது பாராட்டுதலும் கிடையாது. உறுதியும், கண்டிப்புமானதுமான இக்கொள்கையானது, தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாய்க் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [R5884 : page 115] இக்கொள்கையே, அவரது சிருஷ்டிகளை அவர் கையாளும் விஷயம் அனைத்திலும் காணப்படுகின்றது. அது அவரது மாறாக்கொள்கையாகும்; மேலும் நமது இனத்திற்கு எதிராய் நிற்கும் நீதியினைத் திருப்திபடுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இரட்சிப்பின் திட்டத்தினைப் புரிந்துகொள்ளும் யாவருக்கும், எவ்வளவு உறுதியாய்த் தேவன் இக்கொள்கையில் காணப்படுகின்றார் என்பது தெரியவரும். நீதியினைத் திருப்திபடுத்திடுவதற்குத் தம்முடைய ஒரேபேறான மற்றும் நேசகுமாரனுடைய ஜீவனைக்கொடுக்க வேண்டியதாய் இருப்பினும், திவ்விய நீதியின் இக்கொள்கையானது மிகவும் முக்கிய மானதாய்க் காணப்பட்டபடியால், தேவன் நம் அனைவருக்குமாய்க் குமாரனை இலவசமாய்த் தந்தருளினார்.

தயாளத்திற்கு முன்னதாக நீதி

நீதியைப் போன்றில்லாமல், அன்பின் கொள்கையானது பரிவினால் பொங்கிவழிகின்றது மற்றும் ஆசீர்வதிக்க ஏங்குகின்றது. அது முழுக்க கிருபை நிறைந்தது மற்றும் தயைப் பாராட்டுவதில் மகிழ்கின்றதாய் இருக்கின்றது. எனினும் நீதியைத் தனது மூல ஆதாரமாய்க் கொண்டிராத எந்த ஒரு கிரியையும் தயையாகக் கருதப்படவோ அல்லது அன்பின் வெளிப்பாடாகக் காணப்படவோ முடியாது. ஆகையால் ஒருவர் உங்களிடத்தில் ஓர் அன்பளிப்புடன்/ஈவுடன் வந்தும், அதேசமயம் உங்களுக்கு நியாயமாய்க் கடன்பட்டிருக்கும் காரியம் ஒன்றினைப் புறக்கணித்திருப்பாரானால், அவரது அன்பளிப்பானது அன்பின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளப்படாது மற்றும் நீங்களோ: “”தயாளமாய் இருப்பதற்கு முன்னதாக நாம் முதலாவது நீதியுடன் காணப்பட வேண்டும்”” என்பீர்கள்.

மேலும் இது சரியே: தேவனுடைய நடவடிக்கைகள் அனைத்திற்கும் நீதியே அடிப்படைக் கொள்கையாகக் காணப்படுமானால், அப்படியாகவே நம்முடைய நடவடிக்கைகளின் விஷயத்திலும்கூடக் காணப்பட வேண்டும்; மேலும் இப்படியாகவே கிறிஸ்துவுக்குள்ளான சகோதர சகோதரிகள் விஷயத்திலும், உலகத்தார் மத்தியிலும் நாம் காணப்பட வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளான சகோதர சகோதரிகளாகிய நாம், ஒருவருக்கொருவர் தன்னிச்சையாக நடந்துகொள்வதற்கு உரிமைப்பெற்றிருப்பதில்லை. நாம் நீதி செய்யவே உரிமைப் பெற்றிருக்கின்றோம்; நமக்குரியதான உரிமைகளாய் இருப்பவைகளை நாம் விட்டுக்கொடுத்திடலாம். ஆனால் நம்முடைய நடவடிக்கைகளில், நாம் எப்போதுமே நீதி செய்திட நாட வேண்டும் – ஒருவருக்கொருவர் நாம் உண்மையாகவே கடன்பட்டிருக்கும் விஷயங்களில், அவற்றைக் கட்டித் தீர்ப்பதில் நாம் நீதியுடன் காணப்பட வேண்டும்; ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கும் விஷயத்தில் நாம் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும்; மற்றவர்களுடைய பெலவீனங்களை உரிய விதத்தில் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில் நாம் நம்மிலும் அதேபோன்றதான பூரணமின்மைகளைக் காணவே செய்கின்றோம் என்பதினாலாகும்; ஒருவரையொருவர் நியாயமாய், சிநேக பாவமாய்க் கையாளுவதில் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

