R2766 (page 62)
கேள்வி: — பிள்ளைகள் பரம அழைப்பிற்குப் பாத்திரவான்களாயிராதப்படியால், அவர்களுக்கு விசேஷித்த மத அறிவுரைகள் ஏதும் கொடுக்கப்படாமல், பெயர்ச்சபை ஓய்வுநாள் பள்ளிக்கூடங்கள் முதலானவைகளுக்குள் போகத்தக்கதாக அவர்கள் விட்டுவிடப்பட வேண்டுமா?
பதில்: — விசுவாசிகள் மாத்திரமே கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரத்துவம் அடைவதற்கான பரம அழைப்பிற்கும், அவரோடுகூடப் பாடுபடுவதற்கும் இணங்கி வருபவர்களாய் இருப்பார்கள். குழந்தைப் பருவத்தினுடைய கபடற்ற தன்மையானது வேதவாக்கியங்களில் அருமையான அடையாளமாக முன்வைக்கப்பட்டுள்ளது; மேலும் அது ஆவிக்குரிய காரியங்களில் கர்த்தருடைய ஜனங்கள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும் – கர்த்தருடைய ஜனங்கள் துர்க்குணத்தைப் பொறுத்த விஷயத்தில் குழந்தைகளாகக் காணப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் விசுவாசத்திலும், அன்பிலும் எளிமையானவர்களாகக் காணப்பட வேண்டும்; போலியானவர்களாக, வஞ்சகமானவர்களாக, சதி ஆலோசனைப்பண்ணுபவர்களாகக் காணப்படக்கூடாது. இப்படியான விதத்திலேயே நாம் அனைவரும் சிறுபிள்ளைகளாகிட வேண்டும், இல்லையேல் நம்மால் பரலோக இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கமுடியாது என்று கர்த்தர் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இவ்விஷயங்களில் சிறுபிள்ளைகள் போன்று இருப்பதும், சிறுபிள்ளையாக உண்மையில் காணப்படுவதும், இரண்டுமே வெவ்வேறு காரியங்களாகும். பாலஸ்தீனியாவிலுள்ள சிறுபிள்ளைகள் யாரையும் தம்முடைய சீஷர்களாகக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, பிற்காலங்களிலும் குழந்தைகள் தம்முடைய சீஷர்களாக இருக்கும்படிக்கு அவர் அழைக்கவுமில்லை.
கர்த்தரில் அறிவு பூர்வமான ஒரு விசுவாசத்தைச் செயல்படுத்திடுவதற்கும், இந்த விசுவாசத்தினைச் செயல்படுத்தின பிற்பாடு, கர்த்தருடைய ஊழியத்திற்கென்று முழுமையான அர்ப்பணிப்பின் ஓர் உடன்படிக்கைக்குள் அறிந்துணர்ந்த நிலைமையில் பிரவேசிப்பதற்குமான வயதும், காலமும் பிள்ளையினுடைய தனித்தன்மை / மனநிலை / தனிப்பட்ட விருப்பாற்றல் சார்ந்து வேறுபடும். 14- ஆம் வயதிலேயே விசுவாசிப்பதற்கும், அர்ப்பணம்பண்ணுவதற்கும் மற்றும் இரண்டையுமே செய்யமுடிகிறவர்களாகவும் காணப்பட்ட சிலரை நாங்கள் அறிந்திருக்கின்றோம்; இத்தகையவர்களிடத்தில் விசுவாசத்திற்கான சான்றுகளையும், அர்ப்பணிப்புக்குறித்த உணர்ந்துகொள்ளுதலுக்கான சான்றுகளையுமே நாம் எதிர்ப்பார்த்திட வேண்டும்.
நம்முடைய குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாதளவுக்குச் சிறுபிள்ளைகளாக இருந்தாலும்கூட, அவர்கள் விஷயத்தில் நமக்கு ஒரு கடமை இருக்கின்றது. அவர்கள் நம்முடைய பிள்ளைகளாகவும், நம் பராமரிப்பின்கீழ்க் காணப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்; மேலும் சபை பிரிவுணர்வுகளானது நமக்கு எத்தனை தீமைகளைச் செய்திருக்கின்றன என்பதை நாமே அறிந்திருக்க, நம் பிள்ளைகளின் இளம் பாதங்களை எதிராளியானவனின் கண்ணிக்குள் நாமே வேண்டுமென்றே வழிநடத்துவதும், அவர்கள் சபை பிரிவுணர்ச்சிக்குள் சிக்கிக்கொள்ள நாமே உதவுவதும், அவர்களுக்கு எதிராகவும், சத்தியத்திற்கு எதிராகவும் நாம் செய்யும் குற்றமாயிருக்கும். தன் பிள்ளைகளுக்கான பூமிக்குரிய தேவைகளின் விஷயத்தில் மாத்திரமில்லாமல், அதேசமயம் அவர்களது மனம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த பயிற்சியின் விஷயத்திலும் சமமான அளவில், தங்கள் பிள்ளைகளுக்காய் முக்கியமான பொறுப்புகளைத் தான் பெற்றிருப்பதாக ஒவ்வொரு பெற்றோரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; மேலும் தேவனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பினைச் செய்வதில் மிகவும் உண்மையோடு காணப்படும் பெற்றோர்களே, ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த வெற்றிகரமாய் ஓடுகிறவர்களாய் நிச்சயமாகக் காணப்படுவார்கள்; ஏனெனில் தெய்வீகத் திட்டத்தினைப் பிள்ளைக்குத் தெளிவுப்படுத்த வேண்டி ஏறெடுக்கப்படும் ஒவ்வொரு பிரயாசமும் பெற்றோரின் மனதிற்குத் தெளிவையும், ஆற்றலையும் கொண்டுவருகின்றது என்றும், கர்த்தருடைய ஆவியை, பரிசுத்தத்தின் ஆவியை, சத்தியத்தின் ஆவியைக்குறித்துக் கருத்தாய்ப் போதிப்பதான ஒவ்வொரு பிரயாசமும், பிள்ளையினுடைய இருதயத்தின்மீது மாத்திரமில்லாமல், பெற்றோருடைய இருதயத்தின்மீதும் ஓர் ஆசீர்வாதத்தினை நிச்சயமாய்க்கொண்டுவரும் என்றும் இப்பெற்றோர்கள் கண்டுகொள்வார்கள். வருஷங்கள் செல்லச்செல்ல உண்மையுள்ள பெற்றோர்கள் சந்தோஷம், சமாதானம், ஆறுதலாகிய பலன்களைத் தங்கள் பிள்ளைகள் வாயிலாக அடைவார்கள்; ஆனால் தங்கள் பிள்ளைகளை அலட்சியம்பண்ணின பெற்றோர்களோ அல்லது பிள்ளைகளை ஆவிக்குரிய காரியங்களில் தவறாய் வழிநடத்தக் கூடியவர்களிடத்தில் பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர்களோ, தாங்கள் விதைத்தவைகளுக்கேற்ப, நலிந்த அல்லது கெட்ட பலன்களை இறுதியில் நிச்சயமாய் அறுப்பார்கள்.