நாம் ஏற்கெனவே சொல்லிவிட்டதுபோன்று, நாம் நமக்காக நீதியினைக் கோரிடமுடியாது மற்றும் வேண்டுமானால் நாம் விரும்பும் பட்சத்தில் முறுமுறுக்காமல் அநீதியினைச் சகித்துக்கொண்டு செல்லலாம். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், நம்மால் நீதியினை அடையாளங்கண்டுகொள்ள முடிகிற அளவிற்கு ஏற்ப நாம் நீதி செய்திட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இது விஷயத்தில் நாம் மற்றவர்களுடைய செயல்பாடுகளுக்குப் பொறுப்பாளியாகிறதில்லை, மாறாக நம் செயல்பாடுகளுக்கே பொறுப்பாளியாய் இருப்போம். ஆகையால் அன்பினை வெளிப்படுத்தும் வண்ணமாக ஒரு காரியத்தினைச் செய்திடுவதற்கு முன்பாக, நாம் நம்முடைய கிரியைகள், நம்முடைய வார்த்தைகள் மற்றும் நம்முடைய சிந்தைகளானது, நீதியின் மாறா விதியுடன் இசைவாய்க் காணப்படத்தக்கதாக நாம் உண்மையாய்ப் பிரயாசம் எடுத்திட வேண்டும்.

நீதி, நியாயம் என்பது ஒரு கிறிஸ்தவ பண்பாகும்

அநேக கிறிஸ்தவ ஜனங்கள் அநேகம் வருடங்கள் கடந்தும் பெரிதும் வளர்ச்சி ஏதுமில்லாமல் காணப்படுவதாகத் தென்படலாம். நாம் கர்த்தருடைய குடும்பத்திற்குள்ளாகக் கூட்டிச் சேர்க்கப்பட்டது முதற்கொண்டு, நமக்கும் பொருந்துகின்றதான திவ்விய பிரமாணங்களில் அடங்கும் அடிப்படையான கொள்கைகளை அடையாளம் கண்டுகொள்ள தவறிடுவதே மேற்கூறப்பட்டுள்ள இந்நிலைமைக்கு வழிநடத்தப்படுவதற்குரிய ஒரு காரணியாக இருக்கின்றது. இந்த அடிப்படையான கொள்கைகளில் முதலாவது நீதியாகும். நம்முடைய உரிமைகள் எவை என்றும், சபையிலும், சபைக்கு வெளியிலுமுள்ள நம்முடைய சக சிருஷ்டிகளின் உரிமைகள் எவை என்றும் நாம் மிகமிகத் தெளிவாய்க் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய சொந்த காரியங்களையும், மற்றவர்களுடைய காரியங்களையும் நீதி எனும் தூக்கு நூலினால் எப்படி அளக்க வேண்டும் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும்; எந்த ஒரு சூழ்நிலையிலோ அல்லது சந்தர்ப்பத்திலோ மற்றவர்களுடைய உரிமைகள், சுயாதீனங்கள் அல்லது நலன்கள் விஷயத்தில் நாம் அத்துமீறல் பண்ணிடக்கூடாது என்றும், அப்படி அத்துமீறுவது என்பது திவ்விய சித்தத்திற்கு விரோதமான தவறாக, பாவமாகக் காணப்பட்டு, கிருபையில் நாம் வளர்கின்ற விஷயத்திற்குக் கடுமையான இடையூறாகக் காணப்படும் என்றும் அடையாளம் கண்டுகொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக நீதிக்கு அடுத்தப்படியாக அன்பை திவ்விய வரிசையில் முக்கியமானதாகக் கருதிடுவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அன்பு என்று குறிப்பிடுகையில், அது காதலையோ, மென்மையான உணர்வுகளையோ குறித்துக் குறிப்பிடாமல், மாறாக நம்முடைய பரலோக தந்தையினிடத்திலும், நமது கர்த்தராகிய இயேசுவிடத்திலும் வெளிப்பட்டதாக நாம் பார்க்கின்றதான இரக்கத்தின், அனுதாபத்தின், கரிசனையின், தயாளத்தின் கொள்கையினையே நாம் குறிப்பிடுகின்றோம்.

நாம் கர்த்தரில் வளருகையிலும், அவரில் பெலப்பட்டிருக்கையிலும், நம் வளர்ச்சியானது அவரது குணலட்சணத்தினுடைய இந்த அம்சங்களின் அடிப்படையில் காணப்பட வேண்டும். நாம் மற்றவர்களிடத்தில் அவர்களது சோதனைகளிலும், பிரச்சனைகளிலும், கஷ்டங்களிலும் அதிகமதிகமாய் [R5884 : page 116] அவர்களைப் புரிந்துகொள்கிறவர்களாகவும், அவர்களுக்காக அனுதாபங் கொள்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்; அனைவரிடத்திலும், அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டார் யாவரிடத்திலும் நாம் தயவோடும், பொறுமையோடும், இரக்கத்தோடும் அதிகமதிகமாய்க் காணப்பட வேண்டும். ஆவியின் கனிகள் அனைத்தும், அன்பினுடைய அம்சங்களாய் இருக்கின்றன. தேவன் அன்பாகவே இருக்கின்றார் மற்றும் அவரது ஆவியினைப் பெற்றுக்கொள்பவர்கள் யாவரும், அன்பின் ஆவியினைப் பெற்றுக்கொள்பவர்களாய் இருப்பார்கள்.

இந்த இரண்டு அடிப்படையான கொள்கைகளும், நம்முடைய ஜீவியத்தின் நடத்தைகள் யாவற்றிலும் அடங்கிட வேண்டும். நாம் தீமை செய்திடக்கூடாது என்று நீதியானது நம்மிடத்தில் கூறுகின்றது – அதாவது மற்றவருக்கு அநீதி நடப்பிப்பதற்கு ஏதுவான எந்த ஒரு வார்த்தையையும் நாம் பேசிடவோ, எந்த ஒரு கிரியையும் நாம் செய்திடவோ கூடாது; பார்வையினால்கூட நாம் அநீதி நடப்பிக்கக்கூடாது; நம்முடையதுபோலவே, நாம் அவள் அல்லது அவனின் நலனுக்கடுத்த காரியங்களில் கவனமாய் இருத்தல் வேண்டும். மற்றவர்கள் விஷயத்திலான நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தையும் நீதியானது நெறிபடுத்திட/ஆண்டிட வேண்டும். நீதிக்கும் அதிகமாய் நாம் மற்றவர்களுக்குச் செய்திட அன்பு வேண்டுமானால் அனுமதித்திடலாம், ஆனால் நீதிக்கும் குறைவானதை நாம் மற்றவர்களுக்கு ஒருபோதும் செய்திடக்கூடாது என்று நீதி கேட்கின்றதாய் இருக்கின்றது. நாம் நீதி செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் நம்மிடத்தில் கேட்கவில்லை என்றாலும், நீதிக்கும் குறைவானதையே அவர்கள் நம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள விருப்பத்துடன் காணப்படுகின்றார்கள் என்றாலும், நாம் நமக்குச் சாதகமாய் அவர்கள் விஷயத்தில் நடந்தாலும்கூட, அவர்கள் ஏதும் கூறமாட்டார்கள் என்றாலும், நீதிக்குறித்த நம்முடைய நிலைப்பாட்டினை அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்றாலும், நம்முடைய நடக்கையானது, நீதியின்படியாகவே காணப்பட வேண்டும். நாம் கர்த்தருடைய ஆவியைப் பெற்றிருக்கின்றோம் மற்றும் இந்த நிலைப்பாட்டின்படியே நாம் செயல்பட வேண்டுமே ஒழிய, அவரது ஆவியினைப் பெற்றிராதவர்களுடைய அல்லது ஏறக்குறைய குருடானவர்களாகவும், நீதியாய்க் கையாள இயலாதவர்களாகவும் காணப்படும் மற்றவர்களுடைய நிலைப்பாட்டின்படி நாம் செயல்படக்கூடாது.

அன்பும், நீதியும், இரண்டுமே கட்டுப்படுத்துகின்றது

மற்றவர்கள் விஷயத்திலுள்ள நம்முடைய நடக்கையை நீதியானது வழிவகுக்க வேண்டும் என்றால், மற்றவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில், அவர்களது நடக்கையினை அளவிட அன்பானது நம்மால் பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்கு நாம் செய்யும் விஷயத்தில் நீதியின் கண்டிப்பான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாய் இருப்பினும், நாம் அவற்றை மற்றவர்களுக்குப் பொருத்தி எதிர்ப்பார்த்திடக்கூடாது. நீதிக்கும் குறைவானதை நாம் மற்றவர்களிடத்திலிருந்து ஏற்றுக்கொள்ளும்படியாக அன்பும், தயாளமும் கோரிக்கை விடுகின்றதாய் இருக்கின்றது; ஏனெனில் அவர்கள் விழுந்துபோனவர்களாகவும், அவர்களது மாம்சத்தில் மாத்திரமல்லாமல், அவர்களது கணிப்புகளிலும் பூரணமற்றவர்களாகவும் காணப்படுவதை நாம் உணர்ந்துள்ளோம். இன்னுமாக உலகத்தின் ஜனங்கள் கர்த்தருடைய ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் நாம் புரிந்துகொண்டிருப்பதுபோன்று நீதி மற்றும் அன்பின் இந்த அடிப்படையான கொள்கைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் நாம் காண்கின்றோம். அவர்களது நிலைமையினை வியாதிப்பட்டிருக்கின்ற அயலானின், நண்பனின், பெற்றோரின் அல்லது பிள்ளையின் நிலைமையைக்குறித்து நாம் எப்படிப் பார்ப்போமோ, அப்படியே அன்பில் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும். அவர்களது ஒழுங்கற்ற நிலைமையினை நாம் சகித்துக்கொள்ள வேண்டும் மற்றும் கூடுமான மட்டும் அவர்களது வார்த்தைகள், நடத்தைகள் முதலானவைகளை இரக்கத்தோடு கருதிக்கொள்ள வேண்டும்.

இது நாம் உண்மையான நிலைமைக்குக் குருடர்களாக அல்லது அசட்டையாய்ப் பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும் என்றாகாது மற்றும் நாம் பெற்றிருந்த அல்லது சம்பாதித்திருந்த யாவற்றையும் இழந்துபோக நம்மைநாமே ஆளாக்கிக்கொள்ள வேண்டும் என்றாகாது; மாறாக நம்மால் கையாளப்படுகிறவர்களிடமிருந்து வெளிப்படும் அநீதியையும், அநியாயத்தையும் நாம் இரக்கமான, அனுதாபமான பார்வையோடு பார்த்திட வேண்டும். அவர்கள் விழுந்துபோனவர்கள் என்றும், நாம் பெற்றுக்கொண்டுள்ளதுபோன்று, அவர்கள் தேவனுடைய கிருபையைப் பெற்றிருக்கவில்லை என்றும், இதனிமித்தம் அவர்களை நாம் கண்டிப்பான நீதியின்படி நிதானிக்காமல், மாறாக அவர்களது பூரணமின்மைகளானது, அன்பென்னும் வளைந்துகொடுக்கும் நரம்பினால் சகிக்கப்பட வேண்டும் என்றும் நாம் நினைவில் கொண்டிட வேண்டும். நம்முடைய சொந்த நடக்கையே, நீதியின் பிரமாணமாகிய பொன்னான பிரமாணத்திற்கு இசைவாக இருக்கின்றதாவென நாம் பார்த்திட வேண்டும்.

அன்பு எவ்வாறு நிரம்பி வழிந்திடும்

மற்றவர்களிடத்தில் நாம் நடந்துகொள்ளும் நடக்கைகள் பொன்னான பிரமாணத்திற்கு இசைவாகக் காணப்பட வேண்டும் என்றும், மற்றவர்கள் நம் விஷயத்தில் நடந்துகொள்ளும் நடக்கைகளை நாம் தயவோடு பார்த்திட வேண்டும், அதாவது “”நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்”” என்று நமது கர்த்தர் கூறின வார்த்தைகளுக்கு இசைவாக, அவர் எப்படி நம்மை நியாயந்தீர்த்திடும் விஷயத்தில், நம்மைப் பார்த்திட வேண்டும் என்று விரும்புவோமோ, அப்படிப்போலவே நாமும் மற்றவர்களைத் தயவோடு பார்த்திட வேண்டும் என்றும் நமக்கு வலியுறுத்துவதன் வாயிலாக ஆண்டவர் எத்துணைத் தெளிவாய் இக்காரியங்களை நம்முன் வைக்கின்றவராய் இருக்கின்றார். கர்த்தருடைய ஜனங்கள் நீதி மற்றும் அன்பு எனும் இந்த அடிப்படைக்கொள்கைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதை ஜீவியத்தின் அன்றாட காரியங்களில் செயல்படுத்துவார்களானால், அவர்கள் உலகத்தினின்று மேல் நிலைக்கு வந்தவர்களாய்க் காணப்படுவார்கள். அது அநேகமான வாய்ச் சண்டைகளையும், அநேகமான வழக்குகளையும், அநேகமான சண்டைகளையும் இல்லாமலாக்கி, கர்த்தருடைய ஜனங்களை இரக்கத்திற்கும், தயவிற்கும், அன்பிற்கும் பிரகாசிக்கிற முன்மாதிரிகளாகவும், அதேசமயம் நீதிக்கும், நேர்த்தியான ஜீவியத்திற்கும், நேர்மைக்கும், நாணயத்திற்கும் முன்மாதிரிகளாகவும் ஆக்கிவிடும்.

துல்லியமாய்க் கணக்கிடும், அளவிடும் கொள்கையையுடைய நீதியைப் போன்றதல்ல அன்பு. அது மூன்று அம்சங்களை உடையதாகும்: அது பரிதாபப்படுகின்றது; அது அனுதாபப்படுகின்றது – அதாவது பாசத்துடன் காணப்படுகின்றது; அது பயபக்தியோடு காணப்படுகின்றது. அன்பின் இந்த வெவ்வேறு வடிவங்களானது, யார் மீது அன்பு செலுத்தப்படுகின்றதோ, அதற்கேற்ப செயல்படுத்தப்படுகின்றது. பரிதாப அன்பு என்பது கீழ்த்தள வகையான (lowest form) அன்பாய் இருக்கின்றது; இது வெறுக்கப்படத்தக்கவர்களையும், இழிவானவர்களையும் கூடக் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றது மற்றும் உதவி அளிக்கும் விதத்தில் செயல்படுகின்றதாய் இருக்கின்றது. அனுதாபமான அன்பானது இன்னும் சற்று மேலானதாகவும், ஐக்கியத்தினையும், தோழமையையும் அருளுகின்றது. ஆனால் மூன்றாம் வகை அன்பு என்பது, இவை அனைத்திற்கும் மேலானதாகக் காணப்பட்டு, நல்லவற்றையும், தூய்மையானவற்றையும் மற்றும் அருமையானவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்வதில் மகிழ்கின்றதாய் இருக்கின்றது. இந்தக் கடைசி வகையான அன்பின் வாயிலாகவே, போற்றுதலுக்கும், வியந்து பாராட்டுதலுக்கும் உண்மையில் பாத்திரமானவராகத் தேவனைப் பிரதானமாய் நாம் அன்புகூர்ந்திடுவோம்; மற்றும் அவரது சாயலைச் சக மனிதர்கள் பெற்றிருப்பதற்கேற்ப, சக மனிதர்களையும் அன்புகூருகிறவர்களாக இருப்போம். தேவனையும், மனிதனையும், இரண்டுபேரையுமே அன்புகூர்ந்திடும்படியாகத் திவ்விய பிரமாணம் கேட்கின்றதாய் இருக்கின்றது.

ஒவ்வொரு மனுஷனிடத்திலும் இப்படி ஏதேனும் ஒருவிதத்தில் அன்புகூர நாம் கடமைப்பட்டவர்களாக இருப்பினும், இதையே நாம் ஒருவர் இன்னொருவரிடம் எதிர்ப்பார்த்துக் கேட்டிட முடியாது; ஆனால் அன்பானது நீதிக்கும் மேலாய்ப் பொங்கி வழிகின்றது. அன்பானது குலுக்கி, அமுக்கிவிட்டு, இன்னும் குவிக்கின்றதாய் இருக்கின்றது. தன்னிடம் அன்பு பாராட்டப்படவில்லை என்று கிறிஸ்தவனால் குறையாகச் சொல்லப்படக்கூடாது; எனினும் அன்பு காட்டப்படும்போது, அது நன்றியறிதலோடு உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, தாராளமாய்த் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அன்பை அடைய வாஞ்சிக்கிறவர்கள், அன்பை அதன் உயர்தளத்தில் வாஞ்சித்திட – அதாவது போற்றப்படும் மற்றும் பாராட்டப்படும் விதமான அன்பினை வாஞ்சித்திட வேண்டும். ஆனால் இவ்வகையான அன்பானது மிகுந்த விலையுடையதாகும்; மேலும் இதை அடைவதற்கான ஒரே வழி – உண்மையில் உயர்பண்புகள் உடையவர்களாய் இருப்பவர்களை, நமது கர்த்தராம் இயேசுவைப் போன்று உண்மையில் காணப்படுபவர்களை ஈர்க்கும் அத்தகைய உயர்பண்புகளை வெளிப்படுத்திட நாடிடுவதாகும்.

அனுதாபத்தினாலும், ஐக்கியத்தினாலும் உருவான அன்பும்கூட மிகவும் விலையேறப்பெற்றதாகும். எனினும் கேட்டுக்கொண்டதன் காரணமாய் வெளிப்படும் எந்த ஒரு மன உணர்ச்சியும், அன்பின் உச்சிதமான நறுமணமில்லாமலேயே காணப்படும். ஆகையால் ஒருபோதும் அன்பைக் காட்டும்படி கேட்டுக்கொள்ளாதீர் / எதிர்ப்பார்க்காதீர், மாறாக மற்றவர்களிடம் அன்பை வெளிப்படுத்தி, இப்படியாகப் பிரதி அன்பை நாடிடுங்கள். பரிதாப அன்பானது, அது யார் மேல் செலுத்தப்படுகின்றதோ அவரின் பெருந்தன்மையினால் உண்டானதாயிராமல், மாறாகச் செலுத்தியவரின் பெருந்தன்மையினால் உண்டானதாகும்; அதாவது செலுத்தியவரின் இருதயமானது முழுக்க அன்பினால் நிறைந்திருப்பதினால், தகுதியற்றவர்களிடத்திலும் கூடத் தாராளமாய் அது பொங்கி வழிகின்றதாய் இருக்கின்றது. பரிதாபத்திற்குப் பாத்திரமாய் இருப்பவர்கள் யாவரும், உயர்தளத்திலுள்ள அன்பை நாம் பாராட்டிடுவதற்கும் பாத்திரமற்றவர்களாய் இருப்பார்கள் மற்றும் இத்தகையவர்களில் சிலர் நம்முடைய அன்பை எல்லாவிதத்திலும் எப்போதும் பெற்றுக்கொள்பவர்களாய் இருப்பார்கள்.

சுயநலமான ஒரு பக்க பார்வை

நீதிக்கும் அப்பால் காணப்படும் அன்பின் பொங்கிவழிந்திடும் ஆசீர்வாதத்தினை வேண்டிக் (மற்றவரிடம்) கேட்பது என்பது பேராசையின் வெளிப்பாடாய் இருக்கும். அன்பின் இந்தக் கொள்கையின்படி நாம் செயல்பட்டாலும், அதை மற்றவர் நம்மீது பாராட்டிட வேண்டும் என்று நாம் கேட்டிடக்கூடாது. ஒருவேளை நாம் அப்படிக் கேட்டுக் கொள்வோமானால், நாம் அன்பில் குறைவுகொண்டவர்களாகவும், கொஞ்சம் சுயநலம்கொண்டவர்களாகவும் இருக்கின்றோம் என்பது வெளியாகும். சிலர் தங்களுக்கு சகோதர அன்பானது, எந்தமட்டிற்குப் பாராட்டப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கண்டுகொள்பவர்களாகவும், ஆனால் இது விஷயத்திலுள்ள தங்கள் சொந்த கடமைகளைக் கண்டுகொள்வதில் தாமதமாய் [R5885 : page 116] இருக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உதாரணத்திற்கு: இரண்டு சகோதரர்கள் ஒருமுறை ஒரே அறையில் தங்கினார்கள்; மேலும் அன்பு மற்றும் நீதியின் தொடர்பினைக் கவனிக்க தவறினவராக ஒருவர், அறைக்கான முழு வாடகையையும், மற்றவர் செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்குமளவுக்கு, மற்றவரிடத்தில் சகோதர அன்பை எதிர்ப் பார்த்திட்டார். ஆனால் மற்றவர் நீதியை வலியுறுத்தினபோது, இவர் சகோதர அன்பை வலியுறுத்தவே, மற்றவர் எப்படி இதை மறுக்க என்று அறியாது, மனமில்லாமல் முழுவாடகையையும் செலுத்தினார் மற்றும் அதேசமயம் அவருக்கு உலக ஜனங்களைக்காட்டிலும் சில கிறிஸ்தவர்கள் கொள்கை விஷயத்தில் குறைவுடையவர்களாய் இருக்கின்றனர் என்ற எண்ணம் பதிந்தது. தேவனுடைய பிள்ளைகளில் யாரேனும் இவ்வளவுக்குக் குறுகின, இவ்வளவுக்கு ஒரு பக்கக்கண்ணோட்டத்தினை, இவ்வளவுக்குச் சுயநலமான கண்ணோட்டத்தினைப் பெற்றிருப்பது எத்துணை விநோதமானதாய்க் காணப்படுகின்றது! அன்பும், நீதியும் இரண்டு விதங்களிலும் செயல்பட வேண்டும் என்றும், இது விஷயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரை மேற்பார்வையிடாமல், மாறாக ஒவ்வொருவரும் தன்தன் நடக்கையைப் பார்த்துக்கொள்வதும், தான் சகோதர அன்பைக் காண்பிக்கின்றானா என்று பார்த்துக்கொள்வதும் கடமையாய் இருக்கின்றது என்றும், தான் மற்றவருக்குப் போதிக்கிறானென்றால், அது கொள்கையின்படி என்பதைவிட, மாதிரியின் படி காணப்படத் தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அனைவராலும் காணமுடியவில்லையா?

அன்பு பிரதானமாய் ஆளக்கடவது

பேராசைக்கு நேரான தன்மையினைக்குறித்து நாம் எச்சரிக்கையாய் இருப்போமாக. நம்மில் ஒவ்வொருவரும் கர்த்தரினால் நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டவைகளுக்கே உக்கிராணக்காரனாக இருக்கின்றோமே ஒழிய, மற்றச் சகோதரனிடத்தில் ஒப்படைக்கப் பட்டவைகளுக்காக அல்ல என்பதையும், ஒவ்வொருவனும் கர்த்தர் தன் கைகளில் ஒப்படைத்தவைகளைச் சரியாய்ப் பயன்படுத்திடும் விஷயத்தில் மற்றவர்களுக்கல்ல, மாறாக கர்த்தருக்கே கணக்கு ஒப்படைக்க வேண்டியவனாய் இருப்பான் என்பதையும் நினைவில்கொள்வோமாக. ஒருவர் இன்னொருவருடைய தனிப்பட்ட காரியங்களைக்குறித்து இழிவாய் விமர்சித்துக் குறைக்கூறிடும் தன்மையானது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் மிகவும் விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க காரியமாய் இருப்பது போன்று வேறு எதுவும் இருப்பதில்லை. இது பரிசுத்தவான்களுக்கடுத்த காரியமல்ல மற்றும் இது சகோதர அன்பு குறைவுபட்டிருப்பதை, அதாவது பெரிதாக்குவதற்குப் பதிலாகத் திரளான பாவங்களை மூடிப்போடுகின்றதான, அதாவது பரந்த மனப்பான்மையோடும், தயவோடும் விசேஷமாய்ப் பார்த்திடும் சகோதர அன்பு குறைவுப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

கிறிஸ்தவன் அன்பான, தயவான இருதய நிலைமையினை – பரம பிதாவினுடைய குணத்தின் சாயலைப் பெற்றிருக்க வேண்டும். தேவன் கிறிஸ்துவின் நிமித்தமாய் நம்மைக் கையாளுவது போலவும் நம்மால் தெரிந்தும், துணிகரமாயும் செய்யப்படாத பாவங்களை நம்மீது சாற்றாதது போலவும், கிறிஸ்தவனும் முக்கியமில்லாத விஷயங்களைக் கவனியாமல் விட்டுவிடுமளவுக்கு மிகுந்த அனுதாபமும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய நியதியானது, கிறிஸ்தவர்கள் மத்தியில் செயல்பாட்டில் காணப்படுமானால் வேண்டுமென்றே செய்யப்படாத எதையும் குற்றமாகப் பார்க்கக்கூடாது என்ற தீர்மானம் காணப்படுமானால், இது அனைவருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாய்க் காணப்படும் மற்றும் தகுதியானதாகவும், தேவனுக்கொத்த நடக்கையாகவும் காணப்படும். மத்தேயு 18:15-17-ஆம் வசனங்களில் நமது கர்த்தரினால் குறிப்பிடப்பட்டிருக்கும் மீறுதல்களானது, பின்விளைவுகளற்ற அற்ப காரியங்களல்ல; தீமையான ஊகங்களும், கற்பனைகளுமல்ல; வதந்திகளல்ல; கற்பனையான அவமதிப்பல்ல; மாறாக நமக்குச் செய்யப்பட்டுள்ள உண்மையான தப்பிதங்களாகும் மற்றும் இதன் காரணமாக அன்பாகவும், இரக்கமாகவும், ஞானமாகவும் சில தகுதியான கடிந்துகொள்ளுதலைக் கொடுப்பது – அதாவது தவறு செய்யப்பட்டுள்ளதை நாம் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம் மற்றும் அது நம்மை வேதனைப்படுத்தியுள்ளது மற்றும் நம்மைக் காயப்படுத்தியுள்ளது மற்றும் அது சரி பண்ணப்பட வேண்டும் என்று கொஞ்சம் சுட்டிக்காட்டிடுவது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

மன்னிக்கும் மனப்பான்மையானது எப்போதும் நம்மிடத்தில் காணப்பட வேண்டும் மற்றும் அது நம்மால் எப்போதும் வெளிக்காட்டப்பட வேண்டும். நம்முடைய அன்புடன்கூடிய தயாளம், நம்முடைய இரக்கம், யாரைக் குறித்தும் தீமை, அதாவது கொஞ்சமும் தீமை சிந்திக்கக்கூடாது என்ற நமது வாஞ்சையானது – நம்முடைய வார்த்தைகள் மற்றும் ஜீவியத்தின் கிரியைகள் யாவற்றினாலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இது தேவனுக்கொத்த காரியமாகும். நாம் பாவிகளாய் இருந்தபோதே தேவன் நம்மிடத்தில் இரக்கத்தின், தயாளத்தின், பரந்தமனப்பான்மையின் உணர்வுகளையே கொண்டிருந்தார். பாவிகள் மன்னிப்புக் கேட்பதற்காக அவர் காத்திராமல், மாறாக உடனே இணக்கத்திற்குள் வருவதற்கான அவரது வாஞ்சையையும் மற்றும் மன்னிப்பதற்கான அவரது ஆயத்தத்தையும் வெளிப்படுத்தினார். “”தேவனோடே ஒப்புரவாகுங்கள்”” என்பதே ஒட்டுமொத்த சுவிசேஷத்தின் செய்தியாகும். நம்முடைய முகங்களில் கடினமான பார்வை காணப்படாத அளவுக்கும், நம்முடைய வார்த்தைகளில் கசப்பைக்கொட்டும் கடிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்குமளவுக்கும், நம்முடைய இருதயங்களானது, மன்னிக்கும் இத்தன்மையினால் முழுக்க நிரம்பியிருப்பதாக. நம்முடைய இருதயங்களில் எல்லா வேளைகளிலும் நாம் பெற்றிருக்க வேண்டியதான அன்புடன்கூடிய மன்னிப்பினை நாம் வெளிப்படுத்திட வேண்டும்.

சத்துரு மேன்மைப்பாராட்ட இடமில்லாத அளவுக்கு அன்பும், நீதியும் அதனதன் இடத்தினை தேவனுடைய ஜனங்கள் அனைவரின் இருதயங்களிலும் பெற்றிருப்பதாக! “”ஆண்டவரே நான் உமது திருச்சட்டத்தின் மீது (நீதியினை அஸ்திபாரமாகக் கொண்டுள்ள அன்பின் பிரமாணத்தின் மீது) எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கிறேன்” என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார் (சங்கீதம் 119:97; திருவிவிலியம்). நிச்சயமாகவே தேவனுடைய பிரமாணமானது அனைவராலும் தொடர்ந்து தியானம் பண்ணப்படுமாயின், நாம் அடிக்கடி காண்கின்றதான கடுமையான தவறுகள் எவ்வளவாய்க் குறைந்துபோய்விடும்! புதுச்சிருஷ்டிகளாகிய நம்மை எதிராளியானவனும், விழுந்துபோன மாம்சமும் ஜெயம் கொண்டுவிடாதபடிக்கு நாம் கவனமாயும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும் இருப்போமாக. சுயமானது அதிகமதிகமாய் ஒழிக்கப்படுவதாக மற்றும் அன்பானது பிரதானமாய் ஆளுவதாக. “